Friday, July 20, 2007

என்னோட எட்டு

எட்டுப் போடணுமாம். கண்மணியக்கா கூப்பிட்டாஹ... அய்யனாரய்யா கூப்பிட்டாஹ....அப்புறம் வெட்டி பாலாஜி அய்யாவும் கூப்பிட்டாஹ... அப்புறமா அய்யானார் ஒரு ரிமைன்டரும் விட்டாரு.. இதுக்கப்புறமும் என்னமோ நம்ம தலைலதான் கம்பெனியவே தாங்குறா மாதிரி சீன் போட்டா யாருனா வந்து மொத்தினாலும் மொத்திடுவாங்கன்றதாலயும், எட்டு பெருமையான விஷயங்கள்ன்றதுலேர்ந்து என்னை மாதிரியான சாமானியப்பட்டவங்களையும் மனசுல வச்சு உங்களைப் பத்தி எதுனா எட்டு விஷயம் அப்படின்னு ஆட்டத்தோட விதிமுறைகளை தளர்த்திட்டதாலயும் தைரியமா ஆட்டத்தை ஆரம்பிக்கறேன்...

1. வெளிப்படையா பேசுறது - முதுகுக்கு பின்னாடி இதையே ஒட்டை வாய்னும் சொல்லுவாங்க. :)
2. புத்தகப் பித்து - புத்தகம்னு இல்லை. எங்கம்மா சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட "இவ பாலை அடுப்புல வச்சா மட்டும் கொஞ்சம் பாத்துகுங்க மாப்பிள்ளை , ஏன்னா அப்பத்தான் இவ சுவாரசியமா எதுனா கடுகு மடிச்சு வந்த பேப்பரை படிச்சுகிட்டிருப்பா, பால் பொங்கிடும். அதை மட்டும் நீங்க பாத்துகிட்டா போதும் ,மத்தபடி என் பொண்ணு வீட்டை நல்லாவே பாத்துப்பா" அப்படின்னு மறக்காம சொல்லியே ஆகணும்னு சொல்லிகிட்டிருப்பாங்க. அந்த அளவு எந்த குப்பையானாலும் படிச்சுட்டுதான் கீழ வைப்பேன்.
3. இசை - கேக்க மட்டுந்தாங்க. பாடி சுத்தி இருக்கறவங்களை படுத்துமளவு கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது. ஆனா பிரச்சனை என்னான்னா, அது திரைப்பாடலாயிருந்தாலும் சரி சாஸ்திரிய இசைப் பாடலாயிருந்தாலும் எனக்கு வெறும் நல்ல இசை மட்டும் பத்தாது. வரிகளும் இயன்ற வரை நல்ல தமிழில் சந்த நயத்தோடு கவித்துவத்தோடு இருக்கணும். கொஞ்சம் கஷ்டந்தாங்கறீங்களா? அதும் சரிதான்.
4. அப்பா மேல இருக்கற பாசம் - அவர் எனக்கு அப்பா எனக்கு அப்பா மட்டுமில்லை. வழி நடத்துற குரு, என் சுக துக்கங்களை பகிர்ந்துக்கற நல்ல நண்பர், இப்ப அம்மா போனதுக்கப்புறம் அவர் தாயுமானவரும் கூடத்தான். அதுனால அவரை கேக்காம ஒரு துரும்பையும் அசைக்க மனசு வராது எனக்கு.
5. ஞாபக சக்தி - இந்த ஒரு விஷயத்தை வச்சுத்தான் முதுநிலை வரைக்குமான என் படிப்பை ஒப்பேத்த முடிஞ்சுது. இது மட்டுமில்லைன்னா நான் படிப்புல காட்டின அக்கறைக்கு, கதை கந்தலாயிருந்திருக்கும். ஒரு முறை கேட்டதை மறந்ததா சரித்திரமே கிடையாது (ஆனா நான் உண்மையிலேயே கவனிச்சு கேட்டிருக்கணும். பெரும்பாலான சமயத்துல வெறும் பாவ்லாதான் பண்ணுவேன் கவனிக்கறா மாதிரி. ஆனா ரொம்ப நம்பும்படியா இருக்கும் என் ஆக்டிங்க்....)
