Friday, December 28, 2007

வீணா தணிகாச்சலம் ... இல்ல இல்ல.. லீனா மணிமேகலையின் தேவதை

மன்னிக்கணும் மக்களே, ரொம்ப நீளமான தலைப்புக்கு.. இது ஒரு சுட்ட பதிவு - ஊதிட்டு படிக்கணுமானெல்லாம் கேக்காதீங்க மக்கா... தோழி.காம் ல வெளியான ஒரு கட்டுரைய இங்கன நகலெடுத்து ஒட்டியிருக்கேன்(காப்பி + பேஸ்ட் :) ) இதுக்கு அவங்க கொடுத்திருக்கற தலைப்பென்னவோ - விதிவிலக்குகள்: முன்மாதிரிகள்: அப்படின்றதுதான். ஆனா அப்படி தலைப்பு வச்சா நம்ம வலையுலக மகாஜனங்களுக்கு பதிவோட உள்ளடக்கம் என்னான்னு தெரியாததால உள்ள எட்டிப் பாக்க சுவாரசியம் வராதே, அதான் ஊரோடு ஒத்து இப்படி ஒரு நச் தலைப்பு...

லீனா மணிமேலையின் தேவதை ஆவணப் படத்தில் இடம்பெற்ற மூன்று பெண்கள் சற்றே வியப்பையும் ஆச்சரியத்தையும் சில கணங்களில் வருத்தத்தையும் தரும் பெண்களாக எனக்குத் தெரிந்தார்கள்.

பெண் இருத்தல் குறித்த தனது கவனத்தைத் தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவுசெய்துவரும் லீனாவின் இந்தப் படமும் பெண்களைக் குறிப்பாக நம்மிடையே விதிவிலக்குகளாக வாழ்ந்து வரும் பெண்களைப் பற்றியது தான்.

பெண்களுக்கென சமூகம் சில வரையறைகளை வைத்திருக்கின்றது. குடும்பமும் சமூகமும் பெண்ணின் இயங்கு வெளியை எப்பொழுதும் ஒரு எல்லைக்குள்ளாகவே தீர்மானித்திருக்கின்றன. ஆணும் பெண்ணும் சமமாகப் பணிபுரியும் நிலைக்கு இன்று வந்திருந்தாலுங் கூட பெண் இதையெல்லாம் செய்யவே கூடாது என்றும் சில இருக்கின்றன.

வீட்டிற்கு வெளியே செய்யப்படும் பணிகளில் மட்டுமல்ல இந்தப் பாகுபாடு. வீட்டிற்குள்ளும் ஆணுக்கெனச் சில பணிகளும் பெண்ணுக்கெனச் சில பணிகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. சமையல், வீட்டு வேலைகள், குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாத்தல் என்பன போன்ற பணிகள் பெண்ணுக்கே உரியவையாகவும் வெளியே செல்லுதல், நிர்வகித்தல், முக்கிய முடிவுகளை எடுத்தல் போன்றவை ஆணுக்குரியவையாகவும் இன்றும் தொடர்கின்றன.

ஆண்பிள்ளை தான் பெற்றோருக்குக் கொள்ளி வைக்க வேண்டும். ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது உறவுக்காரர் வைப்பாரே தவிர இறந்தவரின் மகளைக் கொள்ளி வைக்க அனுமதிப்பதில்லை இந்தச் சமூகம்.

இந்தச் சூழலில் ஒரு பெண் சடலங்களைப் புதைப்பதைத் தனது வேலையாகக் கொண்டிருந்தால் அவர் வியக்க வைக்கும் மனுஷி தானே! இன்னொருவர் கால்களில் சலங்கை கட்டிக் கட்டிக் கொண்டு இறப்பு வீடுகளுக்கு ஒப்பாகி பாடச் செல்பவர். இதற்கென ஒரு குழுவோடு ஊர் ஊராகச் சென்று ஒப்பாரி வைத்து வரும் வருமானத்தை எல்லோருடனும் பகிர்ந்து வாழ்பவர்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மற்றொரு பெண் கடலைத் தங்கள் தாய்வீடாக நினைத்து வருபவர். இந்த மூவரும் தான் லீனாவின் தேவதைகள்.இவர்களெல்லாம் விதிவிலக்குகளாக வாழ வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு இந்தத் தொழில்களுக்கு வந்தவர்களா? இல்லை வாழ்க்கையின் போராட்டமும் இவர்கள் சந்தித்த அனுபவங்களும் இவர்களை இப்படி ஆக்கியிருக்கின்றன. சுடுகாட்டில் பிணங்களைப் புதைப்பதும் பிணங்களுக்கு முன்னே ஒப்பாரி பாடுவதும் எந்தநேரமும் இயற்கையின் சீற்றத்தைக் கொண்டு வரும் கடலில் இறங்குவதும் எளிதான காரியமா? ஆனால் இவர்களது வாழ்க்கை இப்படித்தான். இந்தப் படத்தில் பிறரோடு இவர்களின் அன்பும் அக்கறையும் வெளிப்படும் விதமும் அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த மூன்று பெண்களையும் ஆவணப்படுத்தியது இவர்களின் மீதான அனுதாபத்தை உண்டாக்கும் பொருட்டல்ல. இப்படியும் இவர்களால் வாழ முடிந்திருக்கிறது என்பதைக் காட்டத்தான். துயரங்களோடு நகர்ந்தாலும் இவர்கள் வாழும் விதம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

சுடுகாட்டிலேய கடைசி வரையிருந்து அங்கேயே மூச்சை விட வேண்டுமென்று நினைக்கும் ஒரு பெண். (கிருஷ்ணவேணி)

பெண் கடலில் இறங்குவது தீட்டு என்றும் சாமி குத்தமென்றும் சொல்லப்பட்டதைப் பொருட்படுத்தாது மீன்களையும் சங்குகளையும் சிப்பிகளையும் தேடி எடுத்துத் தொழில்செய்து கடலைத் தன் தாய்மடியாகக் கருதும் பெண். (சேது ராக்கு)

பிணங்களின் முன் ஒப்பாரி பாடிக் கிடைக்கும் பணத்தைச் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அங்கிருக்கும் குரங்குகளுக்கும் தாராளமாகச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழும் பெண். (லட்சுமி)

செய்யக் கூடாதவை என்றும் ஆண்கள் மட்டுமே செய்யும் தொழில்கள் என்றும் சொல்லப்பட்ட இந்தக் காரியங்களைச் செய்யும் இம்மூன்று பெண்களைத் தேடிச் சென்று ஆவணப்படுத்தியிருக்கியது இந்தப் பதிவு.

மரபுகளையும் மூட நம்பிக்கைகளையும் கடந்து புதிய பாதையில் பயணிக்கும் இவர்களது வாழ்க்கையினை நம்முன் கொண்டு வந்த லீனாவிற்குப் பாராட்டுக்களைச் சொல்லலாம்
தேவதைகள்

திரைக்கதை இயக்கம் : லீனா மணிமேகலை
தயாரிப்பாளர் : ஜெரால்டு
படத்தொகுப்பு : தங்கராஜ்
ஒலி அமைப்பு : சந்தான நம்பி
நேரம் : 42 நிமிடங்கள்

நன்றி: தோழி.காம்

Tuesday, November 06, 2007

காயங்களின் பட்டியல்

போர் ஓய்ந்த பின்னும் குருதி காயாத களமாய் கிடக்கிறது என் மனம்.
போகிறபோது நீ வீசியெறிந்துவிட்டுப் போன கற்களால்
உடைந்து சிதறிக் கிடப்பது கண்ணாடிக் கதவுகள் மட்டுமல்ல.
மனமூலைகளில் நான் குவித்து வைத்திருந்த சகல குப்பைகளையும்
போகுமுன் உதறிக் காட்டிவிட்டுப் போனாய் நீ.
ஒவ்வொரு மூலையிலும் இன்னமும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
நீ உரக்கச் சொன்ன என் இயலாமைகளின் பட்டியல்.
எல்லாவற்றையும் தாண்டி இன்னமும் ஒரு சிறு ஆறுதல்
இந்த மனப் பேய்க்கு - இன்னமும் காற்றில் மிதக்கும் உன் வாசனை.

Monday, November 05, 2007

இன்னமும் பேசத்தான் வேண்டுமா பெண்ணியம் பற்றி?

‘ஏண்டா நாயே இப்படி பண்ணே?’னு கேட்டதுக்கு, ‘மூணாவதா பையன் பொறப்பான்னு காத்திருந்தேன். ஆனா மூதேவி இல்ல பொறந்திருக்கு. அதான் கொன்னுட்டேன்’னு சொல்றான்’’

‘‘ஏற்கெனவே எனக்கு ஏகப்பட்டகடன். இதுல இந்தப் பொட்டச்சியையும் எப்படி வளர்க்கறதுனு தான் கொன்னுட்டேன்...’’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி அதிர வைத்தான்.

சாதி ஒழிப்புப் பற்றியும் பெண்ணுரிமை பற்றியும் பேசப்படும் போதெல்லாம் அடிக்கடி எதிர்கொள்ள நேரிடும் ஒரு கேள்வி இது - "எவ்வளவோ பேர் முன்னேறிட்டாங்க. இன்னமும் எதுக்குங்க இதையெல்லாம் பத்திப் பேசிகிட்டுத் திரியறீங்க நீங்க? உங்களை மாதிரி ஆளுங்கதான் இல்லாத ஒரு விஷயத்தை இன்னமும் எடுத்து வச்சுப் பேசறீங்க." நல்ல வேளையாக இந்தப் புண்ணியவான்கள் ஏழ்மை ஒழிப்புக்கும் இதே வகையான வசனங்களைச் சொல்ல முடியவில்லை. அதுவே பெரிய விஷயமாக்கும்....

இதில் சாதிப் பிரச்சனை பற்றி பேச வேண்டியதின் அவசியத்தை இன்னமும் இருக்கும் இரட்டைக் குவளை முறையிலிருந்து திண்ணியம் சம்பவம் வரை எத்தனையோ விஷயங்கள் உணர்த்திக் கொண்டுதான் இருக்கின்றன. ஆனால் இதையெல்லாம் நான் பேச ஆரம்பித்தால் உடனே அகவாழ்வியலிலிருந்து புறவாழ்வியல் வரை புடலங்காய்ப் பொரியல் உட்பட சகல இயக்கவியல்களையும் கரைத்துக் குடித்த அதிமேதாவிகள் ஓடி வந்து அதைப் பற்றிய உனது பேச்செல்லாம் வெறும் பரிதாபம் காட்டும் பேச்சாய்தானிருக்குமென்று ஆருடம் சொல்ல ஆரம்பித்துவிடுவார்கள். சரி, பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்ட காரணத்தால் நான் பெண்ணியம் பேச வேண்டியிருப்பதின் அவசியத்தையாவது சொல்லிவிட்டுப் போகிறேன் சாமி என்றாலும் கூட இதற்கும் ஒரு குதர்க்கம் சொல்லிக்கொண்டுதான் திரியப்போகிறார்கள். எனினும் மனதில் பட்டதைச் சொல்லாது விடும் கோழைத்தனம் எனக்கு வாய்க்காததால் சொல்ல வந்ததைச் சொல்லியே தீருவேனாக்கும். :)

இந்த வார ஜூ.வியில் ஒரு செய்தி - பெண் குழந்தை பிறந்து விட்டதே என்ற ஆத்திரத்தில் குழந்தையின் தந்தையே ஈவு, இரக்கம் இல்லாமல் அந்தப் பிஞ்சின் முகத்தில் தலைய ணையை அழுத்திக் கொடூரமாகக் கொலை செய்திருக்கிறான். தமிழ்நாட்டிலேயே பெண் சிசுக் கொலைகள் அதிகம் நடக்கும் தர்மபுரி மாவட்டத்தில்தான் இந்த சம்பவமும் நடந்திருக்கிறது. இச்செய்தியின் தொடர்ச்சியாகத்தான் பதிவின் முதல் பத்தியில் சொல்லியிருக்கும் வாசங்களைச் சொல்லியிருக்கிறார் அந்த பாசமிகு தந்தை.

சரி, இது எங்கோ ஒரு மூலையில் நடக்கும் செய்திதானே என்று அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். அதே கட்டுரையில் கீழே தனியார் தொண்டு நிறுவனம் ஒன்றின் இயக்குனரிடமும் மாவட்ட சமூக நல அலுவலரிடமும் எடுக்கப் பட்ட பேட்டி தரப்பட்டுள்ளது. அதையும் இங்கே தருகிறேன்.

தர்மபுரி மாவட்டத்தில் பெண் சிசுக்கொலையை தடுப்பதற்காக செயல்பட்டு வரும் தனியார் தொண்டு நிறுவனமான‘பொதிகை’ அமைப்பின் இயக்குநர் லதாவிடம் பேசினோம். ‘‘தர்மபுரியில் பெண் சிசுக்கொலை ஒழிஞ்சிட்டுதுனு சொல்றது எல்லாம் சும்மா. நாங்க தினமும் ஃபீல்டுக்குப் போறப்ப ஜனங்க கதைகதையாச் சொல்றாங்க. பெண் குழந்தைனா வீட்டுக்குத் தூக்கிட்டு வந்தவுடனே அதுக்கு பூ, பொட்டு எல்லாம் வெச்சு, பிறகு படுக்கையில் அதை கவுத்துப் போட்டுப் படுக்க வெச்சுட்டுப் போயிடறாங்க. அரை மணி நேரம் கழிச்சு வந்து பார்த்தா குழந்தை புரள முடியாம மூச்சு முட்டி செத்துப் போயிருக்கும். இந்த விஷயமெல்லாம் வெளியே வர்றதில்லை...’’ என்றார்.

தர்மபுரி மாவட்ட சமூக நல அலுவலர் சாய்லட்சுமியிடம் பேசியபோது, ‘‘நாங்க ஊர்ஊரா விழிப்பு உணர்வுக் கூட்டம் போட்டதுல பொம்பளைங்க எல்லாம் மாறிட்டாங்க. ஆனா, இந்த ஆம்பளைங்கதான் பிடிவாதமா இருக்காங்க. எவ்வளவு சொன்னாலும் குடும்பக் கட்டுப்பாட்டு ஆபரேஷன் பண்ணிக்க மாட்டேங்கறாங்க. கேட்டா, கொள்ளி போட ஆண் வாரிசு வேணுமாம். குழந்தைகளுக்கு படிப்புக்கு ஏற்பாடு பண்றதோ சொத்து சேர்த்து வைக்கிறதோ இல்லை. கொள்ளி போட மட்டும் ஆம்புளைப் புள்ளை வேணும்னு அடம் பிடிக்கிறாங்க. முன்னைக்கு நிலைமை இப்ப பரவாயில்லை. நான் இங்க பொறுப்புக்கு வந்ததுக்கப்புறம் நடந்த முதல் சம்பவம் இதுதான். மத்தபடி பெரும்பாலும் பெண் குழந்தை பொறந்தா தொட்டில் குழந்தைகள் திட்டத்துல வந்து சேர்த்துடுவாங்க. இதுவரைக்கும் 996 குழந்தைங்களைத் தொட்டில் குழந்தை கள் திட்டத்துல சேர்த்திருக்காங்க. ரவி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் ஆண் வாரிசுன்னு சொல்லிக்கறதுக்கு ஏற்கெனவே ஒரு பிள்ளை இருக்கு. இருந்தும், கூடுதலா ஒரு பொட்டைப் பிள்ளையை பெத்துட்டோம்ங்கற கோபத்துல இப்படி நடந்துகிட்டது கொடூரமாத்தான் இருக்கு’’ என்றார்.

சமூக நல அலுவலரான சாய்லட்சுமியின் பேட்டியில் முன்னைக்கு இப்ப பரவாயில்லை என்கிற வரியைப் பார்த்து கூட மகிழ்ந்துவிட முடியவில்லை. ஏனெனில் அதன் உண்மையான பொருள் - முன் அளவு இப்போது பெண் சிசுக் கொலை நடக்கவில்லைதான். ஆனால் அதற்காக எல்லாப் பெற்றோரும் ஆணும் பென்ணும் சமமெனக் கருதி பெண் குழந்தைகளை கொஞ்சி சீராட்டிட ஆரம்பித்துவிடவில்லை. கொலை செய்யும் பாவத்தைச் செய்யாது தொட்டில் குழந்தை திட்டத்தில் விட்டுச் செல்கின்றனர் - அனாதைகளாக. அதாவது பெண் குழந்தை ஒரு பாரமென்று கருதும் மனப்போக்கு மாறிடவில்லை. கொலைகள் அரசின் தலையீட்டால் தடுக்கப் பட்டு வருகின்றன. இந்த குறிப்பிட்ட சம்பவத்தில் கூட அந்தத் தந்தை குடிபோதையில் இல்லாதிருந்திருந்தால் கொலைக்கு பதிலாக தாய்க்குத் தெரியாது அக்குழந்தையைக் கொண்டு போய அரசுத் தொட்டிலில் சேர்த்திருக்கும் ஆபத்தில்லாத வழியைத் தேர்ந்தெடுத்திருந்திருப்பார். அரசே குழந்தைகளை வளர்ப்பது என்பது தற்காலிகத் தீர்வாக வேண்டுமானால் இருக்கலாம். சரியான, நிரந்தர தீர்வு என்பது ஒவ்வொருவரும் ஆண் பெண் குழந்தைகளிடையே எந்த பேதமும் இல்லை என்பதை உணர்ந்து எந்தக் குழந்தை பிறந்தாலும் ஒன்றே எனக்கருதும் நாளல்லவா?

நான் பெரிய மாநகரில் மூன்று தொழிலதிபர்களையும், அவர்களின் மேனேஜர்களையும், அவர்களுக்குக் கீழ் வேலை செய்யும் க்ளார்க்குள் நால்வரையும் அறிவேன். நான் பிறந்த சிற்றூரில் 15 குடும்பங்களை அறிவேன். அதற்கும் அடுத்த ஊரில் ஒரு 5 நண்பர்கள் இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் பெண் குழந்தைகளை பாராட்டி சீராட்டி வளர்க்கிறார்களாக்கும். எத்தனை வகை மனிதர்கள், எல்லாத் தரப்புக்கும் பிரதிநிதித்துவமிருக்கும்படித்தானே சாம்பிள் எடுத்துப் பார்த்துச் சொல்கிறேன், பெண் குழந்தைகளை வெறுக்கும் போக்கு மறைந்து விட்டது என்று? இன்னமும் ஏன் பெண்ணுரிமை பற்றிப் பேசி நேரத்தை வீணடிக்கிறீர்கள் மேடம் என்று நண்பர்கள் சிலர் என்னிடம் கேட்கிறார்கள். என்ன செய்யட்டும் இது போலெல்லாம் பெருத்த நண்பர் வட்டமோ பரந்த உலக அறிவோ இல்லாத எனக்கு எங்கேனும் ஒரு மூலையிலிருந்தாவது இன்னமும் இது போன்ற கருத்தம்மாக்களின் கதை கதை காதில் விழுந்து தொலைக்கிறதே?

Friday, November 02, 2007

கடைத்தேங்காயும் வழிப்பிள்ளையாரும்

ஆனந்த விகடனில் கலைஞரின் ஒய்வு பற்றி எழுதிய கட்டுரைக்கு எழுந்த எதிர்பைத் தொடர்ந்து ஞானியின் ஒ பக்கங்கள் விகடனில் காணாமல் போனது - எவ்வித அறிவிப்பும் இல்லாமல். ஆனால் ஞானி ஒ பக்கங்கள் விகடனில் நிறுத்தப்படுவதாக எழுதிய(தாகச் சொல்லப்படும்) ஒரு மின்மடல் சில குழுமங்களில் பிரசுரமாகியிருந்தது. இன்று ஆனந்த விகடனைத் திறந்தால் வழக்கம் போல ஒ பக்கங்கள் - இம்முறை ஆஸ்திரேலியப் பிரதமரின் கலாச்சாரம் குறித்த கருத்துக்களை மையப்படுத்தி கட்டுரை எழுதியிருக்கிறார். உள்ளூர் விஷயங்கள் ஆபத்தானவை என்பதால் வெளிநாட்டு விஷயங்களை நோக்கி தன் கவனத்தைத் திருப்பியிருக்கிறார் போலும். :) எது எப்படியோ மீண்டும் அவர் எழுதத் தொடங்கியிருப்பது மகிழ்ச்சியே.

அவர் தனது இந்த வாரக் கேள்வி பகுதியில் குறிப்பிட்டுள்ள விஷயம் மிக நியாயமானது.
//இந்த வாரக் கேள்வி - ஏற்கெனவே தமிழக அரசு பரிசாகக் கொடுத்த சென்னை வீட்டை விற்றுவிட்டு பெல்ஜியத்தில் குடியேறிவிட்ட செஸ் சாதனையாளர் ஆனந்த்-துக்கு, தமிழக அரசு எதற்காக இப்போது 25 லட்ச ரூபாய் பரிசு தர வேண்டும்? அதற்குப் பதிலாக அந்தப் பணத்தில் இளைஞர்களுக்கு செஸ் பயிற்சி தர அகாடமி ஆரம்பித்து, அதற்கு ஆனந்த் பெயரைச் சூட்டினால், அதுவே அவருக்கான சிறந்த கௌரவிப்பாக இருக்குமே! //
இதுதான் அவரது கேள்வி. இந்த ஒரு விஷயத்தில் மட்டுமில்லை - பொதுவாகவே வேற்று நாட்டிற்கு குடியேறிவிட்டவர்களின் மீது அவர்கள் ஏதேனும் ஒரு விஷயத்தில் புகழ் பெற்றவுடன் நமது நாட்டு அரசாங்கம் காட்டும் அலாதியான பாசம் தேவையற்றது. தமிழ்த் திரைப்படங்களில் நாயகனோ நாயகியோ சிரமப்படும் நாட்களில் கண்டுகொள்ளாத சுற்றமும் நட்பும் அவர்கள் வெற்றி பெற்றபின் அவர்களது புகழுக்கும் செல்வத்துக்கும் பங்கு கொண்டாட வருவது போன்ற காட்சியமைப்பு அடிக்கடி காணக்கிடைக்கும். அப்படியான காட்சியமைப்பைப் பார்க்கும் பாமர மக்களுக்கும் கூட இவ்வகையான கதாபாத்திரங்கள் மீது வெறுப்பே மிஞ்சும். அப்படியிருக்க இப்படி ஒரு செயலை அரசே ஏன் செய்ய வேண்டும்?

இங்கே இருக்கும் வசதி வாய்ப்புகள் போதாதென்று வேறு நாட்டிற்கு குடியேறுவதற்கு நானொன்றும் எதிரியில்லை. அப்படி முடிவு செய்வதெல்லாம் முழுக்க முழுக்க அவர்களின் தனிப்பட்ட விஷயம். ஆனால் அப்படி வேற்று நாட்டிற்கு சென்று விட்டவர்களை, அவர்களது புகழை எதற்காக நாம் சொந்தம் கொண்டாட வேண்டும்? அதுதான் போகட்டும், அவர்களுக்கு எதற்காக நமது வரிப்பணம் அள்ளித்தரப் படுகிறது? எந்த விதத்தில் இவையெல்லாம் நியாயமானவை?

