Showing posts with label அனுபவம். Show all posts
Showing posts with label அனுபவம். Show all posts

Wednesday, May 13, 2009

ஜனநாயகக் கடமைய ஆத்திட்டோம்ல....

காலை 6.30 மணிக்கே அலுவலகத்திலிருக்க வேண்டிய அவசியம் பாலாவுக்கு. எனவே அவரை அனுப்பி வைத்துவிட்டு நானும் 7 மணிக்கே தயாராகிவிட முடிந்தது. 575758 என்ற எண்ணுக்கு நம் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை அனுப்பினால் நமக்கான பூத் முகவரியோடு வந்து விடுகிறது. இந்தப் பகுதியில் நான் ஒட்டளிப்பது முதல் முறை என்பதால் அந்த வசதியை பயன்படுத்தியும் என்னால் முகவரியைத்தான் கண்டுபிடிக்க முடிந்ததே தவிர எங்கள் வீட்டிலிருந்து அது கிழக்கா மேற்கா என்று கூட புரியவில்லை.

சரி என்று மண்ணின் மைந்தரான லக்கிலுக்கிற்கு தொலை பேசினால் அவரோ எடுக்கவே இல்லை. சரி, அதிகாலை 7 மணிக்கு (இல்லை ஒரு வேளை நடு ராத்திரியோ :) ) தொல்லை பேசியை வேறு எடுக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்று முடிவு செய்து ஆட்டோ ஸ்டாண்டிற்குப் போய் விசாரித்து, தொலைவதிகமெனில் ஆட்டோவிலேயே போய் வந்துவிடலாம் என்று முடிவு செய்தேன். எவ்வளவு அருகிலிருந்தாலும் கூட அவர்கள் அது ரொம்ப தூரம்ங்க மேடம் என்றுதான் சொல்வார்கள் என்பதும் தெரிந்தேதான் இருந்தது. என்ன ஒன்று, நன்றாக ஏரியாவை சுற்றிப் பார்த்துக் கொள்ளலாம் என்று சமாதானப் படுத்திக் கொண்டு வீட்டைப் பூட்டி விட்டுத் தெருவில் இறங்கிய போது பக்கத்து வீட்டுப் பெண்மணி வோட்டுப் போட்டு முடித்துவிட்டு வந்து கொண்டிருந்தார். அப்போதுதான் தோன்றியது, ஏன் எளிதாக அக்கம் பக்கத்தில் விசாரித்துக் கொள்ளலாம் என்று தோன்றவேயில்லை என்பது. அவரிடம் வழி விசாரித்துக் கொண்டு பூத்திற்குள் சென்றால் எந்தப் பகுதியில் இந்த வார்டு வருகிறது என்கிற வகைப்பாடு பூத்தின் உள்ளே இல்லை எனவும், வெளியே கட்சி சார்ந்த ஆட்கள் தெரு முனையில் இருப்பார்கள் , அவர்களிடம் ஸ்லிப் பெற்றுக் கொள்வதே சுலபமானது என்றும் அங்கிருந்த போலீஸ்காரர் சொன்னார்.

கொஞ்ச தூரத்தில் இருந்தவர்கள் லெஃப்ட் எடுத்து அப்புறம் ஒரு ரைட் எடுத்து என்று ஒரு இடத்துக்கு வழி சொன்னார்கள். அங்கே போனால் ஒரு 15 நிமிடம் செலவழித்த பின் உங்க ஏரியா இங்க வராது மேடம், நீங்க மறுபடி ஸ்கூல் கிட்ட போய் அங்கேர்ந்து ஒரு ரைட் எடுத்து அப்புறம் லெஃப்ட் எடுத்து.... என்று மறுபடி ஒரு இடத்துக்கு அனுப்பினார்கள். அதற்குள் எனக்கு எனது பூத் இருந்த பள்ளிக்கான லெஃப்ட், ரைட் வரிசையே லேசாக மறந்திருந்தது. நல்ல வேளையாக இன்னொருவரும் எங்கள் ஏரியாக்காரர் வந்தார். அவருக்கும் அதே வழிகாட்டல். அவர் டூ வீலர் வைத்திருந்ததால் அவரிடம் நானும் வரலாமா என்று கேட்டதும் வாங்களேன் என்று வண்டியில் ஏற்றி அழைத்துப் போனார்.

