Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Wednesday, January 14, 2009

காதல்னா சும்மா இல்லை- படம் என் பார்வையில்!







ரிலீசான முதல் நாளே படம் பார்ப்பது எனக்கு இதுதான் முதல் முறை. திடீரென இன்று காலை முடிவு செய்து கிளம்பினோம். உண்மையில் பல வாரங்களாக திண்டுக்கல் சாரதி படம் பார்க்கவேண்டுமென்று திட்டமிட்டு தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. பொங்கலுக்கு எனக்கு சீர் தருவதற்காக ஊரிலிருந்து சித்தி, சித்தப்பா வந்திருப்பதால் வீட்டில் வேலை எனக்கு குறைவாக இருந்தது (காலையிலிருந்து செய்த இரண்டே இரண்டு வேலை பொங்கல் பானையின் அருகிலிருந்து பால் பொங்கியதும் பொங்கலோ பொங்கல் என்று கூவியதும், பொங்கல் தயாரானது விளக்கேற்றியதும்தான். அதிலும் பாலா முதல் வேலையை மட்டுமே செய்தார் :)) ) எனவே சாப்பாடானதும் படத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்து சத்யத்தின் வலைப்பக்கத்துக்கு போனால் திண்டுக்கல் சாரதி இன்று அட்டவணையிலேயே இல்லை. அபியும் நானும் படத்திற்கு முதல் வரிசை இருக்கைகளாகத்தான் இருந்தது. எனவே மீதமிருக்கும் படங்களில் இந்த படத்தில் எனக்குப் பிடித்த ஹீரோயின் என்பதாலும், விளம்பரங்களில் பார்த்திருந்த ஒரு பாடல் பிடித்திருந்த காரணத்தாலும் இந்த படத்துக்கு இரு டிக்கெட்டுகளை பதிவு செய்தோம்.

அதிலும் நாங்க 10 மற்றும் 11 எண்ணுள்ள இருக்கைகளைத் தேர்ந்தெடுக்க, டிக்கெட்டில் வந்திருந்ததோ 9 மற்றும் 10 எண்கள். இரண்டு இருக்கைக்கும் நடுவில் நடைபாதை. நொந்து போய் அவர்களது தொலைபேசி எண்ணுக்கு அழைத்தால் உங்களுக்கு 8 மற்றும் 9ஆம் எண்ணுள்ள இருக்கைகள்தான் ஒதுக்கப் பட்டுள்ளன என்று தைரியம் தந்தார்கள். சரி, என்ன ஆனாலும் அங்கு போய் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்று கிளம்பிப் போனோம். பார்க்கிங்க்ற்கு வேறு ராயபுரம் மணிக்கூண்டு வரை போய் சுற்றிக் கொண்டு வரவேண்டுமென்பதில் பாலாவுக்கு ஏகக் கடுப்பு. இந்த குளறுபடிகளில் படம் ஆரம்பித்து 5-10 நிமிடம் கழித்தே உள்ளே நுழைந்தோம். தட்டுத் தடுமாறி இருக்கைகளைக் கண்டுபிடித்து அமர்வதற்குள் போதும் போதுமென்று ஆனது.





தெலுங்கில் வெளியான கம்யம் என்ற படத்தின் ரீமேக் இது. இளங்கண்ணன் இயக்கியுள்ளார்.
படம் ஏமாற்றவில்லை. சற்றே மாறுபட்ட நல்ல கதை. பாடல்களில் ஒன்றே ஒன்றுதான் தேறும். கிளைமேக்ஸை நெருங்குகையில் தேவையில்லாத சில விஷயங்களைச் சேர்த்து சற்றே இழுத்திருக்கிறார்கள் என்பது தவிர வேறு ஏதும் பெரிதான குறைகள் இல்லாத காட்சியமைப்புகள். வழக்கமாய் ஹீரோவாக நடித்து நமது பொறுமையை சோதிக்கும் ரவிகிருஷ்ணா இதில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து நம்மை காப்பாற்றியிருக்கிறார். கதாநாயகனாய் வருகையில் நம்மை மிகவும் வெறுப்பேற்றுவது அவரது குரல்தான். ஆனால் அந்தக் குரலே அவரது இந்த நகைச்சுவை அவதாரத்தில் அவரை காப்பாற்றுகிறது.

இருவேறு துருவங்களாக இருக்கும் கதாநாயகன் நாயகி. நாயகன் இரவு முழுவதும் நான்கு பார்ட்டிகளுக்குப் போய், பகல் முழுவதும் தூங்குமளவு பிஸியானவன். நாயகி அநாதையாய் வளர்ந்து, டாக்டராகி, தன்னைச் சுற்றியிருக்கும் எளிய மக்களுக்குத் முடிந்த வரை சேவை செய்யும் எண்ணத்தோடும் எல்லோரிடமும் அன்போடும் வாழ்பவள். மெல்ல மெல்ல இருவரும் நெருங்குகையில் ஏற்படும் ஒரு சச்சரவு பெரிதாகிறது. நாயகி இருக்கும் சூழலும், அவளது நோக்கங்களும் நாயகனுக்கு கேவலமாகவும், சகிக்க முடியாததாகவும் தோன்றுகிறது. இதனால் நமக்குள் ஒத்து வராது என்று சொல்லி நாயகி பிரிந்து செல்கிறாள். அவளைத் தேடி நாயகன் போகும் பயணம்தான் படமே.

அவர்களது காதலும், பிரிவும் ஃப்ளாஷ்பேக் காட்சிகளாகவே முழுவதும் வருகிறது. இடையில் பைக் திருடனான ரவி அவரோடு இணைந்து கொள்கிறார் - அவரது விலை உயர்ந்த பைக்கின் மீது ரவிக்கு கண். ஆனால் மெல்ல மெல்ல இருவரும் நண்பர்களாகிறார்கள். வழியில் எதிர்படும் பல்வேறு சம்பவங்கள் அவருக்கு மனித வாழ்வின் மற்றொரு பரிமாணத்தை புரிய வைக்கிறது. எதிர்பாராமல் நாயகன் கையிலேயே இறக்கிறார் ரவிகிருஷ்ணா. கடைசியில் நாயகியை சந்திக்கையில் முற்றிலும் மாறியவராக ஆகிறார் நாயகன். முடிவு சுபம்.

படத்தை தூக்கி நிறுத்துவது ரவி கிருஷ்ணாவின் நகைச்சுவைதான். குறிப்பாக ஆரம்பத்தில் நாயகனோடு இணைந்து கொள்வதற்காக போடும் பில்டப்புகளில் வழியில் ஆங்காங்கே சும்மாவேனும் நிறுத்தி பலருடனும் கலாய்த்துக் கொண்டு வருமிடத்திலும், பிறகு ஒரு நம்பிக்கையில் நிலவிடம் தனது பிரியத்துக்குரியவர்களிடம் சேதி சொல்லச் சொல்லிக் கொண்டிருக்கும் சர்தார்ஜியை கொஞ்சம் வெயிட் செய்யச் சொல்லிவிட்டு தான் தனது சித்தப்பாவை திட்ட வேண்டியதை சொல்லிவிட்டு பிறகு அவரை கண்டின்யூ செய்து கொள்ளச் சொல்வதுமாக கலக்கியிருக்கிறார்.