ஆனந்திற்கு அளிக்கப்படும் சலுகை, சுனிதா வில்லியம்ஸுக்கு கிடைத்த வரவேற்பு , சமீபத்தில் அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட லோகநாதன் என்ற லெக்சரரின் இறுதிச் சடங்குக்குச் செல்ல குடும்பத்தினருக்கு அவசர அவசரமாக தட்கல் முறையில் பாஸ்போர்ட் வழங்கி வழியனுப்பி வைத்தது(9 பேருக்கு பாஸ்போர்ட், விசா, விமானக் கட்டணம் அனைத்தும் நம் அரசே ஏற்றது) என்று இத்தகைய செயல்களின் பட்டியல் நீள்கிறது. இதுதான் கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைப்பது என்பதோ?

ஒரு வருடம் ஒடிப் போச்....

ஆமாங்க, நானும் இந்த ப்லாகை ஆரம்பிச்சு ஒரு வருஷம் ஆயிடுச்சு. பொதுவாகவே எனக்கு இந்த நவம்பர் மாதம் கொஞ்சம் ஆகாது - சென்டிமென்ட் எல்லாம் இல்லைங்க. ஒவ்வொரு வருடமும் ஏதாவது துரதிர்ஷ்டவசமான அல்லது இத்தோடு என் ஆட்டம் க்ளோஸ் என்று சுற்றியிருப்பவர்களை எண்ணவைக்குமளவிலான சம்பவங்கள் நடப்பது வாடிக்கை. ஒவ்வொரு வருடமும் இப்படியே நடந்து கொண்டிருந்தால் என்னாவது? நாம் பெற்றதை சமூகத்துக்கு திருப்பித் தருவது என்பதல்லவா உயர்ந்த மனிதப் பண்பு?? இப்படி ஒரு எண்ணம் மனசுக்குள்ள வந்தபோதுதான் இந்த முடிவு - வலைப்பதிவு துவங்குதல் என்ற முடிவை எடுத்தாக வேண்டிய காலக்கட்டாயம் உருவானது. :)

ரொம்ப பெருசா எதையும் எழுதிக் கிழிச்சுடலைதான். இருந்தாலும் ஒத்த சிந்தனையுள்ள நண்பர்கள் வட்டம் ஒன்னு கிடைச்சிருக்கு. கூடவே வரிகளுக்கு இடைல படிச்சு தனக்குத் தேவையான வார்த்தைகளை எங்கேர்ந்தாவது உருவி எடுத்து அதை நம்ம கருத்தா மாத்தும் மாயவித்தைக்காரர்கள் சிலரது அறிமுகமும் கிடைத்திருக்கிறது. அப்புறம் விவாதம்ன்ற பேர்ல வார்த்தைகளைப் பிடித்துக் கொண்டு தொங்கும் சிலரது நட்பு. இப்படி நிறைய வகைப்பட்ட மனிதர்களை இந்த வலையுலகம் அறிமுகம் செய்திருக்கிறது. பெரும்பாலும் மகிழ்ச்சியூட்டும் வகையிலான அறிமுகங்கள்தான். அதுனால இந்த வலைப்பதிவு வாழ்க்கை மகிழ்வையே தருகிறது. இன்னும் சில வருடங்களுக்காவது தொடர முடியும் என்கிற நம்பிக்கையிருக்கிறது. பதிவுலக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் - குறை, நிறைகளைத் தொடர்ந்து அங்கங்கே சொல்லி ஆதரவு அளிக்கணும். பொதுப்படையா என்னோட எழுத்தில் எதுனா குறை இருக்கறதா நினைச்சா, இந்தப் பதிவோட பின்னூட்டத்துல சொல்லுங்க. முடிந்த அளவு திருத்திக்க முயற்சிக்கறேன்.

பி.கு: பார்க்கப் போனா முதல் பதிவு போட்டதென்னவோ நவ.4தான். ஆனா அன்னிக்கு ஞாயிறுன்றதால கொஞ்சம் முன்னாடியே கொண்டாடிலாம்னு இன்னிக்கே பதிவ பப்ளிஷ் பண்ணியாச்.

Wednesday, October 24, 2007

படித்ததில் பிடித்தது (8)

புத்தகம் - மூன்று விரல்
ஆசிரியர் - இரா. முருகன்
பதிப்பகம் - கிழக்குப் பதிப்பகம்
முதல் பதிப்பு - ஆகஸ்ட், 2005

பொதுவாகவே எனக்கு இரா.முருகனின் எழுத்தில் விரவி நிற்கும் மெல்லிய அங்கதம் பிடிக்கும். அது அரசூர் வம்சம் நாவலானாலும் சரி, வாரபலன், எடின்பரோ குறிப்புகள் போன்ற பத்திகள் ஆனாலும் சரி அடிநாதமாக இந்த மெல்லிய நகைச்சுவை இழையோடும். அதிலும் குறிப்பாக இந்த நாவல் ரொம்ப பிடித்துப் போனதன் காரணம் நாவல் முழுக்க முழுக்க பொட்டி தட்டுதல்/ஆணி பிடுங்குதல் என்றெல்லாம் தமிழ் வலையுலகால் செல்லமாய் நாமகரணம் செய்யப் பட்டிருக்கும் மென்பொருள் துறையில் இருக்கும் ஒரு இளைஞனைப் பற்றியது என்பதுதான். ரமணாவில் விஜயகாந்த் விண்டோஸ் மீடியா ப்ளேயரை திரையில் ஒடவிட்டு ஸ்கீரினைப் பார்த்துக் கொண்டே கீ போர்டில் மாய்ந்து மாய்ந்து டைப் செய்வார் - அதுவும் இதை ட்ராலி வைத்துச் சுற்றிச் சுற்றி வேறு காட்டுவார்கள். இந்தக் காட்சியைப் பார்த்து நாம் சிரிக்கக் கூட முடியாது வீட்டில் உட்கார்ந்து - ஏனென்றால் சுற்றியிருப்பவர்கள் ஒரு சீரியஸ் காட்சியில் திடீரென்று சிரிக்கும் தன் பெண்ணின் சித்த சுவாதீனத்தின் மீதே அவநம்பிக்கை கொண்டு விடக்கூடும்.

வெளியிலிருந்து பார்க்கும் ஆட்களுக்கு மென்பொருள் ஆசாமிகளைப் பற்றி ஏற்படுத்தப்பட்டிருக்கும் பிம்பம் அவ்வளவுக்கு நிஜத்திலிருந்து வேறுபட்டது. அதை இந்த நாவல் கொஞ்சமேனும் மாற்றும் என்று எண்ணுகிறேன். இரா.மு மென்பொருள் துறையிலும் சரி இலக்கியத் துறையிலும் சரி செறிந்த அனுபவமுடையவர். முன்னுரையில் அவர் இந்த நாவல் எழுத நேர்ந்ததன் காரணத்தை விளக்குகிறார்.

மற்ற எந்தத் தொழிலில் இருப்பவர்களையும்விட, முழுக்க முழுக்க கற்பித்துக் கொண்ட பிம்பங்களின் அடிப்படையில் தமிழ்ப் படைப்புகளில் சித்தரிக்கப்படுபவர்கள் கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் துறையில் இருக்கப்பட்டவர்கள்தாம்.

கணினி மென்பொருள் தொழில்நுட்பப் பணியாளர்கள் பெரும்பாலும் இருபத்தைந்திலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும் இளைஞர்களும் யுவதிகளும். இந்த வயது வரம்பு, கம்ப்யூட்டர் என்ற பழைய மந்திரச் சொல்லின் பரவலான எச்ச சொச்ச ஈர்ப்பு. அங்கோலாவிலிருந்து ஆஸ்திரேலியா வரை பறந்து இறங்கிக் கூடு கட்டி இந்த மென்பொருள் தொழிலாளர்கள் சம்பாதிக்கும் - இந்தியச்சராசரி வருமானத்தை விடப் பல மடங்கு கூடுதலானது என்று பலராலும் கருதப்படும் - வருமானம் போன்றவற்றின் அடிப்படையில் சாஃப்ட்வேர் இன்ஜினியர்களைப் பற்றி பலூனாக ஊதப்பட்ட வண்ண வண்ண இமேஜ்கள் தமிழ்க் கதைகளில் பிறக்க ஆரம்பித்தபோது இதெல்லாம் சீக்கிரம் தரைக்கு வந்து விடும் என்று நினைத்து நான் என்பாட்டுக்கு கம்ப்யூட்டர் தொழிலிலும் அதோடு சம்பந்தப்படாத என் படைப்புலகத்திலும் மூழ்கியிருந்தேன்.

ஆனால், தமிழில் ஒரு படைப்புக்கூட இதுவரை மென்பொருளாளர்களைப் பற்றிய இப்படிப்பட்ட தட்டையான படிமத்தை உடைத்து அந்தத் தொழிலில் ஈடுபட்டவர்களை நகமும் சதையுமாகச் சித்தரித்து அவர்களின் தொழில் சார்ந்த சிக்கல்களையோ, தினமும் சந்திக்கவேண்டியிருக்கும் சவால்களைப் பற்றியோ பேசவே இல்லை என்று எனக்குப் பட்டபோது, கம்ப்யூட்டர் துறையில் இருக்கும் தமிழ்ப் படைப்பாளன் என்ற முறையில் இவர்களைப் பற்றிய ஒரு முறையான பதிவை, என் படைப்பாக்கங்களின் ஒரு பகுதியாக முன்வைக்க உத்தேசித்தேன்.

நண்பர் பா.ராகவன் திடீரென்று தொலைபேசியில், தான் சார்ந்திருந்த பத்திரிக்கையின் இணையதளத்தில் நான் உடனே ஒரு தொடர்கதை எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டதோடு, அது கம்ப்யூட்டர் துறை பற்றியதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஒரு யோசனையையும் தெரிவித்தார்.

'ஐந்து நிமிடத்தில் திரும்ப ஃபோன் செய்கிறேன்... தலைப்பு சொல்லுங்க'

நான் என் கம்ப்யூட்டரில் வழக்கமான வேலையில் மூழ்கி இருந்தேன். புராஜக்ட் மேனேஜ்மென்ட் தொடர்பான சிக்கலான வேலைப் பங்குபிரிப்புக்கு இடையே என்ன காரணத்தினாலோ அந்த இயந்திரப் பிசாசு ஸ்தம்பித்து நின்று போக நான் அதை திரும்ப இயங்க வைக்க ரீபூட் செய்து கொண்டிருந்தபோது உதயமான தலைப்புதான் 'மூன்று விரல்.'

திடீரென்று இயக்கம் மறைந்து உறைவதும், திரும்பச் செயலபடத் துவங்குவதும் கம்ப்யூட்டரின் குணாதிசயம் மட்டுமல்ல, அதோடு சம்பந்தப் பட்டவர்களின் வாழ்க்கை நியதியும்கூடத்தான் என்று தோன்றிய அந்தக் கணத்தில் உருவான கதையே இது.
இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுக்கள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள்.

'அவனா... அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு லாஸ் ஏஞ்சல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்..' என்று பொருமி வியத்தலும், 'கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சு போய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டலிலே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டு இருக்கானாம்... நல்லா வேணும்' என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கே இலமே!

இருபது வருடங்களாக இந்தத் துறையில் இருக்கும் அனுபவம், எனக்கு இந்த நாவலை எழுத மிகவும் பயன்பட்டாலும், அது மட்டும் 'மூன்று விரல்' இல்லை.

எல்லாப் படைப்புகளும் எழுதியவனை மீறி ஏதோ சொல்ல முற்படுகின்றன. முற்பட வேண்டும். அவற்றோடு ஊடாடும் வாசகர்கள், சொல்லப்பட்ட கதையையும் கடந்து தங்கள் எண்ண ஓட்டங்களை விரிக்க வழி செய்வதோடு எழுதியவனின் கடமை முடிந்து விடுகிறது.


இந்த முன்னுரையையும் இதோடு முடித்துக் கொள்ள அனுமதி வேண்டுகிறேன்.

கீழாம்பூர் ரங்கநாதன் சுதர்சன் -ஒரு மென்பொருள் வல்லுனன். சென்னையில் ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியின் சார்பாக லண்டனிலிருக்கும் நாய் வளர்ப்போர் சங்கத்துக்கான் மென்பொருளை உருவாக்கும் பணியிலிருந்தவன். மென்பொருள் உருவாகி முடிந்ததும் அதை வாடிக்கையாளருக்கு இயக்கிக் காண்பித்து அவர்கள் சுட்டிக் காட்டும் குறைகளை உடனடியாகக் களைந்து பின் அவர்களின் ஒப்புதல் பெற்று வரும் - யூ.ஏ.டி (யூசர் அக்சப்டன்ஸ் டெஸ்ட்) என்ற அக்னிப் பரிட்சைக்காக லண்டன் செல்கிறான். வெற்றிகரமாக அதை முடித்துக் கொண்டு அங்கேயிருந்து கிளம்புவதற்கு முன்னரே அவன் வேலை பார்க்கும் கம்பெனி கைமாறி விடுகிறது. இதற்கு இடையில் சந்தியா எனும் லண்டன் வாழ் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணைச் சந்தித்து காதல் கொள்கிறான். இந்தியா திரும்பி வருகையில் ரயில் சிநேகம் போல விமானத்தில் அறிமுகமாகும் ஒரு பக்கத்து சீட் சர்தார் தானும் ஒரு மென்பொருள் கம்பெனி ஆரம்பிக்கவே சென்னை போவதாகவும் அதில் சேர விருப்பமா என்று கேட்கிறார். சென்னை வந்தவுடன் புது நிர்வாகமும் சுதர்சனைத் தன் கம்பெனியிலேயே இருக்கச் சொல்லுகிறது. அதை மறுத்து புது கம்பெனியில் சேரும் சுதர்சன் அக்கம்பெனியின் சார்பில் பாங்காங் போய் வேலையில் சேருகிறான். தன்னுடன் ஒரு சிறு குழுவைத் தன் பொறுப்பில் அழைத்துச் செல்கிறான். அங்கு அவன் சந்திக்கும் பிரச்சனைகள், ஊரில் அவன் அப்பா ஒரு நெருக்கடிக்குள்ளாவது, அப்போது தான் அருகிலிருக்க முடியவில்லையே என்று அவன் தவிப்பது, அவனுக்கு ஒரு பெண் பார்த்து நிச்சயம் செய்யத்துடிக்கும் தாயிடம் தன் காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பது, அவனது காதலி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்று நாவல் சுவாரசியமாகப் பயணிக்கிறது.

பொதுவாகவே மென்பொருளில் ஆன்சைட் எனப்படும் வாடிக்கையாளரின் இடத்திலேயே போய் வேலை செய்யும் வாய்ப்பு இரு முனைக் கத்தியைப் போன்றது. வெளிநாடென்பதால் கம்பெனி தரும் அலவன்ஸ் அதிகமாக இருக்கும் - அதை சேமித்து ஊருக்கு அனுப்பினால்(இந்த ஆல் பெரிய இக்கன்னா.. இங்க கோட்ட விடறவங்க ரொம்பப் பேரு) அது பெரிய சேமிப்பாகத் தான் இருக்கும். ஆனால் இதற்காக எதிர்கொள்ள வேண்டிய பிரச்சனைகளும் நிறைய. வெளிப்படையான பிரச்சனைகளான இந்திய சமையல் சாமான்கள்/காய்கறிகள்/கோவில்கள் போன்றவற்றின் தேவையெல்லாம் அநேகமாய் எல்லா நாடுகளிலும் தீர்க்கப் பட்டாகிவிட்டது. ஒரு சின்ன ஊரில் கூட இரண்டு இந்திய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்கள்(இது பெரும்பாலும் குஜராத்திகளால் நடத்தப்படுகிறது), கோவில்கள்(இதில் பெரும்பாலும் ஆந்திர மாநிலத்தவர் பங்கு அதிகம்) போன்றவை இருக்கின்றன. சமீபத்தில் பொன்ஸ் சான் பிரான்ஸிஸ்கோவில் அரசு நூலகங்களிலேயே தமிழ்ப் புத்தகங்கள் கிடைப்பதாகச் சொல்லியிருந்தார். அந்த அளவு புற வசதிகள் நாம் வீட்டை விட்டுத் தொலைவிலிருக்கிறோம் என்பதை மறக்கச் செய்கின்றன என்பது உண்மைதான். ஆனால் மனவியல் ரீதியில் சந்திக்க நேரும் பிரச்சனைகள் ஏராளம். நமக்கு ஒரு பிரச்சனை என்றால் வீட்டிலிருப்போரின் அருகாமை கிடைக்காது போவது, நாம் இங்கேயிருக்க வீட்டில் ஏதேனும் பிரச்சனை என்றால் அடிக்கடி தொலைபேசி அவர்களை நச்சரிப்பதல்லாது உருப்படியாய் எதுவும் செய்து உதவ முடியாத கையறு நிலை என்று பல காரணிகள் மனோரீதியாக நம்மைச் சோர்வுறச் செய்யும். இது மணமாகாத இளையோருக்கு. மணமாகி, பின் துணையை இங்கே விட்டுவிட்டுத் தவிப்பது ஒரு ரகம். கூட அழைத்துப் போனாலும் கூட பிள்ளைப்பேறு, குழந்தை வளர்ப்பு போன்ற விஷயங்களில் பெரியவர்கள் வழிகாட்டுதலுக்கும் ஒத்தாசைக்கும் ஏங்குவது, அப்படியே பெற்றோரை டூரிஸ்ட் விசாவில் அழைத்துப் போவதென முடிவு செய்தாலும் உங்க அப்பா அம்மாவா இல்லை என் அப்பா அம்மாவா என்று முடிவு செய்வதிலிருந்து ஆரம்பித்து ஏகப்பட்ட சிக்கல்கள் - இப்படி வெளிநாடு வாழ் மென்பொருள் ஆசாமிகளின் மனோரீதியிலான பிரச்சனைகளின் பட்டியல் ஆகப் பெரிது.

வேலையிலும் அழுத்தம் அதிகம். குறிப்பாக - யூ.ஏ.டி எனப்படும் வாடிக்கையாளர்கள் மென்பொருளை நேரடியாகச் சோதித்து ஏற்றுக் கொள்ளும் கட்டத்தில் மொத்த குழுவின் தவறுகளுக்கும் நாம் அங்கே நின்று சப்பைக்கட்டு கட்டியாக வேண்டும். உடனுக்குடன் சரி செய்து(தானே செய்துவிடும் ஆட்களும் உண்டு - இல்லை உடனடியாக ஆஃப்ஷோர் மக்களை அழைத்து முடிந்த மட்டும் கத்தித் தீர்த்துவிட்டு அவர்களைச் சரிசெய்யச் சொல்வதும் உண்டு) மீண்டும் அவர்களை விட்டே சரிபார்க்கச் சொல்லியாக வேண்டும். இந்தக் கட்டம் கிட்டத்தட்ட நெருப்பில் நிற்பது போன்ற விஷயம். இதையெல்லாம் நாவல் தெளிவாகவே சொல்கிறது. அதற்காக ஏதோ மென்பொருள் துறை பற்றிய பாடம் போலத்தான் இருக்குமாக்கும் என்று நினைத்துவிட வேண்டாம் - எங்கேயும் வலிந்து எந்த விஷயமும் திணிக்கப் படவில்லை. கதையோட்டத்திலேயே நாயகனது பணிச்சுமை, வீட்டை விட்டுத் தள்ளியிருக்கும் நிலையில் வீட்டுப் பிரச்சனைகளில் தன்னால் எதுவும் செய்ய முடியாத தவிப்பு என்று ஏகப்பட்ட விஷயங்கள் நாவல் முழுவதும் விரவியிருக்கிறது.

எவ்வளவு பிரச்சனை வந்தாலும் வாழ்வென்பது முடங்கி நின்று விடக்கூடாதென்பதையும் எந்தப் புள்ளியிலிருந்தும் அது மீண்டும் ஆரம்பிக்கப் பட வேண்டியதுதான் என்பதையுமே நாவல் சொல்கிறது. அங்கங்கே முருகனின் வழக்கமான மாஜிக்கல் ரியலிசமும் உண்டு.

Monday, October 22, 2007

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

அல்லது நீ எல்லாம் ஒரு ஆம்பளையா போன்ற கேள்விகளை நாம் வாழும் சமூகத்தில் பல முறை பல சந்தர்ப்பங்களில் கேட்க நேர்ந்திருக்கலாம். ஆனால் இரண்டு கேள்விகளும் எழும் விதத்தை கூர்ந்து பார்த்தால் ஒரு பெரிய வித்தியாசம் தெரியும் - நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? இதுக்கு பதில் நீ புடவை கட்டிக்கலாம்/வளையல் போட்டுக்கலாம் போன்ற வாசகங்கள் பெரும்பாலும் (பெரும்பாலும் என்ன எப்போதுமே) ஒரு ஆணின் செயல் குறித்த விமர்சனமாய்த்தான் அமையும். இதைக் கூட தூக்க முடியல/இவனைக்கூட அடிக்க முடியல/இவ்வளவு கூட சம்பாதிக்க முடியல போன்ற குறைபாடுகளுக்கு பதிலாகத்தான் மேற்ச்சொன்ன அந்தக் கேள்வி - அவரது பாலியல் தன்மையைக் சந்தேகிக்கும் கேள்வி முளைக்கும். அதே பெண்ணுக்கு இவ்வகைக் கேள்வி வருவது செயலுக்கான எதிர்வினையாகவும் சமயங்களில் இருக்கும்தான். ஆனால் பெரும்பாலும் இக்கேள்வி ஒரு பெண்ணுக்கெதிராய் எழுவது அவளது புறத்தோற்றத்தைக் குறித்துதான். தோற்றத்தை வைத்தே ஒரு பெண் ஒழுக்கமான பெண்ணா இல்லையா என்பதிலிருந்து சகலத்தையும் முடிவு செய்து விடுவார்கள் சில அதிமேதாவிகள். வலையுலகில் கூட சமீபத்தில் இப்படியான கருத்தை ஒருவர் வாந்தி எடுத்திருந்தார்.