என்னவோ தெரியவில்லை, திரும்பிய பக்கமெல்லாம் அம்மா கட்சிகாரர்கள்தான் பூத் வைத்து ஸ்லிப் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். பாக்கெட் பாக்கெட்டாக வடையும், 1 லி/2 லி பாட்டில்களில் டீயுமாக பூத்கள் களை கட்டிக் கொண்டிருந்தன. மற்றவர்கள் எல்லாம் எங்கே என்று தெரியவில்லை. வாக்குச் சாவடியிலேயே ஓவ்வொரு க்யூவுக்கும் முன்னால் எந்தந்த தெரு அல்லது வார்டுகாரர்கள் அங்கே வரவேண்டும் என்று எழுதி வைத்து விட்டால் இவ்வளவு தொல்லையில்லை.

அதே போல் எலக்ட்ரானிக் வாக்குப் பதிவு எந்திரத்தை பயன்படுத்துவது போலவே வாக்காளர் பட்டியலையும் கணிணி மயமாக்கி விட்டால் தேர்தல் செலவும் குறையும். அப்படியே ஆன்லைனில் புது வாக்காளர் அட்டைக்கு, முகவரி மாற்றத்திற்கெல்லாம் விண்ணப்பிக்கும் வசதியும் வந்துவிட்டால் கொஞ்சம் வசதியாக இருக்கும். ஒரு பிரிவினருக்கு மட்டும்தானே பயன் இருக்கும் என்று எண்ண வேண்டாம் - அந்தக் கூட்டம் குறையும் என்பதால் நேரில் செல்லும் மற்ற மக்களுக்கும் வரிசையில் நிற்கும் நேரம் நிச்சயம் குறையும்.

எங்கள் பகுதிக்கான வரிசையில் அதுவும் பெண்கள் வரிசையில் ஆட்களே இல்லை. நேரே உள்ளே போய் சீட்டைக் கொடுத்து, கையில் மை தடவிக் கொண்டு, பொத்தானை அமுக்கிவிட்டு 2 நிமிடத்தில் வெளியே வந்துவிட்டேன். யாருக்கு ஓட்டு என்பதில் ரொம்பத் தெளிவாக இருந்தமையால் அதிகக் குழப்பம் இல்லை. ஆனாலும் கடைசி நிமிடத்தில் அவரது சின்னம் மறந்து விட்டது. பெயரைக் கொண்டே கண்டுபிடிக்க வேண்டியிருந்தது. இருந்தாலும் ரொம்ப ஒன்றும் சிரமமில்லை. ஒரு வழியாக என் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வெளியே வந்தபோது மணி 8. வெயில் ஏறும் முன்னர் வீடு வந்து சேர்ந்தேன்.

Saturday, April 04, 2009

பெண்களின் அடிமைத்தனம் - தீர்வு

முன் எச்சரிக்கை: தன்னைத் தானே MCP என்று அறிவித்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு இக்கடிதத்தை படிக்காமலிருப்பது நல்லது.

அன்புள்ள ஏகாம்பரி,

உங்கள் பிரிய தோழியும் ஆல்ட்டர் ஈகோவுமான உஷாக்கா உங்களுக்கு எழுதின கடித்ததை எனக்கு ஃபார்வேர்ட் செய்திருந்தீர்கள். படித்து மகிழ்ந்தேன். என்ன இருந்தாலும் தேர்ந்த இலக்கியவாதியல்லவா? கடித இலக்கியத்தில் அது ஒரு புது அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அக்கடிதத்தின் மையக் கருத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை என்பதை தாழ்வன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இல்லற பாடத்திலும், இலக்கியத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட உஷாக்காவின் கருத்தை மறுத்துப் பேசுவதாக எண்ண வேண்டாம். கட்டற்ற சுதந்திரம் தரும் இணையத்தை பாவிப்பதில் உள்ள சுகமே யாரும் எதையும் மறுக்கலாம், உல்ட்டா அடி அடிக்கலாம், அதற்கு எந்தத் தகுதியும், தராதரமும் தேவையில்லை என்பதுதானே? அதை நாம் மட்டும் பயன் படுத்தவில்லையென்றால் எப்படி?