எல்லாவற்றையும் விட தேஜாஸ்ரீயின் பாடல் முடிந்த பின்னான காட்சிகளே படத்தில் எனக்கு மிகவும் பிடித்தமானதாய் இருந்தது. தேஜாஸ்ரீ கிராமத்து மேடைகளில் ஆடும் ஒரு நாட்டிய பெண் மேடை கிடைக்காத சமயங்களில் வயிற்றுப்பாட்டுக்காக அவர் செய்யும் வேலை பாலியல் தொழில். அவர் திருவிழாவில் ஆடிக் கொண்டிருக்கையில் ரவியும் அவரோடு இணைந்து ஆடிக் கொண்டிருக்கிறார். உள்ளூர் பெரிய(?!?!) மனிதர்கள் சிலர் அப்பெண்ணை இன்னமும் ஆடை குறைத்து ஆடச் சொல்ல, அவள் மறுக்கிறாள். உடனே நீ என்ன பெரிய பத்தினியா, பலரோடு படுக்கறவதானே, ஆடச் சொன்னால் அவுத்துப் போட்டுட்டு ஆட வேண்டியதுதானே என்று வழக்கமான கேள்விகள் வருகின்றன. அவள் நான் பலரோடு படுப்பவள்தான் என்றாலும் ஆடையின்றி மேடையில் ஆட நான் மிருகமல்ல என்கிறாள். வலுக்கட்டாயமாகத் துயிலுரிக்கத் தயாராகும் ஆட்களை ரவியும், பின்னால் ஹீரோவும் அடித்து விரட்டுகிறார்கள். ஒரு பாலியல் தொழிலாளியே ஆனாலும் அவளை வலுக்கட்டாயமாக ஆடையுரிக்கவோ அனுபவிக்கவோ யாருக்கும் எந்த உரிமையும் இல்லை என்பதை உரத்துச் சொல்ல முன்வந்த இயக்குனரை எப்படி பாராட்டுவது என்றே தெரியவில்லை.

பொதுவாகவே நம் சமூகத்தில் ஒரு மனோபாவம் - நடத்தை சரியில்லாதவள் என்று ஆகிவிட்டாலே அவளை யாரும் எப்படியும் பயன்படுத்திக் கொள்ளலாம், அதெல்லாம் அவளுக்கு வேண்டிய தண்டனைதான் என்பதான சிந்தனை நமக்குள் ஊறிப்போயிருக்கிறது. ஆடை குறைப்பதோ, குறைக்க மறுப்பதோ அது ஒரு தனி மனிதனின் உரிமை என்பதையும், அதில் தலையிட யாருக்கும் உரிமையில்லை என்பதையும் இன்னமும் நாம் நிறைய பேருக்கு புரிய வைக்க வேண்டியதிருக்கிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு சில நல்ல காட்சியமைப்புகள் ரொம்பவே நம்பிக்கையைத் தருகின்றன.

படத்தில் இன்னமும் கொஞ்சம் நல்ல பாடல்கள் இருந்திருக்கலாம்... பழைய வாசனை அடிக்கிறது. தலைப்பும் இன்னமும் சற்று பொருத்தமானதாகவும், அழகாகவும் தேர்ந்தெடுத்திருக்கலாம். நீண்ட நாட்கள் கழித்து குடும்பத்துடன் ரசிக்க படியான அருமையான படம் பார்த்த திருப்தி எனக்கு.

Friday, December 28, 2007

வீணா தணிகாச்சலம் ... இல்ல இல்ல.. லீனா மணிமேகலையின் தேவதை

மன்னிக்கணும் மக்களே, ரொம்ப நீளமான தலைப்புக்கு.. இது ஒரு சுட்ட பதிவு - ஊதிட்டு படிக்கணுமானெல்லாம் கேக்காதீங்க மக்கா... தோழி.காம் ல வெளியான ஒரு கட்டுரைய இங்கன நகலெடுத்து ஒட்டியிருக்கேன்(காப்பி + பேஸ்ட் :) ) இதுக்கு அவங்க கொடுத்திருக்கற தலைப்பென்னவோ - விதிவிலக்குகள்: முன்மாதிரிகள்: அப்படின்றதுதான். ஆனா அப்படி தலைப்பு வச்சா நம்ம வலையுலக மகாஜனங்களுக்கு பதிவோட உள்ளடக்கம் என்னான்னு தெரியாததால உள்ள எட்டிப் பாக்க சுவாரசியம் வராதே, அதான் ஊரோடு ஒத்து இப்படி ஒரு நச் தலைப்பு...

லீனா மணிமேலையின் தேவதை ஆவணப் படத்தில் இடம்பெற்ற மூன்று பெண்கள் சற்றே வியப்பையும் ஆச்சரியத்தையும் சில கணங்களில் வருத்தத்தையும் தரும் பெண்களாக எனக்குத் தெரிந்தார்கள்.

பெண் இருத்தல் குறித்த தனது கவனத்தைத் தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவுசெய்துவரும் லீனாவின் இந்தப் படமும் பெண்களைக் குறிப்பாக நம்மிடையே விதிவிலக்குகளாக வாழ்ந்து வரும் பெண்களைப் பற்றியது தான்.

பெண்களுக்கென சமூகம் சில வரையறைகளை வைத்திருக்கின்றது. குடும்பமும் சமூகமும் பெண்ணின் இயங்கு வெளியை எப்பொழுதும் ஒரு எல்லைக்குள்ளாகவே தீர்மானித்திருக்கின்றன. ஆணும் பெண்ணும் சமமாகப் பணிபுரியும் நிலைக்கு இன்று வந்திருந்தாலுங் கூட பெண் இதையெல்லாம் செய்யவே கூடாது என்றும் சில இருக்கின்றன.

வீட்டிற்கு வெளியே செய்யப்படும் பணிகளில் மட்டுமல்ல இந்தப் பாகுபாடு. வீட்டிற்குள்ளும் ஆணுக்கெனச் சில பணிகளும் பெண்ணுக்கெனச் சில பணிகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. சமையல், வீட்டு வேலைகள், குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாத்தல் என்பன போன்ற பணிகள் பெண்ணுக்கே உரியவையாகவும் வெளியே செல்லுதல், நிர்வகித்தல், முக்கிய முடிவுகளை எடுத்தல் போன்றவை ஆணுக்குரியவையாகவும் இன்றும் தொடர்கின்றன.

ஆண்பிள்ளை தான் பெற்றோருக்குக் கொள்ளி வைக்க வேண்டும். ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது உறவுக்காரர் வைப்பாரே தவிர இறந்தவரின் மகளைக் கொள்ளி வைக்க அனுமதிப்பதில்லை இந்தச் சமூகம்.