சமீபத்தில் 'மிருகம்' என்கிற படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை பத்மப்ரியாவை கை நீட்டி அடித்ததாகவும் செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும் டைரக்டர் சாமி மீது புகார் எழுந்தது. அவருக்கு அபராதமும் இப்படத்தைத் தவிர்த்து வேறு படங்கள் எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தடையும் விதிப்பதாகத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. சரியாக நடிக்காததற்காக ஒரு நடிகரை அடிக்கும் உரிமை ஒரு இயக்குனருக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நடிகர்களுக்கே தெளிவான, ஒற்றுமையான கருத்தில்லை. ஒரு பாரதிராஜாவோ பாலச்சந்தரோ அடிப்பதைப் பெருமையாகக் கருதும் இவர்களே ஒரு புது இயக்குனர் அதைச் செய்யும் போது பொங்கியெழுகிறார்கள். யார் அடித்தாலும் யாரை அடித்தாலும் அது மனிதத் தன்மையற்ற செயல்தான் என்பதை இவர்களால் அழுத்திச் சொல்ல முடியவில்லை - அப்படிப் பார்த்தால் சரியாக வேலை செய்யாத யாரையும் வேலை வாங்கும் நிலையிலிருக்கும் ஒருவர் அடித்து விடலாமா என்று கேட்டால் உடனே ஒரு சப்பைக் கட்டு வரும் - அவங்க எல்லாம் கலைஞர்கள். அவங்க உணர்ச்சி வசப்படத்தான் செய்வார்கள்னு. இது போன்ற சப்பைக்கட்டுகளைக் கேட்கும்போதே பற்றிக்கொண்டு வருகிறதென்றாலும் இதைப் பற்றித் வேறு இடத்தில் பேசலாம். இப்போது சொல்ல வந்தது அவர் அந்த பாலியல் ரீதியிலான தொந்தரவு குறித்த புகாருக்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கங்களைப் பற்றி.


"நான் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகச் சொல்கிறார்களே... மொத்தம் அறுபது நாள் ஷூட்டிங் நடந்துச்சு. ஐம்பத் தொன்பது நாள் சும்மா இருந்த நான், கடைசி நாள் மட்டுமா டார்ச்சர் கொடுத்திருப்பேன்..? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்த்தால் எனக்கு செக்ஸுவல் ஃபீலிங் வரவேயில்லை. அவர் தாடையிலும் மேலுதட்டிலும் ரோமங்கள் இருப்பதை ஒருநாள் கேமரா க்ளோசப் ஷாட்டில் பார்த்துவிட்டு, ‘போய் ஷேவ் பண்ணிட்டு வா’ என்று சொன்னேன். அதற்கு, ‘நான் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்திலேயே நடிச்சவ’ என்று எகத்தாளமாகப் பதில் சொன்னார். நான் மட்டும் அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததா ‘மிருகம்’ பட யூனிட்டில் உள்ள ஒருத்தரோ, குறண்டை கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தரோ சொல்லட்டும்... நான் சினிமாவை விட்டே ஓடிப் போயிடறேன். இல்லேன்னு மறுத்தா, பத்மப்ரியா சினிமாவை விட்டுப் போவாரா?

பொதுவாக, நல்ல நடத்தை உள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள். உண்மையாகப் பார்த்தால் பத்மப்ரியாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். மதுரை லேக் வியூ ஹோட்டலில் ரூம் போட்டிருந்தபோதுகூட, சமீபத்தில் ரிலீஸ் ஆன படத்தில் அவருடன் நடித்த ஒரு நடிகர் வந்து தங்கிவிட்டுப் போனார். அதற்கு நான் ஏதாவது சொன்னேனா?" என்று காட்டம் காட்டுகிறார் சாமி.
இது விகடனில் அவர் தந்திருக்கும் மறுப்புச் செய்தி.

இவரது கூற்றில் இரண்டு விஷயங்கள் கவனிக்கப் படவேண்டியவை. ஒன்று அவர் பாலியல் ரீதியாக என்னைக் கவரவில்லை - எனவே நான் எப்படி அவரிடம் அத்து மீறியிருப்பேன் என்கிற கேள்வி. அடுத்தது நல்ல நடத்தை உள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேச மாட்டார்கள் என்கிற அனுமானம், அதை வலுப்படுத்த ஒரு சில காரணங்களையும் சொல்லுகிறார். இரண்டுமே வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டிய விஷயங்கள். ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினால் - நான் அப்படிச் செய்யவில்லை என்று சொல்லலாம். அதற்கு சாட்சியங்களை குறிப்பிடலாம். நான் அப்படியானவன் இல்லை என்று சொல்லலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு அவளொன்றும் அழகில்லை, என் பார்வையில் பெண்ணாகவே தோன்றவில்லை அதனால் நான் எப்படி அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்வி தன் நடத்தைக்கும் சேர்த்து பெண்ணையே பொறுப்பாளி ஆக்கும் வழக்கமான ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடு. அப்படியானால் அப்பெண் அழகானவளாய் இருந்திருதால், இவரது வரையரைகளுக்குட்பட்ட பெண்ணாயிருந்திருந்தால் அப்போது இவர் அத்துமீறியிருந்திருப்பார் இல்லையா? அப்போதும் அப்பெண் அழகாயிருந்தது அவள் தவறுதான் என்றே பதில் சொல்லியிருந்திருப்பார் அல்லது அவள் தன் அழகை வெளிப்படுத்தும் விதமாக என்னைத் தூண்டும் வண்ணம் உடையணிந்தார் என்று சொல்லிவிட்டுப் போயிருந்திருப்பார் இல்லையா?

அடுத்தது நல்ல நடத்தையுள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள் என்று சொல்வது - என்ன பொருள் இதற்கு? நல்ல நடத்தையுள்ளவளிடம் எந்த ஆணும் தவறாக நடக்கத் துணிய மாட்டான் என்பதா? அப்படியானால் பலாத்காரத்திற்கு உள்ளான எல்லாப் பெண்களும் தவறான நடத்தை உள்ளவர்களா? அல்லது நல்ல நடத்தை உள்ள பெண் இப்படியெல்லாம் தனக்கு நடந்ததை ஊரைக் கூட்டிச் சொல்ல மாட்டாள் என்று சொல்ல வருகிறாரா? அடடடடா..... என்ன ஒரு அருமையான இலக்கணம்.. அற்புதம்.... அபாரம்.... இது வந்து அறிவுள்ளவர்களின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஆடை ஒன்றை அணிந்து நகர்வலம் போன மன்னனின் கதையை நினைவு படுத்துகிறது. இப்படிச் சொல்லிவிட்டாள் எந்தப் பெண் தனக்கு நடக்கும் கொடுமையைப் பற்றி வாயைத் திறப்பாள்? சொன்னால் தன்னை நடத்தை கெட்டவள் என்று சமூகம் சொல்லிவிடுமே என்கிற பயம் வந்துவிடுமில்லையா? அப்புறம் சர்வசுதந்திரர்களாய் யாரும் யாரையும் பாய்ந்து குதறலாமில்லையா?

இந்த இரு கருத்துக்களையும் சொல்லும் முதல் ஆள் இல்லை இந்த சாமி. ஏற்கனவே இச்சமூகத்தில் புரையோடிப் போன கருத்துக்கள்தான் இவையிரண்டும். ஆனாலும் ஒரு பொது ஊடகத்தில் ஒரு மனிதர் இப்படி ஒரு நச்சுக் கருத்தை கொட்டும் போது அதை எதிர்த்துப் பேச யாருமே இல்லையா? இல்லை யார் கண்ணிலும் இச்செய்தி படவேயில்லையா? எங்கே போனார்கள் நம் திரையுலகப் பெண்ணுரிமைப் புலிகள் எல்லோரும்? எல்லோரும் பாவம் அவரவர் பங்குபெறும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது...

Thursday, October 18, 2007

அடங்க மறு


"அடங்க மறு - இந்த வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்." இப்படிச் சொல்லும் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அநேகமாகத் தீவிரவாதியென்று - இல்லையா? அதிலும் இப்படிச் சொல்பவர் ஒரு இளம் பெண்ணாயிருந்தால்???!?!?! அடங்காப்பிடாரி, காளி என்றெல்லாம் இல்லையா? ஆனால் இப்படிச் சொல்பவர் ஒரு கவிஞர், பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர், மென்மையாகப் பேசுபவர் என்றெல்லாம் யாரேனும் சொன்னால் என்ன நினைக்கத் தோன்றும்?

சரி, விஷயத்துக்கு வருகிறேன். சென்னை ஐ.ஐ.டியைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். கல்லூரி மாணவர்களைக் கேட்டால் அங்கே நடக்கும் சாரங் எனப்படும் வருடாந்திரக் கொண்டாட்டத்தைப் பற்றி கண்கள் விரியப் பேசுவார்கள். மத்திய/உயர் மத்தியதர வர்க்கத்துப் பெற்றோரைக் கேளுங்கள் - அவர்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைப்பது ஏதோ சொர்க்கத்தில் இடம் கிடைப்பதற்குச் சமானமானதென்று பேசுவார்கள். குழந்தைகளை 9ஆம் வகுப்பு படிக்கையிலேயே ஐ.ஐ.டி கோச்சிங் வகுப்புகளுக்கு அனுப்பி சுளுக்கெடுப்பார்கள். இப்படியெல்லாம் பூலோக வைகுண்டமாகக் காட்சியளிக்கும், அடர்ந்த பசுஞ்சோலைக்கு நடுவே பலரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கும் இந்த ஐ.ஐ.டி நிறுவனத்துக்கும் ஒரு இருண்ட முகமுண்டு. அதை வெளியிலிருந்து நாமெல்லோரும் விமர்சிப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சந்திப்பது என்பார்களே, அது போல அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு, அவ்வளாகத்திலேயே வசதிக்குறைவான ஒரு வீட்டில் குடியிருந்து கொண்டே தொடர்ந்து பல அநீதிகளுக்கு எதிராகப் போராடி வருபவர் வசந்தா கந்தசாமி. இவரைப் பற்றிய குறிப்புகளுக்கு இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்.


http://archives.aaraamthinai.com/women/apr2000/apr18c.asp

http://bsubra.wordpress.com/2006/08/20/international-woman-of-the-year-vasantha-kandasamy/

இத்தகைய தாயின் வழிகாட்டுதலில் வளர்ந்த பெண் எப்படியிருப்பார்? சமூக அநீதிகளைக் கண்டு குமுறும் ஒரு பொறுப்பான குடிமகளாக, பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதிக்கத் துடிக்கும் ஒரு போராளியாக அதே சமயம் அதற்காக கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டும் ஒரு பக்குவப் பட்டவராகத்தானே இருப்பார்? அப்படிப் பட்டவர்தான் மீனா கந்தசாமி. அவள் விகடனில் வெளியாகியிருக்கும் அவரது பேட்டி கீழே.

அடங்க மறு’! - எனக்கு ரொம்பப் பிடிச்ச வாசகம் இது!’’ என்று எடுத்த எடுப்பில் அதிர்ச்சி தருகிறார் மீனா கந்தசாமி.

நாம் அதிர்வதைத் துல்லியமாக உணர்ந்தவாறே, ‘‘அதுக்காக நான் திமிர் பிடிச்ச பொண்ணுனு அர்த்தமில்லை. அடக்குமுறையைக் காட்டுறவங்ககிட்ட அடங்க மறுக்குற பொண்ணு.. மனுஷங்கனா அப்படித்தானே இருக்கணும்! இல்லைன்னா நமக்கும் சர்க்கஸ்ல வித்தைகள் செய்றதுக்காகவே பயிற்று விக்கப்படுற விலங்குகளுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருந்துடப் போகுது.. சொல்லுங்க!’’

ஆணித்தரமான கருத்துக்களைக் கொண்ட.. அவற்றை அதே உறுதியுடன் பேசுகிற 23 வயது இளம்பெண்தான் மீனா! வளர்ந்து வரும் கவிஞர்.. எழுத்தாளர்.. சமூகவியலில் ஆராய்ச்சி மாணவர்.. பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.. என பல கோணங்களிலும் மிளிர்பவர்!

ஆழமான கடல், தன் அலைகளை நொடிக்கொரு தரம் கரைக்கு அனுப்பி தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதுபோல, வார்த்தைகளின் கோர்வையில் அப்பிக் கொண்டு வெளிப்படுகிறது சமூக சிந்தனை! ஒரு மஞ்சள் வெயில் மாலையில் அவரைச் சந்தித்தோம்..

‘‘நான் ரொம்ப வித்தியாசமான பொண்ணுதான். எல்லாரையும் போல விளையாட்டுத்தனமான பொண்ணா என்னால இருக்க முடியலை. அதுக்கு நான் வளர்ந்த சூழல்தான் காரணம். என் அம்மாவும் அப்பாவும் சின்ன வயசுல-யிருந்து என்னை அளவுக்கு அதிகமான சுதந்திரத் தோட வளர்த்தாங்க. எல்லா விஷயங்களையும் சுயமா யோசிக்கிற மாதிரி என்னைப் பழக்கியிருந்-தாங்க.


வீட்டுல எந்த ஒரு விஷயம் பத்தியும் ஆரோக்கியமா என்னால விவாதிக்க முடியும். அதனாலயே விவாதத்துக்கு இடமே இல்லாத பள்ளிக்கூடமும் உருப் போட்டு மார்க் குவிக்க வைக்கிற நம்மளோட கல்வி முறையும் எனக்குப் பிடிக்காம போய்டுச்சு. இருந்தாலும், ப்ளஸ் டூ வரை ரெகுலர் ஸ்கூல்லதான் படிச்சேன்..’’ என்கிறவர், அதன் பிறகு அஞ்சல் வழியில் படித்து, எம்.ஏ முடித்திருக்-கிறார். இப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. செய்கிறார்.

‘‘ஏதாவது ஒரு டிகிரி முடிக்கணும்னு எல்லாரும் சொன்னாங்கனுதான் படிச்சேன். பேருக்குத்தான் கோர்ஸ்ல சேர்ந்தேனே தவிர, புத்தகத்தைத் தொடவே இல்லை. கோர்ஸ் முடியுற தேதியில மொத்தமா 15 பேப்பரை யும் ஒண்ணா எழுதி பாஸானேன்.

அதுல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது. அந்த பதினஞ்சு பேப்பர்ல ஒண்ணுல, நான் எழுதின ஆராய்ச்சி கட்டுரையே எனக்கு பாடமா வந்திருந்தது!’’ என்று இயல்பாகச் சொல்லி சிரிக்கிற மீனா, ‘தலித்’ என்ற பத்திரிகையில் சுமார் இரண்டு வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். தலித்துகளின் பிரச்னை பற்றி நிறைய எழுதியிருப்-பதோடு, ‘தலித் இலக்கிய’ புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இருக்கிறார்.

‘‘ ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பின் செயலாளர் தொல்.திருமாவளவனின் கட்டுரைகளை யும் பேச்சுக்களையும் நான் மொழி பெயர்த்து புத்தகமா வெளியிட்டிருந் தேன். அது பலத்த விமர்சனங் களையும் பாராட்டுக்-களையும் வாங்கித் தந்துச்சு.

அது தந்த உற்சாகத்தால ‘புலனாய்வுப் பத்திரிகையியல்’ பத்தின ஒரு புத்தகத்தையும் மொழிபெயர்ப்பு செஞ்சேன். ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு’க்காகவும் ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செஞ்சேன்..’’ என்று பேசிக் கொண்டே போனவரை அவருடைய அம்மா கொண்டு வந்த தேநீர் ஆசுவாசப்-படுத்தியது. அவரை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்..

‘‘அம்மா வசந்தா கந்தசாமி, ‘கல்பனா சாவ்லா’ விருது வாங்கினவங்க.. மிகப் பெரிய கணித மேதை. அப்பாவும் டாக்டரேட் பண்ணினவங்க.. நான் இப்போ என்னவா இருக்கேனோ அப்படி வளர என்னை அனுமதிச்சவங்க..’’ என்கிறார் பெருமிதத்துடன்.

இவரின் தேடல்களும் கனவுகளும் ரொம்பப் பெரியவை! அவற்றைப் பற்றி விவரிக்கும்போது நெருப்புப் பிழம்பாகிறது முகம்!

‘‘உலகத்துல எந்த மூலையில அநீதி நடந்தாலும் பாரதி சொன்ன ‘மோதி மிதித்து விடு பாப்பா’தான் என் ஞாபகத்துக்கு வரும். நம்ம ஊர்கள்ல இன்னும் சாதியின் பேரால நடத்தப்படுற கோர தாண்டவங்கள் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு.. அதையெல்லாம் பார்த்து மனசு துடிக்கும். கீழ்வெண்மணி, வாச்சாத்தி, மேலவளவு, கொடியன்குளம், திண்ணியம்னு சாதிகளோட பேரால அடக்குமுறைகள் நடக்குறப்பல்லாம் ‘இதுக்கு ஏதாவது செய்ய மாட்டோமா’னு எனக்குள்ள துடிக்கிற துடிப்புதான் மனித நேயத்துக்-கான குரலா என்னோட எழுத்துக்கள்ல வெளிப்படுது. எழுத்துங்கறது என் கோபங்களை பதிவு செய்ற ஒரு முயற்சி.. என் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலா என்னோட எழுத்து இருக்கு. அந்த வகையில எழுத்து எல்லோருக்குமான ஆக்க சக்தினு சொல்வேன்.’’

தீர்க்கமாகப் பேசுகிற மீனா கந்தசாமியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டச்’ சமீபத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் இடம்-பெற்றுள்ள ‘மஸ்காரா’ என்கிற கவிதை, மத்திய அரசு நடத்திய தேசிய அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசையும் வென்றிருக்கிறது.

மீனாவின் கவிதைகளைப் படித்து ஆத்மார்த்தமாக பாராட்டி இருக்கிறார் பிரபல கவிஞர் கமலா தாஸ்! அவரே இவரின் ‘டச்’ புத்தகத்துக்கு அணிந்துரையும் எழுதி, அதில் ‘அடுத்த 50 ஆண்டுகளுக்கான எழுத்துப் பார்வை கொண்டவர் மீனா’ என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்திருக்கிறார்.

மீனாவின் சமீபத்திய மொழிபெயர்ப்பு, அவருக்கு இன்னும் உத்வேகம் கூட்டியிருக்கிறது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் மீனா!

‘‘இலக்கியத்துல கொடி நாட்டவோ பெரிய எழுத்தாளர்னு பேர் வாங்கவோ நான் எழுத வரலை. ஒடுக்கப்படுறவங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவங்க நம்மளை மாதிரியான பெண்கள் தான். ஏன்னா, வன்முறை வீடுகள்ல இருந்துதான் ஆரம்பமாகுது. தன் மனைவியை சக மனுஷியா பாவிக்காத ஒரு ஆணை எதிர்க்கிறதும் சாதி பேதம் பார்க்கிறவனை எதிர்க்கிறதும் ஒண்ணு தான். நான் அதைத்தான் செய்துட்டு இருக்கேன்’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக!


சரி, ஏற்கனவே பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் இந்தப் பேட்டியை இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? பொதுவாகவே வெகுஜனப் பத்திரிக்கைகளில் ஐ.ஐ.டியைப் போன்ற புனித பிம்பங்களுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை/ அவர்களோடு தொடர்புடையவர்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வெளிவருவது என்பது அபூர்வம். அதுவும் பொம்பளைங்க பத்திரிக்கையில் எல்லாம் இப்படி ஒரு செய்தி வருவது என்பது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயமல்லவா? எனவே நமக்குத் தெரிந்தவர்கள் நாலு பேர் கண்ணிலாவது அச்செய்தி விட்டுப் போய்விடாதிருக்கட்டுமே என்றுதான் இந்தப் பதிவு. அவ்வளவுதான்.

நன்றி - அவள் விகடன்.

Tuesday, October 16, 2007

நீதி

காளிமுத்துவுக்கு விடியலிலேயே முழிப்புக் கொடுத்துவிட்டது. எழுந்தென்ன செய்துவிடப் போகிறோம் என்று எண்ணியதால் அசையாது படுத்திருந்தார். சூரியன் எழும்பியான பின்தான் வீட்டில் அரவம் கேட்டது. மெல்ல எழுந்து வீட்டைச் சுற்றிக் கொண்டு கிணற்றடிக்குப் போய் பல்துலக்கி முகம் கழுவி விட்டு வருகையில் வீட்டு உள்ளாலேயே வந்தார். அது அவர் தனது மருமகளுக்கு தான் எழுந்தாயிற்றென்பதை உணர்த்தச் செய்வது. எதிர்பார்த்தது போலவே சற்றே நீர்க்கத் தயாரான காபி கட்டிலுக்கருகிலிருக்கும் ஸ்டூல் மேல் வைக்கப் பட்டது. சாரதம், அவரது தர்மபத்தினி, அவளிருக்கையில் இவ்வகையான காபி வேலைக்கு வரும் பெண்மணிக்குத்தான் வழங்கப்பட்டு வந்தது இவ்வீட்டில். இவர் கூட குஷியாய் இருக்கையில் அவளை இதைச் சொல்லி கிண்டுவார். அவள் மூக்கு விடைக்க "ஆமா, நீங்க கப்பலோட விடறதை நான் கொட்டை நூத்துதானே சேக்க வேண்டியிருக்கு" என்று பதில் கொடுக்கத் துவங்கினால் சிரித்துக் கொண்டே நழுவி விடுவார். அவருக்குத் தெரியும் தன் பெருந்தன்மையென்று எண்ணிச் செய்யும் பல செயல்கள் அவள் வரையில் ஏமாளித்தனமென்று. வாதிட்டு அவளுக்கு விளக்கிவிட முடியாது - எது பற்றிப் பேசினாலும் அவரது அம்மாவின் கொடுமையிலிருந்துதான் பதில் பேசவே ஆரம்பிப்பாள். அதும் வளர்ந்த பிள்ளைகள் முன்னால் பழசைக் கிளறி சண்டையெல்லாம் போட்டால் நல்லாவா இருக்கும் என்று பேசாது சிரித்தே மழுப்பி விடுவார் அவளை எப்போதும். அந்த மகராசி போன பின்னால் மருமகள் கையில் வீட்டு அதிகாரம் போய்ச் சேர்ந்தது. அதன் பின் இந்த இரண்டாந்தர காபியும், வேலை ஒழிந்த நேரத்தில் சோறும்தான் அவருக்குக் கிடைத்தது. அதுவும் பென்ஷனென்று ஒன்று வருகிறதோ, இந்த மட்டிலாவது பிழைப்பு ஓடுகிறதோ என்று எண்ணிக் கொண்டார்.