நிற்க(எழுந்தெல்லாம் நின்று விடாதீர்கள், இது கடித மரபில் ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றிற்கு தாவும் முன் போடுகிற ஸ்பீட் ப்ரேக்). ஆண்கள் சமைப்பதில் உள்ள சங்கடங்களை எல்லாம் (அவர்களுக்கு அல்ல, நமக்கு) யக்கா அழகாக பட்டியலிட்டிருந்தார். அதில் எதையும் நான் மறுக்கவில்லை, எங்கள் வீட்டிலும் அத்தகைய களேபரங்கள் அவ்வப்போது நடக்கிறது என்ற இமாலய உண்மையை மறைகக்வுமில்லை. ஆனால் இதற்கெல்லாம் பயந்து புதுயுகப் பெண்களான நாம் பின்வாங்கினோமென்றால், அப்புறம் ஆண்களுக்கு மணி கட்டுவது பின் யார்?

இவ்விடத்தில் பினாத்தலார் என்கிற பிரபல பதிவர் ஒரு முறை எழுதிய பதிவொன்றினை நினைவுபடுத்த விரும்புகிறேன். wifology வரிசையில் வேலை செய்யாமல் தப்பிக்க அதை எவ்வளவு மோசமாக செய்ய முடியுமோ, அவ்வளவு மோசமாகச் செய்வதையும் ஒரு டெக்னிக்காக அடுக்கியிருந்தார். அவரின் ஃபேவரைட் ஐட்டமான உப்புமா செய்வதையே உதாரணமாகக் கொண்டு இந்த டெக்னிக்கை அழகாக விளக்கியிருந்தார். http://penathal.blogspot.com/2007/11/4-wifeology.html இதொன்றும் அவரது புது கண்டுபிடிப்பல்ல தோழி... காலகாலமாய் இந்த ஆண்கள் நம்மைப் போன்ற பெண்களை ஏமாற்ற பயன்படுத்தி வரும் மாபெரும் சதி நடவடிக்கைதான் அது. நாமும் கூட இதில் ஏமாந்துபோய், போதும் சாமி சமைச்சது என்று சொல்லிவிட்டால் அவர்கள் எல்லாம் உள்ளுக்குள் “இது, இது, இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்” என்று களித்துக் கும்மாளமிடுவார்களே தோழி? விடலாமா இந்த அக்கிரமத்தை நடத்த?

முதலில் உஷாக்கா செய்த ஒரு மாபெரும் தவறைச் செய்வதை நீ கனவிலும் நினைக்காதே – அதாவது ஆரம்பக் காலங்களில் அவர்களை நம் கண்மறைவில் சமைக்க அனுமதிப்பது. ஊருக்குப் போகையில் கிச்சனுக்கு ஒரு நல்ல godrej பூட்டாகத் தேடிப் பார்த்து பூட்டி, சாவியை நமது அம்மாக்களைப் போல தாலிச் சங்கிலியில் கோர்த்துக் கொண்டு போவது நலம். இங்கே ஒரு முறை என் வீட்டுக்காரார் நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தாமதாமய் வந்த ஒரு நன்னாளில் Magie நூடுல்ஸ் செய்வதாகச் சொல்லி பாத்திரம் ஒன்றையும்,அதை விட கொடுமையாக புத்தம் புது எலக்ட்ரிக் ஸ்டவ்வையும் சேர்த்துக் கருக்கியது நினைவுக்கு வந்து என் கண்ணில் நீர் ததும்பச் செய்கிறது. நமது பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இது போன்ற விபத்துக்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடப்பதுதான் என்றாலும், அதற்காக நாம் சோர்ந்துவிடக் கூடாது. அதை விட முக்கிய விஷயம், அந்தப் பதற்றத்தில் கூட தவறியும் "அய்யோ, இதுக்குதான் உங்களை கிச்சன் பக்கமே விடறதில்லை, இனி இந்தப் பக்கம் வரவே கூடாது" என்கிற நம் தலையில் நாமே மண்வாரி போட்டுக்கொள்கிற டயலாகை மட்டும் சொல்லிவிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்க.

இது போன்ற சந்தர்ப்பங்களில் "நீங்க பரவால்லப்பா, நான் சமைக்க ஆரம்பிச்ச புதுசுல வெந்நீர் போடறதுக்கே பாத்திரத்தை கருக்கியிருக்கேனாக்கும்" அப்படின்னு சும்மாவாச்சுக்கும் சொல்லி வைக்க வேண்டும். ஆனால் மறக்காமல் அந்தப் பாத்திரத்தை தேய்க்கும் வேலையை அன்னாரின் தலையிலேயே கட்டி விட வேண்டும்.