இந்தச் சூழலில் ஒரு பெண் சடலங்களைப் புதைப்பதைத் தனது வேலையாகக் கொண்டிருந்தால் அவர் வியக்க வைக்கும் மனுஷி தானே! இன்னொருவர் கால்களில் சலங்கை கட்டிக் கட்டிக் கொண்டு இறப்பு வீடுகளுக்கு ஒப்பாகி பாடச் செல்பவர். இதற்கென ஒரு குழுவோடு ஊர் ஊராகச் சென்று ஒப்பாரி வைத்து வரும் வருமானத்தை எல்லோருடனும் பகிர்ந்து வாழ்பவர்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மற்றொரு பெண் கடலைத் தங்கள் தாய்வீடாக நினைத்து வருபவர். இந்த மூவரும் தான் லீனாவின் தேவதைகள்.இவர்களெல்லாம் விதிவிலக்குகளாக வாழ வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு இந்தத் தொழில்களுக்கு வந்தவர்களா? இல்லை வாழ்க்கையின் போராட்டமும் இவர்கள் சந்தித்த அனுபவங்களும் இவர்களை இப்படி ஆக்கியிருக்கின்றன. சுடுகாட்டில் பிணங்களைப் புதைப்பதும் பிணங்களுக்கு முன்னே ஒப்பாரி பாடுவதும் எந்தநேரமும் இயற்கையின் சீற்றத்தைக் கொண்டு வரும் கடலில் இறங்குவதும் எளிதான காரியமா? ஆனால் இவர்களது வாழ்க்கை இப்படித்தான். இந்தப் படத்தில் பிறரோடு இவர்களின் அன்பும் அக்கறையும் வெளிப்படும் விதமும் அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த மூன்று பெண்களையும் ஆவணப்படுத்தியது இவர்களின் மீதான அனுதாபத்தை உண்டாக்கும் பொருட்டல்ல. இப்படியும் இவர்களால் வாழ முடிந்திருக்கிறது என்பதைக் காட்டத்தான். துயரங்களோடு நகர்ந்தாலும் இவர்கள் வாழும் விதம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

சுடுகாட்டிலேய கடைசி வரையிருந்து அங்கேயே மூச்சை விட வேண்டுமென்று நினைக்கும் ஒரு பெண். (கிருஷ்ணவேணி)

பெண் கடலில் இறங்குவது தீட்டு என்றும் சாமி குத்தமென்றும் சொல்லப்பட்டதைப் பொருட்படுத்தாது மீன்களையும் சங்குகளையும் சிப்பிகளையும் தேடி எடுத்துத் தொழில்செய்து கடலைத் தன் தாய்மடியாகக் கருதும் பெண். (சேது ராக்கு)

பிணங்களின் முன் ஒப்பாரி பாடிக் கிடைக்கும் பணத்தைச் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அங்கிருக்கும் குரங்குகளுக்கும் தாராளமாகச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழும் பெண். (லட்சுமி)

செய்யக் கூடாதவை என்றும் ஆண்கள் மட்டுமே செய்யும் தொழில்கள் என்றும் சொல்லப்பட்ட இந்தக் காரியங்களைச் செய்யும் இம்மூன்று பெண்களைத் தேடிச் சென்று ஆவணப்படுத்தியிருக்கியது இந்தப் பதிவு.

மரபுகளையும் மூட நம்பிக்கைகளையும் கடந்து புதிய பாதையில் பயணிக்கும் இவர்களது வாழ்க்கையினை நம்முன் கொண்டு வந்த லீனாவிற்குப் பாராட்டுக்களைச் சொல்லலாம்
தேவதைகள்

திரைக்கதை இயக்கம் : லீனா மணிமேகலை
தயாரிப்பாளர் : ஜெரால்டு
படத்தொகுப்பு : தங்கராஜ்
ஒலி அமைப்பு : சந்தான நம்பி
நேரம் : 42 நிமிடங்கள்

நன்றி: தோழி.காம்

Monday, October 22, 2007

நீ எல்லாம் ஒரு பொம்பளையா?

அல்லது நீ எல்லாம் ஒரு ஆம்பளையா போன்ற கேள்விகளை நாம் வாழும் சமூகத்தில் பல முறை பல சந்தர்ப்பங்களில் கேட்க நேர்ந்திருக்கலாம். ஆனால் இரண்டு கேள்விகளும் எழும் விதத்தை கூர்ந்து பார்த்தால் ஒரு பெரிய வித்தியாசம் தெரியும் - நீ எல்லாம் ஒரு ஆம்பளையா? இதுக்கு பதில் நீ புடவை கட்டிக்கலாம்/வளையல் போட்டுக்கலாம் போன்ற வாசகங்கள் பெரும்பாலும் (பெரும்பாலும் என்ன எப்போதுமே) ஒரு ஆணின் செயல் குறித்த விமர்சனமாய்த்தான் அமையும். இதைக் கூட தூக்க முடியல/இவனைக்கூட அடிக்க முடியல/இவ்வளவு கூட சம்பாதிக்க முடியல போன்ற குறைபாடுகளுக்கு பதிலாகத்தான் மேற்ச்சொன்ன அந்தக் கேள்வி - அவரது பாலியல் தன்மையைக் சந்தேகிக்கும் கேள்வி முளைக்கும். அதே பெண்ணுக்கு இவ்வகைக் கேள்வி வருவது செயலுக்கான எதிர்வினையாகவும் சமயங்களில் இருக்கும்தான். ஆனால் பெரும்பாலும் இக்கேள்வி ஒரு பெண்ணுக்கெதிராய் எழுவது அவளது புறத்தோற்றத்தைக் குறித்துதான். தோற்றத்தை வைத்தே ஒரு பெண் ஒழுக்கமான பெண்ணா இல்லையா என்பதிலிருந்து சகலத்தையும் முடிவு செய்து விடுவார்கள் சில அதிமேதாவிகள். வலையுலகில் கூட சமீபத்தில் இப்படியான கருத்தை ஒருவர் வாந்தி எடுத்திருந்தார்.

சமீபத்தில் 'மிருகம்' என்கிற படத்தின் படப்பிடிப்பின் போது நடிகை பத்மப்ரியாவை கை நீட்டி அடித்ததாகவும் செக்ஸ் டார்ச்சர் செய்ததாகவும் டைரக்டர் சாமி மீது புகார் எழுந்தது. அவருக்கு அபராதமும் இப்படத்தைத் தவிர்த்து வேறு படங்கள் எடுப்பதற்கு ஒரு குறிப்பிட்ட காலம் வரை தடையும் விதிப்பதாகத் தீர்மானிக்கப் பட்டிருக்கிறது. சரியாக நடிக்காததற்காக ஒரு நடிகரை அடிக்கும் உரிமை ஒரு இயக்குனருக்கு இருக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி நடிகர்களுக்கே தெளிவான, ஒற்றுமையான கருத்தில்லை. ஒரு பாரதிராஜாவோ பாலச்சந்தரோ அடிப்பதைப் பெருமையாகக் கருதும் இவர்களே ஒரு புது இயக்குனர் அதைச் செய்யும் போது பொங்கியெழுகிறார்கள். யார் அடித்தாலும் யாரை அடித்தாலும் அது மனிதத் தன்மையற்ற செயல்தான் என்பதை இவர்களால் அழுத்திச் சொல்ல முடியவில்லை - அப்படிப் பார்த்தால் சரியாக வேலை செய்யாத யாரையும் வேலை வாங்கும் நிலையிலிருக்கும் ஒருவர் அடித்து விடலாமா என்று கேட்டால் உடனே ஒரு சப்பைக் கட்டு வரும் - அவங்க எல்லாம் கலைஞர்கள். அவங்க உணர்ச்சி வசப்படத்தான் செய்வார்கள்னு. இது போன்ற சப்பைக்கட்டுகளைக் கேட்கும்போதே பற்றிக்கொண்டு வருகிறதென்றாலும் இதைப் பற்றித் வேறு இடத்தில் பேசலாம். இப்போது சொல்ல வந்தது அவர் அந்த பாலியல் ரீதியிலான தொந்தரவு குறித்த புகாருக்கு அவர் கொடுத்திருக்கும் விளக்கங்களைப் பற்றி.