பேரப் பிள்ளைகள் பள்ளிக்குக் கிளம்பியான பின் பின்கட்டு ஒழிந்திருக்கும் நேரமாய்ப் போய் குளித்து முடித்து வந்தார். பையனும் சைக்கிளை மிதித்துக் கொண்டு அலுவலகம் கிளம்பிப் போனான். போகும் முன் செய்தித் தாளை கொண்டு வந்து அவரது கட்டிலருகே வைத்துவிட்டுப் போனான். அதை எடுத்து வரிவிளம்பரம் வரை ஒரு எழுத்து விடாது படித்து முடித்தார். மருமகள் கமலம் வாசல்படியருகே வந்து நின்று திண்ணையை எட்டிப் பார்த்து "சாப்பிட வாங்க" என்றாள். "ம்.ம்.." என்று முனகிக் கொண்டு படித்துக் கொண்டிருந்த தாள்களை மெல்ல நீவி பக்கங்களை வரிசையாய் அடுக்கி மடித்து எடுத்துக் கொண்டார். எழுந்து கூடத்தை நோக்கி நடக்கத் துவங்கினார். சாப்பாடு முடிந்து வந்து கட்டிலில் உட்கார்ந்தவருக்கு மீண்டும் ஒரு சந்தேகம் வரவே மீண்டும் வீட்டினுள் சென்று பத்திரிக்கையை எடுத்து வந்து ஒரு குறிப்பிட்ட செய்தியை மீண்டும் படிக்கலானார். உயர்நீதிமன்றத்தில் நடந்து முடிந்த ஒரு வழக்கைப் பற்றிய செய்தி அது. ஒரு மூலையில் 10 வரிகளுக்கு மிகாமல் அதிக விவரமில்லாது போடப்பட்டிருந்தது.

காளிமுத்து ஒரு ஓய்வுபெற்ற ஆசிரியர். வேலையிலிருந்த போது வாங்கிய சம்பளத்தில் பாதி பென்ஷனாய் கிடைக்கும் என்கிற அளவில்தான் அவரது புரிதல் இருந்தது. வேலை பார்க்கும்போதே கூட அவர் இந்த சம்பளக் கமிஷனால் இவ்வளவு உயரும் என்பது போன்ற கணக்குகளில் எல்லாம் ரொம்பவே ஞானசூனியம்தான். ஏதோ வந்தது வரட்டுமென்பதுதான் அவரது சித்தாந்தம். சம்பள உயர்வு பற்றி செய்தித்தாளில் வரும் போதெல்லாம் "நமக்கு எவ்வளவுங்க வரும்?" என்ற மனைவியின் கேள்வியை மதித்து பதில் சொன்னதில்லை அவர். "இந்தா, போன மாசம் வந்ததை விட இந்த மாசம் கூட வர்ரது வேணும்னா நடக்குமே ஒழிய வாங்கிக்கிட்டிருக்கும் காசு குறையவா போகுது?" என்பதுதான் அலட்சியமாய் அவர் சொல்லும் பதில். பின்னே அரைக்காசு உத்தியோகம்னாலும் அரசாங்க உத்தியோகமென்றெல்லாம் இதைக் கொண்டாடுவது எதற்காம்? மாசமானா காசு, எந்த ராசா எந்தப் பட்டினம் போனாலும் வந்து விழுந்துடாதா நம்ம கையில என்பது போன்ற அவரது பாமரத் தனமான நம்பிக்கைகளெல்லாம் ஒரு நாள் உடைந்து போனது. திடீரென ஒரு நாள் அரசுக் கருவூலத்திலிருந்து ஒரு பழுப்பு உறை அவர் பெயருக்கு வந்தது பதிவுத் தபாலில். கையெழுத்திட்டு வாங்கினார். படித்தவர்தான் என்றாலும் கூட அரசாங்கக் கடிதங்களுக்குகேயுரிய அந்த நடையும் அலங்காரங்களும் அவரைக் குழப்பின. அவருக்குப் புரிந்ததென்னவோ வரும் பென்ஷன் அடுத்த மாதம் முதல் குறையும் என்பதுதான்.

கை கால் பதற அதை எடுத்துக் கொண்டு டவுனில் இருக்கும் தனக்குத் தெரிந்த வக்கீல் அலுவலக எழுத்தரான தன் நண்பரைத் தேடிக் கொண்டு ஓடினார். ஏற்கனவே தனக்கும் தன் மனைவிக்கும் அந்த வீட்டில் கிடைக்கும் மரியாதையின் லட்சணம் அவருக்குத் தெரிந்துதான் இருந்தது. சாரதம் ஒரு இடிதாங்கி போல பல பிரச்சனைகளைத் தன்வரையிலேயே சமையற்கட்டுக்குள்ளேயே அல்லது அதிக பட்சம் வீட்டுக் கூடத்தோடு தீர்த்துவிடுவாள். திண்ணையில் கட்டிலில் அமர்ந்திருக்கும் காளிமுத்துவிடம் எதையும் கொண்டு வருவதில்லை அவள் - அவர் மனம் நோகுமேயென்று. அவளுக்கு மகன் சிவநேசனிடமும் செல்வாக்கு அதிகம்.

எது எப்படியோ, சாரதம்தான் ஓய்வுக்குப் பின்னும் கூட அவருக்கு கிடைத்து வந்த எந்தச் சலுகையும் அந்த வீட்டில் குறையாது பார்த்துக் கொண்டாள் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. இவரது பென்ஷன் முழுதும் பெண் கல்யாணி கல்யாணத்திற்காய் வாங்கிய கடனுக்கு மாதத் தவணை கட்டவே சரியாக இருந்தது. சிவநேசன் சம்பளத்தில்தான் வீடு ஒடுகிறது. அதில் கமலத்தின் தலையில் இரு கண்ணுக்குப் புலனாகாத கொம்புகள் முளைத்திருப்பதும் அவ்வப்போது சாரதத்தை அது குத்துவதும் திண்ணையிலிருந்தாலும் அவருக்குப் புரியத்தான் செய்தது. தனக்குண்டான மரியாதை மட்டும்தான் மிச்சமிருந்தது - அதுவும் இப்போது கல்யாணக் கடனுக்கே சிவநேசனிடம் கேட்டால் போய்விடுமே என்பது அந்த முதியவரின் அடிவயிற்றைக் கலக்கியது.

வேலுவுக்கு வெகுநாட்களுக்குப் பிறகு தன் நண்பனைக் காண்பதில் ஆனந்தம். டீயெல்லாம் வரவழைத்துத் தந்தார். காளிமுத்து அந்தக் கடிதத்தை எடுத்து அவரிடம் காட்ட, கண்ணாடியைத் தேடியெடுத்து அணிந்துகொண்டு படித்துப் பார்த்தார். "காளிமுத்து, உனக்கு சம்பள உயர்வெல்லாம் கொடுத்தாங்க இல்ல, அதுல ஒரு முறை சம்பள விகிதம் நிர்ணயம் செய்யறதுல எதோ தப்பு நடந்து போச்சாம். அதுனால ரொம்ப ஜாஸ்தியா சம்பளம் சில வருஷங்களா உனக்கு கொடுத்திருக்காங்களாம். அத்தோட இல்லாம அந்த தப்பான சம்பளத்தை அடிப்படையா வச்சே இவ்ளோ நாளா உனக்குப் பென்ஷன் வேற கொடுத்திருக்காங்க இல்லையா? அதுனா இப்ப கணக்குப்படி அதிகப்படியான தொகை மட்டுமே சுமாரா 2 லட்சம் வருதாம். இப்ப உன்னோட சரியான சம்பளத்துக்கு கிடைக்க வேண்டிய பென்ஷன் மட்டுந்தான் இனி உனக்கு கிடைக்கும். அதோட இல்லாம இந்த அதிகப்படி தொகையவும் மாசம் கொஞ்சமா உன் பென்ஷன்லேர்ந்து கழிச்சுக்கப் போவுதான் அரசாங்கம்." காளிமுத்துவுக்கும் ஒரளவுக்கு இது புரிந்துதான் இருந்தது. ஆனால் இப்படிக்கூட நடக்குமா என்ற அங்கலாய்ப்பும் விவரம் தெரிந்த நண்பனாவது "இதெல்லாம் சாத்தியமில்லைடா, எதோ தவறுதலா உனக்கு இந்தக் கடிதம் வந்திருக்கு" என்று சொல்லிவிட மாட்டானா என்ற நப்பாசையும்தான் அவரை இவ்வளவு தூரம் ஓடிவர வைத்தது. இப்போது ரொம்பவே நிராசையுடன் "சரியா கணக்குப் போட்டுச் சொல்லியிருக்காங்களான்னு கொஞ்சம் பாத்துச் சொல்லிடுப்பா. அதுல போட்டிருக்கற தொகை ரொம்பவே கம்மியா இருக்கே. முன்ன வாங்கினதுல நாலுத்துல ஒரு பங்கு கூட இல்லையே?" என்று குரல் நடுங்கச் சொன்னார்.

வேலு பென்சிலையும் கொஞ்சம் வெள்ளைத் தாள்களையும் எடுத்து கொண்டு போதாதற்கு தன் பையனின் கேல்குலேட்டரையும் தூக்கிக்கொண்டு வந்து உட்கார்ந்தார். மெல்ல கணக்குப் போட்டு நிமிர்ந்தவர் உற்சாகமிழந்தவராய்ச் சொன்னார் "சரியாத்தாண்டா இருக்கு." கூடவே ஆறுதலாய் "3 வருஷந்தானேடா... அதுக்கப்புறம் உனக்கு நியாயமா கிடைக்க வேண்டியது கிடைக்க ஆரம்பிச்சுடும்." என்று முடித்தார். காளிமுத்து அலுப்புடன் "ஆமா , அதுவரைக்கும் நா இருந்தாப்பாக்கலாம்" என்று சொல்லிவிட்டு காகிதங்களைப் பொறுக்கி மீண்டும் தன் பையில் வைத்துக் கொண்டு கிளம்பினார். வாசல் வரை வந்த வேலு "மனச வுட்டுடாதப்பா..." என்றார். ஒரு நைந்து போன சிரிப்புதான் பதிலாய் கிடைத்தது காளிமுத்துவிடமிருந்து.

அந்த ஊரில் அவர் வேலை பார்த்த அந்த ஒரு பள்ளி மட்டுமே இருந்தது. எல்லா பெற்றோரும் தங்கள் பிள்ளைகளுக்கு டியூஷன் வைப்பதும் ஒரு கட்டாய சடங்கு என்றே நினைத்தனர். பள்ளியிலிருந்த எல்லா ஆசிரியர்களும் தனியே வீட்டில் வகுப்பெடுத்தும் வந்தனர் - சொல்லப் போனால் பள்ளியில் பாடம் நடத்துவதை விட ட்யூஷன் வகுப்புகளில் மட்டுமே நடத்தும் ஆசிரியர்களும் உண்டு. ஆனால் வெளியூரிலிருந்து வந்து விட்டுப் பறக்கும் ஆசிரியர்களின் வகுப்பு மாணவர்கள் மட்டும் இந்தக் கொடுமையிலிருந்து தப்பி மாலை முழுவதும் விளையாட்டு என்று களித்துக் கொண்டிருந்தனர். அதைக் கண்டு பொறுக்குமா தாயுள்ளங்கள்? அப்படிப்பட்ட ஒரு குழு அவ்வப்போது காளிமுத்துவை வந்து கேட்பதுண்டு "சும்மாத்தானே மாமா இருக்கீங்க? பசங்களுக்கு சாயந்தரம் கொஞ்ச நேரம் பாடமெடுத்தா குறஞ்சா போய்டுவீங்க? " என்று. அவர் வேலை பார்க்க ஆரம்பித்த புதிதிலெல்லாம் படிப்பில் கொஞ்சம் சோடையாக இருக்கும் பசங்களை மட்டும் தேர்வுகளுக்கு கொஞ்சம் முன்னால் வீட்டிற்கு வரச்சொல்லி தயார் செய்வார். பழைய தேர்வுகளின் தாள்களை எல்லாம் கொடுத்து பயிற்சி செய்யச் சொல்வதும் முக்கியமான பாடங்களை இன்னும் ஒரு முறை நடத்திப் புரிய வைப்பதுமாய் தயார் செய்வார். அதை என்றுமே தொழில் முறையில் செய்வதில் அவருக்கு உடன்பாடு இருந்ததில்லை. எல்லோரும் அதை தொழில் முறையில் செய்ய ஆரம்பித்தபின்னும் கூட அவர் சில சமயம் கொஞ்சம் படிப்பில் பின் தங்கிய அதே சமயம் ட்யூஷன் என்னும் ஆடம்பரத்துக்கெல்லாம் வழியில்லாத பசங்களை அவ்வாறே கவனித்துத் தேற்றி விடுவதுண்டு. இதனால் எல்லாம்தான் ஊரிலுள்ளோர் மட்டுமல்லாது சாரதம் கூட அவரை பிழைக்கத் தெரியாதவர் என்றே அழைப்பது. அவர் பெண் கல்யாணி கூடச் சில முறை கேட்டுப் பார்த்தாள் "ஏம்ப்பா, காசில்லாதவங்க கிட்ட வாங்க வேணாம் - சரி. காசுள்ளவங்க கிட்டயாச்சும் காசு வாங்கிகிட்டு சொல்லித்தரலாமில்ல?" என்று. மையமாய் சிரித்து மழுப்பி விட்டுப் போய்விடுவார்.

அவ்வளவு நாளாய்த் தான் செய்யக் கூசி வந்த அந்தக் காரியத்தை செய்யத் துவங்குவது ஒன்றே வழியென்று பட்டது. அவரிருந்த வீடு பிதுரார்ஜிதமாய் வந்த சொத்து. தன் பங்குக்கு வீட்டின் முன் பகுதிக்கு மட்டும் அதாவது வீட்டுத்திண்ணைக்கும் அதற்குப் பின்னாலிருக்கும் இரு அறைகளுக்கும் மட்டும் மாடி எடுத்து ஒட்டியிருந்தார். அதற்கு பக்கவாட்டிலிருந்து படிகளும் இருந்தது. வெறும் மொட்டை மாடியாய் நின்ற அது துணி உணர்த்தவும் வற்றல் வடகம் போடவுமே பயன் படுத்தப் பட்டு வந்தது. அங்கே கையிலிருந்த சேமிப்பில் ஒரு கீற்றுக் கொட்டகை போட்டு கொஞ்சம் பெஞ்சுகளும் ஒரு நாற்காலியும் வாங்கிப் போட்டார்.

மெல்ல அவரிடமும் கூட்டம் சேரத்துவங்கியது. காலை மாலை என்று இருவேளையும் பிள்ளைகளை வரச்சொல்ல ஆரம்பித்தார். இந்த விஷயத்தை முதலில் பிரஸ்தாபித்தபோது சிவநேசன் "எதுக்குப்பா வயசான காலத்துல சிரமப்படணும்? கல்யாணி கல்யாணக் கடன் தவணைதானே? அதையும் நானே எப்படியாச்சும் சமாளிச்சுக்கறேன்பா." என்றபோது அவன் ஒப்புக்குத்தான் சொல்கிறானென்பது அவருக்குப் புரிந்தே இருந்தது. "இல்லைப்பா. என் கடமைய நான் செஞ்சுடணும் இல்லையா? நான் என்ன எங்க சாப்பாட்டுக்கேவா கணக்குப் பண்ணி உன்னை கேவலப்படுத்தறேன்? இந்தக் கடன் இன்னும் ஒரு வருஷத்துல முடிஞ்சுடும். அதுக்கப்புறம் நீயே சொன்னாலும் நான் இதெல்லாம் செய்யல, போதுமா? " என்று அவனுக்கு ஆதரவாகப் பேசி முடித்தார். ஒரு வருடம் இரு வேளையும் வகுப்பெடுத்தவர் பின் கடன் தவணையெல்லாம் முடிந்ததும் அதைக் குறைத்து காலையில் மட்டும் என்று வைத்துக் கொண்டார். மூன்று வருடத்துக்கெல்லாம் முழுப் பென்ஷெனும் வரத்துவங்கிய பின் அதையும் நிறுத்தி விட்டார் - முழுப் பென்ஷெனென்றாலும் முதலில் வாங்கியதில் பாதிதான். அதற்குள் அவர் மனைவி போய்ச் சேர்ந்திருந்தார். அத்தோடு கமலாவே மனமிரங்கி "இன்னும் எதுக்கு மாமா இப்படி தொண்டைய வரள அடிச்சுகிட்டு? பேசாம ராமா கிருஷ்ணான்னு உக்காருங்க" என்றாள். அவளும் மனமாரத்தான் சொல்கிறாள் என்று அவருக்குப் புரிந்தது. எனவே அந்த வருட கோடை விடுமுறையோடு மாடியிலிருந்த கொட்டகையை பிரித்துவிடச் சொன்னார். பேரப்பிள்ளைகளுக்கு மட்டும் 5 வகுப்பு வரை முடிந்த வரை சொல்லிக் கொடுத்துவந்தார். அவர்களும் அதற்குபின் யாரோ ஒரு சாரிடம் ட்யூஷன் போகத் துவங்கினர்.

கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு இன்று அவர் செய்தித்தாளில் பார்த்த விஷயம் அவருக்கு இதையெல்லாம் நினைவுக்குக் கொண்டு வந்தது. அவரைப் போன்றே ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் இதே போல் பாதிக்கப் பட்டவர் உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்து அதில் அவருக்கு சாதகமாய் தீர்ப்பாகியிருந்ததாக அதில் போட்டிருந்தது அவர் மனதைக் கிளர்ச்சியுற வைத்திருந்தது. கணிசமான ஒரு தொகை தனக்குக் கிடைக்கக் கூடும் என்பதையும் விடத் தன் நம்பிக்கை பொய்யாகிவிடவில்லை என்பதுதான் அவரது சந்தோஷத்திற்குக் காரணம். அரசாங்கமென்ன அடுத்த வீட்டுக்காரன் போலவா - ஒருத்தரை ஏமாத்தி காசு சேக்க? என்றெல்லாம் சின்னச் சின்னதாய் தனக்குத் தானே தன்னைத் தானே தட்டிக் கொடுத்துக் கொள்வது போல நினைத்துக் கொண்டார்.

ஓய்வூதியம் பெறுவோர்க்கான சங்கம் அவ்வூரின் கடைத்தெருவை ஒட்டிய ஒரு தெருவுக்குள் இருந்தது. எந்நேரமும் அங்கே யாராவது நாலு பேர் உட்கார்ந்து எதாவது செய்தித்தாளைப் புரட்டியபடியோ இல்லை ஊர் உலக நடப்புகளைப் பேசியபடியோ இருப்பார்கள். இருந்தாலும் வெயில் தாழ பெருமாள் கோவிலுக்குப் போய் தரிசனம் செய்துவிட்டு அப்படியே அங்கே போனால் தன்னோடு படித்து, தன்னோடே ஒன்றாய் வேலையில் சேர்ந்து, ஒன்றாய் ஓய்வு பெற்றுப் பின் தான் பட்ட இந்த பணப்பிடிப்பு பிரச்சனையையும் அனுபவித்த கோபாலன் போன்ற ஆட்களைப் பார்த்துக் கலந்து கொண்டு எதுவானாலும் செய்யலாம் என்று முடிவு செய்து கொண்டார்.
எல்லோருமாய்ச் சேர்ந்து அரசுக் கருவூலத்திற்குப் போய் விவரம் சொல்லி அடுத்த மாதத்திலிருந்தாவது தங்களுக்குப் பழையபடி பென்ஷன் கிடைத்து விடுமா எனக் கேட்டபோது அந்த அதிகாரி சற்றே ஏளனமாய் சிரித்துவிட்டுச் சொன்னார் "ஐயா, நாங்க பேப்பர பாத்து வேலை செய்ய முடியாதுங்க. எங்களுக்கு மேலதிகாரிங்க கிட்டேர்ந்து உத்தரவு வர்ரதைப் பொறுத்துதான் வேலை செய்ய முடியும்." என்ன பதில் சொல்வதென்று தெரியாது விக்கித்துப் போய் நின்றார்கள் அந்த நான்கு பெரியவர்களும். அந்த முகங்களைப் பார்த்து பேசினவரே சற்று நெகிழ்ந்து போய்விட்டார். மெல்லச் சொன்னார் "ஒன்னு செய்யுங்க. உங்க கோரிக்கைய ஒரு மனுவா எழுதித் தாங்க. நான் மேலிடத்துக்கு அனுப்பிப் பாத்துட்டுச் சொல்றேன், அவ்ளோதான் என்னாலானது." என்றார். சரியென்று அங்கேயே உட்கார்ந்து நிதானமாய் நான்கு பேரும் சேர்ந்து யோசித்து ஒரு மனுவை எழுதி அவர் கையில் தந்துவிட்டு வெளியே தளர்ந்து போய் வந்தார்கள்.

"என்னய்யா இது? சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி வரம் கொடுக்காத கதையா இல்ல இருக்கு? ஹைகோர்ட்டே சொன்னப்புறமும் இவனுங்க இப்படி ஆடறானுக..." என்று அங்கலாய்த்தார் கோபாலன். காளிமுத்து மெல்ல தொண்டையைக் கனைத்துக் கொண்டு சொன்னார் - "அவரு சரியாத்தானே சொன்னாரு? நாமெல்லாம் ஏதொ மழை புயல்னா ரேடியோவிலும் பேப்பரிலும் சொல்றதைப் பாத்துட்டு பள்ளிகூடத்தை மூடிருவோம். அதுனால ஒன்னும் குடி முழுகிப் போயிடப் போறதில்லை. இது காசு விஷயமாச்சே? நாளைக்கு எதுனா பிரச்சனைன்னா இந்த துண்டு பேப்பரையா வச்சு அவரு வாதாட முடியும்? மேலதிகாரிங்க உத்தரவு அதும் எழுத்து மூலமா இருந்தாத்தானே எதும் செய்ய முடியும் அவராலயும்? ஆக்கப் பொறுத்தோம், ஆறப் பொறுக்க மாட்டோமா என்ன?" என்று இதமாய்ச் சொன்னார். அவர் சொல்வதிலும் ஒரு அர்த்தமிருப்பதை உணர்ந்து கொண்டனர் மற்றவர்கள். அமைதியாய் நடந்து அவரவர் வீடு சென்று சேர்ந்தனர். வாரம் ஒரு முறை கருவூலத்துக்குப் போய் யாரேனும் ஒருவர் நிலவரம் கேட்டு வருவது என்று முடிவாயிற்று. நான்கைந்து மாதங்களுக்குப் பிறகு ஏ.ஜி.எஸ் அலுவலகம் வரை போன அவர்களின் மனு ஒரு சிறு குறிப்புடன் அவர்கள் ஊர் கருவூலத்துக்கே திரும்பி வந்தது. ஒவ்வொருவரும் அவரவர் கணக்கில் நேர்ந்த பிழைக்குத் தனித்தனியே உயர்நீதிமன்றத்தை அணுகவும் என்று குறிப்பில் இருந்தது.

