Wednesday, January 16, 2008

மொக்கையாய் ஒரு மொக்கை

மொக்கை போடச்சொல்லி நம்ம கண்மணியக்கா கூப்பிட்டு விட்டிருக்காங்க, அதும் சும்மா இல்லீங்க, ஸ்பெஷல் கோட்டாவுல. தட்ட முடியுமா? ஆனாக்க முதல்ல மொக்கைன்னா என்னான்னு பாத்துக்கணுமேன்னு தேடினேன். மொக்கை போடச்சொன்னா நம்ம எழுத்தாளினி ஏகாம்பரி இப்படி ஒரு பெயர்ச்சொல் ஆராய்ச்சி செஞ்சு வச்சிருக்காங்க. அதாவது அவங்க வரையரைப் படி உருப்படியா விஷயம் எதும் அதுல இருக்கக் கூடாது. அவ்ளோதான். அப்படி பாத்தா, நான் ஏற்கனவே போட்ட பதிவுல பாதிக்கு மேல அப்படிதானேன்னு மனசாட்சி சவுண்ட் விட்டது. அதை கண்டுக்காதது போல விட்டாச்சு(வழக்கம்போல).

அப்புறம் நிறைய பேர் கொசுவத்தி சுத்திதான் மொக்கைக்கு மேட்டர் தேத்தியிருக்காங்களேன்னு நானும் ட்ரை பண்ணி பாத்தேன். ஒன்னும் மாட்டலை. சரி, என்னதான் பண்ணலாம்னு பாத்துகிட்டிருக்கும் போது மா.சிவகுமார் வெறுமனே மொக்கைன்னு டைப் பண்ணி அருமையா சமாளிச்சிருந்தார். இதும் நமக்குத் தோணலை பாருன்னு தலைல அடிச்சுகிட்டேன். எப்படி ஒப்பேத்தறதுன்னு ஒன்னும் புரியலை. சரி, ஒரு சிலர் பண்றா மாதிரி என்னோட எழுத்தை பாத்துதான் என்கிட்ட நானே இம்ப்ரஸ் ஆனேன்னு தற்புகழ்ச்சி பதிவா போட்டுடலாமான்னு பாத்தேன். இருந்தாலும் வாழ்கைல சின்னச் சின்ன பொய்கள் சொல்லியிருக்கேனே தவிர ரொம்ப பெரிய பொய்லாம் சொல்லி அனுபவமில்ல. அதுனால அதும் சொதப்பிடும்னு விட்டுட்டேன். வம்பில்லாத விஷயம்னா நம்ம கவிதைதான். எப்படியும் யாருக்கும் எதும் புரியாது - இல்ல கரெக்டா தப்பா புரியும். சோ, அதுதான் சரியான வழின்னு முடிவு பண்ணினேன். ஆனா ஒன்னும் ஒடலை. கடைசியா யோசிச்சுப் பாத்தப்ப இவ்ளோ நேரமா ஒன்னுமே உருப்படியா பண்ணலைன்னு உரைச்சுது. இது, இது, இதுதானே மொக்கைன்றது? அதான், அப்படியே தட்டச்சிப் போட்டுட்டேன்... படிச்சுட்டு சொல்லுங்கப்பா, மொக்கை எப்படியிருக்குன்னு. :)))))

Tuesday, January 08, 2008

குடிப்பதே சிறப்பென்றோமா?