"நான் செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததாகச் சொல்கிறார்களே... மொத்தம் அறுபது நாள் ஷூட்டிங் நடந்துச்சு. ஐம்பத் தொன்பது நாள் சும்மா இருந்த நான், கடைசி நாள் மட்டுமா டார்ச்சர் கொடுத்திருப்பேன்..? உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்த்தால் எனக்கு செக்ஸுவல் ஃபீலிங் வரவேயில்லை. அவர் தாடையிலும் மேலுதட்டிலும் ரோமங்கள் இருப்பதை ஒருநாள் கேமரா க்ளோசப் ஷாட்டில் பார்த்துவிட்டு, ‘போய் ஷேவ் பண்ணிட்டு வா’ என்று சொன்னேன். அதற்கு, ‘நான் ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரத்திலேயே நடிச்சவ’ என்று எகத்தாளமாகப் பதில் சொன்னார். நான் மட்டும் அவருக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுத்ததா ‘மிருகம்’ பட யூனிட்டில் உள்ள ஒருத்தரோ, குறண்டை கிராமத்தைச் சேர்ந்த ஒருத்தரோ சொல்லட்டும்... நான் சினிமாவை விட்டே ஓடிப் போயிடறேன். இல்லேன்னு மறுத்தா, பத்மப்ரியா சினிமாவை விட்டுப் போவாரா?

பொதுவாக, நல்ல நடத்தை உள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள். உண்மையாகப் பார்த்தால் பத்மப்ரியாவுக்கு ஆண் நண்பர்கள் அதிகம். மதுரை லேக் வியூ ஹோட்டலில் ரூம் போட்டிருந்தபோதுகூட, சமீபத்தில் ரிலீஸ் ஆன படத்தில் அவருடன் நடித்த ஒரு நடிகர் வந்து தங்கிவிட்டுப் போனார். அதற்கு நான் ஏதாவது சொன்னேனா?" என்று காட்டம் காட்டுகிறார் சாமி.
இது விகடனில் அவர் தந்திருக்கும் மறுப்புச் செய்தி.

இவரது கூற்றில் இரண்டு விஷயங்கள் கவனிக்கப் படவேண்டியவை. ஒன்று அவர் பாலியல் ரீதியாக என்னைக் கவரவில்லை - எனவே நான் எப்படி அவரிடம் அத்து மீறியிருப்பேன் என்கிற கேள்வி. அடுத்தது நல்ல நடத்தை உள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேச மாட்டார்கள் என்கிற அனுமானம், அதை வலுப்படுத்த ஒரு சில காரணங்களையும் சொல்லுகிறார். இரண்டுமே வன்மையாகக் கண்டிக்கப் படவேண்டிய விஷயங்கள். ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாக குற்றம் சாட்டினால் - நான் அப்படிச் செய்யவில்லை என்று சொல்லலாம். அதற்கு சாட்சியங்களை குறிப்பிடலாம். நான் அப்படியானவன் இல்லை என்று சொல்லலாம். இதையெல்லாம் விட்டுவிட்டு அவளொன்றும் அழகில்லை, என் பார்வையில் பெண்ணாகவே தோன்றவில்லை அதனால் நான் எப்படி அவளிடம் அப்படி நடந்து கொண்டிருக்க முடியும் என்கிற கேள்வி தன் நடத்தைக்கும் சேர்த்து பெண்ணையே பொறுப்பாளி ஆக்கும் வழக்கமான ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடு. அப்படியானால் அப்பெண் அழகானவளாய் இருந்திருதால், இவரது வரையரைகளுக்குட்பட்ட பெண்ணாயிருந்திருந்தால் அப்போது இவர் அத்துமீறியிருந்திருப்பார் இல்லையா? அப்போதும் அப்பெண் அழகாயிருந்தது அவள் தவறுதான் என்றே பதில் சொல்லியிருந்திருப்பார் அல்லது அவள் தன் அழகை வெளிப்படுத்தும் விதமாக என்னைத் தூண்டும் வண்ணம் உடையணிந்தார் என்று சொல்லிவிட்டுப் போயிருந்திருப்பார் இல்லையா?

அடுத்தது நல்ல நடத்தையுள்ள பெண்கள் இப்படியெல்லாம் பேசமாட்டார்கள் என்று சொல்வது - என்ன பொருள் இதற்கு? நல்ல நடத்தையுள்ளவளிடம் எந்த ஆணும் தவறாக நடக்கத் துணிய மாட்டான் என்பதா? அப்படியானால் பலாத்காரத்திற்கு உள்ளான எல்லாப் பெண்களும் தவறான நடத்தை உள்ளவர்களா? அல்லது நல்ல நடத்தை உள்ள பெண் இப்படியெல்லாம் தனக்கு நடந்ததை ஊரைக் கூட்டிச் சொல்ல மாட்டாள் என்று சொல்ல வருகிறாரா? அடடடடா..... என்ன ஒரு அருமையான இலக்கணம்.. அற்புதம்.... அபாரம்.... இது வந்து அறிவுள்ளவர்களின் கண்ணுக்கு மட்டுமே தெரியும் ஆடை ஒன்றை அணிந்து நகர்வலம் போன மன்னனின் கதையை நினைவு படுத்துகிறது. இப்படிச் சொல்லிவிட்டாள் எந்தப் பெண் தனக்கு நடக்கும் கொடுமையைப் பற்றி வாயைத் திறப்பாள்? சொன்னால் தன்னை நடத்தை கெட்டவள் என்று சமூகம் சொல்லிவிடுமே என்கிற பயம் வந்துவிடுமில்லையா? அப்புறம் சர்வசுதந்திரர்களாய் யாரும் யாரையும் பாய்ந்து குதறலாமில்லையா?

இந்த இரு கருத்துக்களையும் சொல்லும் முதல் ஆள் இல்லை இந்த சாமி. ஏற்கனவே இச்சமூகத்தில் புரையோடிப் போன கருத்துக்கள்தான் இவையிரண்டும். ஆனாலும் ஒரு பொது ஊடகத்தில் ஒரு மனிதர் இப்படி ஒரு நச்சுக் கருத்தை கொட்டும் போது அதை எதிர்த்துப் பேச யாருமே இல்லையா? இல்லை யார் கண்ணிலும் இச்செய்தி படவேயில்லையா? எங்கே போனார்கள் நம் திரையுலகப் பெண்ணுரிமைப் புலிகள் எல்லோரும்? எல்லோரும் பாவம் அவரவர் பங்குபெறும் சின்னத்திரை நிகழ்ச்சிகளுக்கான படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்கள் போலிருக்கிறது...

Thursday, July 12, 2007

மங்களம்

இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவு. அதுதான் இந்த தலைப்புக்கு காரணம்.

மோகன் தனது கடைசி பதிவில் ஏதோ தனக்கு வலுச்சண்டைக்கு விருப்பமில்லாதது போலவும் தன் மீதான தனிநபர் தாக்குதலுக்கு பிறகும் தான் சமாதானத்தையே நாடும் ஒரு சாத்வீகப் பிறவியாகவும் தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறார். அருமையான முயற்சி. நல்ல பலனும் இருந்ததாக தெரிகிறது. நான் வரிகளுக்கு இடையிலிருந்து எடுத்து வீசுவதாக அவர் மீதான குற்றசாட்டுகளை சொல்கிறார். ஆனால் அவரது பதிவில் இருக்கும் எனக்கான எள்ளல்கள் பல என்னுடைய தனி வாழ்க்கை தொடர்புடையன. அவற்றை பற்றியெல்லாம் நானும் கூட எங்கும் போய் அழுவதாயில்லை. :) எனவே நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

நான் கதாநாயகிகளை கொஞ்சமே கொஞ்சம் அறிவுடன் காட்டுங்களேன் என்று சொன்னதற்கு இல்லையில்லை நான் உட்பட பலபேருக்கு இன்ன இன்ன தகுதிகளுடைய பெண்களைத்தான் பிடிக்கும். எனவே சமூக வழக்கத்திற்குட்பட்டுத்தான் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னவர் நீங்கள் - அந்த தகுதிகளை ஒரு முட்டாள் அல்லது அறிவிற் குறைந்தவரோடு ஒப்பிட்டது நீங்களேயொழிய நான் என் பதிவில் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.