6. குத்தி காமித்தல் - இது #5 அதிகமா இருக்கறதால வர்ர வினை. ஒரு முறை நடந்தது ரொம்பவே ஞாபகம் இருந்து தொலைக்கறதால, அடுத்த முறை அவங்ககிட்ட பேசும் போது இந்த குத்தி காமிக்கறதை தவிர்க்கவே முடியறதில்லை. அதும் எப்படின்றீங்க, வாழைப்பழ ஊசின்னுவாங்களே அது மாதிரி ரொம்பவே உள்குத்தா இருக்கும். எதிராளிக்கு வலிக்கும் ஆனா காமிச்சுக்கவே முடியாது. என்கூட பழகின யாரை கேட்டாலும் சொல்லுவாங்க. எவ்வளவு நெருங்கினவங்களா இருந்தாலும் என்னிக்கோ எப்பவோ பண்ணினதுக்கு கூட இன்னமும் அனுபவிச்சுகிட்டிருப்பாங்க. எங்க அப்பாவே இதுலேர்ந்து தப்பிக்க முடியாதுன்னா பாத்துக்குங்க. பிரச்சனை என்னான்னா, நானும் இது கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனாலும் இந்த பழக்கத்தை மாத்திக்க முடியலை.
7. மன உறுதி - தற்பெருமை போலத் தெரிஞ்சாலும் நிஜமாவே எனக்கு இது கொஞ்சம் அதிகம்தான். சொல்லப்போனா பிரச்சனைகள் அதிகமாக அதிகமாகத்தான் ஜெயிச்சே ஆகணும்ன்ற என்னோட உறுதியும் அதிகமாகுதோன்னு கூட தோணும். எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டாலும் தினசரி நடவடிக்கைகளைக்கூட மாத்திக்க மாட்டேன். அழுதுகிட்டே சாப்பிடாமலோ தூங்காமலோ இருந்ததா சரித்திரமே கிடையாது. ரொம்ப சகஜமா சுத்தியிருக்கறவங்ககிட்ட சிரிச்சு பேசிகிட்டே சமாளிச்சுகிட்டிருப்பேன்.
8. சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை - அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி. ரொம்பவே மன நிறைவைத் தரும் விஷயம் இது. எங்கேயும் நான் காம்ப்ரமைஸ் செய்துகிட்டதேயில்லைன்றது ஒரு பெருமைக்குரிய விஷயம். இதுக்கு நான் எங்க அப்பா அம்மாக்குதான் நன்றி சொல்லணும். ஏன்னு கேட்டால் அவங்க தலையிட்டால் நான் எதையும் விட்டுக் கொடுத்திருப்பேன்ற நிலையிலும், அதுதான் ஒரு பெண்ணுக்குரிய இயல்புன்னு இருந்த சில விஷயங்களில் கூட நான் வளைஞ்சு கொடுக்கணும்னு அவங்க வற்புறுத்தினதேயில்லை. அவங்க கேட்டிருந்தா, இன்னிக்கு எனக்கு இருக்கற சுதந்திரம் இருந்திருக்காது. ஆனாலும் சில ரொம்ப பெரிய பிரச்சனைகளில் அவங்க அதை செய்யாம என்னை, என் சுயத்தை மதிச்சிருக்காங்க. அதுனாலயே அவங்க மீதான என் மதிப்பு எங்கேயோ போயிடுச்சு.

சரி, இப்போ நான் பெற்ற இன்பத்தை இன்னும் எட்டு பேருக்கு கொடுக்கணுமாம். இன்னும் யாரு மிச்சமிருக்காங்கன்னே தெரியலை. இருந்தாலும் ஒரு குத்து மதிப்பா போட்டு வைக்கிறேன்.