காலம் காலமாக கேட்கப் பட்டு வரும் அதே கேள்வி -பொண்ணுங்களும் சிகரெட் குடிச்சு, தண்ணி அடிச்சு கண்டவனோட சுத்தி சீரழிஞ்சு போறதுதான் விடுதலையா? நாம யாரும் நம்ம கூட்டத்துல இருக்கறவங்கதான் இப்படி தப்பான கருத்தச் சொல்லிட்டாங்களோ - அதாவது பெண்களும் சிகரெட் குடிப்பதும், தண்ணி அடிப்பதும், கண்டவனோட போறதும்தான் பெண் விடுதலைன்னு சொல்லிட்டாங்களோன்னு சுத்தி சுத்தி தேடினாலும் அப்படியெதுவும் கிடைக்காது. எங்கயாவது ஒன்னு ரெண்டு பேர் ஒரு பெண் சிகரெட் குடிக்கும் போது அதை சிகரெட் உடல் நலத்துக்கு தீங்கானதுன்னு மட்டும் சொன்னாப் போதாதா, ஒரு பொண்ணா இருந்துகிட்டு நீ சிகரெட் பிடிச்சா எங்க பண்பாடு என்ன ஆகுறதுன்னு கேட்பது ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடுன்னு சொல்லியிருப்பாங்க. அதுலேர்ந்து இந்த ஒரு வாதத்தை - அதாவது பெண் உரிமை பேசுறவங்க எல்லாம் சிகரெட் குடிக்கவும் தண்ணி அடிக்கவும் கண்டவனோட படுத்து எழுந்திருக்கவும்தான் உரிமை கேக்கறாங்கன்ற வாதத்தை டெரிவ் பண்ணி வச்சுகிட்டு என்ன கேட்டாலும் இதுக்குத்தான் திரும்ப திரும்ப விளக்கம் கொடுப்பாங்க. அட என்னடா இது, கேக்காத கேள்விக்கு ஏன் பதில் சொல்றாங்க, நாம கேக்கற விஷயத்தைப் பத்தி ஏன் எதுவுமே பேச மாட்டேங்கறாங்கன்னெல்லாம் நாம யோசிச்சு குழம்பி கொஞ்சம் சைலன்ட் ஆயிடுவோமா, உடனே பாத்தியா, கேட்ட கேள்விக்கு அவிங்களுக்கு பதில் சொல்லத்தெரியல பத்தியா? இந்தப் பெண்ணுரிமையப் பத்திப் பேசுறவயங்க எல்லாம் இப்படித்தான்ப்பா, அரைகுறைங்க... புடலங்காப் பொரியல் செய்யத்தேன் லாயக்குன்னு ஒரு முத்திரய நம்ம மேல பசக்குனு குத்திபுட்டு அடுத்த ஆள்கிட்டப் போயி அதே தண்ணி, சிகரெட், ப்ளா... ப்ளாவை ஆரம்பிச்சுடுவாய்ங்க...

இந்த மாதிரி நாம சொல்லாத விஷயத்தை நம்ம மேல ஏத்திப் பேசும் டெக்னிக்கை பலகாலமா எல்லோரும் உபயோகிச்சுகிட்டேதான் இருக்காங்க. கவிதாயினி, முத்தமிழ் வித்தகி, திருமதி. கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் எழுதின ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது (யப்பா, எதுனா பட்டத்தை விட்டிருந்த பின்னூட்டத்துல சொல்லிடுங்கப்பா, திருத்திடறேன். நம்ம நாட்டு அரசியல்வாதிகள் இன்ஷியல தவறுதலா மாத்தி போட்டா டென்ஷன் ஆகறதை விட அதிகமா பட்டங்கள் விட்டுப் போயிட்டா டென்ஷன் ஆகிடுவாங்க. அக்கா முழுசா அந்த லெவலுக்கு போயிட்டாங்களா இல்லையான்னு தெரியலன்னாலும்கூட எதுக்கு ரிஸ்க்? ஆட்டோல்லாம் அனுப்பினா தாங்க மாட்டேன் நான். அதுனால நமக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் மறந்து இந்த விஷயத்துல மட்டும் ஹெல்ப் மீ ப்ளீ.......ஈஈஈஸ்.) இது வந்து அவங்க இந்தியா டுடேல பத்தி எழுதிகிட்டிருந்தப்ப எழுதின கட்டுரை. 'கறுக்கும் மருதாணி' அப்படின்னு ஒரு புத்தகமாவும் வந்திருக்கு.

சமூகப் பிரச்சினைகளைப் பற்றி ஆர்வமும் அக்கறையும் உள்ள பலர் ஆதங்கத்தோடும் தார்மீகக் கோபத்தோடும் சமூக சீரழிவுகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அவர்களே பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் என்பது பற்றிப் பேசும்போது சுயதணிக்கை ஒன்றை உருவாக்கிக் கட்டுப்பாடு, எல்லைகள் என்பதற்கு முன்னுரிமை தரத் தொடங்கிவிடுவார்கள்.

பெண்களுக்கு இடத்தைக் கொடுத்தால் அவர்கள் மடத்தைப் பிடித்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை அரித்துக் கொண்டே இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசிய சீர்திருத்தவாதிகள் கூட பெண்களின் விடுதலை என்பதும் அவர்களின் உரிமைகள் என்பதும் சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மனித உரிமை என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேன்டுமென்பதைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், மனித உரிமையில் ஆணின் உரிமை வேறு; அதன் சதவீதம் வேறு. பெண் சற்றுக் குறைந்த சதவீதத்திற்கே பாத்தியதை உள்ளவள் எனும் போதுதான் பிரச்சனைகள் தோன்றுகின்றன.

பொதுவாகப் பெண்விடுதலை என்றால் பலருக்கு குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, உதட்டுச் சாயம், ஜீன்ஸ் அல்லது குட்டை ஸ்கர்ட், கையில் வர்ஜீனியா ஸ்லிம்ஸ் அல்லது ஏதோ ஒரு மதுவகை - இப்படி ஒரு தோற்றம்தான் கண் முன் விரிகிறது.

