Showing posts with label சுட்டுப் போட்டவை. Show all posts
Showing posts with label சுட்டுப் போட்டவை. Show all posts

Tuesday, January 08, 2008

குடிப்பதே சிறப்பென்றோமா?

காலம் காலமாக கேட்கப் பட்டு வரும் அதே கேள்வி -பொண்ணுங்களும் சிகரெட் குடிச்சு, தண்ணி அடிச்சு கண்டவனோட சுத்தி சீரழிஞ்சு போறதுதான் விடுதலையா? நாம யாரும் நம்ம கூட்டத்துல இருக்கறவங்கதான் இப்படி தப்பான கருத்தச் சொல்லிட்டாங்களோ - அதாவது பெண்களும் சிகரெட் குடிப்பதும், தண்ணி அடிப்பதும், கண்டவனோட போறதும்தான் பெண் விடுதலைன்னு சொல்லிட்டாங்களோன்னு சுத்தி சுத்தி தேடினாலும் அப்படியெதுவும் கிடைக்காது. எங்கயாவது ஒன்னு ரெண்டு பேர் ஒரு பெண் சிகரெட் குடிக்கும் போது அதை சிகரெட் உடல் நலத்துக்கு தீங்கானதுன்னு மட்டும் சொன்னாப் போதாதா, ஒரு பொண்ணா இருந்துகிட்டு நீ சிகரெட் பிடிச்சா எங்க பண்பாடு என்ன ஆகுறதுன்னு கேட்பது ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடுன்னு சொல்லியிருப்பாங்க. அதுலேர்ந்து இந்த ஒரு வாதத்தை - அதாவது பெண் உரிமை பேசுறவங்க எல்லாம் சிகரெட் குடிக்கவும் தண்ணி அடிக்கவும் கண்டவனோட படுத்து எழுந்திருக்கவும்தான் உரிமை கேக்கறாங்கன்ற வாதத்தை டெரிவ் பண்ணி வச்சுகிட்டு என்ன கேட்டாலும் இதுக்குத்தான் திரும்ப திரும்ப விளக்கம் கொடுப்பாங்க. அட என்னடா இது, கேக்காத கேள்விக்கு ஏன் பதில் சொல்றாங்க, நாம கேக்கற விஷயத்தைப் பத்தி ஏன் எதுவுமே பேச மாட்டேங்கறாங்கன்னெல்லாம் நாம யோசிச்சு குழம்பி கொஞ்சம் சைலன்ட் ஆயிடுவோமா, உடனே பாத்தியா, கேட்ட கேள்விக்கு அவிங்களுக்கு பதில் சொல்லத்தெரியல பத்தியா? இந்தப் பெண்ணுரிமையப் பத்திப் பேசுறவயங்க எல்லாம் இப்படித்தான்ப்பா, அரைகுறைங்க... புடலங்காப் பொரியல் செய்யத்தேன் லாயக்குன்னு ஒரு முத்திரய நம்ம மேல பசக்குனு குத்திபுட்டு அடுத்த ஆள்கிட்டப் போயி அதே தண்ணி, சிகரெட், ப்ளா... ப்ளாவை ஆரம்பிச்சுடுவாய்ங்க...

இந்த மாதிரி நாம சொல்லாத விஷயத்தை நம்ம மேல ஏத்திப் பேசும் டெக்னிக்கை பலகாலமா எல்லோரும் உபயோகிச்சுகிட்டேதான் இருக்காங்க. கவிதாயினி, முத்தமிழ் வித்தகி, திருமதி. கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் எழுதின ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது (யப்பா, எதுனா பட்டத்தை விட்டிருந்த பின்னூட்டத்துல சொல்லிடுங்கப்பா, திருத்திடறேன். நம்ம நாட்டு அரசியல்வாதிகள் இன்ஷியல தவறுதலா மாத்தி போட்டா டென்ஷன் ஆகறதை விட அதிகமா பட்டங்கள் விட்டுப் போயிட்டா டென்ஷன் ஆகிடுவாங்க. அக்கா முழுசா அந்த லெவலுக்கு போயிட்டாங்களா இல்லையான்னு தெரியலன்னாலும்கூட எதுக்கு ரிஸ்க்? ஆட்டோல்லாம் அனுப்பினா தாங்க மாட்டேன் நான். அதுனால நமக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் மறந்து இந்த விஷயத்துல மட்டும் ஹெல்ப் மீ ப்ளீ.......ஈஈஈஸ்.) இது வந்து அவங்க இந்தியா டுடேல பத்தி எழுதிகிட்டிருந்தப்ப எழுதின கட்டுரை. 'கறுக்கும் மருதாணி' அப்படின்னு ஒரு புத்தகமாவும் வந்திருக்கு.