1. மகா
2. சாக்ரடீஸ்
3. பொற்கொடி
4. நந்தா
5. ஆழியூரான்
6. செல்வ நாயகி (மேடம் இன்னும் அழகு விளையாட்டையே ஆரம்பிக்கலை.. )
7. சேதுக்கரசி(இதை சாக்கிட்டாச்சும் ஒரு பதிவு போடுங்க தாயி... எவ்ளோ நாள்தான் பின்னூட்டத்துலயே வாழ்க்கைய ஓட்டுவீங்களாம்?) -
8. நொந்தகுமாரன்

16 comments:

said...

/எங்கம்மா சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட "இவ பாலை அடுப்புல வச்சா மட்டும் கொஞ்சம் பாத்துகுங்க மாப்பிள்ளை , ஏன்னா அப்பத்தான் இவ சுவாரசியமா எதுனா கடுகு மடிச்சு வந்த பேப்பரை படிச்சுகிட்டிருப்பா, பால் பொங்கிடும். அதை மட்டும் நீங்க பாத்துகிட்டா போதும்/
உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வாசிப்பில் விருப்புடையவராக இருந்தால் என்னமாதிரி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் :-).

said...

வாங்க , DJ நீங்க சொல்றதுபோல இருந்தால் அவ்ளோதான், வீடு விளங்கினாப்புலதான்.. ஆனா அதுக்குன்னு கற்பூர வாசனை தெரியாத ஆளா வந்து வாய்ச்சாலும் டேஞ்சர்தான், அடுப்பை பாக்காம படிப்பென்னன்னு கத்தினாலும் பிரச்சனைதானில்லையா?

said...

நெகிழ்வா எழுதி இருக்கீங்க! நல்ல இருந்துச்சுங்கோ!

நமக்கு மூத்த தலைமுறை, இளைய தலைமுறையை புரிந்து கொண்டு நடந்து கொண்டார்கள் என்பதை சொல்ல கேட்கும் பொழுது, பிரமிப்பாய் இருக்கிறது.

அதுவும், பிரச்சனைக்குரிய காலக்கட்டங்களில் அதே மாதிரி என்றால், லட்சுமி கொடுத்து வைத்தவர் தான்.

எட்டு விளையாட்டில், என்னையும் இழுத்துவிட்டது தான், ரெம்ப அநியாயங்க! நொந்த எட்டு விசயங்கள் சொல்லலாம் அல்லவா!

காலம் லிமிட் எல்லாம் கிடையாது அல்லவா!

கொஞ்சம் பத்தி பிரிச்சு எழுதினா தான் என்னவாம்!

said...

பூங்கா பத்திரிக்கையில், "தமிழ் கலாச்சாரத்தோடு பெண்" என்ற உங்க கட்டுரை வெளிவந்திருக்கிறது. பார்த்தீர்களா!

எனக்கு இந்த விவாதமெல்லாம் அலர்ஜிங்க! நல்லத்தான் விவாதம் பண்றீங்க. வாழ்த்துக்கள்.

said...

///உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வாசிப்பில் விருப்புடையவராக இருந்தால் என்னமாதிரி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன் ////


ஒன்னும் ஆகாது டிசே, பொங்குன பாலை ரெண்டுபேருமாச் சேந்து துடைச்சு சுத்தம் செஞ்சுட்டு, டீக்குடிக்க இருந்ததையும் மறந்துட்டுப் படிச்ச விசயத்தைப் பகிர்ந்து பேசிக்கிட்டிருக்கலாம்:))

லட்சுமி,
இனிமேல் உங்களை ஆட்டத்துக்குக் கூப்பிடறவங்களையும் சேத்துத் திட்டணும்போல இருக்கு:)) நீங்க வந்தாத்தான் மறக்காம என்னையும் சேத்து இழுத்துவிட்டர்றீங்களே:)) ஆமா நான் தொடங்குனா அழகு ஆட்டத்துல இருந்துதான் தொடங்கணும்:)) தொடங்காட்டியும் பெரிய மனசு பண்ணி மறந்துருங்க:))

said...