//ஒருவரது படிப்பு தகுதிகளும்(பட்டப்படிப்பு) அவரது ஆர்வமும் (சமையல் அல்லது தையல்) ஒருவரது அறிவுத்திறனை முடிவு செய்வதில்லை. என் கருத்துக்கள் பெண்ணை பெரிய படிப்பாளியாக காட்டவேண்டுமென்பதில்லை//

இதற்கு பிறகும் நீங்கள்

// நீங்கள் சார்த்தரையும் நீட்ஷேவையும் தெரியாத பெண்களை முட்டாள்கள் என்று எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பில்லை//

என்பதாக சாமர்த்தியமாய் பழியை என்மீது தூக்கி போட முயற்சிக்கிறீர்கள். நீங்கள் என்னதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்த்தாலும் அதை படிப்பவர்கள் நம்பிவிட மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். எனவே இதற்கு மேல் இவ்விஷயத்தில் நான் அதிகம் நோண்ட விரும்பவில்லை.

//உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம்.//

இந்த வரிகள் உங்களை புண்படுத்தியிருக்குமானால மன்னிக்கவும். அதை இப்படி மாற்றிக் கொள்ளலாம் - நீங்கள் எந்த அளவு தகுதிகளுடைய துணை வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதே அளவுதான் உங்களுக்கும் தகுதியிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். நேர்மறை விகிதாச்சாரமென்பார்களே - directly proportional, அதுபோல. இதுதான் அங்கே நான் சொல்ல வந்தது.

கடைசியாக ஒரேஒரு விஷயத்தை மட்டும் இங்கே தெளிவு படுத்தி விடுகிறேன். பத்மாவதி தாயாரின் தாலி கழண்டு விழுந்ததற்காய் பரிகாரம் செய்தவர்கள் முட்டாளா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம். என்வரையில் சந்தேகத்திற்கிடமின்றி அது முட்டாள் தனம்தான். ஆனால் ஒரே ஒரு விஷயம் - அப்படி நம்புவது யாரென்பதை பொறுத்து நான் அந்த விமர்சனத்தை வெளியிடுவதும் அடக்கிக்கொள்வதும் இருக்கும். என் வீட்டிலேயே எடுத்துக் கொண்டால் என் அம்மா அதையே செய்தால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். ஏன் சொல்லப்போனால் பூஜைக்கு ஏதேனும் தேவையா என்று கேட்டு வாங்கி வந்துகூட கொடுப்பேன். எனக்கும் கொஞ்சம் குங்குமம் கொடுத்தால் அதையும் வாங்கி நெற்றியில் இட்டும் கொள்வேன். ஆனால் அதையே என் தங்கை செய்தால், என்னம்மா இது இப்படி கூட உன்னால் எப்படி யோசிக்க முடிகிறது என்று கேட்டு முடிந்த வரை அவளுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன். இந்த இரு அணுகுமுறைகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கான காரணம் உங்களுக்கு புரியவில்லையென்றால் அதற்கு மேல் உங்களிடம் பேசுவதே பொருளற்றது. முந்தைய தலைமுறையில் பெண்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அவர்களது நம்பிக்கையை அங்கே நிறுத்தியிருக்கிறது. ஆனால் இன்றும் விஞ்ஞான முன்னேற்றத்தையும் என் படிப்பையும் நான் வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் மட்டுமே பயன் படுத்திக்கொள்வேன். அதைத்தாண்டி என் அறிவை நான் உபயோகிக்க மாட்டேன் என்று ஒருவர் சொன்னால் அது நிச்சயம் முட்டாள்த் தனம்தான்.

அடுத்தது நம்பிக்கைகளுக்குள்ளேயே நிறைய படிநிலைகள் உண்டு. அதாவது கடவுள் என்று ஒரு சக்தியிருப்பதை மட்டும் நம்புவது ஒரு வகை. தெருமுனையிலிருக்கும் சித்தி விநாயகரை விட மலைக்கோட்டைப் பிள்ளையார் சக்தி மிக்கவர் என்று சொல்வது இன்னொரு வகை. முன்னது உணர்வு பூர்வமான நம்பிக்கை. பின்னது மூட நம்பிக்கை. இரண்டுக்குமான வேறுபாடு உங்களுக்கு புரியவில்லையென்றால் என் வாதம் உங்களுக்கு புரியாது போவதில் ஆச்சரியமொன்றுமில்லை. இன்னொரு உதாரணம் - உங்க தலைவர் படங்களிலிருந்தே சொல்கிறேனே. ராகவேந்திராவும் பக்தி படம்தான். பாபாவும் பக்தி படம்தான். முன்னது நன்றாகவே ஒடியது. பின்னது தோல்வியை தழுவியது. இத்தனைக்கும் ராகவேந்திரா அவரது 100வது படம் - அப்போது அவர் இளைஞர், ஆக் ஷன் ஹீரோவாக புகழடைந்திருந்தவர். படம் ஆரம்பித்தபோது நிறைய பேர் அவருக்கு இது விபரீத முயற்சியென்று அறிவுரை சொல்லவும் செய்தார்கள். மீறி அவர் அந்த படம் செய்தார். வெளிவந்து படம் நன்றாகவே ஒடியது. ஆனால் பாபா ஏன் ஒடவில்லை என்று யோசித்துப் பாருங்கள். பிறகு உங்களுக்கு வருடாவருடம் கேதார கௌரி விரதமிருப்பவர்களுக்கும் திருப்பதி தாயாரின் தாலி கீழே விழுந்ததற்காய் பரிகாரம் செய்பவர்களுக்கும் என்ன வித்தியாசமென்று புரியும். அது புரிந்தால்தான் நான் ஏன் சிவாஜியின் கதாநாயகியை முட்டாளென்று சொன்னேனென்பதும் புரிந்துவிடும்... ஹ்ம்ம்.. ஆனால் மோகனா நீங்கள் தூங்குவது போல் நடிப்பவரென்பதால் அதையெல்லாம் நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.

சரி, சில விஷயங்களில் புலம்புவதை ஒரு அளவோடு நிறுத்திகொள்ள வேண்டும். புலம்பாமலே இதுதான் யதார்த்தமென்று புரிந்துணர்ந்து புன்னகையோடு நிஷ்காம்ய கர்மமாக பதிவெழுதும் மக்கள் புண்ணியாத்மாக்கள். நானும் மெல்ல அந்த நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். அவ்ளோதான் சொல்ல முடியும் இப்போதைக்கு.

பி. கு: பின்னூட்டப் பெட்டி காரணமாகவே மூடப்படுகிறது. ஆதரவு எல்லாம் மனதிலிருந்தாலே போதும்பா.

