Thursday, July 12, 2007

மங்களம்

இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவு. அதுதான் இந்த தலைப்புக்கு காரணம்.

மோகன் தனது கடைசி பதிவில் ஏதோ தனக்கு வலுச்சண்டைக்கு விருப்பமில்லாதது போலவும் தன் மீதான தனிநபர் தாக்குதலுக்கு பிறகும் தான் சமாதானத்தையே நாடும் ஒரு சாத்வீகப் பிறவியாகவும் தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறார். அருமையான முயற்சி. நல்ல பலனும் இருந்ததாக தெரிகிறது. நான் வரிகளுக்கு இடையிலிருந்து எடுத்து வீசுவதாக அவர் மீதான குற்றசாட்டுகளை சொல்கிறார். ஆனால் அவரது பதிவில் இருக்கும் எனக்கான எள்ளல்கள் பல என்னுடைய தனி வாழ்க்கை தொடர்புடையன. அவற்றை பற்றியெல்லாம் நானும் கூட எங்கும் போய் அழுவதாயில்லை. :) எனவே நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

நான் கதாநாயகிகளை கொஞ்சமே கொஞ்சம் அறிவுடன் காட்டுங்களேன் என்று சொன்னதற்கு இல்லையில்லை நான் உட்பட பலபேருக்கு இன்ன இன்ன தகுதிகளுடைய பெண்களைத்தான் பிடிக்கும். எனவே சமூக வழக்கத்திற்குட்பட்டுத்தான் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னவர் நீங்கள் - அந்த தகுதிகளை ஒரு முட்டாள் அல்லது அறிவிற் குறைந்தவரோடு ஒப்பிட்டது நீங்களேயொழிய நான் என் பதிவில் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.

//ஒருவரது படிப்பு தகுதிகளும்(பட்டப்படிப்பு) அவரது ஆர்வமும் (சமையல் அல்லது தையல்) ஒருவரது அறிவுத்திறனை முடிவு செய்வதில்லை. என் கருத்துக்கள் பெண்ணை பெரிய படிப்பாளியாக காட்டவேண்டுமென்பதில்லை//

இதற்கு பிறகும் நீங்கள்

// நீங்கள் சார்த்தரையும் நீட்ஷேவையும் தெரியாத பெண்களை முட்டாள்கள் என்று எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பில்லை//

என்பதாக சாமர்த்தியமாய் பழியை என்மீது தூக்கி போட முயற்சிக்கிறீர்கள். நீங்கள் என்னதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்த்தாலும் அதை படிப்பவர்கள் நம்பிவிட மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். எனவே இதற்கு மேல் இவ்விஷயத்தில் நான் அதிகம் நோண்ட விரும்பவில்லை.

//உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம்.//

இந்த வரிகள் உங்களை புண்படுத்தியிருக்குமானால மன்னிக்கவும். அதை இப்படி மாற்றிக் கொள்ளலாம் - நீங்கள் எந்த அளவு தகுதிகளுடைய துணை வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதே அளவுதான் உங்களுக்கும் தகுதியிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். நேர்மறை விகிதாச்சாரமென்பார்களே - directly proportional, அதுபோல. இதுதான் அங்கே நான் சொல்ல வந்தது.