பாராட்டுக்களுக்கு நன்றி நொந்தகுமாரான். இந்த எட்டு ஆட்டத்துக்கு எதுவும் கால வரையரை இல்லைதான். ஆனா இப்பவே எல்லாரும் போட்டு முடிச்சுட்டா மாதிரியிருக்கு. இன்னும் கொஞ்ச நாள் போனால் மக்கள் அதுக்குள்ள அடுத்த விளையாட்டை ஆரம்பிச்சுடுவாங்க, அப்புறம் நீங்க நிறைய விளக்கம் தரவேண்டியிருக்கும். கூடிய மட்டும் சீக்கிரம் போடப் பாருங்களேன்.

said...

உங்கள் எட்டும் அருமை ;))

\சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை - அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி\\

சூப்பர்...

வாழ்த்துக்கள் ;)

said...

வாங்க செல்வா, ரொம்ப ரசிச்சு சொல்ற விதத்தை பாத்தா மேற்படி சம்பவம் உங்க வீட்டுல அடிக்கடி நடந்திருக்கும் போலிருக்கே? ;) என்ன பண்றது, இந்த மாதிரி ஆட்டத்தையெல்லாம் கண்டுபிடிக்கிறவங்களை உதைக்கணும். இப்போ புதுசா ஒரு ஆட்டமாம், ஒரே ஒரு கேள்விதானாம் ஆனா 24 மணி நேரத்துக்குள்ள பதிவு போட்டாகணுமாம். எப்போ நமக்கு ஆப்பு வரப்போவுதோன்னு பயந்துகிட்டிருக்கேன் நான். ரூம் போட்டு உக்காந்து யோசிப்பாங்களோ இத்தையெல்லாம்?

கோபிநாத், வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி.

said...

நான் கூப்பிட்ட அறிவு ஜீவிகளில் 3 பேர்தான் எழுதியிருக்கீங்க அதுக்கே உன்ன பிடி என்ன பிடி ன்னு ஆகிப்போச்சி ..:)

வழக்கம்போல நல்லா எழுதியிருக்கீங்க லக்ஷ்மி..

சாலையோர டீக்கடையில டீ குடிக்க பிடிக்கும்னு சொன்னது இதுக்குத்தானா :)

said...

//நான் கூப்பிட்ட அறிவு ஜீவிகளில் 3 பேர்தான் எழுதியிருக்கீங்க அதுக்கே உன்ன பிடி என்ன பிடி ன்னு ஆகிப்போச்சி ..:)//

லக்ஷ்மி என்கிட்ட சொல்லவேயில்லை ;)

said...

அவ்வளவு ஞாபகசக்தியா உங்களுக்கு? அப்ப பின்னூட்டமும் ஜாக்கிரதையாகத்தான் போடனும். :-))
நல்லா இருக்கு உங்கள் 8.

said...

வடுவூர் குமார், அய்யனார் - நன்றிகள்.

மோகனா, ரொம்ப நக்கலடிக்காதேப்பா. ஒவர் நக்கல் உடம்புக்காகாது... ;)

அய்யனார், கண்டுபிடிச்சுட்டீங்களே? :)

said...

லக்ஷ்மி ஒரு வழியா 8 போட்டுடீங்களா???

நடுவில என்னை வேற கோர்த்து விட்டுட்டீங்களே... தழைகீழா நின்னாலும் ஒண்ணும் தோண மாட்டேங்குது.

//கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட .....மத்தபடி என் பொண்ணு வீட்டை நல்லாவே பாத்துப்பா"//

//உங்களை மாதிரியே உங்களுக்கு வருகின்ற துணைவரும் வாசிப்பில் விருப்புடையவராக இருந்தால் என்னமாதிரி இருக்கும் என்று யோசித்துப்பார்த்தேன்

ஒன்னும் ஆகாது டிசே, பொங்குன பாலை ரெண்டுபேருமாச் சேந்து துடைச்சு சுத்தம் செஞ்சுட்டு, டீக்குடிக்க இருந்ததையும் மறந்துட்டுப் படிச்ச விசயத்தைப் பகிர்ந்து பேசிக்கிட்டிருக்கலாம்:)) //

ரிப்பீட்டேய்.....