Monday, July 09, 2007

தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண்

முன்கதைச் சுருக்கம்

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்

ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்

பின்கதை விளக்கம்

பாடல்களும் கதாநாயகிகளும் தேவையா என்பதை கதையின் போக்கும் அதை நகர்த்துகிறவர்களும் முடிவு செய்ய வேண்டிய விஷயமே தவிர நாம் முடிவு செய்ய வேண்டிய விஷயமன்று. அவர்கள் தேவையென்று எண்ணி வைத்து அது உண்மையில் கதைபோக்குக்கு எந்தவிதத்திலும் தேவையற்றதாக தெரிந்தால் அதை படம் பார்க்கும் நாம் நம்மிஷ்டத்துக்கு விமர்சிக்கலாம் - சுஜாதா போல் பத்தி எழுதும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பார்த்ததில் ஜீரணமாகாதது என்ற தலைப்பிலும் நம் போன்றவர்கள் நமது வலைப்பதிவில் அவைகளும் இவைகளும் என்ற தலைப்பிலும். எனது முந்தைய பதிவில் நான் சொல்ல வந்தததும் அத்தகைய ஒரு விமர்சனமே - இது வரை வந்த படங்களில் பெரும்பாலானவை ஆறாம் விரல் போல் தேவையற்ற ஒரு இணைப்பாகவே கதாநாயகிகளை உபயோகித்து வருகின்றன. எனவே அப்படியான ஒரு பயன்பாடு மறைய வேண்டும் என்பதுதான் என் ஆவல். விஜயசாந்தியின் படங்கள் தொடர்ந்து நாலைந்து பார்த்தால் என்ன சொல்லத்தோன்றும்? அதில் வரும் ராம்கி அல்லது வெங்கடேஷ் கதாபாத்திரங்கள் எல்லாம் இல்லாது அத்தகைய படங்கள் வரவே முடியாதா என்ன? உண்மையில் சொல்லப்போனால் அத்தகைய படங்களில் மகளிர் மட்டும் படத்தில் செய்தது போல க்ளைமாக்சில் மட்டும் யாரையேனும் ஜோடியாக காண்பித்தோ இல்லை கணவர்/காதலர் வெளிநாட்டிலிருப்பதாக காண்பித்தோ அழகாய் கதையை நகர்த்திக் கொண்டு போய் விடலாமில்லையா, அது போலவே லீ போன்ற படங்களில் கதாநாயகிகளின்றி அழகாய் கதை சொல்லலாம். அதற்காக அலைபாயுதேவிலும் ஷாலினி இல்லாமலே இல்லற வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்ல வேண்டுமென்றால் பாவம் மணிரத்னம் என்னய்யா செய்வார்? கொஞ்சம் கதாசிரியப் பெருந்தகைகளின் மேலும் கருணை காட்டுங்கள் மோகனா. சரி, இது இந்த கட்டுரையின் பேசு பொருளில்லையென்பதால் இதை இத்தோடு விட்டு விட்டு நமது முக்கிய விவாதத்துக்குப் போவோம்.

சரி, நீங்கள் பட்டப்படிப்பு மட்டுமே முடித்து வீட்டிலிருந்து சமையலும் தையலும் கற்றுத் தேர்ந்த ஒரு தமிழ்க் கலாச்சாரப்படியான பெண்ணைத்தான் மணப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்(என் நண்பனொருவன் பட்டப்படிப்பிலும் அவள் கண்டிப்பாக ஹோம் சையன்ஸ்தான் படித்திருக்க வேண்டுமென்று சொல்லுவான். அப்போதுதான் அவளால் பெரிதாக வேலைக்கு எதுவும் போகிறேன் என்று சொல்லிவிட முடியாதாம். வீட்டிலிருந்து குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ளுவாளாம். அதே சமயம் 5ஆம் வகுப்பு வரையிலாவது குழந்தையின் படிப்புத் தேவைகளையும் பார்த்துக் கொள்ளுவாளாம். நீங்களும் கூட இந்த உப பிரிவை உங்களது நிபந்தனையில் சேர்த்துக்கொள்வதை பற்றி யோசிக்கலாம்.) ஒருவரது படிப்பு தகுதிகளும்(பட்டப்படிப்பு) அவரது ஆர்வமும் (சமையல் அல்லது தையல்) ஒருவரது அறிவுத்திறனை முடிவு செய்வதில்லை. என் கருத்துக்கள் பெண்ணை பெரிய படிப்பாளியாக காட்டவேண்டுமென்பதில்லை. அவளை புரிந்துகொள்ளும் திறனற்றவளாகவே தொடர்ந்து காண்பிக்காதீர்கள் என்பதுதான் என் கருத்து.

படத்திலுமே கூட அந்தப் பெண்ணை பி.ஏ தமிழ் இலக்கியம் படித்து விட்டு இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு பெண்ணாகத்தான் காட்டுகிறார்கள். நான் அதைப் பற்றி எங்கும் குறைகூறவில்லை. அவளையும் ஒரு மென்பொருள் நிபுணராக இவர் அமெரிக்காவிலிருந்து வந்தால் அந்தப் பெண்ணையும் குறைந்தது அருகிலிருக்கும் சிங்கப்பூரிலிருந்து வந்தவராகத் தான் காட்ட வேண்டுமென்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஒருவரது ஆர்வம் இசையிலிருக்கலாம். தையலிலிருக்கலாம். சமையலும் நல்ல குழந்தை வளர்ப்பும்தான் என் லட்சியம் என்று சொல்லும் பெண்களையும் நானறிவேன். ஆனால் நிச்சயம் அவர்களெல்லாம் முட்டாள்களல்ல. அறிவுத் திறன் குறையுடையோருமல்ல. அறிவுடனிருப்பது அல்லது இல்லாமலிருப்பது இரு பாலினத்தவருக்கும் பொதுவானது. ஆனால் ஏதோ கதாநாயகிகள் எல்லோரும் வெறும் அழகுப் பதுமைகளாகவும் அறிவற்ற மடையர்களாகவும் இருப்பதாகவும் ஆண்கள் எல்லோரும் அவர்களை உய்விக்கவே பிறந்து வந்தவர்களென்றும் தொடர்ந்து கதை சொல்லப்பட்டு வருவதே என் எரிச்சலுக்கு காரணம்.(சில விதிவிலக்குகளும் உண்டு - பாலச்சந்தர் படத்து கதாநாயகிகளா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள் அய்யனார், ப்ளீஸ். விதிவிலக்குகள் பற்றி நான் தனி பதிவு போடுகிறேன். அப்போது சொல்கிறேன் என் பார்வையில் யாரெல்லாம் கொஞ்சமேனும் வித்தியாசமாய் தெரிகிறார்கள் என்று) அதிலும் கதாநாயகன் சூப்பர் மேனாக வரும் போது அவனுக்கு மனைவியாகவோ இல்லை துணைவியாகவோ வருபவள் அவனுக்கு இணையாக அவனைப்போலவே சூப்பர் வுமெனாக இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. சாதாரண அளவிலாவது அறிவுத்திறனுடையவளாக இருத்தல் வேண்டுமல்லவா? அதை நான் சொன்னால் உங்களுக்கெல்லாம் ஏன் எரிகிறது?
//சர்ரியலிஸம் பேசிக்கொண்டு சார்த்தரையும், பெட்ரிக் நீட்ஷேவையும் துணைக்கிழுக்கும் ஒரு அறிவுஜீவி பெண்ணை //
இதெல்லாம் என் பதிவில் எங்கே இருக்கிறது? கொஞ்சமே கொஞ்சம் அறிவும் உள்ளவர்களாக கதாநாயகிகளை காட்டச் சொன்னதற்கு இத்தனை எரிச்சலா? அடேங்கப்பா...