முதலில் இந்த ஒற்றை வரி பதில் அவர்களுக்குப் புரியவேயில்லை. இவ்வளவு சிறுபிள்ளைத்தனமான பதிலை எப்படி அரசின் முக்கியமான ஒரு துறையால் சொல்ல முடிகிறதென்று குழம்பிப் போயினர். இத்தனைக்கும் இவர்கள் தங்கள் மனுவிலேயே உயர்நீதிமன்றத் தீர்ப்பைப் பற்றிச் சொன்னதோடில்லாமல் அந்தத் தீர்ப்பின் நகலையும் இணைத்திருந்தனர். இத்தனைக்குப் பிறகும் ஒவ்வொருவரும் தனித்தனியே கோர்ட்டுக்கு அலைய வேண்டுமென்று ஒரு வக்ரம் பிடித்த மனது மட்டுமே சொல்ல முடியும் அதுவும் முதுமையின் வடிவமாய் நிற்கும் மனிதர்களை வதைத்துப் பார்க்க எப்படித் தோன்றும் ஒருவருக்கு? மனதில் இரக்கத்தைப் பசை போட்டுத் துடைத்துவிட்டுத்தான் அரசாங்க உத்தியோகத்துக்கு வருவார்கள் போலும். அல்லது ஒவ்வொரு பதவி உயர்வுக்கும் இவ்வளவு தூரம் என்று வரம்பு கட்டிக்கொண்டு மனிதாபிமானத்திலிருந்து விலகி விட்டிருக்க வேண்டுமோ? ஒரேயடியாய் அப்படிச் சொல்லிவிடவும் முடியவில்லைதான். முதலில் கடுகடுப்பாய் பேசிக்கொண்டிருந்த கருவூல அலுவலர்கூட இப்போதெல்லாம் இந்த வயோதிகக் கூட்டத்திடம் ஒரு அனுதாபத்துடன்தான் நடந்து கொண்டிருந்தார். நேரில் பார்க்கையில் கொஞ்சம் கொஞ்சம் மனிதாபிமானம் எட்டிப் பார்த்துவிடத்தான் செய்கிறது. இப்போது இந்த சேதியைக் கூட ரொம்பவே அனுதாபத்துடன்தான் கூப்பிட்டுச் சொன்னார். சொல்லிவிட்டு தான் எதுவும் செய்யமுடியாதிருப்பதற்காக மன்னிப்பும் கேட்டுக் கொண்டார். யாரிடம் காட்டுவது என்றே தெரியாத ஊமைக் கோபத்தோடு வெளியே வந்தார்கள் நால்வரும்.

இரண்டாம் நாளே எல்லோருமாய் கிளம்பிப் போய் வக்கீல் ஒருவரைப் பார்த்தார்கள். அவரிடம் ஆதியோடந்தமாய் எல்லாவற்றையும் சொல்ல, அவர் தனக்குத் செய்தித்தாளில் குறிப்பிட்ட வழக்கில் சம்பந்தப்பட்ட வக்கீலையே தெரியுமென்றும் அவரிடமே இவர்களின் வழக்குகளையும் எடுத்துக் கொள்ளச்சொல்வதாயும் சொன்னார். சற்றே பழைய நம்பிக்கை காளிமுத்துவுக்குச் சுடர் விட்டது. வழக்கு விவரமெல்லாம் பேசி முடிந்தபின் அந்த வக்கீலிடம் கோபால் கேட்டார் "வக்கீல் சார், எல்லாஞ்சரி. ஆனா பேப்பர்ல நாலு மாசத்துக்கொருக்கா பெரிய பெரிய ஜட்ஜுங்களே கோர்ட்லல்லாம் நிறைய கேசுங்க தேங்கிக்கிடக்குன்னு லட்சக்கணக்குல புள்ளிவிவரத்தோட ஆதங்கப் பட்டுக்கறாங்க இல்ல? இந்த மாதிரி பொதுப்படையான கேசுலல்லாமாச்சும் தெளிவா இதே போல பாதிக்கப் பட்டவங்க எல்லாருக்குமா சேத்து உத்தரவு போடலாமில்ல? இப்ப இதே மாதிரி கேசுங்க மட்டும் ஒரு ஆயிரமாச்சும் புதுசா சேராதா? இவ்ளோ படிச்ச ஜட்ஜுமாருங்களுக்கு இவ்வள்வு சின்ன விஷயம் கூடவா புரியாது?" நியாயமான அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று புரியாத வக்கீல் "அப்படி போட்டுட்டா எங்களை மாதிரி வக்கீலுங்க பொழப்பு போயிடுமேன்னுதான் ஒவ்வொன்னுக்கும் புதுக் கேசு போடச்சொல்றாங்க போல - ஜட்ஜுங்களும் முன்னாள் வக்கீலுங்கதானே? அந்த விசுவாசம் போல" என்று விளையாட்டாய் சமாளித்தார். மெல்ல யோசித்துவிட்டுப் பின் சொன்னார் - "வழக்கு எதுக்காகப் போட்டிருக்காங்களோ அதுக்குத்தானே தீர்ப்பு சொல்ல முடியும்? அந்த மனுஷன் தன்னோட கணக்கைச் சரி பண்ணச் சொல்லித்தானே கேஸ் போட்டிருக்கார். அதுனால அதுக்கு மட்டும் தீர்ப்புச் சொல்லியிருக்காங்க போல. பொதுநல வழக்கா எல்லாருக்கும் சேத்து யாராச்சும் கேஸ் போட்டா அதுக்குத் தகுந்தாப்பல தீர்ப்புச் சொல்லுவாங்களாயிருக்கும்."

கோபாலனும் விடுவதாயில்லை - நக்கலுடன் கேட்டார் "ஏனுங்க வக்கீலய்யா, பந்த் பத்தி கேசு போட்டா ஆட்சிய கலைக்கறதப் பத்தியும் சேத்துத்தானே பேசறாங்க உங்க ஜட்ஜுங்க? அப்போ வர சமூக அக்கறை ஏன் இந்த மாதிரி ஏழபாழங்க விஷயத்துல எல்லாம் வர்ர மாட்டேங்குது?" இதற்கு மேல் தாக்குபிடிக்க முடியாதென்று உணர்ந்த வக்கீல் சமாதானக் கொடியோடு "நீங்கல்லாம் பெரியவங்க. உங்ககிட்ட பேசியாகுமா? அத்தோட நானே மொத்த நீதித்துறைக்கும் சப்பை கட்டு கட்ட முடியுங்களா? இதெல்லாம் பெரிய விஷயங்க. நம்மள மாதிரி சாதாரண ஆளுங்க என்ன செய்ய முடியும் சொல்லுங்க?” என்று தன்னையும் அவர்களோடு இணைத்து இணக்கமாய்ப் பேசி முடித்தார். சென்னைக்குப் போய் கேஸ் நடத்த எவ்வளவு செலவாகும், அந்த வழக்கில் தீர்ப்பு வர எவ்வளவு நாளாகும், அவ்வளவு நாள் நாமெல்லாம் இருப்போமா, பணம் வந்து அதைக் கண்ணால் காணப்போகிறோமா என்றெல்லாம் நிறைய விடை தெரியாத கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தது அவர்களனைவரின் மனங்களும். ஆனால் யாரும் எதையும் வாய்விட்டுப் பேசி அடுத்தவரின் மனநிம்மதியைக் குலைத்துவிட வேண்டாமேயெனும் எண்ணம் அவர்களின் வாயைக் கட்டி விட்டது. மௌனமாய் வீடு திரும்பினர் அனைவரும்.

Tuesday, September 18, 2007

அடுத்த சுற்று

கர்ப்ப வாசல் தாண்டி
முதல் சுவாசத்தை இழுத்தபோதே
காற்றில் ஒலித்தது பெரியம்மாவின் இடி முழக்கக் குரல்
இப்பவும் பொண்ணுதானா?

பாவாடையை தூக்கி சொருகி
ஓட்டாஞ்சில்லை தூர வீசி
நொண்டியபடி கட்டங்களை கடக்கையில்
பக்கத்து வீட்டிற்கு ஊரிலிருந்து வந்திருந்த
பத்மாக்கா சத்தமாய் அம்மாவிடம் கேட்டாள்
இன்னுமா பெரியவளாகல?

பாவாடை தாவணி போடத் துவங்கியது முதல்
போகும் எல்லா விசேஷத்திலும்
பார்க்கும் எல்லோரும் தவறாது கேட்டார்கள்
இன்னுமா வரன் அமையல?

திருமணமான மறு மாதத்திலிருந்து
வீட்டிற்கு வரும் எல்லோரும் மறக்காது கேட்டார்கள்
இன்னும் விசேஷமில்லையா?

இதோ - நானும் பிரசவ அறையை நோக்கிப் போகிறேன்.
இன்றும் ஒரு வேளை முதல் கேள்வியிலிருந்து
ஆரம்பிக்கப் பட்டுவிடலாம் என்ற பயத்தோடு .

Monday, September 10, 2007

படித்ததில் பிடித்தது (7)

புத்தகம் - திரைகளுக்கு அப்பால்
ஆசிரியர் -
இந்திரா பார்த்தசாரதி
முதல் பதிப்பு - 1974
சமீபத்திய பதிப்பு - ஜூலை, 2006.
பதிப்பகம் - கிழக்கு

இந்த நாவல் 1971ல் தினமணிக் கதிரில் தொடராக வந்து, பின் பாதியில் நிறுத்தப்பட்டது - காரணம் நம் கலாச்சாரக் காவலர்களின் கைங்கர்யம்தான். வழக்கமான இ.பாவின் அறிவுஜீவித்தனம் ததும்பும் பாத்திரங்கள் நிறைந்த இக்கதையில் அவர்களின் உறவுச்சிக்கலும்தான் மைய இழை. நாவலின் மையப் பாத்திரம் ஒரு பெண் - அதுவும் கருப்பாய் பிறந்துவிட்ட ஒரு பெண். அவளைப் பற்றிய அறிமுகம் இது.

கருப்பு நிறம்! அவள் இன்று இப்பொழுது டில்லியில் ரிவோலி வாசலில் நின்று கொண்டிருப்பதற்கு அதுதான் காரணம். அவளுக்குப் பதினேழு வயதில் கல்யாணம் நடந்தது. தாலி கட்டிய தடியனுக்கு அவள் அப்பா அச்சமயத்தில் அவளுக்குப் போட்டிருந்த நகைகள் தெரிந்தன. அவளது கருப்பு தெரியவில்லை. கல்யாணமாகிக் குடித்தனம் வைத்தபிறகுதான் அவன் சுபாவம் அவளுக்குப் புரியத் தொடங்கியது. அவளுடைய அந்தஸ்தைவிடக் குறைந்தவன் என்பதனால் ஏற்பட்ட தாழ்வு மனப்பான்மை. கருப்புக்கு தாலி கட்டிய தியாகச் சிலுவை. அவள் அவனுடன் குடித்தனம் நடத்திய ஒரு வருடம் முழுவதும் ஒயாத சண்டை. ஒருநாள் அவன் அவளை ஊரில் கொண்டுபோய் விட்டதும் சொன்னன் "கருப்பாயிருந்தாலும் பரவாயில்லை. முரடு. எனக்குச் சரிப்பட்டு வராது."

அதற்குப் பிறகு அவள் அவனை பார்க்கவேயில்லை.


பொதுவாகவே கதைகளில் ஒரு பெண் அல்லது ஆண் கதாபாத்திரத்தின் பாத்திரம் அறிமுகமாகும் போதேவோ இல்லை வெகுசீக்கிரத்திலோ யாருக்கும் யாருக்கும் ஜோடி சேர்ப்பதாக கதாசிரியர் உத்தேசித்திருக்கிறார் என்று அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் இந்த கதையில் அவ்விதமெல்லாம் நமது யூகங்கள் பயன்படாது. சடார் சடாரென்று மாறும் உறவுகள், அவர்களில் உணர்ச்சிப் பிணைப்புகள் என்று சற்றே சிக்கலான கதை - இப்போது புரிந்திருக்குமே, ஏன் இந்தக் கதை தினமணிக் கதிரில் பாதியில் நிறுத்தப் பட்டதென்று?

தான் கருப்பு என்கிற ஒரே காரணத்துக்காக அவளுக்கு கிடைக்கவிருந்த வெளிநாட்டு வாய்ப்பு அவளது அலுவலகத்தில் தட்டிப்பறிக்கப் படுகிறபோது மேலதிகாரியைப் பார்த்து பொறிவதும் பின் அதனால் எனக்கு வேலை போகாது - ட்ரான்ஸ்பர்தான் கிடைக்கும் அதுவும் ப்ரமோஷனோடு என்று அடித்துச் சொல்வதுமாய் எதைப் பற்றியும் கவலைப் படாது தன்னிச்சையாய் செயல்படும் பூமா, மற்றவர்கள் அவளை ஒரு வனதேவதை என்று வர்ணிப்பதற்கேற்றவாறே நடந்து கொள்கிறாள்.

அவளை ஒரு தேவதையாகவே பூஜிக்கும் ஒரு மனிதர் - ஜெயின். அவரை ரொம்பவுமே அலட்சியமாய் பூமா நடத்த, உள்ளூற அதை வெறுத்தாலும் வெளியில் காண்பித்து பூமா மனதை நோகடிக்க வேண்டாமே என்று மனதுக்குள்ளேயே வைத்துக் கொண்டு புழுங்குகிறார். விளைவு - மனநோயாளியாகிறார். அவரை பார்க்கப் போகுமிடத்தில் அறிமுகமாகும் அவரது மைத்துனரான அகர்வால் எனும் இளைஞன் பூமாவோடு ஏற்படுத்திக் கொள்ளும் உறவு, அது அவளுடன் பழகி வந்த அனைவருக்கும் தரும் எதிர்பாராத அதிர்ச்சி - இப்படி எதிர்பாராத பல திசைகளில் போகும் கதையின் சுவாரசியமே அடுத்து இப்படித்தான் நிகழும் என்று நம் மனதிலிருக்கும் யூகங்கள் உடைவதில்தான்.

ஆண் பெண் உறவுச் சிக்கல்கள் பற்றிய கதைகள் தமிழில் புதிதில்லை. இவ்வுறவிலேற்படும் எந்த சிக்கலுக்கும் தலைவலிக்கு அனாசின், ஜூரமென்றால் க்ரோசின் என்பது போல வரையறுக்கப்பட்ட தீர்வுகள் இல்லை. கதைகளிலும் சினிமாவிலும் தங்கள் வாழ்க்கைக்கு தீர்வு தேடும் நம் மனோபாவத்தின் விளைவுதான் - ரொமான்ஸ் ரகசியங்கள் போன்ற தொடர்கள். அப்படியான வாசகர்கள் இந்த கதையை படித்தால் ஏற்படும் அதிர்ச்சியை எண்ணிப் பார்க்க சுவாரசியமாகத்தான் இருக்கிறது. அதுவும் 1970களில், இதை ஒரு வெகுஜனப் பத்திரிக்கையில் எழுதினார் என்பது இ.பாவின் துணிச்சலை காண்பிக்கிறது.

ஆனால் எனக்கு எப்போதுமே இ.பாவின் கதைகளின் முடிவு பற்றி ஒரு அதிருப்தி உண்டு - வாழ்வே ஒரு வியர்த்தம் என்று அழுத்திச் சொல்வதாக இருக்கும். மேலும் அவரது பாத்திரங்களின் அதிபுத்திசாலித்தனமான உரையாடல்கள் படிக்கும் வேகத்தை குறைத்து சற்றே எரிச்சலேற்படுத்துவதுண்டு. அந்த எரிச்சல் இக்கதையிலும் அங்கங்கே ஏற்படத்தான் செய்கிறது. ஆனாலும் சம்பிரதாயங்களை உடைத்தெறியும் உண்மையை உரக்கக் கூறும் நேர்மையை உடையவர்கள் அவரது பாத்திரங்கள். அதுவே அக்கதைகளின் பலம். இக்கதையிலும் பெரும்பாலான பாத்திரங்கள் அப்படித்தான்.

Thursday, August 16, 2007

யாரைத்தான் நம்புவதோ??

யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்?
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்.


இப்படி ஒரு பாட்டு இருக்குங்க, சரோஜாதேவியம்மா அப்படியே ஒரு வெள்ளைப் புடவைல தலைவிரிகோலமா Night effectல நடந்துகிட்டே பாடுவாங்க இந்த பாட்டை - இவ்வளவுக்கும் வேற என்ன பெரிய காரணம் இருந்துடப் போகுது, மிஞ்சி மிஞ்சிப் போனா தலைவருக்கு வேற யாரோடயாச்சும் சிநேகிதம் இருந்திருக்கும்னு முந்தின சீன்ல எதுனாச்சும் கேள்விப் பட்டிருப்பாங்க இல்லாட்டி தலைவர் யாராச்சும் மயக்கம் போட்டிருக்கற பொண்ணை காப்பாத்துறது மாதிரி நல்ல காரியம் பண்ணிகிட்டிருக்கும் போது இவுங்களே எட்டி நின்னு எக்குதப்பான போஸ்ல பாத்து அதை தப்பா புரிஞ்சிட்டிருந்திருப்பாங்க. இதுக்கே அவங்க இப்படி ஒரு பாட்டை பாடலாம்னா, இந்த வார ஜூவி ல வந்திருக்கற பிரேமானந்தா பத்தின கவர் ஸ்டோரிய படிச்சவங்க மனசுல நிச்சயம் இப்படி ஒரு கேள்வி வரத்தான் செய்யும். வழக்கில் போலீஸ் தரப்பில் முக்கிய சாட்சியாக ஆஜரான அருள்ஜோதியும் மற்ற பெண்களும் தாங்கள் கற்பழிக்கப்பட்டதாகவும் கர்ப்பமுற்றிருப்பதாகவும் தெளிவாக கோர்ட்டில் சொன்னார்கள். இப்போது அதே ஆட்கள் அதே விராலிமலை ஆசிரமத்தின் நிர்வாகிகளாம். அதை விடக் கொடுமை அவரின் இப்போதைய ஸ்டேட்மென்ட் - போலீஸ் தங்களை வற்புறுத்தி இப்படி சாட்சி சொல்ல வைத்ததாக சொல்லியிருக்கிறார்.

இதோ அந்த விகடன் கட்டுரையிலிருந்து அருள்ஜோதியின் அதிர்ச்சி பேட்டி

ஆசிரமத்தில் தங்கியிருந்த ஒன்பது பெண்களைக் கற்பழித்தார் என்பதுதான் பிரேமானந்தா மீதான பிரதான குற்றச்சாட்டு. அதிலும் அருள்ஜோதி என்கிற பெண்ணின் வயிற்றில் சாமியாரின் கரு வளர்வதாகவே சி.பி.சி.ஐ.டி. போலீஸார் கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்திருந்தனர். கோர்ட்டிலும் அருள்ஜோதி சாமியாருக்கு எதிராகத்தான் சாட்சி சொல்லியிருந்தார். அந்தளவுக்கு வழக்கின் முடிவை நிர்மாணிக்கும் சக்திகளில் ஒருவராக இருந்த அருள்ஜோதி, இப்போது ஆசிரமத்தின் தலைமை நிர்வாகி என்ற அந்தஸ்தில், அதே பிரேமானந்தாவோடு கூட்டணி போட்டிருப்பதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி. அருள்ஜோதியிடமும் பேசினோம்.

‘‘காலம் கடந்து போச்சுங்க. இனிமேல் நான் என்ன சொன்னாலும் எதுவும் நடக்கப் போறதில்லை. அநியாயமா சாமிகள் தண்டிக்கப்பட்டு விட்டார். இருந்தாலும் உண்மைகள் வெளியே தெரியணுங்கிறதால பேசறேன். சாமிகள் என்னைக் கற்பழிச்சதாகவும், அவரோட கரு என்னுடைய வயிற்றில் வளர்வதாகவும் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் அப்ப கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செஞ்சாங்க. மருத்துவப் பரிசோதனையில் தண்ணி அதிகமா குடிச்சதால கரு இருக்கறது தெரியலைனு அபாண்டமா பொய் சொல்லிச்சு போலீஸ். அப்புறம் அபார்ஷன் ஆயிடுச்சுன்னு சொன்னாங்க. அந்த விஷயங்களை எல்லாம் என் வாயாலேயே கோர்ட்டில் சொல்லச் சொன்னாங்க.

நான் அதற்கு மறுத்தபோது, மூன்று நாள் என்னை அடித்து உதைத்தார்கள். அடி தாங்க முடியாமல்தான் பொய்சாட்சி சொன்னேன். என்னைத் தவிர சாமி கற்பழிச்சதா சொன்ன புஷ்பராணி, மல்லிகா, உதயகுமாரி, குமாரி, வெள்ளையம்மாள், வசந்தி எல்லாருமே அடிக்குப் பயந்துகிட்டுதான் பொய்சாட்சி சொன்னோம். சாட்சி சொல்லி முடிச்சு சாமிக்குத் தண்டனை அறிவிச்சதும் போலீஸார் எல்லாரையும் விரட்டிவிட்டுட்டாங்க.
எல்லாரும் திருச்சிக்கு வந்து ஜெயில்ல இருக்கற சாமியைப் பார்த்தோம். சாமி எங்களை மன்னிச்சு ஆசிரமத்துக்கே போகச் சொன்னார்.

இப்போ நாங்க எல்லோரும் ஆசிரமத்தை நிர்வகிச்சுக்கிட்டு வர்றோம். (அட்டையில் அருள்ஜோதியுடன் உதயகுமாரி) போலீஸாரும் மத்தவங்களும் சொன்ன கட்டுக்கதைகள் உண்மையா இருந்தா, நாங்க எப்படி ஆசிரமத்துக்குத் திரும்ப வருவோம் (அதானே புரியலை!)? அப்போது சாமிய அதிகார மையத்துல இருந்த சிலருக்குப் பிடிக்காம போய்டுச்சு. அதுனால அவங்க ஒரு போலீஸ் அதிகாரியை விட்டு செஞ்ச காரியங்கள்தான் இத்தனையும்... பாருங்க, சாமியைப் பழிவாங்கறோம்னு எத்தனை பேரோட வாழ்க்கையைப் புரட்டி போட்டுட்டாங்கன்னு?! ஒண்ணுமறியாத(?) அப்பாவிங்களோட வாழ்க்கையெல்லாம் எப்படியெல்லாம் சிக்கிடுச்சு பாருங்க...’’ என்று சொல்லி நம்மை வாய்ப்பிளக்க வைத்துவிட்டு, தன் கன்னத்தில் நீர்முத்துக்களை ஓட விட்டார் அருள்ஜோதி.