பெண் விடுதலையைப் பற்றி என்னிடம் பேசும் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வி, "பெண் விடுதலை எல்லாம் சரி, ஆனால் விடுதலை என்கிற பெயரில் குடிப்பது, சிகரெட் பிடிப்பது இதெல்லாம் சரியா?" இந்தக் கேள்வியை எத்தனை முறை சந்தித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

பெண் விடுதலை என்பது உடை, உணவு அல்லது சில பழக்கவழக்கங்களுக்குள் சுருங்கி விடும் சிறிய விஷயம் இல்லை. பெண் தன் வாழ்க்கையை தன் விருப்பபடி தீர்மானிக்கும் உரிமை. தனது லட்சியங்களை அடைய அவள் செய்ய வேண்டிய தியாகங்களைத் தீர்மானிக்கும் உரிமை. தனது வாழ்க்கையைத் தானே வாழும் உரிமை.

குடிப்பதும் புகைப்பது தனிமனித விருப்பம். அந்தப் பழக்கங்களுக்கு அடிமையாவது என்பது உடல் நலத்தைப் பாதிக்கக்கூடியது. இதற்கும் பெண் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? குடிப்பதும் புகைப்பதும்தான் எங்கள் தலையாய உரிமை; இதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று எந்தப் பெண்ணியவதி சொல்லிக் கேட்டிருக்கிறார்கள் இவர்கள்? இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண் சிசுக் கொலை நடக்கிறது. கல்வி என்பது பல பெண்களின் எட்டாத கனவாகவே இருக்கிறது. வரதட்சிணை ஒழியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது பெண் விடுதலையைப் புகை வட்டத்துக்குள் சிலர் அடக்க நினைப்பது வேடிக்கை.

இந்தியாவில் ஆண்டுதோறும் கள்ளச் சாராயத்தால் இறந்து போவோரின் எண்ணிக்கை 3000க்கும் மேல். இதில் கணிசமான அளவு பெண்களும் அடங்குவர். இவர்களில் எத்தனை பேரின் காதுகளில் பெண் விடுதலை என்ற வார்த்தை ஒரு முறையேனும் விழுந்திருக்கும் சாத்தியம் உள்ளது?

மேல்தட்டு வர்க்கத்து விருந்துகளில் கலந்துகொள்ளும் பல பெண்கள் 'சோஷியல் டிரிங்கர்ஸ்.' இவர்களில் எத்தனை பேருக்குத் தங்களின் உரிமை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது?

ஆந்திராவில் - குறிப்பாக ராஜமுந்திரி போன்ற பகுதிகளில் - பெண்கள் எரியும் சுருட்டின் எரியும் பக்கத்தை வாயின் உட்புறமாக வைத்துப் புகைப்பார்கள். இவர்கள் வேலையை முடித்துவிட்டு இப்படிப் புகைத்துக்கொண்டே பெண் விடுதலை பற்றியும் பேசுகிறார்களா? பேசினால் நன்றாகத்தான் இருக்கும்.

சில அன்பான ஆண்கள் இதற்குக் கூறும் காரணம்: நாங்கள்தான் தவறான வழியில் போய் கெட்டுச் சீரழிந்து போகிறோம்; நீங்களும் அதையேன் செய்ய வேண்டும்? இந்த அக்கறை என்னைக் கண் கலங்கச்செய்துவிட்டது. கர்ப்பகிரகத்திலுள்ள விக்கிரகங்கள் கீழே இறங்கி வர எப்படி அனுமதிக்க முடியும்? அவை பாதுகாக்கப்பட வேண்டியவையாயிற்றே?

"...என் அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன் மரபின் ஊனதுவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி..."
(பாடியவர்: ஒளவையார்;
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி;
திணை: பாடாண்)


முதுபாசி போன்ற என் உடை களைந்து, புதுமடி உடுத்தச் செய்து, மகிழ்வு தரும் கள்ளும் மாமிசச் சாதமும் வெள்ளிக் கலத்தில் அதியமான் ஊட்டினான் என்கிறார் ஒளவையார்.

“சிறியகட் பெறினே, எமக்கீயும்;மன்னே
பெரியகட் பெறினே,
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே...”

(பாடியவர்:ஒளவையார்
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.)

சிறிய அளவு மதுவைப் பெற்றால் எனக்கு அளித்திடுவான். பெரிய அளவு மதுவைப் பெற்றால் யாம்பாட, அதை எமக்கு அளித்துத் தானும் உண்பான்.


இந்த அடிப்படையில் ஒளவையாரும் பெண்ணியவாதியாகிறார் என்றா, அவரைப் பெரிய மனதோடும் பேருவகையோடும் பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எழுதியவர்: கனிமொழி