சமூகப் பிரச்சினைகளைப் பற்றி ஆர்வமும் அக்கறையும் உள்ள பலர் ஆதங்கத்தோடும் தார்மீகக் கோபத்தோடும் சமூக சீரழிவுகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அவர்களே பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் என்பது பற்றிப் பேசும்போது சுயதணிக்கை ஒன்றை உருவாக்கிக் கட்டுப்பாடு, எல்லைகள் என்பதற்கு முன்னுரிமை தரத் தொடங்கிவிடுவார்கள்.

பெண்களுக்கு இடத்தைக் கொடுத்தால் அவர்கள் மடத்தைப் பிடித்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை அரித்துக் கொண்டே இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசிய சீர்திருத்தவாதிகள் கூட பெண்களின் விடுதலை என்பதும் அவர்களின் உரிமைகள் என்பதும் சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மனித உரிமை என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேன்டுமென்பதைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், மனித உரிமையில் ஆணின் உரிமை வேறு; அதன் சதவீதம் வேறு. பெண் சற்றுக் குறைந்த சதவீதத்திற்கே பாத்தியதை உள்ளவள் எனும் போதுதான் பிரச்சனைகள் தோன்றுகின்றன.

பொதுவாகப் பெண்விடுதலை என்றால் பலருக்கு குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, உதட்டுச் சாயம், ஜீன்ஸ் அல்லது குட்டை ஸ்கர்ட், கையில் வர்ஜீனியா ஸ்லிம்ஸ் அல்லது ஏதோ ஒரு மதுவகை - இப்படி ஒரு தோற்றம்தான் கண் முன் விரிகிறது.

பெண் விடுதலையைப் பற்றி என்னிடம் பேசும் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வி, "பெண் விடுதலை எல்லாம் சரி, ஆனால் விடுதலை என்கிற பெயரில் குடிப்பது, சிகரெட் பிடிப்பது இதெல்லாம் சரியா?" இந்தக் கேள்வியை எத்தனை முறை சந்தித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

பெண் விடுதலை என்பது உடை, உணவு அல்லது சில பழக்கவழக்கங்களுக்குள் சுருங்கி விடும் சிறிய விஷயம் இல்லை. பெண் தன் வாழ்க்கையை தன் விருப்பபடி தீர்மானிக்கும் உரிமை. தனது லட்சியங்களை அடைய அவள் செய்ய வேண்டிய தியாகங்களைத் தீர்மானிக்கும் உரிமை. தனது வாழ்க்கையைத் தானே வாழும் உரிமை.

குடிப்பதும் புகைப்பது தனிமனித விருப்பம். அந்தப் பழக்கங்களுக்கு அடிமையாவது என்பது உடல் நலத்தைப் பாதிக்கக்கூடியது. இதற்கும் பெண் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? குடிப்பதும் புகைப்பதும்தான் எங்கள் தலையாய உரிமை; இதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று எந்தப் பெண்ணியவதி சொல்லிக் கேட்டிருக்கிறார்கள் இவர்கள்? இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண் சிசுக் கொலை நடக்கிறது. கல்வி என்பது பல பெண்களின் எட்டாத கனவாகவே இருக்கிறது. வரதட்சிணை ஒழியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது பெண் விடுதலையைப் புகை வட்டத்துக்குள் சிலர் அடக்க நினைப்பது வேடிக்கை.

இந்தியாவில் ஆண்டுதோறும் கள்ளச் சாராயத்தால் இறந்து போவோரின் எண்ணிக்கை 3000க்கும் மேல். இதில் கணிசமான அளவு பெண்களும் அடங்குவர். இவர்களில் எத்தனை பேரின் காதுகளில் பெண் விடுதலை என்ற வார்த்தை ஒரு முறையேனும் விழுந்திருக்கும் சாத்தியம் உள்ளது?