இதுல அந்தப் பெண் சொல்லும் ஒரு விஷயம் எனக்கு ஆச்சரியமா இருந்தது - அதாவது வழக்கு முடிந்ததும் போலீஸ் தங்களை விரட்டி விட்டதாக அவர் குற்றம் சாட்டியதுதான். அரசு எங்களுக்கு எந்தவித உதவியும் செய்யவில்லை என்று சொன்னால் புரிந்துகொள்ள முடியும் - இதே போல பாதிக்கப்பட்ட ஜீவஜோதிக்கும், சிதம்பரம் பத்மினிக்கும் தமிழக அரசு அவர்களின் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பளித்ததைப்போல ஏதேனும் செய்ய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார் என்று நினைக்கலாம். ஆனால் போலீஸ் வழக்கு முடிந்ததும் எங்களை விரட்டிவிட்டது என்றால் என்ன அர்த்தம்? ஒவ்வொரு வழக்கிலும் பாதிக்கப்பட்டவர்களை பராமரிக்கும் பொறுப்பையும் காவல்துறையே ஏற்க முடியுமா என்ன? இவ்வளவுக்கும் நீதிமன்ற தீர்ப்பிலேயே பிரேமானந்தாவிற்கு விதிக்கப்பட்ட அபராத தொகை பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நஷ்ட ஈடாக வழங்கப்பட வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருந்தது. வழக்கு முடிந்த சில வருடங்களுக்குப் பிறகு புதுக்கோட்டையிலுள்ள ஒரு சமூக சேவகியின் பாதுகாப்பில் இந்தப் பெண்கள் இருந்தபோதும் பத்திரிக்கைகளில் இப்பெண்களின் ஒரு பேட்டி வெளியாகியிருந்தது. அதிலெதுவும் இப்படிப்பட்ட அதிர்ச்சித் தகவல்களில்லை - வழக்கம்போல சமூகம் இப்படியான பாதிக்கப்பட்டவர்களை பரிவுடன் எதிர்கொள்ளாதது பற்றியே அப்பேட்டியிருந்ததாக நினைவு.

ரொம்ப சுலபமாக நாமெல்லோரும் ஒரு நாளைக்கு ஒன்றாக பேசும் அரசியல்வாதிகளை விமர்சிக்கிறோம். சாமானியர்களும் இப்படி இருப்பதை பல வழக்குகளில் பார்க்கிறோம். எனக்குத் தெரிந்து இது போன்ற வழக்குகளில் சிதம்பரம் பத்மினி மட்டுமே தொடர்ந்து ஒரே நிலைப்பாட்டில் இருந்து நீதி கேட்டு போராடியிருக்கிறார். அவரது போராட்டத்தை பாப்பா உமாநாத் போன்ற ஜனநாயக மாதர் சங்கத்தவர்களும் தொடர்ந்து ஆதரித்தனர் - பிறகு கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தனபால் என்பவரை மறுமணம் புரிந்தார். அந்த படிப்பறிவில்லாத எளிய பெண்ணுக்கு இருந்த போராட்ட உணர்ச்சியும் அறவுணர்ச்சியும் பெரும்பாலான பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஏன் இருப்பதில்லை. சமீபத்தில் ஜீவஜோதியும் அண்ணாச்சியின் மீதான ஒரு வழக்கில் பல்டியடித்ததாக செய்தி வெளியானது. என்னாதான் நடக்கிறது இங்கே? சட்டமும் காவல்துறையும் செய்யும் பல அநியாயங்களைப் பற்றிக் கவலைப்படும் யாருமே இப்படி பாதிக்கப்பட்டவர்களே தனக்கு நியாயம் கிடைப்பதற்காக அல்லாது சம்பந்தப்பட்டவர்களை மிரட்டவே சட்டத்தை உபயோகிப்பதாக அமையும் இம்மாதிரியான நிகழ்வுகளை கண்டிப்பதில்லை. இப்படி நீதிமன்றம், காவல்துறை ஆகியவற்றின் நேரத்தை வீணடித்துப் பின் அவர்களை கேலிக்குட்படுத்துபவர்களின் மீது எந்த நடவடிக்கையுமே எடுக்க முடியாதா? வழக்கம்போல இதெல்லாம் சகஜமப்பான்னு போக வேண்டியதுதானா?

இத்தோடு அந்த கட்டுரையிலிருந்த அதிர்ச்சிகள் முடிவடைந்து விடவில்லை. இன்னும் பெரிய காமெடியெல்லாம் இருக்கு கீழே...

‘பிரேமானந்தாவுக்கு ஆதரவாக மூவர் கூட்டணி ஒன்று களமிறங்கியிருப்பது, இன்னொரு ‘அடேங்கப்பா’ திருப்பம்! ‘தனித் தமிழர் சேனை’ நகைமுகன், ‘இந்து மக்கள் கட்சி’ அர்ஜுன் சம்பத், ‘பாரதிய ஃபார்வர்ட் பிளாக்’ முருகன்ஜி ஆகிய மூவரும் ‘பிரேமானந்தா நற்பணி பாதுகாப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.

இந்த மூவர் கூட்டணி உதிர்த்த முத்துக்களில் சில இதோ...

‘‘பிரேமானந்தா சாமிகளைவிட கொடூரமான குற்றங்களை செய்தவர்கள்கூட சட்டத்தின் பார்வையில் நிரபராதிகளாகக் கருதப்பட்டு, வெளியில் சுற்றி வருகிறார்கள். சாமிகளுக்கு நடந்ததோ உச்சக்கட்டக் கொடுமை. அதனால்தான் சற்று தாமதமாகவாவது சாமிகளுக்கு நியாயம் தேடித் தருவதற்காக ஒன்று சேர்ந்திருக்கிறோம்’’ என்று நகைமுகன் சொல்லி நிறுத்த, அர்ஜுன் சம்பத் தொடர்ந்தார்.

‘‘அரசாங்கம் செய்ய வேண்டிய காரியத்தை சாமிகள் தனியாக செய்து கொண்டிருக்கிறார். ஆயிரம் குழந்தை களைப் படிக்கவைத்துக் கொண்டிருக்கிறார். இதில் 250&க்கும் அதிகமான குழந்தைகள் அநாதைக் குழந்தைகள். சாமி ஆசிரமத்துக்கு வந்ததுமே இந்தக் குழந்தைகள் எல்லாம் ‘அப்பா, அப்பா’ என அன்போடு ஓடிவருகின்றன. நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய கிலானியை விடுதலை பண்ணியிருக்கிறோம். அப்சலுக்கு தூக்குத் தண்டனையையே நிறுத்தியிருக்கிறோம். நாகர்கோவிலில் ஆசிரமம் நடத்தி கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் சிக்கிய கிறிஸ்தவ சாமியார் ஜான் ஜோஸப்பை நிரபராதி என விடுவித்திருக்கிறோம். ஆக, இந்துக்கள் அதிகமாக வாழ்கிற ஒரு நாட்டில் ‘முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு ஒரு நீதி... இந்துக்களுக்கு ஒரு நீதி’ என்கிற அளவில்தானே எல்லாமே நடந்து கொண்டிருக்கிறது. ‘இந்து என்கிற காரணத்துக்காக பிரேமானந்தா மட்டும் சிறையிலிருக்க வேண்டுமா?’ என்கிறார் அர்ஜுன்சம்பத்.

இவங்க அநியாயத்துக்கு ஒரு அளவே இல்லையா? எதோ அவங்க கோவில் கட்டறாங்க எங்களை கட்ட விடமாட்டேங்கறாங்கன்னு சொல்றா மாதிரி மத்த மதத்துக்காரங்க கற்பழிச்சா விட்டுடறாங்க, எங்களை மட்டும் விடமாட்டேங்கறாங்களேன்னு கேக்கறாங்க, அதுவும் ஒரு பத்திரிக்கை பேட்டில.... எங்க போய் முட்டிகிட்டு அழறது நாமெல்லாம்?
இதை விடவும் பெரிய கொடுமை கட்டுரையின் கடைசி பத்திதான்.

ஈழப் பிரச்னை... ஈஸி தீர்வு!

இதையெல்லாம்விட க்ளைமாக்ஸ்... இலங்கையில் பல ஆண்டுகளாக இருந்துவரும் இனப்பிரச்னையை முடிவுக்குக் கொண்டுவருகிற முயற்சியில் பிரேமானந்தாவை இறக்கிவிடப் போகிறார்களாம். ‘‘இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்ஷே சாமிகளின் சீடர்தான், தெரியுமில்லே. பிரபாகரனே இவரோட பக்தர்தான் புரியுதில்லே..?’’ என்று புளகாங்கிதப் படுகிறார்கள்!

ஆறு நாள் பரோல் முடிந்து, கடந்த 12&ம் தேதி இரவு சிறைக்குத் திரும்பியிருக்கிறார் பிரேமானந்தா.

சிறையில், சிலோன் பிரச்னை தீர தீவிர தியானத்தில் ஆழ்ந்தாரா, தெரியவில்லை!

ஈழத்தமிழர்களுக்கு தம்மால் வேறு எந்த வகையிலும் உதவ முடியாததால் அவ்வப்போது இப்படி காமெடி சரவெடிகளை கொளுத்திப்போட்டு அவர்களை சிரிக்கச் செய்தேனும் அவர்களின் மன இறுக்கத்தை குறைக்கலாமோ என்று இவர்கள் நினைத்து விட்டார்களோ? வேறு எப்படி இதையெல்லாம் புரிந்து கொள்வது என்றே எனக்குத் தெரியவில்லை.

பேட்டியாளரை கையெடுத்துக் கும்பிடவேண்டும் போலிருக்கிறது - பின்னே இவ்வளவையும் எரிச்சலையடக்கிக் கொண்டு என்னமாய்த்தான் கேட்டுக் கொண்டு வந்தாரோ தெரியவில்லை. அவர் பொறுமையாய் இருப்பது எப்படியென்று ஏதேனும் புத்தகமே எழுதலாம் அல்லது ஏற்கனவே எழுதியிருக்கலாம். அவ்வளவு தகுதிகளும் அவருக்குண்டு.

Friday, August 10, 2007

கேள்விகள்

ஓவ்வொரு முறையும் எதையோ சொல்ல எண்ணி ஆரம்பிக்கிறோம்.
எதையெதையோ பேசித் தீர்க்கிறோம்.
எதையுமே புரிந்து கொள்ளாது பேச்சு முடிகிறது.
என்னிடம் பதிலில்லாத கேள்விகளாய் தொகுத்து வைத்திருக்கிறாய் நீ.
அதிலிருந்து ஒவ்வொன்றாய் என் முன் இடுகிறாய்.
என் கையாலாகாத மௌனம் கண்டு இரங்கி
பதில்களை நோக்கி என்னை செலுத்துவதற்காய்
நீ மேலும் சில துணைக் கேள்விகளை இறைக்கிறாய்.
அவைகளுக்கும் கூட எனக்கு விடைகள் தெரியவில்லை.
இருவருமே தோல்விகளை ஒப்புக்கொண்டு
மௌனத்தில் தலையை புதைத்துக்கொள்கிறோம்.
இருதரப்பும் தோல்வியடைவதான
இந்த வினோத விளையாட்டை
எப்படிக் கண்டடைந்தோம் நாம்?
எப்போது கரையேறப்ப்போகிறோம் ?
எனக்கு பதில் தெரிந்த ஒரு கேள்வியை நீயோ
இல்லை உன்னிடமிருக்கும் ஏதேனும் ஒரு கேள்விக்கான பதிலை நானோ
கண்டுபிடித்துவிட்டால் போதும்.
முடியுமா?

Friday, July 27, 2007

படித்ததில் பிடித்தது (6)

சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தபடி அம்பையின் சிறகுகள் முறியும் சிறுகதை தொகுப்பைப் பற்றியதுதான் இந்த பதிவும். சிறகுகள் முறியும் என்ற கதை பொன்ஸின் பாஷையில் சொல்வதானால் சற்றே பெரிய கதை. எனவே என் வழக்கப்படி முழுக் கதையையும் இங்கே தட்டச்சு செய்ய முடியவில்லை. எனவே சில பகுதிகளை இங்கே உங்கள் முன் வைக்கிறேன்.

ஆண்கள் உடம்பெல்லாம் வயிறாக, மார்புச் சதை தொங்க ஊதக்கூடாது என்று ஒரு சட்டம் கொண்டு வரவேண்டும் என்று எண்ணிக்கொண்டாள் சாயா.
இப்படி மனத்தளவில் பல சட்டங்களை சாயா உருவக்கியிருக்கிறாள்.
1. ரோமம் இல்லாத வழவழத்த மார்பு உள்ள ஆண்கள் மணக்கக் கூடாது என்றொரு சட்டம்.
2. வெற்றிலை சாப்பிட்டுச் சாப்பிட்டுத் தகரம்போல் நசுங்கிக் கிடக்கும் பற்களை உடைய ஆண் முத்தமிடக் கூடாது என்றொரு சட்டம்.
3. ஆவலுடன் மனைவியின் கண்கள் ஒரு பொருளின் மீது படியும்போது பர்ஸைக் கெட்டியாக மூடிக்கொள்ளும் கணவனின் பர்ஸ் பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றொரு சட்டம்.


இப்படி எத்தனையோ.

அத்தனை சட்டங்களும் அமுலாக்கப்படும் பட்சத்தில் வெகுவாக பாதிக்கப்படப்போகும் ஒருவன் அவள் முன் அமர்ந்து, மலை மாதிரி உடம்பில் வியர்வை பெருக "ரஸம் ஒரே சூடு" என்று முணுமுணுத்துக் கொண்டிருந்தான்.

"நிதானமா சாப்பிடலாமே, என்ன அவசரம்?" என்றாள் சாயா.

"என்னது?" என்று அந்த "எ...ன்...ன...து"வை வாயில் அரைத்தவாறே அவன் கேட்டான்.
ஒதுங்கிப்போகும் பெண் நாயைப் பார்த்து உறுமும் ஆண் நாயின் உறுமலில் கூட இன்னும் மென்மை இருக்கும் என்று நினைத்தாள் சாயா.

"அம்மா, சாதம் ஜாஸ்திம்மா" என்று சிணுங்கினான் சேகர்.

"என்னடா ஜாஸ்தி ராஸ்கல்? அரிசி என்ன விலை விக்கறது? உதை விழும். சாப்பிடுடா."

சேகரின் கன்னங்கள் இரண்டும் அழுகையை அடக்கியதால் பிதுங்கின. சாயா மனதில் அவசர சட்டம் ஒன்றைத் தீர்மானித்தாள்.
மென்மையே இல்லாத ஆண்களுக்குக் குழந்தையே பிறக்கக்கூடாது என்று கட்டாய வாசக்டமி செய்துவிட வேண்டும்.

பாஸ்கரன் பெண் பார்க்க வரும்போதே பருமன் தான். தமிழ்ப்பட ஹீரோக்களை பார்த்துப்பார்த்துப் பழகிவிட்டதாலோ என்னவோ சற்றே ஸ்தூல சரீரம் ஆண்மைக்கு அழகு என்றொரு கற்பனை சாயாவுக்கு.

அம்மா மெல்லச் சொன்னாள் "மாப்பிள்ளைக்கு நல்ல வேலை. ஆனால் கொஞ்சம் ஸ்தூல சரீரம். நம்ப சாயா கொடி மாதிரி ஒல்லி. பொருத்தம் இல்லையே?" என்று இழுத்தாள்.

சந்துரு மாமாவுக்கு கோபம் வந்துவிட்டது. "என்ன அத்திம்பேர், இவ உளர்றா? நல்ல ஆரோக்கியமா இருக்கான் பையன். ஜுரத்தில் அடிபட்டவன் மாதிரியா ஆம்பளை இருப்பான்? இவ மட்டும் என்ன? பிள்ளை கிள்ளை பெத்தா பருத்துடுவா" என்று கத்தினார்.

சாயாவுக்கு பரிபூர்ண சம்மதம். அவள் மனதில் பாஸ்கரன் ஸ்டைலாக தொந்தி குலுங்க நடந்து, காதல் டூயட் பாடிக்கொண்டிருந்தான்.

சாயா - பாஸ்கரன் - என்ன பெயர்ப் பொருத்தம்!
அகத்து சாஸ்திரிகள் சொன்னார் "ஹாங்! பெயர்ப் பொருத்தத்தைப் பார்த்தேளா? ராமர் ஸீதை ஜோடின்னா இது?"

"சாயா, அந்த மாங்காய் ஊறுகாய் போடேன். ஒரு மாசமா போட்டுக்கவேயில்லை."

மாங்காய் ஜாடியைத் திறந்தாள். பஞ்சுப்படுக்கை விரித்தாற்போல் பூஞ்சைக்காளான் பூத்து கிடந்தது.

"ஐயையோ..."

"என்ன? கெட்டுப் போயிடுத்தா?" என்றான் பாஸ்கரன்.

தலை அசைத்தாள்.

"பணத்தைக் கொட்டி வாங்கினது. உனக்கு ஆனாலும் கவனம் போறாது."
உதட்டைக் கடித்துக் கொண்டாள் சாயா. அவள் தவறுதான். ஜாடியைக் குலுக்கிவிட வேண்டும் என்கிற ஞாபகமே இல்லை. "அத்தனை உப்பும், காரமும், எண்ணையும் வீண். பணத்தோட அருமை தெரிஞ்சால்தானே?" என்று கத்திவிட்டு கையலம்பப் போய்விட்டான் பாஸ்கரன்.

உப்பும், காரமும், எண்ணெயும்...ஹூம்! எங்கேயும் போய்விடவில்லை. அத்தனை உப்பும் காரமும் சேர்ந்துதான் நெஞ்சில் பற்றிக்கொண்டு எரிகிறதே? எண்ணெய் முகத்தில் வழிகிறதே?


இப்படி தொடங்கும் கதையில் தன் மனசுக்குள் ஒவ்வொன்றுக்கும் ஒரு சட்டத்தை கற்பனை செய்துகொள்ளும் பெண்ணாக சாயாவின் பாத்திரம் விரிகிறது. அவளது இந்த விசித்திரக் கற்பனைகளோடே வாழும் வாழ்வில் அவளடையும் ஒவ்வொரு ஏமாற்றமாக சொல்லிக்கொண்டே போய் கடைசியில் அவளது சிந்தனைகளையும் தன்னுடையதைப் போலவே மாற்றும் கணவனின் சிந்தனைப் போக்கும் விவரிக்கப்படுகிறது. ரொம்பவே அழகாய் 70களின் இல்லத்தரசிகள் நிலையை சொல்லிச்செல்லும் கதையிது. வழக்கமாய் எல்லாப் பெண்களும் செய்வது போல அம்மாவின் அருமையும் அவளைத் தான் படுத்திய பாடுகளும் திருமணத்துக்குப் பின் உரைக்க நினைத்து ஏங்குகிறாள் சாயா.

சாயா சாப்பிட உட்கார்ந்தாள். சேகர் மீதம் வைத்த சாதத்துடன் கொஞ்சம் சாதம் போட்டு பிசைந்தாள். வற்றல் குழம்பில் பிசைந்து கொண்டபோது அம்மா ஞாபகம்தான் வந்தது. என்னமாய் படுத்தி வைத்திருக்கிறாள் அவளை!

வற்றல் குழம்பு தட்டில் விழுந்தாலே, தட்டு பறந்து முற்றத்தில் போய் விழும். கையை உதறிக்கொண்டு எழுந்து விடுவாள். "எனக்குப் பிடிக்காததை நீ எப்படி சமைக்கலாம்?" என்று கத்துவாள்.

பிடிக்காதது!

சிறையில் கைதிக்கு கஞ்சி விடும்போது "ஆஹா, எங்கே கத்திரிக்காய் பஜ்ஜி? வெறும் கஞ்சி பிடிக்காதே" என்றானாம்!

அம்மாவை அலைக்கழித்ததற்குத்தான் இந்த தண்டனையோ?

ஒரு தடவை பள்ளியிலிருந்து வந்ததும் "என்னம்மா டிபன்" என்று கத்தினாள்.

"இட்லி."

தட்டில் இட்லி விழுந்ததும் "மிளகாய்ப் பொடி" என்றாள்.

மிளகாய்ப் பொடி வரவில்லை. சட்னி வந்தது.

"மிளகாய்ப் பொடி இல்லை." என்றாள் அம்மா.

பாவாடையை உதறிக் கொண்டு எழுந்துவிட்டாள் சாயா.

அப்புறம் அரைமணிக்குள் அம்மா வறுத்து இடித்துவிட்டாள்.

"இதை அப்பவே இடிச்சுத் தொலைக்கறதுதானே?"

"இடிச்சிருக்கலாம். இன்னிக்கு என்னவோ ஒரே மார்வலி." குபுக்கென்று நெஞ்சையடைத்தது சாதம். அம்மா! கரகரவென்று கண்ணில் நீர் பெருகியது. எச்சிற் கையோடு உட்கார்ந்துகொண்டே இருந்தாள். நெஞ்சம் கேவியது.

ஒவ்வொன்றிலாய் ஈடுபாட்டை இழக்கும் அவள் கடனே என்று வாழத்தொடங்குகிறாள். இன்றைய குடும்பத்தலைவிகள் பலருக்கும் சீரியல்களிலும் கொஞ்ச நாட்களுக்கு முன்பு அம்மன் படங்களிலும் வரும் ஈடுபாடுகளெல்லாம் இதுபோன்ற வெற்றிடத்தை ஏதேனும் இட்டு நிரப்பும் ஒரு முயற்சிதான்.

"நாக்கு நீளம் சாப்பாட்டு விஷயத்தில்." என்று அம்மாவிடம் குட்டுப்பட்டவள்தான்.

கல்யாணமான புதிதில் சேலத்துக்கு வேலை விஷயமாய்ப் போனான் பாஸ்கரன். அப்போது மாம்பழக்காலம். மாம்பழத்தை நறுக்காமல், கையில் அதன் ரஸம் ஒழுக, சதைப்பகுதியில் பற்கள் அழுத்திப் பதித்து வெண்ணெய்க்கட்டியாய் மாம்பழம் வாயில் போகும்படி சாப்பிடுவதில் அவளுக்கு அலாதிப் பிரியம்.

"வரும்போது கட்டாயம் மாம்பழம், ம்?"

அவன் திரும்பி வரும்போது முகமெல்லாம் ஆர்வம் கொப்பளிக்க, "எங்கே நான் கேட்டது?" என்றாள்.

"ரொம்ப விலை ஜாஸ்தி, வாங்கலை."

அன்றைக்குத் தன் நாக்கை அவள் அறுத்து எறிந்துவிட்டாள்.

சரோஜாவே அவளிடம் கேட்டதுண்டு.

"ஒண்ணுலேயும் ஆர்வம் இல்லாமல் இருக்கயே மன்னி, எதுக்காகத்தான் நீ இருக்காய்?"

"இருக்கணுமே, அதுக்காக. இதைவிட வேற காரணம் என்னடி இருக்கு?"


தன் கணவனின் குணம் தன்மேலும் படிந்துவிட்டதை அவள் உணர்ந்து கொள்ளும் போது அதிர்ச்சிக்குள்ளாகிறாள் சாயா.

"சாயா, அந்த கோபாலன் பையனுக்குப் பூணூலாம். நீ போயிட்டு வந்துடு, நான் பகல்லயே போயிடுவேன்."

"சரி."

"நாளைக்குச் சமைக்க வேண்டாம். அங்கேதான் சாப்பாடு."

"என்ன ப்ரஸன்ட் தரப்போறேள்?"

"பூணூலுக்கெல்லாம் ஒண்ணும் தரவேண்டாம்."

"சாப்பிட மட்டும் போலாமாக்கும்?"

"என் சிநேகிதன் பிள்ளை பூணூலூக்குச் சாப்பிடாம வேற எங்கே சாப்பிடறது?"

"நீங்க போங்கோ. நான் வரலை."

