Tuesday, October 28, 2008

சினிமா.. சினிமா.. - என் முறை!

தொடர் பதிவுகளைத் தொடர்வதும் தான் பெற்ற இன்பத்தை மற்றவருக்கும் அளிக்கும் விதமாய் அவர்களையும் இழுத்து விடுவதும் வலையுலகில் தவிர்க்க முடியாததாகி விட்டது. மாட்டி விட்ட நந்தாவுக்கு ”கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்”, என்னைப் பார்த்தும் மற்றவர்கள் இப்படி சொல்லாமல் இருப்பதற்காக நான் யாரையும் அழைக்க வில்லை. யாரெல்லாம் இதற்கு பின் இது போன்ற பதிவுகளை போடுகிறார்களோ அவர்களை எல்லாம் நானும் அழைத்ததாக எண்ணிக்கொள்ளவும். :)))


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயதெல்லாம் சரியாக நினைவில்லை. முதல் முதல் பார்த்த படங்கள் திருவிளையாடலும் புன்னகை மன்னனும். வீட்டிற்கு அருகிலிருக்கும் லாரி ஒட்டுனர்கள் ஆயுத பூஜைக்கு வருடா வருடம் தெருவில் படம் போடுவார்கள். அப்படி போடும் படங்களில் ஒன்று பக்திப் படமாகவும் இன்னொன்று புதுப் படமாகவும் இருக்கும். அப்படி பார்த்ததுதான் மேற்சொன்ன இரு படங்களும். ஆனால் அப்போதெல்லாம் படங்களில் இருக்கும் பாடல்களின் இனிமை, மாயாஜால காட்சிகளின் ஈர்ப்பு, சண்டைக் காட்சிகள் இதெல்லாம்தான் நினைவில் நிற்கும். விவரம் தெரிந்தபின் இப்படங்களை மறுமுறை பார்த்த போதுதான் கதையெல்லாம் புரிந்து பார்த்தேன். பள்ளிக் காலம் முடியும் வரை அம்மாவோடு திரையரங்கிற்குச் சென்று பல படங்கள் பார்த்திருக்கிறேன். ஒரளவு புரிந்து பார்க்க ஆரம்பித்தது வீரா என்று நினைக்கிறேன். மேல் நிலைப்பள்ளி போய்க்கொண்டிருந்த கால கட்டம் அது. எனவே லாஜிக்கலாக வீராதான் நான் பார்த்த முதல் படம். :)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சுப்பிரமணியபுரம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தேன் நிலவு - வீட்டில்(டிவிடி உபயம்) - அருமையான படம், இனிய பாடல்கள், என்னுடைய ஃபேவரிட் ஜோடி வைஜெயந்தி மாலா & ஜெமினி. எல்லாத்தையும் விட டணால் தங்கவேலுவின் காமெடி.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

விஜய், விஜயகாந்த் படங்கள் பார்த்து, பல சமயம் மருத்துவமணைக்கு போகும் படி ஆகி இருக்கிறது. :)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரொம்பெல்லாம் இல்லை, ஒரளவுக்கு - குஷ்பு விவகாரம்

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

டிடிஎஸ்(பல முறை காதை ரொம்ப பலமாகவே தாக்கியிருக்கிறது) :)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ணில் சிக்கினால் சில சமயங்களில் வாசிப்பதுண்டு.

7. தமிழ்ச்சினிமா இசை?

பெரும்பான்மை சராசரி தமிழர்களையும் போல் எனக்கும் இசையென்பது தமிழ்ச் சினிமா இசை மட்டுமாகவே வெகுகாலம் வரை இருந்தது. இப்போதும் பெரும்பாலும் நான் கேட்பது அதையே. எனவே என் வாழ்வில் தமிழ்ச் சினிமா இசைக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. புத்தகம் போலவே பாடல் சேகரிப்பிலும் ஆர்வம் அதிகம்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மிக மிகக் குறைவு. இந்தியப் படமென்றால் சில சமயம் மலையாளப் படங்கள், மிகச் சில இந்திப் படங்கள். மிகப் பிடித்த பிற இந்திய மொழிப் படம் பரதம், சர்க்கம். உலக மொழி படங்களென்றால் எனக்கெல்லாம் ஆங்கிலம் மட்டுமே. மிகப் பிடித்த படங்கள் - Forrest Gump, The Terminal (Tom Hanks-ன் அப்பாவித்தனமான நடிப்பு ரொம்பவே உருக வைக்கும்), Meet the Fockers