மேல்தட்டு வர்க்கத்து விருந்துகளில் கலந்துகொள்ளும் பல பெண்கள் 'சோஷியல் டிரிங்கர்ஸ்.' இவர்களில் எத்தனை பேருக்குத் தங்களின் உரிமை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது?

ஆந்திராவில் - குறிப்பாக ராஜமுந்திரி போன்ற பகுதிகளில் - பெண்கள் எரியும் சுருட்டின் எரியும் பக்கத்தை வாயின் உட்புறமாக வைத்துப் புகைப்பார்கள். இவர்கள் வேலையை முடித்துவிட்டு இப்படிப் புகைத்துக்கொண்டே பெண் விடுதலை பற்றியும் பேசுகிறார்களா? பேசினால் நன்றாகத்தான் இருக்கும்.

சில அன்பான ஆண்கள் இதற்குக் கூறும் காரணம்: நாங்கள்தான் தவறான வழியில் போய் கெட்டுச் சீரழிந்து போகிறோம்; நீங்களும் அதையேன் செய்ய வேண்டும்? இந்த அக்கறை என்னைக் கண் கலங்கச்செய்துவிட்டது. கர்ப்பகிரகத்திலுள்ள விக்கிரகங்கள் கீழே இறங்கி வர எப்படி அனுமதிக்க முடியும்? அவை பாதுகாக்கப்பட வேண்டியவையாயிற்றே?

"...என் அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன் மரபின் ஊனதுவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி..."
(பாடியவர்: ஒளவையார்;
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி;
திணை: பாடாண்)


முதுபாசி போன்ற என் உடை களைந்து, புதுமடி உடுத்தச் செய்து, மகிழ்வு தரும் கள்ளும் மாமிசச் சாதமும் வெள்ளிக் கலத்தில் அதியமான் ஊட்டினான் என்கிறார் ஒளவையார்.

“சிறியகட் பெறினே, எமக்கீயும்;மன்னே
பெரியகட் பெறினே,
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே...”

(பாடியவர்:ஒளவையார்
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.)

சிறிய அளவு மதுவைப் பெற்றால் எனக்கு அளித்திடுவான். பெரிய அளவு மதுவைப் பெற்றால் யாம்பாட, அதை எமக்கு அளித்துத் தானும் உண்பான்.


இந்த அடிப்படையில் ஒளவையாரும் பெண்ணியவாதியாகிறார் என்றா, அவரைப் பெரிய மனதோடும் பேருவகையோடும் பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எழுதியவர்: கனிமொழி

Friday, December 28, 2007

வீணா தணிகாச்சலம் ... இல்ல இல்ல.. லீனா மணிமேகலையின் தேவதை

மன்னிக்கணும் மக்களே, ரொம்ப நீளமான தலைப்புக்கு.. இது ஒரு சுட்ட பதிவு - ஊதிட்டு படிக்கணுமானெல்லாம் கேக்காதீங்க மக்கா... தோழி.காம் ல வெளியான ஒரு கட்டுரைய இங்கன நகலெடுத்து ஒட்டியிருக்கேன்(காப்பி + பேஸ்ட் :) ) இதுக்கு அவங்க கொடுத்திருக்கற தலைப்பென்னவோ - விதிவிலக்குகள்: முன்மாதிரிகள்: அப்படின்றதுதான். ஆனா அப்படி தலைப்பு வச்சா நம்ம வலையுலக மகாஜனங்களுக்கு பதிவோட உள்ளடக்கம் என்னான்னு தெரியாததால உள்ள எட்டிப் பாக்க சுவாரசியம் வராதே, அதான் ஊரோடு ஒத்து இப்படி ஒரு நச் தலைப்பு...

லீனா மணிமேலையின் தேவதை ஆவணப் படத்தில் இடம்பெற்ற மூன்று பெண்கள் சற்றே வியப்பையும் ஆச்சரியத்தையும் சில கணங்களில் வருத்தத்தையும் தரும் பெண்களாக எனக்குத் தெரிந்தார்கள்.