//அப்பா மேல இருக்கற பாசம் - அவர் எனக்கு அப்பா எனக்கு அப்பா மட்டுமில்லை. வழி நடத்துற குரு, என் சுக துக்கங்களை பகிர்ந்துக்கற நல்ல நண்பர், இப்ப அம்மா போனதுக்கப்புறம் அவர் தாயுமானவரும் கூடத்தான். அதுனால அவரை கேக்காம ஒரு துரும்பையும் அசைக்க மனசு வராது எனக்கு.//

கேக்கறதுக்கே சந்தோஷமா இருக்கு.

//இசை - கேக்க மட்டுந்தாங்க. பாடி சுத்தி இருக்கறவங்களை படுத்துமளவு கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது. //

நல்ல வேளை உலக்ம் தப்பித்தது. ;)

ஞாபக சக்தி & குத்திகாமித்தல்... அப்போ உங்க கிட்ட பார்த்துப் பேசணும் போல இருக்கே. பின்னூட்டம் போடறப்ப்யும் கவனமா இருக்கணும்.(சும்மா.....)

//சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை - அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி.//

உங்கள் சுயமரியாதைக்கும் மன உறுதிக்கும் என் சல்யூட். உங்களது 8 மிகவும் அருமை.

http://blog.nandhaonline.com

said...

நன்றி நந்தா. ஆனா என் இசைய பத்தி ரொம்ப கேவலப்படுத்திட்டீங்க. :( பரவாயில்லை, எப்படியும் நீங்க எட்டு போடயில எதுனா மாட்டாமலா போயிடும் உங்களை கலாய்க்க... அப்போ பாத்துக்கறேன்...

said...

நீண்ட நாட்களுக்குப் பிறகு, இன்றைக்குப் பார்த்தேன். சொந்த ஊருக்கு வந்து, இன்றைக்கு, சொந்தங்களுடன் குற்றாலம் கிளம்பிக் கொண்டிருக்கிறோம். அதனால், உடனடியாக எழுத முடியாத நிலை.

இங்கு, பல சென்டர்களில், பிளாக் எல்லாம், கட்டம் கட்டமாகத்தான் தெரிகிறது. நேரமும், இப்பொழுது பிரச்சனை. வருகிற வாரம் எழுதுகிறேன்.

உங்களுடைய எட்டு, உங்களை புரிந்துகொள்ள முடிந்தது.

எழுதுவதில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள்.

செல்வநாயகி அவர்களுடைய எழுத்து வன்மையானது.பிடித்து உலுக்கக்கூடியது. நிதானமாகவும், அழுத்தமாகவும் எழுதுகிறார்கள்.

என்னையும் இழுத்துவிட்டதினால், அதுவே மண்டையில் ஓடிக்கொண்டேயிருக்கிறது.

மகா அவர்களிடமும், தெரிவித்தேன். விரைவில் எழுத வேண்டும் என்ற விசயத்தையும் சொல்லிவிட்டேன்.

said...

//எழுதுவதில், இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால், இன்னும் சிறப்பாக எழுதுவீர்கள்// நன்றி சாக்ரடீஸ். நானுமே கொஞ்ச நாட்களாக நினைத்து வரும் விஷயம்தான் இது. செல்வா அளவுக்கு முடியுமா என்று தெரியவில்லையெனினும் கொஞ்சம் இந்த ஜல்லி பாஷையெல்லாம் தூக்கி போட்டுவிட்டு ஒழுங்காக எழுத விரைவில் முயற்சிக்கிறேன். முடியும்போது எழுதுங்கள். தங்களது விடுமுறை இனிதே கழிய என் வாழ்த்துக்கள். மகாவிடமும் என் வாழ்த்துக்களை சொல்லவும்.