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எதுவுமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும். எனக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தின் எதிர்காலத்தைப் பற்றி அளந்து விட நான் ஜோசியரோ இல்லை கேள்வி பதில் பத்தி எழுதும் எழுத்தாளரோ இல்லை. :)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கோ இல்லை ஒட்டு மொத்த தமிழர்களுக்கோ எதுவும் ஆகிவிடாது என நம்புகிறேன். கொஞ்ச நாட்களுக்கு புலம்ப ஒரு விஷயமிருக்கும். பிறகு பழகிவிடும். மறந்து மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவோம் என்று நினைக்கிறேன்.

Monday, October 06, 2008

சமையலறை சங்கடங்கள்



திருமணத்திற்கு முன்பு வரை நான் ரொம்பவும் விஸ்தாரமா சமைக்கிற ஆள் கிடையாது - ஆனா கண்டிப்பா ரெகுலரா சமைச்சுடுவேன். அடிக்கடி வெளியில் சாப்பிடுவது என்பதை பேச்சுலர் வாழ்வில் கூட என்னால் நினைத்தே பார்க்க முடிந்ததில்லை. இதற்கு முக்கிய காரணம், ஹோட்டல் சாப்பாடுன்றது என் சின்ன வயசுல தீபாவளி பர்சேசுக்காக அப்பாவோடு கும்பகோணம் போறப்ப மட்டும் கிடைக்கும் ஒரு பெரிய ஆடம்பரம் அப்படின்னு மனசுல பதிஞ்சதா இருக்கலாம்.

எங்க ஊரில் அப்பல்லாம் மொத்தமே 2 டீக்கடை, ஒரு இட்லி கடை, ஒரு முனியாண்டி விலாஸ் மிலிட்டிரி ஹோட்டல் - அவ்ளோதான். இதுல எங்கேர்ந்து வெளில போய் சாப்பிடறது? அத்தோட இல்லாம இன்னமும் எங்க ஊர் ஒருத்தர் வீட்டில் குடும்பத் தலைவிக்கு உடம்பு முடியலைன்னால் பக்கத்து வீட்டிலிருந்து சின்ன சின்ன கிண்ணங்களில் நாலுவகை கறிகாய்களோடு சாதமும் சாம்பாரும் வாழை இலை போட்டு மூடி பின்கட்டு வழியாவே கொண்டு வந்து வச்சுட்டுப் போற அளவிலான கிராமமாவேதான் இருக்கு.

ஒரு அவசரத்துக்கு கூட வெளியே பர்கர், பிட்சா என்றெல்லாம் ஒப்பேத்த நான் தயாராக இருந்ததில்லை. வீட்டிலும் நூடுல்ஸ் போன்றவைகள் பிடிக்காது. அதிக வேலையினாலோ இல்லை சோம்பலாலோ எதுவும் செய்யப் பிடிக்கவில்லை என்றாலுமே கூட குக்கர் மட்டும் வைத்து மூன்று வேளையும் தயிர்சாதம் சாப்பிட்டேனும் ஒப்பேற்றியிருக்கிறேன். ஆனால் நாம் சமைத்துப் போடுவதையும் ஒரு ஜீவன் நம்பி சாப்பிடத் தயார்னு ஆனபின்னாடியும் நாம கொஞ்சம் ஒழுங்கு முறையா சமைக்கலைன்னா நல்லா இருக்காதேன்னு கொஞ்சம் என் சமையல் முறைகளை ஒழுங்கு செய்துக்கணும்னு இப்பத்தான் ஒரு ஒரு மாசத்துக்கு முன்னாடி முடிவு செஞ்சேன்.