பெண் இருத்தல் குறித்த தனது கவனத்தைத் தொடர்ந்து தன் படைப்புகளில் பதிவுசெய்துவரும் லீனாவின் இந்தப் படமும் பெண்களைக் குறிப்பாக நம்மிடையே விதிவிலக்குகளாக வாழ்ந்து வரும் பெண்களைப் பற்றியது தான்.

பெண்களுக்கென சமூகம் சில வரையறைகளை வைத்திருக்கின்றது. குடும்பமும் சமூகமும் பெண்ணின் இயங்கு வெளியை எப்பொழுதும் ஒரு எல்லைக்குள்ளாகவே தீர்மானித்திருக்கின்றன. ஆணும் பெண்ணும் சமமாகப் பணிபுரியும் நிலைக்கு இன்று வந்திருந்தாலுங் கூட பெண் இதையெல்லாம் செய்யவே கூடாது என்றும் சில இருக்கின்றன.

வீட்டிற்கு வெளியே செய்யப்படும் பணிகளில் மட்டுமல்ல இந்தப் பாகுபாடு. வீட்டிற்குள்ளும் ஆணுக்கெனச் சில பணிகளும் பெண்ணுக்கெனச் சில பணிகளும் வரையறுக்கப்பட்டிருக்கின்றன. சமையல், வீட்டு வேலைகள், குடும்ப உறுப்பினர்களைப் பாதுகாத்தல் என்பன போன்ற பணிகள் பெண்ணுக்கே உரியவையாகவும் வெளியே செல்லுதல், நிர்வகித்தல், முக்கிய முடிவுகளை எடுத்தல் போன்றவை ஆணுக்குரியவையாகவும் இன்றும் தொடர்கின்றன.

ஆண்பிள்ளை தான் பெற்றோருக்குக் கொள்ளி வைக்க வேண்டும். ஆண் குழந்தை இல்லாவிட்டாலும் வேறு ஏதாவது உறவுக்காரர் வைப்பாரே தவிர இறந்தவரின் மகளைக் கொள்ளி வைக்க அனுமதிப்பதில்லை இந்தச் சமூகம்.

இந்தச் சூழலில் ஒரு பெண் சடலங்களைப் புதைப்பதைத் தனது வேலையாகக் கொண்டிருந்தால் அவர் வியக்க வைக்கும் மனுஷி தானே! இன்னொருவர் கால்களில் சலங்கை கட்டிக் கட்டிக் கொண்டு இறப்பு வீடுகளுக்கு ஒப்பாகி பாடச் செல்பவர். இதற்கென ஒரு குழுவோடு ஊர் ஊராகச் சென்று ஒப்பாரி வைத்து வரும் வருமானத்தை எல்லோருடனும் பகிர்ந்து வாழ்பவர்.

ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுவரும் மற்றொரு பெண் கடலைத் தங்கள் தாய்வீடாக நினைத்து வருபவர். இந்த மூவரும் தான் லீனாவின் தேவதைகள்.இவர்களெல்லாம் விதிவிலக்குகளாக வாழ வேண்டுமென்று தீர்மானித்துக் கொண்டு இந்தத் தொழில்களுக்கு வந்தவர்களா? இல்லை வாழ்க்கையின் போராட்டமும் இவர்கள் சந்தித்த அனுபவங்களும் இவர்களை இப்படி ஆக்கியிருக்கின்றன. சுடுகாட்டில் பிணங்களைப் புதைப்பதும் பிணங்களுக்கு முன்னே ஒப்பாரி பாடுவதும் எந்தநேரமும் இயற்கையின் சீற்றத்தைக் கொண்டு வரும் கடலில் இறங்குவதும் எளிதான காரியமா? ஆனால் இவர்களது வாழ்க்கை இப்படித்தான். இந்தப் படத்தில் பிறரோடு இவர்களின் அன்பும் அக்கறையும் வெளிப்படும் விதமும் அதைக் காட்சிப்படுத்தியிருக்கும் விதமும் நேர்த்தியாய் வெளிப்பட்டிருக்கின்றன.