"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். நட்புற்றிருக்கவே ஒத்த அறிவுத்தகுதி வேண்டுமெனில் திருமணத்திற்கு வேண்டாமா?உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம். என் வார்த்தைகளின் கடுமைக்கு மன்னிக்கவும். நட்பின் பொருட்டு கூட உண்மையை சொல்லாது விடுதல் எனக்கு வழக்கமில்லை. எனவே ஒரு சமூகம் பெண்களனைவரையும் முட்டாளாக்கினால் அந்த ஒட்டு மொத்த சமுதாய நலனும் அழியும். மேலும் முட்டாள் பெண்ணுடன் வாழ்வது அறிவு ஜீவி ஆண்களுக்கே ஒரு பெருத்த சாபமாகிப் போகும்.

இதை நானும் பர்சன்டேஜ் அடிப்படையில் சொல்கிறேனாக்கும் என்று உங்கள் பாணியில் ஜல்லியடித்து விடலாம்தான். ஆனால் என் விவாத முறை அப்படியல்ல. உங்களுக்கு சில வரலாற்று உண்மைகளை சுட்டுகிறேன். உங்களுக்கு ஆணோடு ஆண் கொள்ளும் ஓரினச் சேர்க்கை ஏன் கிரீக் லவ் என்று அழைக்கப் படுகிறது என்று தெரியுமா? கிரேக்கத்தில் ஒரு கால கட்டத்தில் ஒரு புறத்தில் பெண்களை அடிமையாகவே என்றென்றும் வைத்திருத்தலின் பொருட்டு அவர்களை கல்வி பெறாமலும் எந்த வகையான அறிவுத்திறனும் பெற்றுவிடாமலும் கவனமாக பார்த்துக் கொண்டார்கள். பெண்களுக்கே தொடர்ச்சியான மூளைச்சலவை மூலமாக எந்த விதத்திலும் அறிவுத் திறனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணத்தை தெளிவாக உருவாக்கினார்கள். உலகின் எல்லா பாகங்களிலும் இது நடந்ததுதான் என்றாலும் கூட கீரீசில் அளவுக்கதிகமாக நடந்தது. மற்றொரு புறத்திலோ கிரேக்க ஆண்கள் நாளொரு கண்டுபிடிப்பும் பொழுதொரு ஆராய்ச்சியுமாக விஞ்ஞானம் முதல் தத்துவம் வரை எல்லாத் துறைகளிலும் தங்கள் அறிவை பெருக்கிக் கொண்டே போயினர்.

விளைவு - முட்டாளாய் மண்ணாங்கட்டிகளாயிருந்த பெண்களுடன் காதல் செய்ய கிரேக்க ஆண்களால் முடியவில்லை. எனவே ஆண்களுக்குள் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சாக்ரடீஸ், ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில், ஸெனோஃபோன், க்ரைசிப்பஸ், க்ளியாந்தஸ், ஜீயன், அலெக்ஸாண்டர் மாதிரியான தத்துவ ஞானிகளும் மன்னர்களும் இவ்வகையில் ஆண்களோடே காதல் கொள்ள ஆரம்பித்தனர் - அதாவது வம்ச விருத்திக்காக மட்டுமே பெண்களோடு கூடுதல். மற்றபடி காதலெல்லாம் ஆண்களுக்குள்ளேயே. காதலற்ற கூடல் என்பது ஒரு காமுகனுக்கு வேண்டுமானால் இன்பமளிப்பதாய் இருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண மனித பிறவிக்கு ஆண் ஆயினும் சரி பெண் ஆயினும் சரி அது ஒரு தண்டனையே. எனவே குழந்தைக்காக கூட அவர்களால் பெண்களோடு கூட முடியாது போயிற்று. விளைவு - ஆண்கள் பெண்களை தவிர்க்க ஆரம்பித்தார்கள். மனித இனத்தின் எண்ணிக்கை சரிய தொடங்கியது. பிறகு மீண்டும் பெண்களுக்கும் அறிவு தேவையென சமூகம் உணர ஆரம்பித்தது. எனவே பெண்கள் காதல் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாயிருக்கும். அதற்கு அவளுக்கும் சுய சிந்தனையும் அறிவுத் தெளிவுமிருத்தல் வேண்டும். ஒன்றுமே தெரியாத ஒருவர் மேல் பரிதாபம்தான் வரும். காதலா வரும்?

//ஏசி தியேட்டர்களில் சாப்பிட்டு விட்டு, பாதியில் சினிமா தியேட்டரின் ஏசியை நிறுத்திவிட்டான் என்ற "கோட்"களுடன் இருக்கும் விமர்சனங்களை விடவும், "காசு கொடுத்தேன் ஏன்யா ஏசியை பாதி நிறுத்தின" என்று கேட்கப்படும் கேள்விகளால் சமுதாயம் திருந்தலாம்.// சமூக சீர்திருத்தத்துக்கு உங்களுக்கான வழி அது. என் வரையில் இரவு 10 மணிக்கு தியேட்டர் நிர்வாகியிடம் போய் கத்தினால் என்ன பலனிருக்கும் என்று தெரியும். கஸ்டமர் சர்வீஸ் என்கிற பதத்திற்கான சரியான பொருளே தெரியாத நம் சமூகத்தில் இதை கையாளும் முறை வேறு - காசு அதிகம் கொடுத்தாலும் இப்படி ஒரு போதும் நடக்காது என்கிற உத்ரவாதமுள்ள தியேட்டர்களுக்கு மட்டுமே(உதா: சத்யம்) போவது என்று முடிவெடுப்பது அதில் ஒன்று. அதைத் தான் நான் வழக்கமாய் செய்வது. ஒரு வேளை ஒரு சிலருக்கு நிர்வாகியிடம் வாக்குவாதம் செய்வது போன்ற அதீத ஆ.கோ வகை வெளிப்பாடுகள் தேவையாக இருக்கலாம். அது அருகில் அமரும் பிகர்களின் கவனத்தை கவர்வது போன்ற சில்லறை சில்மிஷங்களுக்கு ஆதாயகரமானது என்பதால் கூட இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் அதுதான் வழி என்று ஆகி விடுமா என்ன?

கடைசியாக ஒரு விஷயம் - எழுத்துக்குப் பின்னால் "பெண்குலங்களை" மதிக்கும் கள்ளமில்லா வெள்ளை மனது தனக்கு இருப்பதாக சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்து படம் பார்க்கும் பெண்களை பிகராக மட்டுமே பார்க்க முடிகிறவர்களும், தன்னை நாத்திகவாதி என்று அறிவித்துக்கொண்டே வைகுண்ட ஏகாதேசிக்கு இரவோடிரவாக பஸ் பிடித்து போய் அங்கேயும் அய்யராத்து அகிலாண்டேஸ்வரிகள் கிடைப்பார்களா என்று தேடுபவர்களும் எல்லாம் பெண்ணுரிமைக்கான அரசியல் தீர்வை பற்றி பேசும் வரையில் பாடல்களில் தொப்புளை காட்டிவிட்டு உரையாடல் காட்சிகளில் தழைய தழைய புடவை கட்டிய ஜவுளிக்கடை பொம்மைகளே நம்ம தலைவரின் ஆஸ்தான நாயகிகளாய் இருப்பார்கள். வாழ்க தமிழ் சினிமா! வளர்க சூப்பர் ஸ்டார் புகழ்!