சமையலுக்கு முதல் தேவை அடுப்பு இல்லையா? எனக்கோ வீட்டில் கேஸ் கனெக்ஷன் கிடையாது. ஏன்னு கேட்டா, ரேஷன் கார்டு கிடையாது. ஏன்னு கேட்டா ஊர்ல ரேஷன் கார்டில் என் பெயர் இருக்கு. அதை காமிச்சு இங்க கனெக்ஷன் வாங்க முடியாது. சரி, அங்கேர்ந்து பேரை நீக்கிட்டு இங்க புது கார்டு வாங்கலாம்னு ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போய் கேட்டதுக்கு ஒத்தை ஆளுக்கெல்லாம் இங்க ரேஷன் கார்டு கொடுக்கப் பட மாட்டாதுன்னு சொல்லீட்டாங்க. இதுக்காக ஊர்லேர்ந்து குடும்பத்தையே இங்க கட்டி இழுக்க முடியுமா? இல்லை இந்த கேஸ் கனெக்ஷனுக்காக கல்யாணம்தான் கட்டிக்க முடியுமா? இது வேலைக்காகாதுன்னு எல்லாத்தையும் தூக்கி மூட்டை கட்டிட்டு ரொட்டேஷன்ல கிடைக்கற சிலிண்டரை வைத்து வாழ்க்கைய ஓட்ட முடிவு செஞ்சேன்.

அக்கா, சித்தி, மாமான்னு லோக்கலில் இருக்கும் எல்லோரும் இரண்டு சிலிண்டர் இணைப்பு உள்ளவங்களா இருந்ததாலும், எனக்கு மூன்று மாதத்துக்கு ஒரு சிலிண்டர் போதுமானதா இருந்ததாலும் (காபி, டீ, பெரும்பாலும் தயிர் சாதம், என்னிக்காவது ஒரு நாள் சம்பிரதாயமான சாப்பாடு - இது பெரும்பாலும் என் தங்கை குடும்பத்தோடு 3 மாசத்துக்கு ஒரு தரம் ஊரிலிருந்து வரும் போது நிகழ்வது. இந்த மெனுவுக்கு ஒரு சிலிண்டர் 3 மாசம் தாங்காதா என்ன?) என் பிழைப்பு நல்லாவே ஓடிகிட்டிருந்தது.

இப்ப குடும்பம் பெருசாயிடுச்சு ;) அத்தோட ரொட்டேஷனுக்கு சிலிண்டர் புக் பண்ணி கொடுங்கன்னு கேக்கற நிலமைல நம்ம சொந்த பந்தங்களும் இப்ப ஒட்டுறவோட இல்லை. அதுனால மறுபடி கேஸ் கனெக்ஷன், ரேஷன் கார்டு வேலைகளை தூசு தட்ட ஆரம்பிச்சோம். இப்ப ஒத்தையா போய் க்யூவில் நிக்கற நிலமை இல்லை. அட்லீஸ்ட் சும்மா நிக்கற நேரத்துல சண்டையாவது போடலாம், டைம் பாஸ் ஆகும்ன்ற குறைந்த பட்ச உத்ரவாதம் இருக்கு.

எதுக்கு சண்டையா - இதெல்லாம் ஒரு கேள்வியா? ஜெயமோகன்/ஞானி/சாரு இது மாதிரி யாருனா ஒருத்தரை பிடிச்சு அமுக்கி அவங்க எழுத்துல இருக்கற நுண்ணரசியல பத்தி தலைவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சா, ரெண்டாவது நிமிஷமே ஒரு பிரமாதமான சண்டை நிச்சயம். நீங்கல்லாம் போலி அறிவுஜீவிகள்ன்னு அர்ச்சனைய ஆரம்பிச்சார்னு வைங்க, அரை மணி என்ன, நாள் முழுக்க வேணும்னாலும் சண்டை நீண்டுகிட்டே போகும். இப்படியா இன்ட்ரஸ்டிங்கான டைம்பாஸ் கைவசம் இருக்கறப்ப க்யூவுல நிக்கறதைப் பத்தி என்ன பிரச்சனைன்னு நானும் எங்க ரெண்டு பேர் பேரையுமே ரேஷன் கார்டுலேர்ந்து நீக்கி சான்றிதழை அனுப்பி வைக்கச் சொல்லி அவங்கவங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டோம். அப்புறம் பாத்தா கேஸ் கனெக்ஷனுக்கு ரேஷன் கார்டு அவசியமில்லைன்னு பேப்பர்ல செய்தி.