இந்த மூன்று பெண்களையும் ஆவணப்படுத்தியது இவர்களின் மீதான அனுதாபத்தை உண்டாக்கும் பொருட்டல்ல. இப்படியும் இவர்களால் வாழ முடிந்திருக்கிறது என்பதைக் காட்டத்தான். துயரங்களோடு நகர்ந்தாலும் இவர்கள் வாழும் விதம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது.

சுடுகாட்டிலேய கடைசி வரையிருந்து அங்கேயே மூச்சை விட வேண்டுமென்று நினைக்கும் ஒரு பெண். (கிருஷ்ணவேணி)

பெண் கடலில் இறங்குவது தீட்டு என்றும் சாமி குத்தமென்றும் சொல்லப்பட்டதைப் பொருட்படுத்தாது மீன்களையும் சங்குகளையும் சிப்பிகளையும் தேடி எடுத்துத் தொழில்செய்து கடலைத் தன் தாய்மடியாகக் கருதும் பெண். (சேது ராக்கு)

பிணங்களின் முன் ஒப்பாரி பாடிக் கிடைக்கும் பணத்தைச் தன்னைச் சுற்றியிருப்பவர்களுக்கும் அங்கிருக்கும் குரங்குகளுக்கும் தாராளமாகச் செலவு செய்து மகிழ்ச்சியாக வாழும் பெண். (லட்சுமி)

செய்யக் கூடாதவை என்றும் ஆண்கள் மட்டுமே செய்யும் தொழில்கள் என்றும் சொல்லப்பட்ட இந்தக் காரியங்களைச் செய்யும் இம்மூன்று பெண்களைத் தேடிச் சென்று ஆவணப்படுத்தியிருக்கியது இந்தப் பதிவு.

மரபுகளையும் மூட நம்பிக்கைகளையும் கடந்து புதிய பாதையில் பயணிக்கும் இவர்களது வாழ்க்கையினை நம்முன் கொண்டு வந்த லீனாவிற்குப் பாராட்டுக்களைச் சொல்லலாம்
தேவதைகள்

திரைக்கதை இயக்கம் : லீனா மணிமேகலை
தயாரிப்பாளர் : ஜெரால்டு
படத்தொகுப்பு : தங்கராஜ்
ஒலி அமைப்பு : சந்தான நம்பி
நேரம் : 42 நிமிடங்கள்

நன்றி: தோழி.காம்

Thursday, October 18, 2007

அடங்க மறு


"அடங்க மறு - இந்த வாசகம் எனக்கு ரொம்ப பிடிக்கும்." இப்படிச் சொல்லும் ஒருவரைப் பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? அநேகமாகத் தீவிரவாதியென்று - இல்லையா? அதிலும் இப்படிச் சொல்பவர் ஒரு இளம் பெண்ணாயிருந்தால்???!?!?! அடங்காப்பிடாரி, காளி என்றெல்லாம் இல்லையா? ஆனால் இப்படிச் சொல்பவர் ஒரு கவிஞர், பத்திரிக்கை ஆசிரியராக இருந்தவர், மென்மையாகப் பேசுபவர் என்றெல்லாம் யாரேனும் சொன்னால் என்ன நினைக்கத் தோன்றும்?

சரி, விஷயத்துக்கு வருகிறேன். சென்னை ஐ.ஐ.டியைப் பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கும். கல்லூரி மாணவர்களைக் கேட்டால் அங்கே நடக்கும் சாரங் எனப்படும் வருடாந்திரக் கொண்டாட்டத்தைப் பற்றி கண்கள் விரியப் பேசுவார்கள். மத்திய/உயர் மத்தியதர வர்க்கத்துப் பெற்றோரைக் கேளுங்கள் - அவர்கள் குழந்தைகளுக்கு ஐ.ஐ.டியில் இடம் கிடைப்பது ஏதோ சொர்க்கத்தில் இடம் கிடைப்பதற்குச் சமானமானதென்று பேசுவார்கள். குழந்தைகளை 9ஆம் வகுப்பு படிக்கையிலேயே ஐ.ஐ.டி கோச்சிங் வகுப்புகளுக்கு அனுப்பி சுளுக்கெடுப்பார்கள். இப்படியெல்லாம் பூலோக வைகுண்டமாகக் காட்சியளிக்கும், அடர்ந்த பசுஞ்சோலைக்கு நடுவே பலரின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருக்கும் இந்த ஐ.ஐ.டி நிறுவனத்துக்கும் ஒரு இருண்ட முகமுண்டு. அதை வெளியிலிருந்து நாமெல்லோரும் விமர்சிப்பது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. சிங்கத்தின் குகைக்குள்ளேயே சென்று சந்திப்பது என்பார்களே, அது போல அங்கேயே வேலை பார்த்துக் கொண்டு, அவ்வளாகத்திலேயே வசதிக்குறைவான ஒரு வீட்டில் குடியிருந்து கொண்டே தொடர்ந்து பல அநீதிகளுக்கு எதிராகப் போராடி வருபவர் வசந்தா கந்தசாமி. இவரைப் பற்றிய குறிப்புகளுக்கு இந்தச் சுட்டிகளைப் பாருங்கள்.