"எனக்கெல்லாம் கை அழுந்தாதுப்பா, நீங்களே இந்த ஒரு பாத்திரத்தை மட்டும் தேய்ச்சுருங்க ப்ளீஸ்" என்று சொல்லிவிட வேண்டும். இரண்டு நிமிடம்தான் முயற்சி நடக்கும். உடனே இதை தூக்கி போட்டுட்டு வேற வாங்கித்தரேனேம்மா என்கிற ஆசை வார்த்தைகள் வரும்தான். ஆனால் வைராக்கியமாக அதைத் தாண்ட வேண்டும்.

இப்படி மறுக்க இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பிரச்சனையின் தீவிரம் அவர்களுக்குப் புரியாமல் போவது. இரண்டாவது, மற்றும் முக்கிய காரணம் அந்த வாக்குறுதியெல்லாம் தேர்தல் வாக்குறுதி போலத்தான். தீய்ந்த பாத்திரத்தை தூக்கிப் போடுவது மட்டும்தான் நடக்குமே ஒழிய, புது பாத்திரம் ஒரு நாளும் வராது. சும்மா அந்த நேரத்துப் பிரச்சனையின் தீவிரத்தை தணிக்கப் பயன்படும் ஒரு சின்ன சமாதானமே அந்த புது பாத்திரம் வாக்குறுதி.

எனவே சற்றும் மனந்தளராது, அம்மா வாங்கித் தந்தது, இல்லை முதன் முதலாக இந்த வீட்டில் வாழ்கைப்பட்டு வந்த (அந்த துரதிர்ஷ்ட தினத்தில்) பால் காய்ச்சியது என்று எதாவது ஒரு சென்ட்டிமென்ட்டை அதன் தலையில் கட்டி, எப்படியேனும் அதை தேய்க்க வைத்துவிட வேண்டும். ஒரு முறை தீய்த்தால் அதை தேய்ப்பது எவ்வளவு சிரமம் என்பது புரிந்து விட்டால் அடுத்த முறையிலிருந்து அந்த ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். இப்படியே சமையலறை மேடையை சுத்தம் செய்வதையும் பழக்கி விட்டோமேயானால் தீர்ந்தது பிரச்சனை.

வேலையை அவர்கள் தவிர்க்க முடியாத நிலையில் கொண்டு வந்து நிறுத்தும் முக்கிய ஆயுதம் நமது பாராட்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை, இது என்னங்க பெரிய விஷயம், நானெல்லாம் சமைக்க ஆரம்பிச்சப்ப என்று ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்க வேண்டும். பொறுமையிலும், விடா முயற்சியிலும் விக்ரமாதித்தனை பின்பற்ற வேண்டும்.

ஒரு மாதம் தொடர்ந்து இது போன்ற அஹிம்சா மார்க்கத்தை கடைபிடித்துப் பார்த்தும் தேறவில்லையென்றால்.... பிறகென்ன நமக்கு வாய்ச்சது அவ்ளோதான் என்று கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதான். ஆனால் இந்த துக்கத்திலும் ஒரு நன்மை உண்டு - அதற்கப்புறம் நமது சமையலின் எந்தக் குறையையும் பற்றி பேசும் உரிமை நமது இல்லத் தலைவருக்கு கனவிலும் கிடையாது என்பதை இமைப்பொழுதும் மறப்பாதிருப்பீராக...

அப்புறம் ஊருக்கெல்லாம் இவ்வளவு உபதேசம் சொல்கிறாயே, உன் வீட்டுக் கதையென்ன கண்மணி என்று கேட்கிறாயா தோழி? @#$%^&^%$#&*@#$%^&^%$#&*&^%$#!@#$%^%$#&^%$#!@#$%^%$# வேறென்னத்த சொல்ல!

அன்புடன்,
லக்ஷ்மி

Tuesday, March 10, 2009

கவிதை.. கவிதை.. கவிதை..