அந்நேரம் பாத்து நாங்க ஊர்ல இல்லை. சோ, வந்தவுடனே இன்டேன், பாரத் கேஸ் ஏஜென்ஸின்னு எல்லா இடத்துக்கும் படையெடுத்தோம். எங்களுக்கு இன்னும் சர்குலர் வரலை சார்னு ஒரே பதில் எல்லா இடத்திலயும். விடாம வராவாரம் போய் அவங்களை நச்சரிச்சதுல ஒரு வழியாய் போன வாரம் பதிவு செஞ்சாச்சு. அனுமதி வரதுக்கு 30 முதல் 45 நாள் வரை ஆகலாம்னு எங்க ஏரியா இண்டேன் ஏஜென்சிக்கார அம்மா சொன்னாங்க. இதுக்கு நடுவுல போன மாசமே என்னிடமிருந்து ஒரே ஒரு சிலிண்டர் காலி. சரின்னு ஆபத்பாந்தவனா நான் நினைச்சுகிட்டிருக்கும் கிளிக்ஸ் அடுப்பை எடுத்து என் கைவரிசைய காட்டத் துவங்கினேன்.

எனக்கு வழக்கமா 10 - 15 நாள் வரை வரும் அந்த இரண்டரைக் கிலோ சிலிண்டர். அது பழைய கணக்குன்றதால, எதுக்கும் ரிஸ்க் வேண்டாம்னு சாப்பாட்டு மூட்டை கட்டறதெல்லாம் நிப்பாட்டி தலைவருக்கு ஒரு நாளைக்கு ரெண்டு வேளையாவது நல்ல சாப்பாடு சாப்பிடும் சுதந்திரத்தைக் கொடுத்தேன்.

டீ/காபி, இரவு உணவு மட்டும்னு எங்கள் மெனு சுருங்கியது. அப்படியும் நான்காவது நாளே கிளிக்ஸ் காலை வாரியது - காஸ் காலி. போன் பண்ணி கேட்டால் சித்தி நடுவுல ஒரு 10 நாள் போல அதுலதான் வெந்நீர் போட்டுக் குளிச்சேன்னு கூலா சொல்றாங்க. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், நான் உடனடியாவே ரீஃபில் செய்திருப்பேன். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

மறுநாள் காலை காபி/டீ போடவே வழியில்லை. எங்க வீட்டுக்குப் பக்கத்துல எதும் நல்ல ஹோட்டலும் இல்லை. ஒரு டீக்கடை வேணும்னால் கூட இந்தப் பக்கம் பொன்னியம்மன் கோவிலுக்கோ இல்லை அந்தப் பக்கம் விஜயநகருக்கோதான் போக வேண்டியிருக்கும். சோ, கூட் ரோடு பக்கமிருக்கும் ஒரு எலக்டிரிக்கல் பொருட்கள் விற்கும் கடையில் அன்று மாலையே ஒரு எலக்டிரிக் காயில் ஸ்டவ் வாங்கினேன்(1400 ரூபாய் காலி). எடுத்து வந்து மாலை டீ தயாரித்து முடித்தேன்.

மறுநாள் காலை டீக்கு தண்ணீர் வைத்தால் அது வெந்நீராகவே இல்லை. அந்த அடுப்பில் ரெகுலேட்டர் இருந்தாலுமே கூட ஆன்/ஆஃப் என்பதைக் காட்ட எந்த இண்டிகேட்டரும் இல்லை. அத்தோடு ரெகுலேட்டரும் இரண்டு பக்கத்திலும் திருப்பக் கூடியதாக இருந்தது. எனக்கு பயங்கர சந்தேகம் - ஒரு வேளை நான் தவறான திசையில் திருப்புகிறேனோ எனறு. எனவே இரண்டு பக்கமும் நன்றாக சாத்துகுடியெல்லாம் ஜூஸ் பிழிய திருகுவோமே, அது போலத் திருகித் திருகி ஒவ்வொரு பொசிஷனிலும் 5 நிமிடம் வைத்துப் பார்த்தாலும் அடுப்பென்னவோ மோனப் புன்னகையோடு நிச்சலனமாய் வீற்றிருந்தது. பிறகு என்னிடமிருந்த எலக்ட்ரிக் குக்கரில் பாலை காய்ச்சி, இருந்த இன்ஸ்டண்ட் காப்பித் தூளைக் கொண்டு அன்றைய காலைப் பொழுதை ஓட்டினேன்.