http://archives.aaraamthinai.com/women/apr2000/apr18c.asp

http://bsubra.wordpress.com/2006/08/20/international-woman-of-the-year-vasantha-kandasamy/

இத்தகைய தாயின் வழிகாட்டுதலில் வளர்ந்த பெண் எப்படியிருப்பார்? சமூக அநீதிகளைக் கண்டு குமுறும் ஒரு பொறுப்பான குடிமகளாக, பாதகம் செய்பவரைக் கண்டால் மோதி மிதிக்கத் துடிக்கும் ஒரு போராளியாக அதே சமயம் அதற்காக கத்தியைத் தீட்டாது புத்தியைத் தீட்டும் ஒரு பக்குவப் பட்டவராகத்தானே இருப்பார்? அப்படிப் பட்டவர்தான் மீனா கந்தசாமி. அவள் விகடனில் வெளியாகியிருக்கும் அவரது பேட்டி கீழே.

அடங்க மறு’! - எனக்கு ரொம்பப் பிடிச்ச வாசகம் இது!’’ என்று எடுத்த எடுப்பில் அதிர்ச்சி தருகிறார் மீனா கந்தசாமி.

நாம் அதிர்வதைத் துல்லியமாக உணர்ந்தவாறே, ‘‘அதுக்காக நான் திமிர் பிடிச்ச பொண்ணுனு அர்த்தமில்லை. அடக்குமுறையைக் காட்டுறவங்ககிட்ட அடங்க மறுக்குற பொண்ணு.. மனுஷங்கனா அப்படித்தானே இருக்கணும்! இல்லைன்னா நமக்கும் சர்க்கஸ்ல வித்தைகள் செய்றதுக்காகவே பயிற்று விக்கப்படுற விலங்குகளுக்கும் பெருசா என்ன வித்தியாசம் இருந்துடப் போகுது.. சொல்லுங்க!’’

ஆணித்தரமான கருத்துக்களைக் கொண்ட.. அவற்றை அதே உறுதியுடன் பேசுகிற 23 வயது இளம்பெண்தான் மீனா! வளர்ந்து வரும் கவிஞர்.. எழுத்தாளர்.. சமூகவியலில் ஆராய்ச்சி மாணவர்.. பத்திரிகை ஆசிரியராக இருந்தவர்.. என பல கோணங்களிலும் மிளிர்பவர்!

ஆழமான கடல், தன் அலைகளை நொடிக்கொரு தரம் கரைக்கு அனுப்பி தன் இருப்பை வெளிப்படுத்திக் கொண்டே இருப்பதுபோல, வார்த்தைகளின் கோர்வையில் அப்பிக் கொண்டு வெளிப்படுகிறது சமூக சிந்தனை! ஒரு மஞ்சள் வெயில் மாலையில் அவரைச் சந்தித்தோம்..

‘‘நான் ரொம்ப வித்தியாசமான பொண்ணுதான். எல்லாரையும் போல விளையாட்டுத்தனமான பொண்ணா என்னால இருக்க முடியலை. அதுக்கு நான் வளர்ந்த சூழல்தான் காரணம். என் அம்மாவும் அப்பாவும் சின்ன வயசுல-யிருந்து என்னை அளவுக்கு அதிகமான சுதந்திரத் தோட வளர்த்தாங்க. எல்லா விஷயங்களையும் சுயமா யோசிக்கிற மாதிரி என்னைப் பழக்கியிருந்-தாங்க.