Tuesday, July 03, 2007

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்

நேத்திலேர்ந்து மனசு ஆறவேயில்லைங்க. அதொன்னுமில்லைங்க. சிவாஜி படத்துக்கு போயிருந்தேன். படமெல்லாம் நல்லாத்தான் இருந்தது - தலைவர் இருக்கறப்போ லாஜிக்கை பத்தியோ இன்டர்வெல்லுக்கப்புறம் தியேட்டர்காரங்க நிறுத்தின ஏ.சி பத்தியோவெல்லாம் யாருங்க கவலைப்படப் போறாங்க? அதுனால படம் ரொம்பவே நல்லா இருந்ததுச்சுங்க. ஆனா அதுல ஒரு அக்கிரமம் பாருங்க, அதை படம் பாத்து கதை சொன்ன யாருமே கவனிக்கலைன்னு தோணிச்சுங்க. அதை தமிழ்கூறு வலையுலகுக்கு தெரிவிக்கவே இந்த பதிவு.

முதல்ல அப்பாவியா நேர்வழில முயற்சி செஞ்சு தோத்து பிறகு திரும்ப யதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு எல்லாருக்கும் வரிசைக்கிரமமா மால் வெட்டி எல்லாத்தையும் கட்டி முடிக்கற நேரத்துல சுமன் அவர் முதுகுல குத்தி நடு ரோட்டுக்கு கொண்டு வரும்போது கூட எனக்கு அவ்ளோ ஃபீல் ஆகலைங்க. ஏன்னா நாமதான் இன்டர்வெல்லுக்கு முன்னாடி தலைவர் நடுரோட்டுக்கு வந்த படங்கள் நிறைய பாத்திருக்கோமே, அதும்படி பாத்தா ஒரே பாட்டுல தலைவர் மறுபடி வாழ்க்கைன்ற கன்வேயர் பெல்ட்டுல ஏஏஏ...ஏறிகிட்டே போவாரே... அதான் நமக்கு தெரியுமேன்னு மனசை தேத்திகிட்டு உக்காந்து பாக்க ஆரம்பிச்சேன்.

எதிர்பார்த்தாற்ப் போலவே தலைவரும் சிங்க நடை போட்டு ஜெயிச்சுட்டாரு. அப்பாடான்னு மூச்சு விடப்பாத்தா, அது வரைக்கும் கட்டியிருக்கற தாவணி எப்ப கீழ விழுமோன்னே கவலைபட வச்சிகிட்டிருந்த தமிழ்ச்செல்வி அண்ணி திடீர்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க... அவர் ட்ரைவின் தியேட்டரில் உக்கார வச்சு மடிக்கணிணிய காமிச்சு மாங்கு மாங்குனு தான் பண்ணியிருக்கற சாதனைகளை எல்லாம் விளக்கினதுலேயே, சட்டரீதியா தலைவர் மாட்டிக்க வழியே இல்லைன்னு புரிஞ்சிருக்கணும். அதுக்கப்புறம் ஒரு சூப்பர் கார் ஃபைட்டைப் போட்டு கிங்காங்கோட வாய் வழியா அவங்களை காப்பாத்தி கூட்டி வந்தப்பவே அவரை யாரும் எதுவும் பண்ண முடியாதாக்கும்ன்றதையும் அவங்க புரிஞ்சிருக்கணும். அதெல்லாம் புரியற அளவுக்கு அவங்களுக்கு எங்க மூளையிருக்கு?

அவங்கதான் ஏற்கனவே அந்த மச்சநாக்குக்கார ஜோசியரோட கப்ஸாக்களால கல்யாணமே வேண்டாம்னு சொன்னவங்களாச்சே... தலைவர் ரொம்ப கஷ்டப்பட்டு அவங்களோட மூடநம்பிக்கைய ஒரளவுக்கு போக்கி கல்யா... ச்சீ. வாய் தடுமாறுது பாருங்க, அந்த அப்பாவித் தமிழ்ப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கறார். இருந்தாலும் அந்த மூடநம்பிக்கைய விடாம திருநள்ளாறு போய் தோஷபரிகாரங்கள் செய்யறாங்க...நல்லா கவனிச்சு பாத்துகுங்க மகாஜனங்களே, எங்க பகுத்தறிவு சிங்கம் போகலியாக்கும்... அந்த அம்மாவும் அவங்களோட பெத்தவங்களும் மட்டுந்தான் போயி இதெல்லாம் பண்றாங்க. பின்ன, தலைவர் கல்யாணமே தமிழ் முறைப்படி கட்டினவராச்சே(நான் திருப்பதில நடந்த அவரோட நிஜக்கல்யாணத்தை சொல்லலீங்க... படத்துல பாப்பைய்யா தலைமைல நடந்த கல்யாணத்தைச் சொல்றேன்...) அவரு எப்படிங்க இந்த மாதிரி முட்டாள்த்தனமான விஷயத்தையெல்லாம் செய்வாரு?? ஆனா நம்ம அண்ணிக்கு அவ்ளோ பத்தாது பாருங்க, அதுனால அவங்க இதையெல்லாம் செய்யுறாங்க.

இதை மட்டுமா, அதுக்கப்புறம் சி.பி.ஐ ஆபீஸருங்க ஆபீஸ் ரூம்ல (இது தலைவரோட ஆபிஸ் ரூம் மாதிரி இல்லைங்க, கோவில் தேவஸ்தானத்தின் ஆபிஸ் ரூம்தான். அதுனால No third degree treatment. எனவே அண்ணியோட பொன்னான உடம்பு எதும் புண்ணாயிருக்குமோனோ இல்லை அதை விட முக்கியமா அவங்க கற்புக்கு ஏதும் பங்கம் வந்திருக்குமோன்னோ நீங்க யாரும் பயப்படத் தேவையில்லை.) கூப்பிட்டு மிரட்டினதும் அதை நம்பி தலைவரோட மடிக்கணிணிய ஒரு சாக்குப் பைல வச்சு எடுத்துக்கிட்டு போய் சி.பி.ஐ ஆபிசர்கிட்ட கொடுத்துடறாங்க. அதும் அவர்கிட்ட தலைவரோட உயிருக்கு ஆபத்து வராதுன்னு சத்தியம் வாங்கிகிட்டு... எவ்ளோ முட்டாளா இல்லையில்லை அப்பாவியா இருக்கு பாருங்க நம்ம அண்ணி... இதுனால போலீஸ்கிட்ட மாட்டுற தலைவர், போலீஸ் கஸ்டடியில் சாவு வரை போய் மீண்டு வர்ரார்...

எனக்கு என்னான்னா, அண்ணிங்களையும் இனி படங்களில் கொஞ்சமே கொஞ்சம் மூளையுள்ளவர்களாக காண்பித்தால் தலைவருக்கு வரும் இந்த எக்ஸ்ட்ரா பிரச்சனைகள் இருந்திருக்காதில்லையா? படமும் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே முடிஞ்சுடுமில்லையா? இந்த படம்தான் என்றில்லை, எண்ணிறந்த பல படங்களில் அற்புத ஹீரோக்கள் கூட அழகுச்சிலைகளாகவும் அறிவற்றவர்களாகவுமிருக்கும் ஹீரோயின்களால்தான் கடைசியில் மாட்டிக்கொள்வார்கள். அதை தவிர்க்கவாவது கொஞ்சம் அறிவுள்ள ஹீரோயின்களாய் காண்பிக்கலாமே...