பிறகு மாலையில் காயில் அடுப்பை ரிப்பேர் செய்ய எடுத்துச் சென்றால், இரண்டு நாளாகுமாம் ரெடியாக. சரி என்று இன்னொரு கிளிக்ஸ் வாங்க முடிவு செய்து மடிப்பாக்கம் கூட் ரோடில் இருக்கும் எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கினோம். எங்கும் கேஸ் பற்றாக்குறையால் அந்த அடுப்பு கையிருப்பில் இல்லை என்றே பதில் வந்தது. அப்படியே முன்னேறி நங்கநல்லூரின் பாலசுப்ரமணியம் மெட்டல் ஸ்டோருக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த சேல்ஸ் மேன் உப்பில்லை என்றால் புளி இருக்கு என்று சொல்வது போல எலக்ட்ரிக் ஸ்டவ் வாங்கிக்கோங்க என்றார். நானோ காயில் அடுப்பில் நொந்த கதையைச் சொல்லி மறுமுறை ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை என்று சொல்ல, அவரோ சளைக்காமல் எலக்ட்ரோ மேக்னடிக் ஸ்டவ்னு ஒன்னு இருக்கு மேடம் என்று ஆரம்பித்தார். நான் மறுக்க மறுக்க வழக்கம் போல பாலாவுக்கு அந்த அடுப்பு ரொம்பவே பிடித்துப் போயிற்று ;) விளைவு - நாங்கள் அந்த அடுப்புடந்தான் வீடு திரும்பினோம்.

பட்டர்ஃப்ளை நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மின்காந்த அடுப்பில் மூன்று மோட் உள்ளது. இதில் ஹீட்டிங்க்தான் டிஃபால்ட் மோட். ஒன்றிலிருந்து பத்து நிலைகள் வரை சூடு செய்யலாம். அநேகமாய் நம்ம சமையலுக்கு 2லிருந்து 5 நிலைகளே போதுமானதா இருக்கு. 2ல் நம் சாதாரண அடுப்பை சிம்மில் வைப்பது போலவும் 5 நம்ம சாதா அடுப்பின் ஹையில் வைப்பது போலவும் இருக்கிறது. அதற்கு மேற்பட்ட நிலைகளை தண்ணீர் அதிகம் உள்ள பொருட்களுக்கு மட்டுமே உபயோகிக்கவும் - இல்லையெனில் கண்டிப்பாகத் தீய்ந்து விடுகிறது.

இது தவிர குறிப்பிட்ட டெம்ப்ரேச்சரை செட் செய்து கொள்ளலாம். அது போலவே டைமரையும் வேண்டும் நேரத்துக்கு செட் செய்து கொள்ளலாம். இந்த டைமரையும் டெம்ப்ரேச்சர் ஆப்ஷனையும் சேர்த்தும் ப்ரொகிராம் செய்து கொள்ள முடிகிறது - இட்லி வேக வைப்பது போன்றவற்றிற்கு இந்த காம்போ மோட் ரொம்பவும் உதவி.

இந்த அடுப்பில் ஒரே ஒரு பிரச்சனை - மேக்னடிக் பேஸ் உள்ள பாத்திரங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இரும்பு தோசைக்கல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் போன்றவற்றை உபயோகிக்க முடிகிறது. ஆனால் காப்பர் பாட்டம் உள்ள் பாத்திரங்கள், அலுமினியம் பேஸ்டு குக்கர் போன்றவற்றை உபயோகிக்க முடிவதில்லை. என்னிடம் ஸ்டீல் குக்கர் இல்லாததால், இன்னமும் குக்கர் வைக்க மட்டும் கிளிக்ஸ் அடுப்பையே நம்பியிருக்கிறேன். மற்றபடி மொத்த சமையலும் இதிலேயே அழகாக முடிந்து விடுகிறது. தற்காலிக நிம்மதி என்றாலும் கூட முழுக்க சந்தோஷப்பட முடியவில்லை - அடுத்த மாத மின்சார பில் எப்படி இருக்குமோ என்ற பயம் உள்ளுக்குள்ளே வந்து வந்து போகிறது....!