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தப் பதிவ படிச்சதும் எனக்கு படிச்ச்தும் சிரிப்பு தாங்கலை. ஒரு வரி எழுத 10 வரியாவது படிச்சிருக்கணும்னு நானும் நம்பறேன். அந்தளவு வாசிப்பனுபவம் இல்லைன்னா என்னதான் திறமை இருந்தாலும் நல்ல நடை கைகூடறதில்லை. நிஜம்மாவே இந்த மாதிரி மனிதர்கள் நிறைய பேர் இருக்காங்க - எதுமே படிக்காம எழுதணும்னு நினைக்கறவங்க. அதுலயும் அப்படி எழுதினதை நம்மகிட்ட கொடுத்து அபிப்ராயம் வேற கேப்பாங்க பாருங்க, விளக்கெண்ணை குடிக்கறது கூட அதை விட சுலபமான விஷயமாத்தான் இருக்கும்.

என்னுடைய முதல் கவிதை பத்திரிக்கையில் வந்ததும் சந்தோஷம் தாங்காம நான் ஒரு தப்பு பண்ணினேன். அப்ப டிகிரி முதல் வருஷம் படிச்சுகிட்டிருந்தேன். வீட்டுல யார்ட்டையும் கவிதைய பத்தி சொல்ல முடியாது - ஏன்னா அந்த வயசுக்கே உரிய மாதிரி அது ஒரு காதல் கவிதை. அப்ப எனக்கு ரொம்பத் தீவிரமா ஒரு ஒரு தலைக் காதல் வேற ஓடிகிட்டிருந்தது. அந்த ஹீரோவை வச்சுத்தான் அந்தக் கவிதையே எழுதியிருந்தேன்னு வச்சுக்குங்களேன்.

அது ஒரு சுவாரசியமான முக்கோண காதல் கதை. சமயம் கிடைத்தால் ஒரு நாள் தனியா அதை எழுதறேன். ஆனா ஒரு உண்மைய ஒத்துகிட்டே ஆகணும் - அவனுடனான அந்த காதல் சமயத்துல நான் எழுதின அளவுக்கு வேகமாவும், தரமாவும் வேற எப்பவும் கவிதை எழுதினதில்லை (ஏன்னா அதுக்கப்புறம் நான் கவிதையே எழுதறதில்லை… ஹிஹிஹி) அந்த சந்தர்ப்பத்துல மட்டுந்தான் என்னுடைய கவிதைகள் ஒன்னு ரெண்டு பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகவும் செஞ்சுது. பட், துரதிர்ஷ்ட வசமா அதெல்லாத்தையும் அப்பப்ப என் காலேஜ் நோட் புக்குகளில் எழுதி வச்சிருந்தேனே தவிர அதையெல்லாம் பாதுக்காத்து வச்சுக்கலை. இப்ப நான் கவிதைன்னு முயற்சிக்கறப்ப வர குப்பையெல்லாம் பாக்கறப்பதான், எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்னு தோணுது... சோகம். 

அப்ப என் கவிதைகளில் தனக்கு பிடிச்சதை எடுத்து வேலை மெனக்கிட்டு பத்திரிக்கைக்கு அனுப்பிட்டு இருந்தவங்க என்னுடைய நெருங்கின தோழி ஒருத்தங்க. அவங்க வீட்டு அட்ரஸ் போட்டே ஆனா என் பேர் போட்டு அனுப்புவாங்க. யோசிச்சு பாருங்க, லக்ஷ்மி, C/O. ஜியாவுத்தீன் அப்படின்னு ஒரு அட்ரஸ் இருந்தால் அது எவ்வளவு ஆச்சரியமானதா இருந்திருக்கும். ஒரு வேளை அந்த ஆச்சரியத்துலதான் உதவி ஆசிரியர்கள் என் கவிதைய தூக்கியெறியாம படிச்சுப் பாத்திருப்பாங்களா இருக்கும். சொல்ல வந்த கதைய விட்டுட்டேன் பாருங்க; வீட்டுல யார்ட்டையும் சொல்ல முடியாதா.., அதுனால நான் என்ன பண்ணினேன் அறியாமையால் ஒரு பெரிய தவறு செஞ்சேன்.