"சரி, வரலைன்னா வேண்டாம்."

அவ்வளவுதான். பஸ் காசாவது மிச்சம். அவன் இன்னொரு முறை கூப்பிட மாட்டான்.
அவளே மீண்டும் கேட்டாள்.

"அப்படின்னா, நீங்க மாத்திரம் போறேளா?"

"நீதான் வரமாட்டேன்கிறாயே?"

"ப்ரஸன்ட் இல்லாம எப்படிப் போறது?"

"குடேன், நீயும்தான் தைச்சு சம்பாதிக்கறயே, அது மட்டும் பணம் இல்லையா?"

கேள்வியை கேட்டு அவள் அதிர்ந்து விட்டாள். சரியான கேள்விதான். அதை உபயோகப்படுத்தலாம் என்று அவளுக்கு ஏன் ஒரு நாளும் தோன்றவில்லை? இப்போது கூட அதிலிருந்து எடுக்க மனமில்லை. அவள் உடல் வெடவெடவென்று நடுங்கியது. அவள் மனதார வெறுக்கும் குணம் அவளிடம், அவளையும் மீறி தொற்றிக் கொண்டுவிட்டதா என்ன? சேகர் சைக்கிள் கேட்டபோதுகூட அவள் அதைப்பற்றி எண்ணவே இல்லையே? சில்லிட்டுப் போன கைகளால் அவள் பக்கத்திலிருந்த நாற்காலியை அவள் பற்றிக்கொண்டாள்.

அவள் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்ளும் இந்த இடத்துக்குப் பின்னும் கதை நீள்கிறது. அது அவளது தாயின் கதையையும் விவரிப்பதாக போய் கடைசியில் சாயா தான் மீண்டும் கருவுற்றிருப்பதை இயந்திரத்தொனியில் கணவனிடம் சொல்வதில் முடிகிறது.

அம்பையின் எழுத்து சற்று அதீதப் பெண்ணியம் பேசுவதாயிருக்கிறது என்று முந்தைய பதிவிற்கான பின்னூட்டத்தில் உஷா குறிப்பிட்டிருந்தார். ஆனால் அவரது படைப்புக்களை அந்த காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கும்போது அது உறுத்தலாய் தெரிவதில்லை என்பதே என் கருத்து. வெறும் பெண்ணியம் மட்டுமில்லாது நல்ல அங்கதம் தெறிக்கும் அவரது எழுத்து நடையும் வசீகரமானதே. இந்த தொகுப்பிலேயே கூட

திரிசங்கு - தன்னுடைய சராசரித்தனத்துக்கும் தன்னுடைய லட்சியங்களுக்கும் இடையில் போராடும் ஒரு பெண்ணைப் பற்றிய கதை (இந்த இடத்தில் அந்த வயதில் ஒத்த குணாதிசயமுடைய ஒரு ஆணை பொருத்தினாலும் கதையோட்டம் நிச்சயம் கெடாது)
சூரியன் - போரினால் நிலத்தடியில் இருக்கும் பதுங்கு குழியில் வாழ நேரும் ஒரு தாய் தன் மகனுக்கு சூரியன் என்பதையே ஒரு அதிசயமாய் காட்ட வேண்டியிருப்பதின் அவலத்தை சொல்லும் கதை - வியட்நாம் போரை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது இக்கதை.
உடம்பு - ஒரு ஆண் நாட்டியக் கலைஞரின் குமுறல்களைச் சொல்லும் கதை.

போன்றவற்றில் பெண்ணியச் சாயலற்ற ஒரு தேர்ந்த படைப்பாளியைப் பார்க்கலாம்.

Tuesday, July 24, 2007

படித்ததில் பிடித்தது (5)

புத்தகம் - சிறகுகள் முறியும்
ஆசிரியர் - அம்பை (சி.எஸ். லக்ஷ்மி)
முதல் பதிப்பு - 1976
சமீபத்திய பதிப்பு - டிசம்பர், 2003
பதிப்பகம் - காலச்சுவடு

ஆசிரியரைப் பற்றி:

வரலாற்றில் எம்.ஏ பட்டமும் அமெரிக்கன் ஸ்டடீஸில் முனைவர் பட்டமும் பெற்றவர். தமிழ், ஆங்கிலம் தவிர இந்தியும் கன்னடமும் அறிந்தவர். The Economic and Political Weekly, The Times of India, Free Press Bulletin, The Hindu போன்ற இதழ்களில் கட்டுரைகளும் நூல் விமர்சனங்களும் எழுதி வருகிறார். பெண் இசைக் கலைஞர்கள் மற்றும் நடனமணிகள் பற்றி இவர் எழுதிய நூலை Singer and the Song, Mirrors and Gestures என்ற இரு தொகுதிகளாக டில்லியிலுள்ள பதிப்பகம் வெளியிட்டுள்ளது. SPARROW(Sound & Picture Archives for Research on Women) என்ற அமைப்பை நிறுவியவர். அதன் இயக்குனர். பல டாக்குமென்டரி படங்களுக்கு ஸ்க்ரிப்ட் எழுதி, உதவி இயக்குனராகவும் இருந்திருக்கிறார். வீட்டின் மூலையில் ஒரு சமையலறை(1988), காட்டில் ஒரு மான் (2000) இவரது பிற சிறுகதைத் தொகுதிகள்.2005 ஆம் ஆண்டுக்கான விளக்கு அமைப்பின் புதுமைப்பித்தன் நினைவு விருதைப் பெற்றவர்.

விளக்கு அமைப்பு அம்பைக்கு இவ்விருது வழங்கியபோது வெளியிட்ட ஒரு அறிக்கையில் அவரைப் பற்றி கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது.

அமெரிக்காவில் வாழும் தமிழ் இலக்கிய ஆர்வலர்களின் அமைப்பான விளக்கு நிறுவனத்தின் புதுமைப் பித்தன் இலக்கிய விருது இவ்வாண்டு எழுத்தாளர் அம்பைக்கு வழங்கப்படுகிறது. லதா ராமகிருஷ்ணன், க்ருஷாங்கினி, திலீப் குமார் ஆகியோரடங்கிய விளக்கு நடுவர் குழுவின் பரிந்துரையின் பேரில் அம்பை தெரிவு செய்யப்பட்டுள்ளார். நாடகம், கட்டுரை சிறுகதை என்று பல தளங்களில் முப்பதாண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருபவர் இம்முப்பதாண்டுக் கால இலக்கியப் பங்களிப்பைக் கணக்கில்கொண்டு விளக்கு விருது வழங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் உள்ள வெளிச்சத்திற்கு வராத பல பெண்களின் வாழ்க்கைச் சிக்கல்களை வாய்வழிப் பதிவு செய்ய 'ஸ்பேரோ' என்ற அமைப்பையும் நடத்திவருகிறார். மும்பையில் வசிக்கும் இவர், அல்லலுறும் இந்தியப் பெண்களுக்கென ஒரு எழுத்து இயக்கம் நடத்தி வருகிறார் என்றால் மிகையாகாது.

"தனது படைப்புக்களில் பெண்சார் மரபார்த்த பார்வைகளையும் பிம்பங்களையும் தொடர்ந்து கேள்விக் குட்படுத்தியும்,தோலுரித்துக் காட்டியும் வந்திருப்பவர் அம்பை" என்கிறர் லதா ராமகிருஷ்ணன்.

"குடும்பத்தில் வாழும் பெண்ணின் இடத்தைஇலக்கியத்தில் துணிவுடனும் உண்மையாகவும் சிறுகதைகளின் மூலம் பதிவு செய்தவர்" என்று க்ருஷாங்கினி குறிப்பிட்டுள்ளார்.

"தன்னை ஒரு பெண் எழுத்தாளர் என்று பறைசாற்றிக் கொள்ளவோ அத்தகுதியை எதற்கும் பயன்படுத்திக் கொண்டதோ இல்லை" என்று அம்பையின் தெள்ளிய நிலைப்பாட்டைச் சுட்டிக் காட்டுகிறார் திலீப் குமார்.

தற்காலத் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தரம் வாய்ந்த ஆனால் வெளிச்சத்துக்கு வராத படைப்பாளிகளைப் பரவலாக அறிமுகப் படுத்தும் விளக்கின் நோக்கத்துக்கு மிக உகந்ததாகிறது இத் தெரிவு. நடுவர் குழுவுக்கும் இந்தியத் தொடர்பாளரான வெளி ரங்கராஜனுக்கும் விளக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறது.

மொத்தம் 13 சிறுகதைகள் உள்ள இந்நூலைப் பற்றி அம்பையின் முன்னுரை இது.

1976ல் வெளிவந்த புத்தகத்தின் மறுபதிப்பை வெளியிட, கதைகளை மீண்டும் அச்சில் காணும் ஆசை அல்லது தைரியம் இவற்றைத் தவிர வேறு வலுவான காரணங்கள் தேவை. ஒன்று கதைகள் இறவா இலக்கியமாக இருக்க வேண்டும் அல்லது உடனடியாகக் கதைகளின் மேல் கவனம் செலுத்துவதற்கு நிமித்தமாக படைப்பாளியாவது இறந்திருக்க வேண்டும். இந்த இரண்டு காரணங்களும் இந்தத் தொகுப்பை பொறுத்தவரை செல்லாது. இதிலுள்ள கதைகள் 'இறவா இலக்கியம்' எனும் தகுதியைப் பெற்றவை அல்ல. 1967ல் சென்னையில் தொடங்கி 1976ல் டில்லியில் முடியும் வாழ்க்கைப் பயணத் தடத்தினூடே விளைந்த பதிவுகள் இவை எனலாம். இப்பயணம் உள்ளடக்கிய இலக்கிய ஊடாடல், மொழி, ஒரு நபரின் வளர்ச்சி, கற்பனை, அப்போதைய சூழல் இவற்றின் வரைபடமாக இத்தொகுதியைக் கொள்ளலாம். இலக்கியச் சரித்திரத்தின் சில கண்ணிகளை இணைக்க இத்தகைய வரைபடங்கள் பயன்படலாம்.

சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிற்குப் பின் வளர்ந்து, ஐம்பதுகளில் பள்ளிக்குச் சென்று, மேற்படிப்புக்காகச் சென்னைக்கு வந்து, பின் சிறு ஊரில் பள்ளி ஆசிரியையாக வேலை செய்து, பின் தலைநகரம் போய் முனைவர் பட்டத்துக்குப் படித்து, ஆராய்ச்சி நிறுவனங்களிலும் கல்லூரிகளிலும் வேலை பார்த்த பெண் வாழ்க்கையை சந்தித்த தருணங்களின் சிதறல்கள் இக்கதைகள்.

மூன்றாண்டு இடைவெளிக்குப் பின் 1967ல் சிறகுகள் முறியும் கதையை எழுதியபோது பெண் என்ற ரீதியில் வாழ்க்கையை எதிர்கொண்ட முயற்சியில் சில அடிகள் விழுந்தாகி விட்டது. உடல் என்ற ஒன்று இடையில் வராமல் எந்த ஆண் - பெண் நட்பும் பார்க்கப்படுவதில்லை போன்ற பெரிய படிப்பினைகளை ஒரு சிறு ஊரிடமிருந்து பெற்றாகிவிட்டது. பலமுறைகள் ஒதுக்கித் தள்ளினாலும் சில சமயம் சோர்ந்ததுண்டு. ஒரு பின்னிரவு நேரம் நானும் இன்னொரு டீச்சரும் எழுத்தாள நண்பர் மெய்யடியானுடன் ஒரு சினிமா பார்த்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். படம் பற்றியும் கதை பற்றியும் ஏதேதோ பேசியபடி நடை. திடீரென்று, "ஏண்டா, ஈர்க்குச்சி மாதிரி இருக்கான். எப்படிடா ரெண்டுரெண்டு பொம்பளைகளைச் சமாளிக்கிறான் இந்தச் செட்டியார்?" என்று உரக்க ஒரு குரல் எழுந்தது பின்னால். தூக்கிவாரிப் போட்டது. எங்கள் உரையாடலை விடாமல் தொடர்ந்தபடி, அவர்கள் பேசிய ஆபாசங்களையும் செவிமடுத்தபடி, வீட்டை எட்டிய பிறகு, மெய்யடியானுக்கு நன்றி கூறி அவர் விடைபெற்றபின், ஒலியே இல்லாக் கேவல்கள். விம்மலை அடக்கிய தொண்டையில் வலி. கண்கள் எரியஎரிய கண்ணீர். பெண்ணின் உடலை மையமாக்கிய அந்த ஆபாச மொழி ஏற்படுத்திய உடல் கூச்சம் - இப்படிக் கழிந்தது அந்த இரவு. உடலைப் பற்றிய அறிவோ பிரக்ஞையோ இல்லாமல் எழுதிய ஒரு வெள்ளைமனது நாவல் அப்போதுதான் 'கலைமக'ளில் தொடர்கதையாக வெளிவந்துகொண்டிருந்தது. இரண்டே ஆண்டுகளில் உடலையே பிரதானமாக்கிய நிகழ்வுகள். எல்லாவற்றையும் தாண்டி 1967ல் எழுத உட்கார்ந்ததும் பிறந்தது 'சிறகுகள் முறியும்'.

சிறுகதையின் இலக்கணம், வரைமுறைகள், தமிழிலக்கியத்துடன் ஆழ்ந்த பரிச்சயம், மற்ற மொழி இலக்கியங்களுடன் தொடர்பு இவை எதும் இல்லாமலே அந்தரத்தில் கரணம் போடுவது போல் செய்த முயற்சிகள் மற்ற சில கதைகள். சில நல்ல இலக்கிய மனங்களின் தூண்டுதலையும் ஊக்குவிப்பையும் பலமாகப் பற்றிக்கொண்டு, குழந்தைகளுக்கான ஆங்கிலக் கதைகளில் வரும் ரெபுன்ஸலின் முடியைப் பற்றிக் கொண்டு கோட்டை மேல் ஏறும் அரசிளங்குமரன் போல ஒரு சாகசம்; எல்லைகளை அறியாததால் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக ஒரு உலாத்தல். ஒரு களம், ஒரு மண், ஒரு மொழி, ஒரு ஆற்று நீர் என்றில்லாமல் பல இடங்களை தொட்டு மீளும் ஆனந்தம் - இவை அனைத்தும் உண்டு இக்கதைகளில்.

தமிழ்நாட்டில் இல்லாமல் வெளியில் இருப்பவர்களுக்கு, தமிழ்மொழி ஒரு பற்றுக்கோல். விரல்சூப்பும் குழந்தைக்கு கட்டைவிரல் போல மொழி ஒரு ஆற்று. தனிமைப்படும்போது தோழியாகவும், உறவு பூணும்போது சங்கேதமாகவும், கருத்துப் பரிமாற்றத்துக்குப் பாலமாகவும், கட்டுப்படாத கற்பனையை தொட்டு மாற்றும் மந்திரமாகவும் ஆகிவிடுகிறது மொழி. இந்த மொழி தரும் போதையில், அதனுடன் விளையாடியபடி, குதூகலித்தபடி, திளைத்தபடி எழுதியவை இதிலுள்ள சில கதைகள்.

இக்கதைகளின் அடித்தளத்தில் இவை எல்லாம். ஒரு தசாப்தத்தின் புழுதியைப் பூசிக்கொண்டு. முதற் பதிப்பில் இருந்த பயங்கள் நாடகம் இதில் இல்லை. அப்பதிப்பிலிருந்த அச்சுப் பிழைகளும் இல்லை. இவற்றை எழுதிய படைப்பாளியும் இப்போது இல்லை. இக்கதைகளை இறக்கி வைத்துவிட்டு, வேறுவேறு கதைகளை, வெவ்வேறு சமயத்தில் தூக்கியபடி வேறு பயணங்களை மேற்கொள்ளும் முயற்சியில் அவள். ஒர் இடத்தில் வைத்துச் சென்ற ஒன்றை மீண்டும் எடுத்து, தூசி தட்டி பத்திரப்படுத்தும் சுகம்தான் மறுபதிப்பில். இந்தக் காலகட்டத்தில் இதைப் படிப்பவர்களை இந்த வரைபடம் சில இலக்குகளுக்கு இட்டுச் செல்லலாம். வெறும் வரைபடமாகவே நின்றும் போகலாம். அவரவர் மேற்கொள்ளும் பயணத்தைப் பொறுத்தது அது.

பி.கு: ஆசிரியரைப் பற்றிய குறிப்பும் முன்னுரையுமே மிகவும் நீண்டு விட்டதால் இப்புத்தகத்திலிருந்து ஒரு சிறுகதையை ப.பி தொடரின் அடுத்த பாகத்தில் தட்டச்சு செய்து போடுகிறேன். தொடர்ச்சி விட்டுப் போகாதிருக்க இடையில் வேறு எந்த பதிவும் போட்டு உங்களைப் படுத்தாமலிருக்கவும் உத்தேசித்திருக்கிறேன். :)

என்னாத்தை சொல்வேனுங்கோ?

பத்திரிக்கை தர்மத்தை பத்தி போன பதிவுல எழுதியிருந்தேனில்லையா, நண்பரொருவர் கூப்பிட்டு குமுதம் ஜோதிடத்துல சனிப் பெயர்ச்சி பலன் பாத்தியான்னு கேட்டார். இன்னும் இல்லையேன்னு சொன்னேன். உன் ராசிக்கு பாக்குறயோ இல்லையோ பொதுப் பலன்கள்ன்ற தலைப்புல தமிழ்நாட்டுக்கு போட்டிருக்கறதை மட்டும் கண்டிப்பா பாத்துடுன்னார் அவர். சரின்னு பாத்ததோட பலன்தான் இந்த பதிவு... இதுதான் பத்திரிக்கை தர்மத்தின் அழகு... இதுல நான் சொல்ல என்ன இருக்கு.. ஹைலைட் செய்திருக்கற விஷயங்கள் இவங்க கணிச்ச பலன்களா இல்லை இவங்களோட வேண்டுதலா????

*******************************************************

தமிழ்நாடு!

தமிழகத்தைப் பொறுத்தவரையில், இந்த சனிபகவானின் சிம்மராசி சஞ்சார காலத்தில் பல முக்கிய நிகழ்ச்சிகள் நிகழவிருக்கின்றன. ‘இப்படியும் நடக்குமா?’ என்ற அளவிற்குக் கூட்டணி மாறுதல்கள் ஏற்படும்.

துறவிகள் சிலர் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கி, பண்டைய தெய்வீகப் புகழையும், பெருமையையும் பெற்றுத் திகழ்வார்கள் எனவும், சனிபகவானுக்கு ஏற்படும் குருபகவானின் சுபப்பார்வை எடுத்துக்காட்டுகிறது.

அரசியல் கட்சிகள், தலைவர்கள் ஆகியோரிடையே போட்டியும், பொறாமையும் குறையாது
. பொருளாதாரத்திலும், தொழிற்துறையிலும் தமிழகம் மேலும் மேலும் முன்னேற்றமடையும். மக்களின் பொருளாதார நிலை உயரும். நோய்கள் குறையும். தமிழகத்தில் தீவிரவாதம் அதிகரிக்கும். மக்களிடையே தெய்வ பக்தியும், ஆன்மிகச் சிந்தனைகளும், தர்மநெறியும் ஓங்கும். புராதன திருக்கோயில்கள் பல புனர்நிர்மாணம் செய்யப்பட்டு ஒளிவீசித் திகழும். ராமர் பாலத்தைப் தகர்த்தெறியும் முயற்சி தோல்வியுறும்.

********************************************************

டீச்சர் சொன்னா மாதிரி அட்டைய கிழிச்சுட்டா உள்ள எல்லா பத்திரிக்கையும் ஒரே மாதிரிதான்னாலும் கூட விகடன் அளவு குமுதத்தின் மேல பெருசா மதிப்பில்லைன்றதால இதை நான் பெரிய விஷயமா நினைக்கலை. இருந்தாலும் ஒரு நல்ல காமெடிய மக்களோட பகிர்ந்துக்கலாமேன்னுதான்....

Friday, July 20, 2007

இன்னமும் இருக்கிறதா பத்திரிக்கை தர்மம்????

இந்த வார ஆனந்தவிகடனில் ஒரு கட்டுரை - தலைப்பு "பச்சைக் காய்கறி பயங்கரம்".

அந்த கட்டுரை விரிகிறது இப்படி.

சரசரவென்று வளர்ந்து லாபங்களைக் குவிக்கத் தொடங்கிய சாஃப்ட்வேர் கம்பெனி ஒன்றின் உரிமையாளர் அவர். அன்பான மனைவி, பாசமான இரண்டு குழந்தைகள் என குதூகலமான குடும்பம். வாழ்க்கை அமைதியாகவும் அழகாகவும் சென்றுகொண்டிருந்த வேளையில், ஜூன் மாத சனிக்கிழமை ஒன்றில், அவருக்குத் திடீர் என வலிப்பு நோய் கண்டது. தொட்டுவிடும்தூரத் தில் மரண வாசலுக்கே போய்விட்டவரை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து, தீவிர சிகிச்சை அளித்துப் பத்திரமாக மீட்டெடுக்கும்படி ஆயிற்று!

வலிப்பு காரணமாக முது கெலும்பில் ஏழு இடங்களில் விரிசல்கள்! குறைசொல்ல முடியாத ஆரோக்கியத்துடன் இருந்தவரின் திடீர் வலிப்புக்கான காரணம் புரிபடவில்லை! அதிகாலை வாக்கிங் முதல் ஆழமான உறக்கம் வரை கச்சிதமாக இருந்த அவரது லைஃப் ஸ்டைலை ஆராய்ந்த மருத்து வர்கள், கடைசியாகச்சொன்னது... “நீங்கள் என்றைக்கோ சாப்பிட்ட பச்சைக் காய்கறி தான் உங்களுடைய இந்த நிலைமைக்குக் காரணம்!”

இதற்கு பின் பாதிக்கப் பட்டவரது பேட்டி - அதன் சாராம்சமும் கிட்டத்தட்ட இப்படித்தான். அவர் முடிக்கையில் இப்படி சொல்கிறார்.

"இனிமேல் காய்கறிகளைச் சாப்பிடுறப்போ ரொம்ப உஷாரா இருக்கணும். எந்தக் காய்கறியையும் பச்சையா சாப்பிடவே கூடாது. வேகவெச்சுதான் சாப்பிடணும். இல்லேன்னா, தோலை சுத்தமா சீவிட்டுச் சாப்பிடணும்னு சொல்லியிருக்காங்க. மெத்த படிச்சவன் நான். ஆனா, இந்த சாஃப்ட்வேர் ஆசாமியின் கவனக்குறைவால் வைரஸ் புகுந்து ஆட்டிவெச்சிடுச்சு!" என்று சொல்லி முடித்தார்.