கடைசியாக ஒரேஒரு விஷயத்தை மட்டும் இங்கே தெளிவு படுத்தி விடுகிறேன். பத்மாவதி தாயாரின் தாலி கழண்டு விழுந்ததற்காய் பரிகாரம் செய்தவர்கள் முட்டாளா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம். என்வரையில் சந்தேகத்திற்கிடமின்றி அது முட்டாள் தனம்தான். ஆனால் ஒரே ஒரு விஷயம் - அப்படி நம்புவது யாரென்பதை பொறுத்து நான் அந்த விமர்சனத்தை வெளியிடுவதும் அடக்கிக்கொள்வதும் இருக்கும். என் வீட்டிலேயே எடுத்துக் கொண்டால் என் அம்மா அதையே செய்தால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். ஏன் சொல்லப்போனால் பூஜைக்கு ஏதேனும் தேவையா என்று கேட்டு வாங்கி வந்துகூட கொடுப்பேன். எனக்கும் கொஞ்சம் குங்குமம் கொடுத்தால் அதையும் வாங்கி நெற்றியில் இட்டும் கொள்வேன். ஆனால் அதையே என் தங்கை செய்தால், என்னம்மா இது இப்படி கூட உன்னால் எப்படி யோசிக்க முடிகிறது என்று கேட்டு முடிந்த வரை அவளுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன். இந்த இரு அணுகுமுறைகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கான காரணம் உங்களுக்கு புரியவில்லையென்றால் அதற்கு மேல் உங்களிடம் பேசுவதே பொருளற்றது. முந்தைய தலைமுறையில் பெண்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அவர்களது நம்பிக்கையை அங்கே நிறுத்தியிருக்கிறது. ஆனால் இன்றும் விஞ்ஞான முன்னேற்றத்தையும் என் படிப்பையும் நான் வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் மட்டுமே பயன் படுத்திக்கொள்வேன். அதைத்தாண்டி என் அறிவை நான் உபயோகிக்க மாட்டேன் என்று ஒருவர் சொன்னால் அது நிச்சயம் முட்டாள்த் தனம்தான்.

அடுத்தது நம்பிக்கைகளுக்குள்ளேயே நிறைய படிநிலைகள் உண்டு. அதாவது கடவுள் என்று ஒரு சக்தியிருப்பதை மட்டும் நம்புவது ஒரு வகை. தெருமுனையிலிருக்கும் சித்தி விநாயகரை விட மலைக்கோட்டைப் பிள்ளையார் சக்தி மிக்கவர் என்று சொல்வது இன்னொரு வகை. முன்னது உணர்வு பூர்வமான நம்பிக்கை. பின்னது மூட நம்பிக்கை. இரண்டுக்குமான வேறுபாடு உங்களுக்கு புரியவில்லையென்றால் என் வாதம் உங்களுக்கு புரியாது போவதில் ஆச்சரியமொன்றுமில்லை. இன்னொரு உதாரணம் - உங்க தலைவர் படங்களிலிருந்தே சொல்கிறேனே. ராகவேந்திராவும் பக்தி படம்தான். பாபாவும் பக்தி படம்தான். முன்னது நன்றாகவே ஒடியது. பின்னது தோல்வியை தழுவியது. இத்தனைக்கும் ராகவேந்திரா அவரது 100வது படம் - அப்போது அவர் இளைஞர், ஆக் ஷன் ஹீரோவாக புகழடைந்திருந்தவர். படம் ஆரம்பித்தபோது நிறைய பேர் அவருக்கு இது விபரீத முயற்சியென்று அறிவுரை சொல்லவும் செய்தார்கள். மீறி அவர் அந்த படம் செய்தார். வெளிவந்து படம் நன்றாகவே ஒடியது. ஆனால் பாபா ஏன் ஒடவில்லை என்று யோசித்துப் பாருங்கள். பிறகு உங்களுக்கு வருடாவருடம் கேதார கௌரி விரதமிருப்பவர்களுக்கும் திருப்பதி தாயாரின் தாலி கீழே விழுந்ததற்காய் பரிகாரம் செய்பவர்களுக்கும் என்ன வித்தியாசமென்று புரியும். அது புரிந்தால்தான் நான் ஏன் சிவாஜியின் கதாநாயகியை முட்டாளென்று சொன்னேனென்பதும் புரிந்துவிடும்... ஹ்ம்ம்.. ஆனால் மோகனா நீங்கள் தூங்குவது போல் நடிப்பவரென்பதால் அதையெல்லாம் நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.

சரி, சில விஷயங்களில் புலம்புவதை ஒரு அளவோடு நிறுத்திகொள்ள வேண்டும். புலம்பாமலே இதுதான் யதார்த்தமென்று புரிந்துணர்ந்து புன்னகையோடு நிஷ்காம்ய கர்மமாக பதிவெழுதும் மக்கள் புண்ணியாத்மாக்கள். நானும் மெல்ல அந்த நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். அவ்ளோதான் சொல்ல முடியும் இப்போதைக்கு.

பி. கு: பின்னூட்டப் பெட்டி காரணமாகவே மூடப்படுகிறது. ஆதரவு எல்லாம் மனதிலிருந்தாலே போதும்பா.