எதிர்வீட்டுல குடியிருந்த ஒரு couple-கிட்ட போய் என் கவிதையையும் காட்டி, விஷயத்தையும் சொன்னேன். அவங்க ரெண்டு பேருமே எங்க ஊர் பக்கத்துல இருக்கற கிராமத்துல நல்ல பெரிய நிலக்கிழார் குடும்பங்களைச் சேர்ந்தவங்க. எங்க ஊரே அவங்களுக்கு டவுன் மாதிரி தோணும். அப்படியான ஒரு சூழல்லேர்ந்து வந்திருந்தாங்க. பத்தாதுக்கு தன்னால முடியாததுன்னு ஒன்னு உலகத்துலயே கிடையாதுன்னும், தன்னை விட அழகு/அறிவு/பணம் இதெல்லாம் யாருகிட்டயுமே இல்லைன்னும் நினைக்கற மனோபாவம் வேற. மிராசுதார் வீட்டுல ஒரே பொண்ணா வளந்தவுங்க, பெரிய குடும்பத்துல வாழ்கைப் பட்டாலும் எடுத்ததுமே வீட்டுக்காரரோட உத்தியோகம் காரணமா தனிக் குடித்தனம் - இதெல்லாம் ஊர்ல அதிகம் பெண்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம்ன்றதால ரொம்ப over confidence. இதெல்லாம் இப்ப எனக்கு அனலைஸ் பண்ணத் தெரியுது - ஆனா அப்ப தெரியாதில்ல?

அவங்க கிட்ட போய் காண்பிச்சதும் முதல்ல அவங்க வீட்டுக்காரர் கவிதை நல்லாருக்கும்மா, வெரி குட்மான்னார். இந்தம்மா உடனே ஒரளவு சுமாரா இருக்கு. நானெல்லாம் பிரமாதமா எழுதுவேன். இதுவே புக்குல வருதுன்னா, என்னுதெல்லாம் எப்பவோ அனுப்பியிருக்கலாமே? ஆமா உனக்கு இந்த அட்ரஸ்லாம் எப்படி கிடைச்சுதுன்னாங்க. நான் பவ்யமா, என் ஃப்ரெண்ட்தான்க்கா அனுப்பறாங்க, அவங்ககிட்ட அட்ரஸ் வாங்கிட்டு வரேன். நீங்களும் கவிதை எழுதுவீங்கன்னு தெரியாம போச்சே, எழுதினது இருந்தா தாங்கக்கா. படிச்சுட்டுத் தரேன்னு (நாக்குல சனி நர்த்தனமாடிருக்கணும் அப்ப) சொன்னேன். உடனே அவங்க நான் எழுதின நோட்டெல்லாம் ஊர்ல இருக்கு. ஞாபகத்துல இருக்கறதை ஒரு நோட்ல எழுதி நாளைக்குத் தரேன். நீ படி. அப்படியே உன் ஃப்ரெண்டுகிட்ட கொடுத்து அவளை விட்டே நல்ல கவிதயா எடுத்து எழுதி, அட்ரஸ்லாம் கவர்ல எழுதி கொண்டுவா. அந்தப் பொண்ணு நல்ல கைராசிக் காரியா இருக்கா. நானே அப்புறமா போஸ்ட் பண்ணிக்கறேன் அப்படின்னாங்க. நானும் மறுநாள் மறக்காம கேட்டு நோட்டை வாங்கிட்டு காலேஜ் போனேன்.

பிரிச்சு படிச்ச நானும் தோழியும் ரொம்ப டென்ஷனாயிட்டோம். எல்லாம் மன்னவனே, மைவிழி ஏங்குகிறாள், நாணுகிறாள் டைப் கவிதைகள். வாக்கிய அமைப்புக் கூட சரியா இல்லை - கிட்டத் தட்ட உளறல்கள்னே சொல்லலாம். பகைச்சுக்கவும் முடியாது - பெரியவங்களோட எல்லாம் அதுவரை சண்டை போட்டதில்லை.

அதுனால ஒரு ஐடியா பண்ணினோம். ஒரளவு உருப்படியா புரிஞ்சுக்க முடிஞ்ச விஷயங்களை (அதையெல்லாம் கவிதைன்னு பேச்சுக்கு கூட சொல்ல முடியாது) எடுத்து ரெண்டு காப்பி எழுதறதுன்னு முடிவு செஞ்சோம். ஒன்னு அவங்க என்ன எழுதியிருக்காங்களோ அதையே அப்படியே காப்பி பண்றது. இன்னொன்னு வாக்கிய அமைப்பை மட்டுமாவது சரி செஞ்சு எழுதினது. அப்புறம் கவர்ல பத்திரிக்கை முகவரி. என்னுடைய கவிதைகள் வந்துகிட்டிருந்தது தினமணிக் கதிர்ல. ஆனா தினமணி அட்ரஸுக்கு அந்த கவிதைகளை அனுப்பறது எங்களுக்கே கொஞ்சமும் அடுக்காதுன்னு தோணித்து. அதுனால தினத்தந்தியோட குடும்ப மலர் அட்ரஸை எழுதி எல்லாத்தையும் எடுத்துட்டு போய் கொடுத்தேன். ஒரு 5 ஐட்டம் தேத்தியிருந்தேன்.