வீட்டுல எந்த ஒரு விஷயம் பத்தியும் ஆரோக்கியமா என்னால விவாதிக்க முடியும். அதனாலயே விவாதத்துக்கு இடமே இல்லாத பள்ளிக்கூடமும் உருப் போட்டு மார்க் குவிக்க வைக்கிற நம்மளோட கல்வி முறையும் எனக்குப் பிடிக்காம போய்டுச்சு. இருந்தாலும், ப்ளஸ் டூ வரை ரெகுலர் ஸ்கூல்லதான் படிச்சேன்..’’ என்கிறவர், அதன் பிறகு அஞ்சல் வழியில் படித்து, எம்.ஏ முடித்திருக்-கிறார். இப்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பிஹெச்.டி. செய்கிறார்.

‘‘ஏதாவது ஒரு டிகிரி முடிக்கணும்னு எல்லாரும் சொன்னாங்கனுதான் படிச்சேன். பேருக்குத்தான் கோர்ஸ்ல சேர்ந்தேனே தவிர, புத்தகத்தைத் தொடவே இல்லை. கோர்ஸ் முடியுற தேதியில மொத்தமா 15 பேப்பரை யும் ஒண்ணா எழுதி பாஸானேன்.

அதுல இன்னொரு சுவாரஸ்யமும் நடந்தது. அந்த பதினஞ்சு பேப்பர்ல ஒண்ணுல, நான் எழுதின ஆராய்ச்சி கட்டுரையே எனக்கு பாடமா வந்திருந்தது!’’ என்று இயல்பாகச் சொல்லி சிரிக்கிற மீனா, ‘தலித்’ என்ற பத்திரிகையில் சுமார் இரண்டு வருடங்கள் ஆசிரியராகப் பணி புரிந்திருக்கிறார். தலித்துகளின் பிரச்னை பற்றி நிறைய எழுதியிருப்-பதோடு, ‘தலித் இலக்கிய’ புத்தகங்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தும் இருக்கிறார்.

‘‘ ‘விடுதலைச் சிறுத்தைகள்’ அமைப்பின் செயலாளர் தொல்.திருமாவளவனின் கட்டுரைகளை யும் பேச்சுக்களையும் நான் மொழி பெயர்த்து புத்தகமா வெளியிட்டிருந் தேன். அது பலத்த விமர்சனங் களையும் பாராட்டுக்-களையும் வாங்கித் தந்துச்சு.

அது தந்த உற்சாகத்தால ‘புலனாய்வுப் பத்திரிகையியல்’ பத்தின ஒரு புத்தகத்தையும் மொழிபெயர்ப்பு செஞ்சேன். ‘தமிழ்நாடு எய்ட்ஸ் கன்ட்ரோல் போர்டு’க்காகவும் ஒரு புத்தகத்தை மொழிபெயர்ப்பு செஞ்சேன்..’’ என்று பேசிக் கொண்டே போனவரை அவருடைய அம்மா கொண்டு வந்த தேநீர் ஆசுவாசப்-படுத்தியது. அவரை நம்மிடம் அறிமுகப்படுத்தினார்..

‘‘அம்மா வசந்தா கந்தசாமி, ‘கல்பனா சாவ்லா’ விருது வாங்கினவங்க.. மிகப் பெரிய கணித மேதை. அப்பாவும் டாக்டரேட் பண்ணினவங்க.. நான் இப்போ என்னவா இருக்கேனோ அப்படி வளர என்னை அனுமதிச்சவங்க..’’ என்கிறார் பெருமிதத்துடன்.

இவரின் தேடல்களும் கனவுகளும் ரொம்பப் பெரியவை! அவற்றைப் பற்றி விவரிக்கும்போது நெருப்புப் பிழம்பாகிறது முகம்!

