தில்லையில் நடந்து கொண்டிருக்கும் கூத்தையெல்லாம்(சிவனுடையதை அல்ல, அவனைச் சுற்றியிருப்போரது கூத்தைச் சொல்கிறேன்) பார்க்கும் போது கொள்கைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாது நடந்து கொள்வதில் அரசியல்வாதிகளுக்குத்தான் முதலிடம் என்று நினைத்திருந்ததை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் நம்பும் அல்லது நம்புவதாகச் சொல்லும் ஒரு கொள்கைக்கு எதிராக இத்தனை பகிரங்கமாகக்கூட இவர்களால் நடந்து கொள்ள முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.
பாரதி தனது வசன கவிதையொன்றில் காற்றே சிவனின் காது என்கிறார். எனில் காற்றோடு கலக்கும் ஒவ்வொரு வார்த்தையும்(கெட்ட வார்த்தையென்று மனித மனது வரையறுத்து வைத்திருக்கும் வார்த்தைகள் உட்பட) சிவனது காதில் நேரடி ஒலிபரப்பாகச் சென்று சேர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இன்ன மொழிதான் அவன் காதில் கேட்கலாம் இன்னது கேட்கக்கூடாதது என்றெல்லாம் அறிவிப்போரை என்னவென்பது? அதையும்விட அதிக நகைப்புக்குரிய விஷயம் ஓதுவார் ஆறுமுகச்சாமி அவர்கள் அங்கே வந்து நின்று பதிகம் பாடுகையில் நடராஜரை கூட்டமாக மறைத்துக் கொண்டு நின்றார்களாம் தில்லை வாழ் அந்தணர்கள் :)))))))))) எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், அவனது சந்நிதியில் அவனது பக்தனொருவன் பாடும் பாடலை அவன் காதில் விழாதவாறும் அவன் கவனத்தில் பதியாதவாறும் கூட்டமாய்க் கூடி நின்றாலே தடுத்துவிட முடிகிறதல்லவா உங்களால்? நாத்திகம் பேசுபவர்கள் இறைவனின் சிலையை அவமதித்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும் - அதுதான் அவர்கள் தங்கள் கொள்கைக்குத் தரும் மரியாதை. ஆனால் ஆத்திகத்தையே கட்டிக்காப்பதாகக் கூறிக்கொள்பவர்களே இறைவனை அவமதிப்பதை, அவனைக் குறைத்து மதிப்பிடுவதை எங்கே போய்ச்சொல்வது?
அன்பே சிவமென்பர். அப்படி அன்புருவானவனை அர்ச்சித்துவிட்டு , சித்சபை மேடையேறிப் பாட முயன்ற 79 வயது முதியவரை அடித்துத் துரத்த எப்படித் துணிகிறார்கள்? சிற்றம்பலம் கருவறைக்கு நிகரானது - அங்கே யாரும் நுழையக்கூடாது என்பது பொதுவிதியானால் சரி. ஆனால் காசு கொடுத்தவர்கள் மட்டும் வரலாம் என்றால் அதென்ன சுற்றுலாத்தலமா? துஷ்டநிக்ரஹ சிஷ்டபரிபாலனம் செய்பவனுக்கு அவன் கண்ணெதிரே தான் செய்யும் அநியாயங்கள் மட்டும் தெரியாதென்று எப்படி நம்புகிறார்கள் இவர்கள்? ஒருவேளைத் தான் செய்யும் சேவைகளுக்காக மகிழ்ந்து தங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாது விட்டுவிடுவான் என்று எண்ணமா? அது இன்னமும் மோசம் - லஞ்சம் வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் காவல் அதிகாரி ரேஞ்சுக்கு சாமியையே கொண்டு வருவது இல்லையோ அது?
இந்த விஷயத்தில் மட்டும்தான் என்றில்லை - இதற்கு முன்னரே கூட பல சந்தர்ப்பங்களில் கோவில்களில் நடக்கும் சகிக்க முடியாத நேர்மையின்மையின் வெளிப்பாடுகளைக் காணும் போதெல்லாம் தோன்றுவதுதான் - கடவுளுக்கு வெகு அருகிலிருக்கும் இவர்களே கடவுளை இவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார்களே, பின் மற்றவர்களுக்கு மட்டும் எப்படி நம்பிக்கை வருமென்று. அதிலும் இப்போது ஓதுவார் ஆறுமுகச்சாமி பாடுகையில் இவர்கள் சிவனை மறைத்து நின்றதைக் கேட்டதும் சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. ஒரு வேளை கலி முற்றுவது என்பது இதுதான் போல - நிச்சயமாய் நாத்திகப் பிரச்சாரங்கள் அல்ல.
பி.கு: கொஞ்ச நாளைக்கு முன்னால லீனா மணிமேகலை ஒரு கல்லூரியின் உடைக் கட்டுப்பாடு விஷயத்தை எதிர்த்துப் பேசினப்ப நிறைய நடுநிலைவியாதிங்க ஓடி வந்து "அது அவங்க இடம். அவங்க சொல்றா மாதிரி நடக்கறதான அங்க போகணும். இல்லைன்னா வெளிய வந்ததோட நிப்பாட்டிக்கணும். எதுக்கு இந்த அம்மா சலம்புது?"ன்னு சொல்லிகிட்டுத் திரிஞ்சாங்க. இப்பவும் அவங்க எல்லாம் அதையேதான் சொல்றாங்களான்னு தெரிஞ்சுக்க ஆசை.(என்ன செய்யறது இது மாதிரி எதுனா புடலங்காய் சமாச்சார பிட் இல்லாம் பதிவே எழுத வர மாட்டேங்குது. வியாதி முத்திடுச்சு போல. :))))) )
Showing posts with label சமுதாயம். Show all posts
Showing posts with label சமுதாயம். Show all posts
Friday, March 07, 2008
Subscribe to:
Posts (Atom)