அவங்ககிட்ட கொடுத்ததும் பிரிச்சு படிச்சு பாத்துட்டு, நான் எழுதினதே நல்லாத்தான் இருந்தது. பட் இருந்தாலும் நீங்க ரொம்ப ஆசையா மாத்தி எழுதியிருக்கீங்க. அதுனால அதையே அனுப்புவோம்னு ரொம்ப பெருந்தன்மையா சொன்னாங்க. அப்புறம் எல்லாத்தையும் ஒரே நேரத்துல அனுப்பி ஒரே புக்ல வந்துருச்சுன்னா அந்த ஒரு தரம்தானே பத்திரிக்கைல வந்ததா இருக்கும்? அதுனால வாரம் ஒன்னா அனுப்பலாம்னு வேற சொன்னாங்க (என்னே ஒரு தன்னம்பிக்கை).

ஆனா குடும்ப மலர் கூட அந்தக் கவிதைகளை பிரசுரிக்கலை. ஆடிக்கு பின்னால் ஆவணி, என் தாடிக்குப் பின்னால் ஒரு தாவணின்ற ரேஞ்சுலதான் அதுல கவிதையெல்லாம் இருக்கும். அதுலயே கூட வரலைன்னா பாத்துக்குங்க. ஒரு ரெண்டு மாசத்துக்கு கொஞ்சம் கிலியோடதான் அவங்க வீட்டுப் பக்கம் போவேன்.

அதும் அவங்க கைல எதுனா நோட்டை பாத்தா தூரத்துலேர்ந்தே ஓடி வந்துருவேன். அவங்க மளிகை சாமான் பட்ஜெட் போட்டுட்டு கூட இருந்திருக்கலாம். ஆனா யாரு ரிஸ்க் எடுக்கறது? அதான்.. அப்புறம் ரெண்டு மாசம் வரைக்கும் எதும் வரலைன்னதும் அவங்களும் இந்த கவிதையெல்லாம் வேஸ்ட்டுனு முடிவு செஞ்சு விட்டுட்டாங்க. நானும் நல்லாத் தெரிஞ்சவங்களைத் தவிர வேற யார்ட்டையும் அலட்டிக்க கூடாதுன்ற அற்புதமான பாடத்தை கத்துகிட்டேன். :))

Tuesday, October 28, 2008

சினிமா.. சினிமா.. - என் முறை!

தொடர் பதிவுகளைத் தொடர்வதும் தான் பெற்ற இன்பத்தை மற்றவருக்கும் அளிக்கும் விதமாய் அவர்களையும் இழுத்து விடுவதும் வலையுலகில் தவிர்க்க முடியாததாகி விட்டது. மாட்டி விட்ட நந்தாவுக்கு ”கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்”, என்னைப் பார்த்தும் மற்றவர்கள் இப்படி சொல்லாமல் இருப்பதற்காக நான் யாரையும் அழைக்க வில்லை. யாரெல்லாம் இதற்கு பின் இது போன்ற பதிவுகளை போடுகிறார்களோ அவர்களை எல்லாம் நானும் அழைத்ததாக எண்ணிக்கொள்ளவும். :)))


1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயதெல்லாம் சரியாக நினைவில்லை. முதல் முதல் பார்த்த படங்கள் திருவிளையாடலும் புன்னகை மன்னனும். வீட்டிற்கு அருகிலிருக்கும் லாரி ஒட்டுனர்கள் ஆயுத பூஜைக்கு வருடா வருடம் தெருவில் படம் போடுவார்கள். அப்படி போடும் படங்களில் ஒன்று பக்திப் படமாகவும் இன்னொன்று புதுப் படமாகவும் இருக்கும். அப்படி பார்த்ததுதான் மேற்சொன்ன இரு படங்களும். ஆனால் அப்போதெல்லாம் படங்களில் இருக்கும் பாடல்களின் இனிமை, மாயாஜால காட்சிகளின் ஈர்ப்பு, சண்டைக் காட்சிகள் இதெல்லாம்தான் நினைவில் நிற்கும். விவரம் தெரிந்தபின் இப்படங்களை மறுமுறை பார்த்த போதுதான் கதையெல்லாம் புரிந்து பார்த்தேன். பள்ளிக் காலம் முடியும் வரை அம்மாவோடு திரையரங்கிற்குச் சென்று பல படங்கள் பார்த்திருக்கிறேன். ஒரளவு புரிந்து பார்க்க ஆரம்பித்தது வீரா என்று நினைக்கிறேன். மேல் நிலைப்பள்ளி போய்க்கொண்டிருந்த கால கட்டம் அது. எனவே லாஜிக்கலாக வீராதான் நான் பார்த்த முதல் படம். :)