கொஞ்சம் மேலோட்டமாக படிக்கும் வழக்கம் உள்ள ஒருவர் இத்தோடு இக்கட்டுரையை இந்த இடத்தோடு நிறுத்தி விட்டாரானால் என்ன ஆகும்? அவர் பச்சை காய்கறிகளை சேர்ப்பதே ஏதோ ரொம்ப அபாயமான விஷயம் என்று கருதிவிடுவார். சரி, உண்மையில் பச்சை காய்கறிகள் பயங்கரமானவையா? இந்த கட்டுரை முடியுமிடத்தில்தான் உண்மை வெளிவருகிறது.

இவருக்குச் சிகிச்சை அளித்த, அப்போலோ மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் யோகராஜிடம் விளக்கமாகக் கேட்டோம்.

"நாடாப் புழு முட்டைகள் (Tae nia solium) மூலமாக வரும் இந்த நோய்க்கு நியூரோ சிஸ்டி செர்கோஸிஸ் (neuro cysti cercosis) என்று பெயர். பன்றிகளும், பன்றிகள் சார்ந்த இடமும்தான் அந்தப் புழுக் களின் இருப்பிடம். பெரும் பாலும் சுத்தமில்லாத பன்றிக் கறியை உண்பதன் மூலம், அந்தப் புழுக்கள் மனித உடலில் ஊடுருவும். முதல் வலிப்பு ஏற்படும் வரை, அப்படியரு புழு நம் உடலில் இருப்பதை உணரவே முடியாது! குறிப்பிட்ட இந்த மனிதரின் கன மான உடம்பு காரணமா, வலிப்பின் அதிர்ச்சி தாங்க முடியாமல் முதுகெலும் பில் விரிசல் விட்டிருக்கு. மற்றபடி, வலிப்பினால் எல்லோருக்குமே முது கெலும்பு பாதிக்கும்னு சொல்ல முடி யாது" என்றவர் தொடர்ந்து...

"இந்த ஒரு கேஸைப் பார்த்து மொத்தமா பயப்படவும் வேண்டாம். பிரச்னை பச்சைக் காய்கறிகளைச் சாப்பிடுவதால் இல்லை. அவற்றை கவனமாகப் பார்த்து சுத்தப்படுத் தாமல், தோல் நீக்காமல் சாப்பிடுவது தான் பிரச்னையே! பன்றியின் கழிவுகளில் புரண்ட நாய், மாடு போன்ற கால்நடைகள் காய்கறித் தோட் டத்தில் மேயும்போது, அவற்றின் உடம்பிலிருந்து காய்கறிகளின் மேல்தோலில் நாடாப் புழுக்களின் முட்டைகள் ஒட்டிக்கொள்ள வாய்ப் பிருக்கிறது. எனவே, காய்கறிகளை நன்றாகக் கழுவிய பிறகும் 30 நொடி களாவது வெந்நீரில் வேகவைத்து சமைத்துச் சாப்பிடுவதுதான் நல்லது. திரும்பவும் சொல்றேன்... இந்த ஒரு உதாரணத்தைப் பார்த்து ஒரேயடியாக பயந்து போய்விட வேண்டாம்" என்கிறார் டாக்டர் யோகராஜ்.

ஆகவே, பச்சைக் காய்கறி பிரியர்களே... அலற வேண்டாம். ஆனா, கொஞ்சம் அலர்ட்டா இருக்கலாமே!

பேட்டி கொடுத்த மருத்துவர் தெளிவா ஒரு முறைக்கு இரு முறை அழுத்திச் சொல்லியிருக்கிறார் - இந்த ஒரு கேசை பாத்து பயந்துடாதீங்கன்னு. பச்சைக் காய்கறிகளை சாப்பிடுவதில்லை ப்ரச்சனை - அதை சரியா சுத்தம் செய்யாம சாப்பிடுவதுதான் பிரச்சனை. சரியா சுத்தம் செய்ய நேரமிருக்காதுன்னு நினைக்கறவங்க நேரடியா வேகவைத்தே சாப்பிடுங்க. இதுதான் அவர் சொல்ல வரும் கருத்து. கட்டுரையும் இதைச் சொல்லவே எழுத்தப் பட்டது. நல்ல விஷயம்தான். அவசியம் மக்களைச் சென்றடைய வேண்டியதுதான். காசு கொடுத்து வாங்கும் மக்களுக்கு ஒரு வெகுஜன பத்திரிக்கை செய்ய வேண்டிய கைம்மாறுதான் இது. மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் சொல்லியிருக்கும் தொனியைப் பாருங்கள்.

சரி, பத்திரிக்கைகளின் செய்தி தலைப்பு என்பது கவர்ச்சிகரமாக அதிர்ச்சியூட்டி வாசகனை செய்தியை நோக்கி இழுப்பதாக இருக்க வேண்டுமென்பதெல்லாம் சரிதான். எந்தெந்த விஷயங்களில் இந்த டெக்னிக்கை பயன்படுத்தி பார்ப்பது என்றில்லையா? அரசியல் அல்லது சினிமா சம்பந்தப் பட்ட விஷயங்களில் இப்படியெல்லாம் போட்டால் ஒன்றும் தப்பில்லை. மேலோட்டமாக பார்த்து யார் எப்படி புரிந்து கொண்டுவிட்டாலும் ஒன்றும் குடி முழுகிவிடப்போவதில்லை. ஆனால் படிப்பவரது உடல் நலம் சம்பந்தப் பட்ட ஒரு கட்டுரை, அவர்களுக்கு விழிப்புணர்வூட்ட எடுத்துக் கொண்ட விஷயமே தவறான புரிதலை விதைத்துவிடும் சாத்தியமுள்ளதை உணராதவர்களா இந்த பத்திரிக்கை கனவான்கள்?? உடனே படிக்கிறவந்தானே முழுசா படிச்சு விஷயத்தை தெரிஞ்சுக்கணும் அப்படின்னு எனக்கு வந்து உபதேசம் பண்ணப்போற அறிவு ஜீவிகளே, நம்ம சமூகமொன்னும் ரொம்பவே அறிவுபூர்வமான சமூகமாயிடலை இன்னமும். அதுலயும் விகடனையோ இல்லை குமுதத்தையோ வாங்குறவங்க பெரும்பாலும் அரசியல்/சினிமா துணுக்குகளையும் ஜோக்குகளையும் குறிவச்சு வாங்குவதுதான் அதிகமா இருக்கும். அது போன்ற முக்கியமான விஷயங்களை படிச்சு முடிச்சப்புறம் அப்படியே கொடுத்த காசுக்கு இந்த அட்டைலேர்ந்து அந்த அட்டை வரை ஒரு புரட்டு புரட்டுவாங்க. அப்போ அவங்க கண்ணுல இந்த தலைப்பு பட்டுத் தொலைச்சா என்ன ஆகும்? உடம்புக்கு நல்லதுன்னு அன்னிக்கு வரை எப்பவாச்சுமாவது செஞ்சுகிட்டிருந்த ஒரு நல்ல விஷயத்தையும் நிறுத்தி தொலைப்பாங்க. இதுதானா பத்திரிக்கை தர்மம்? ஒரளவு நல்ல பெயருடைய(அல்லது நிறைய பேர் இன்னமும் அப்படி நம்பிகிட்டிருக்கற) ஒரு பத்திரிக்கையே இப்படி நடந்துக்கிட்டா, அப்புறம் வேறென்னத்தை சொல்றது போங்க...

பி.கு: நுனிப்புல் மேய்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கைன்னுதான் தலைப்பு வைக்க நினைச்சேன். அப்புறம் தலைப்பை மட்டும் பாத்துட்டு நம்ம உஷாக்காவோட வாசகர்கள் டென்ஷனாயிடப் போறாங்களேன்னுதான் மாத்திட்டேன். :)

என்னோட எட்டு

எட்டுப் போடணுமாம். கண்மணியக்கா கூப்பிட்டாஹ... அய்யனாரய்யா கூப்பிட்டாஹ....அப்புறம் வெட்டி பாலாஜி அய்யாவும் கூப்பிட்டாஹ... அப்புறமா அய்யானார் ஒரு ரிமைன்டரும் விட்டாரு.. இதுக்கப்புறமும் என்னமோ நம்ம தலைலதான் கம்பெனியவே தாங்குறா மாதிரி சீன் போட்டா யாருனா வந்து மொத்தினாலும் மொத்திடுவாங்கன்றதாலயும், எட்டு பெருமையான விஷயங்கள்ன்றதுலேர்ந்து என்னை மாதிரியான சாமானியப்பட்டவங்களையும் மனசுல வச்சு உங்களைப் பத்தி எதுனா எட்டு விஷயம் அப்படின்னு ஆட்டத்தோட விதிமுறைகளை தளர்த்திட்டதாலயும் தைரியமா ஆட்டத்தை ஆரம்பிக்கறேன்...

1. வெளிப்படையா பேசுறது - முதுகுக்கு பின்னாடி இதையே ஒட்டை வாய்னும் சொல்லுவாங்க. :)
2. புத்தகப் பித்து - புத்தகம்னு இல்லை. எங்கம்மா சொல்லுவாங்க, கல்யாணம் பண்ணிக் கொடுக்கும் போது மாப்பிள்ளைகிட்ட "இவ பாலை அடுப்புல வச்சா மட்டும் கொஞ்சம் பாத்துகுங்க மாப்பிள்ளை , ஏன்னா அப்பத்தான் இவ சுவாரசியமா எதுனா கடுகு மடிச்சு வந்த பேப்பரை படிச்சுகிட்டிருப்பா, பால் பொங்கிடும். அதை மட்டும் நீங்க பாத்துகிட்டா போதும் ,மத்தபடி என் பொண்ணு வீட்டை நல்லாவே பாத்துப்பா" அப்படின்னு மறக்காம சொல்லியே ஆகணும்னு சொல்லிகிட்டிருப்பாங்க. அந்த அளவு எந்த குப்பையானாலும் படிச்சுட்டுதான் கீழ வைப்பேன்.
3. இசை - கேக்க மட்டுந்தாங்க. பாடி சுத்தி இருக்கறவங்களை படுத்துமளவு கெட்ட எண்ணமெல்லாம் கிடையாது. ஆனா பிரச்சனை என்னான்னா, அது திரைப்பாடலாயிருந்தாலும் சரி சாஸ்திரிய இசைப் பாடலாயிருந்தாலும் எனக்கு வெறும் நல்ல இசை மட்டும் பத்தாது. வரிகளும் இயன்ற வரை நல்ல தமிழில் சந்த நயத்தோடு கவித்துவத்தோடு இருக்கணும். கொஞ்சம் கஷ்டந்தாங்கறீங்களா? அதும் சரிதான்.
4. அப்பா மேல இருக்கற பாசம் - அவர் எனக்கு அப்பா எனக்கு அப்பா மட்டுமில்லை. வழி நடத்துற குரு, என் சுக துக்கங்களை பகிர்ந்துக்கற நல்ல நண்பர், இப்ப அம்மா போனதுக்கப்புறம் அவர் தாயுமானவரும் கூடத்தான். அதுனால அவரை கேக்காம ஒரு துரும்பையும் அசைக்க மனசு வராது எனக்கு.
5. ஞாபக சக்தி - இந்த ஒரு விஷயத்தை வச்சுத்தான் முதுநிலை வரைக்குமான என் படிப்பை ஒப்பேத்த முடிஞ்சுது. இது மட்டுமில்லைன்னா நான் படிப்புல காட்டின அக்கறைக்கு, கதை கந்தலாயிருந்திருக்கும். ஒரு முறை கேட்டதை மறந்ததா சரித்திரமே கிடையாது (ஆனா நான் உண்மையிலேயே கவனிச்சு கேட்டிருக்கணும். பெரும்பாலான சமயத்துல வெறும் பாவ்லாதான் பண்ணுவேன் கவனிக்கறா மாதிரி. ஆனா ரொம்ப நம்பும்படியா இருக்கும் என் ஆக்டிங்க்....)
6. குத்தி காமித்தல் - இது #5 அதிகமா இருக்கறதால வர்ர வினை. ஒரு முறை நடந்தது ரொம்பவே ஞாபகம் இருந்து தொலைக்கறதால, அடுத்த முறை அவங்ககிட்ட பேசும் போது இந்த குத்தி காமிக்கறதை தவிர்க்கவே முடியறதில்லை. அதும் எப்படின்றீங்க, வாழைப்பழ ஊசின்னுவாங்களே அது மாதிரி ரொம்பவே உள்குத்தா இருக்கும். எதிராளிக்கு வலிக்கும் ஆனா காமிச்சுக்கவே முடியாது. என்கூட பழகின யாரை கேட்டாலும் சொல்லுவாங்க. எவ்வளவு நெருங்கினவங்களா இருந்தாலும் என்னிக்கோ எப்பவோ பண்ணினதுக்கு கூட இன்னமும் அனுபவிச்சுகிட்டிருப்பாங்க. எங்க அப்பாவே இதுலேர்ந்து தப்பிக்க முடியாதுன்னா பாத்துக்குங்க. பிரச்சனை என்னான்னா, நானும் இது கூடாதுன்னுதான் நினைக்கிறேன். ஆனாலும் இந்த பழக்கத்தை மாத்திக்க முடியலை.
7. மன உறுதி - தற்பெருமை போலத் தெரிஞ்சாலும் நிஜமாவே எனக்கு இது கொஞ்சம் அதிகம்தான். சொல்லப்போனா பிரச்சனைகள் அதிகமாக அதிகமாகத்தான் ஜெயிச்சே ஆகணும்ன்ற என்னோட உறுதியும் அதிகமாகுதோன்னு கூட தோணும். எவ்வளவு தூரம் பாதிக்கப்பட்டாலும் தினசரி நடவடிக்கைகளைக்கூட மாத்திக்க மாட்டேன். அழுதுகிட்டே சாப்பிடாமலோ தூங்காமலோ இருந்ததா சரித்திரமே கிடையாது. ரொம்ப சகஜமா சுத்தியிருக்கறவங்ககிட்ட சிரிச்சு பேசிகிட்டே சமாளிச்சுகிட்டிருப்பேன்.
8. சுயமரியாதையை விட்டுக் கொடுத்து அடைய வேண்டியிருக்கும் எதையும் தூக்கிப்போட தயங்கினதேயில்லை - அது எப்பேர்ப்பட்ட விஷயமாயிருந்தாலும் சரி. ரொம்பவே மன நிறைவைத் தரும் விஷயம் இது. எங்கேயும் நான் காம்ப்ரமைஸ் செய்துகிட்டதேயில்லைன்றது ஒரு பெருமைக்குரிய விஷயம். இதுக்கு நான் எங்க அப்பா அம்மாக்குதான் நன்றி சொல்லணும். ஏன்னு கேட்டால் அவங்க தலையிட்டால் நான் எதையும் விட்டுக் கொடுத்திருப்பேன்ற நிலையிலும், அதுதான் ஒரு பெண்ணுக்குரிய இயல்புன்னு இருந்த சில விஷயங்களில் கூட நான் வளைஞ்சு கொடுக்கணும்னு அவங்க வற்புறுத்தினதேயில்லை. அவங்க கேட்டிருந்தா, இன்னிக்கு எனக்கு இருக்கற சுதந்திரம் இருந்திருக்காது. ஆனாலும் சில ரொம்ப பெரிய பிரச்சனைகளில் அவங்க அதை செய்யாம என்னை, என் சுயத்தை மதிச்சிருக்காங்க. அதுனாலயே அவங்க மீதான என் மதிப்பு எங்கேயோ போயிடுச்சு.

சரி, இப்போ நான் பெற்ற இன்பத்தை இன்னும் எட்டு பேருக்கு கொடுக்கணுமாம். இன்னும் யாரு மிச்சமிருக்காங்கன்னே தெரியலை. இருந்தாலும் ஒரு குத்து மதிப்பா போட்டு வைக்கிறேன்.

1. மகா
2. சாக்ரடீஸ்
3. பொற்கொடி
4. நந்தா
5. ஆழியூரான்
6. செல்வ நாயகி (மேடம் இன்னும் அழகு விளையாட்டையே ஆரம்பிக்கலை.. )
7. சேதுக்கரசி(இதை சாக்கிட்டாச்சும் ஒரு பதிவு போடுங்க தாயி... எவ்ளோ நாள்தான் பின்னூட்டத்துலயே வாழ்க்கைய ஓட்டுவீங்களாம்?) -
8. நொந்தகுமாரன்

Wednesday, July 18, 2007

அழ மாட்டேன் அம்மா

உச்சிவெயிலில் கூட அரையிருட்டாகவே இருக்கும் அந்த ரேழியில் எப்போதும் நிறுத்தி வைக்கும் அப்பாவின் டி.வி.எஸ் 50யையும், ஹைதர் காலத்து சைக்கிளையும் எடுத்துவிட்டு அங்கே உன்னை கிடத்தியிருந்தார்கள் அன்று. ரோஜா மாலை குவியலுக்கு இடையில் உன் வழக்கமான ஒற்றை நாணய அளவு குங்குமப்பொட்டு தெரிந்து கொண்டிருந்தது. ஏனோ அன்று எனக்கு அழுகையே வரவில்லை அம்மா.

ஒரு நாள் என்னை சினிமாவிற்கு அழைத்துப் போவதற்கு நீ அனுமதி கேட்டபோது விசிறியடிக்கப் பட்ட சில்லறைக் காசுகளை பொறுக்கியெடுத்து மேசை மீது வைத்துவிட்டு தலை குனிந்து நீ சமையலறை நோக்கி நடந்தாயே, அப்போது அழுதிருக்கலாம் நான் உனக்காக. ஆனால் அன்று தோன்றவில்லை அம்மா, பதிலாய் என்னை நீ சினிமாவிற்கு அழைத்துப் போகவில்லையென்று உன்னிடம் கோவிக்கத்தான் தெரிந்தது எனக்கு. ஒரு கையாலாகாத புன்னகையோடு என்னை சாப்பிட வைக்கவென்று நீ நாளை அழைத்துப் போகிறேன் என்ற நைந்த பல்லவியையே பாடினாய். அதற்கு மசியாமல் கொஞ்ச நேரம் உர்ரென்று உட்கார்ந்திருந்து விட்டு பின் வயிற்றின் கூப்பாட்டுக்கு மசிந்து சாப்பிட்டுத் தொலைத்தேன். உருப்படியாய் அன்று அழுதிருக்கலாம் உனக்காக.

காமிரா அறையை கூட்டிபெருக்கிவிட்டு நீ நகர்ந்த அடுத்த நொடி எண்ணெய்க் குளியலுக்காய் கழற்றி அரிசிப் பானைக்குள் வைத்திருந்த சங்கிலியில் நான்கு அங்குலம் குறைவதாய் அத்தை பிரலாபித்த போது முற்றத்தின் ஓரத்தில் நடுங்கும் கரங்களுடன் கண்ணில் நீர் வழிய அப்பாவின் வருகைக்காய் காத்திருந்தாய் நீ. வந்தவர் உன் தன்னிலை விளக்கங்களை காது கொடுத்தும் கேளாது கம்பீரமாய் தமக்கையின் கண்ணீரைத் துடைத்துவிட்டு "கவலைப் படாதே, மீனா. உன் பெண்களிருவர் திருமணத்திற்கும் தாய் மாமன் சீர் தவிரவும் இரண்டு பவுன் தனியாய் தந்து விடுகிறேன், அழாதே" என்றபோது இறுகிய முகத்துடன் தலைய கவிழ்ந்து உட்கார்ந்திருந்தாயே நெடுநேரம், அப்போது அழுதிருக்கலாம் உனக்காய் நான். தோன்றவில்லயே எனக்கு, என்ன செய்ய?

அதன் பிறகு எதன் பொருட்டும் அந்த காமிரா அறைக்குள் செல்வதில்லை என்று முடிவெடுத்து, தினமும் அந்த அறையை மட்டும் பெருக்குவதையும் துடைப்பதையும் என்னை செய்யச் சொன்னாயே, அப்போது உன் மேல் கோபம்தான் வந்தது எனக்கு - என் தலையில் உன் வேலையை கட்டுவதாய். அது உன் வரையிலான சத்தியாகிரகம் என்று புரியவெயில்லை அம்மா எனக்கு.

அந்த அறைக்குள் போவதை தவிர்க்க, தினசரி தேவைகளுக்கான பணத்தை காலையில் கேட்டு வாங்கி சமையலறையின் ஒரு சின்ன கிண்ணத்தில் போட்டு வைத்துக் கொள்ள ஆரம்பித்தாயே அப்போது அதன் பின்னாலிருக்கும் வலியெனக்கு புரியவில்லை. அதிலிருந்து கொஞ்சம் காசு கொடு, பள்ளிக்குள் நுழையும் முன் கமர்கட்டு வாங்க வேண்டுமென்று கேட்டு உன்னது இயலாமையின் விளிம்பை உணராது ஒரு கருமியென்றே மனதுள் உன்னை திட்டியவாறு பள்ளி சென்றேனே, அன்று உன் முகத்திலிருந்த வேதனை இரவு அந்த கிண்ணத்திலிருக்கும் மீதி சில்லறைக்கும் நீ சொல்லும் பால் மோர் கணக்குக்கும் சரியாய் பொருந்தி வர வேண்டுமே என்பதற்கானது என்று எனக்கு புரியவில்லையம்மா. ஒரு வேளை அன்று நான் உனக்காய் அழுதிருந்தால் சரியாகவே இருந்திருக்கும்.

அன்றெல்லாம் விட்டு விட்டு இன்று எதற்காய் நான் அழவேண்டுமாம்? மாட்டேனம்மா, மாட்டவே மாட்டேன்.

வாழ்நாள் முழுவதும் நம் குடும்பத்தினரின் நன்மைக்கு அடுத்தபடியாய் உன் வேண்டுதல் பட்டியலில் உனக்கே உனக்கானதாய் இடம் பெற்ற ஒரே வேண்டுதல் - நான் சுமங்கலியாய் போய்ச் சேர்ந்துவிட வேண்டுமென்பதுதான். இத்தனை வருட வாழ்வில் முதல் முறையாக இன்றுதான் நீ கேட்டது எந்த அவமானமுமின்றி உனக்கு முழுசாய் கிடைத்திருக்கிறது. அப்பா இல்லாமல் நீ சுமக்க வேண்டிய அவமானங்கள் அவரிடமிருந்து சுமந்ததை விடவும் அதிகமிருக்கும் என்று நீ நினைத்திருக்கலாம். சுமங்கலித்துவம் குறித்தான என் எதிர்ப்புகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு உனது இந்த வாழ்நாள் சாதனையை நானும் கொண்டாடுகிறேன் அம்மா.

உனது பெரும்பாலான பிரச்சனைகளுக்கு நான் வெறும் பார்வையாளராக மட்டுமே இருந்திருக்கிறேன். புரிந்து கொள்ளும் வயது வந்தபோதோ உன்னுடன் இருந்து உனக்காய் போராட நேரமில்லையே அம்மா, என் வாழ்வு என் வேலை என்று பிரிந்து சென்றாயிற்று. இப்போதேனும் உன்னை நான் அவமதிக்காதிருக்க வேண்டுமில்லையா?