‘‘உலகத்துல எந்த மூலையில அநீதி நடந்தாலும் பாரதி சொன்ன ‘மோதி மிதித்து விடு பாப்பா’தான் என் ஞாபகத்துக்கு வரும். நம்ம ஊர்கள்ல இன்னும் சாதியின் பேரால நடத்தப்படுற கோர தாண்டவங்கள் நடந்துக்கிட்டுத்தானே இருக்கு.. அதையெல்லாம் பார்த்து மனசு துடிக்கும். கீழ்வெண்மணி, வாச்சாத்தி, மேலவளவு, கொடியன்குளம், திண்ணியம்னு சாதிகளோட பேரால அடக்குமுறைகள் நடக்குறப்பல்லாம் ‘இதுக்கு ஏதாவது செய்ய மாட்டோமா’னு எனக்குள்ள துடிக்கிற துடிப்புதான் மனித நேயத்துக்-கான குரலா என்னோட எழுத்துக்கள்ல வெளிப்படுது. எழுத்துங்கறது என் கோபங்களை பதிவு செய்ற ஒரு முயற்சி.. என் உணர்வுகளுக்கு ஒரு வடிகாலா என்னோட எழுத்து இருக்கு. அந்த வகையில எழுத்து எல்லோருக்குமான ஆக்க சக்தினு சொல்வேன்.’’

தீர்க்கமாகப் பேசுகிற மீனா கந்தசாமியின் முதல் கவிதைத் தொகுப்பான ‘டச்’ சமீபத்தில் வெளி வந்திருக்கிறது. அதில் இடம்-பெற்றுள்ள ‘மஸ்காரா’ என்கிற கவிதை, மத்திய அரசு நடத்திய தேசிய அளவிலான கவிதைப் போட்டியில் முதல் பரிசையும் வென்றிருக்கிறது.

மீனாவின் கவிதைகளைப் படித்து ஆத்மார்த்தமாக பாராட்டி இருக்கிறார் பிரபல கவிஞர் கமலா தாஸ்! அவரே இவரின் ‘டச்’ புத்தகத்துக்கு அணிந்துரையும் எழுதி, அதில் ‘அடுத்த 50 ஆண்டுகளுக்கான எழுத்துப் பார்வை கொண்டவர் மீனா’ என்று பாராட்டுப் பத்திரமும் வாசித்திருக்கிறார்.

மீனாவின் சமீபத்திய மொழிபெயர்ப்பு, அவருக்கு இன்னும் உத்வேகம் கூட்டியிருக்கிறது. பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ புத்தகத்தைத்தான் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார் மீனா!

‘‘இலக்கியத்துல கொடி நாட்டவோ பெரிய எழுத்தாளர்னு பேர் வாங்கவோ நான் எழுத வரலை. ஒடுக்கப்படுறவங்களுக்காக குரல் கொடுக்க வேண்டியவங்க நம்மளை மாதிரியான பெண்கள் தான். ஏன்னா, வன்முறை வீடுகள்ல இருந்துதான் ஆரம்பமாகுது. தன் மனைவியை சக மனுஷியா பாவிக்காத ஒரு ஆணை எதிர்க்கிறதும் சாதி பேதம் பார்க்கிறவனை எதிர்க்கிறதும் ஒண்ணு தான். நான் அதைத்தான் செய்துட்டு இருக்கேன்’’ என்கிறார் அழுத்தம் திருத்தமாக!


சரி, ஏற்கனவே பத்திரிக்கையில் வெளியாகியிருக்கும் இந்தப் பேட்டியை இங்கே பதிவு செய்ய வேண்டிய அவசியம் என்ன? பொதுவாகவே வெகுஜனப் பத்திரிக்கைகளில் ஐ.ஐ.டியைப் போன்ற புனித பிம்பங்களுக்கு எதிர்த்துக் கேள்வி கேட்பவர்களை/ அவர்களோடு தொடர்புடையவர்களைப் பற்றியெல்லாம் செய்திகள் வெளிவருவது என்பது அபூர்வம். அதுவும் பொம்பளைங்க பத்திரிக்கையில் எல்லாம் இப்படி ஒரு செய்தி வருவது என்பது யாரும் எதிர்பார்க்க முடியாத ஒரு விஷயமல்லவா? எனவே நமக்குத் தெரிந்தவர்கள் நாலு பேர் கண்ணிலாவது அச்செய்தி விட்டுப் போய்விடாதிருக்கட்டுமே என்றுதான் இந்தப் பதிவு. அவ்வளவுதான்.

நன்றி - அவள் விகடன்.