2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சுப்பிரமணியபுரம்.

3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
தேன் நிலவு - வீட்டில்(டிவிடி உபயம்) - அருமையான படம், இனிய பாடல்கள், என்னுடைய ஃபேவரிட் ஜோடி வைஜெயந்தி மாலா & ஜெமினி. எல்லாத்தையும் விட டணால் தங்கவேலுவின் காமெடி.

4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

விஜய், விஜயகாந்த் படங்கள் பார்த்து, பல சமயம் மருத்துவமணைக்கு போகும் படி ஆகி இருக்கிறது. :)

5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?

ரொம்பெல்லாம் இல்லை, ஒரளவுக்கு - குஷ்பு விவகாரம்

5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

டிடிஎஸ்(பல முறை காதை ரொம்ப பலமாகவே தாக்கியிருக்கிறது) :)

6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?

கண்ணில் சிக்கினால் சில சமயங்களில் வாசிப்பதுண்டு.

7. தமிழ்ச்சினிமா இசை?

பெரும்பான்மை சராசரி தமிழர்களையும் போல் எனக்கும் இசையென்பது தமிழ்ச் சினிமா இசை மட்டுமாகவே வெகுகாலம் வரை இருந்தது. இப்போதும் பெரும்பாலும் நான் கேட்பது அதையே. எனவே என் வாழ்வில் தமிழ்ச் சினிமா இசைக்கு ஒரு முக்கியப் பங்குண்டு. புத்தகம் போலவே பாடல் சேகரிப்பிலும் ஆர்வம் அதிகம்.

8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

மிக மிகக் குறைவு. இந்தியப் படமென்றால் சில சமயம் மலையாளப் படங்கள், மிகச் சில இந்திப் படங்கள். மிகப் பிடித்த பிற இந்திய மொழிப் படம் பரதம், சர்க்கம். உலக மொழி படங்களென்றால் எனக்கெல்லாம் ஆங்கிலம் மட்டுமே. மிகப் பிடித்த படங்கள் - Forrest Gump, The Terminal (Tom Hanks-ன் அப்பாவித்தனமான நடிப்பு ரொம்பவே உருக வைக்கும்), Meet the Fockers

9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

எதுவுமில்லை.

10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மன்னிக்கவும். எனக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத விஷயத்தின் எதிர்காலத்தைப் பற்றி அளந்து விட நான் ஜோசியரோ இல்லை கேள்வி பதில் பத்தி எழுதும் எழுத்தாளரோ இல்லை. :)

11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

எனக்கோ இல்லை ஒட்டு மொத்த தமிழர்களுக்கோ எதுவும் ஆகிவிடாது என நம்புகிறேன். கொஞ்ச நாட்களுக்கு புலம்ப ஒரு விஷயமிருக்கும். பிறகு பழகிவிடும். மறந்து மற்ற வேலைகளைப் பார்க்கப் போய்விடுவோம் என்று நினைக்கிறேன்.

Monday, October 06, 2008

சமையலறை சங்கடங்கள்



திருமணத்திற்கு முன்பு வரை நான் ரொம்பவும் விஸ்தாரமா சமைக்கிற ஆள் கிடையாது - ஆனா கண்டிப்பா ரெகுலரா சமைச்சுடுவேன். அடிக்கடி வெளியில் சாப்பிடுவது என்பதை பேச்சுலர் வாழ்வில் கூட என்னால் நினைத்தே பார்க்க முடிந்ததில்லை. இதற்கு முக்கிய காரணம், ஹோட்டல் சாப்பாடுன்றது என் சின்ன வயசுல தீபாவளி பர்சேசுக்காக அப்பாவோடு கும்பகோணம் போறப்ப மட்டும் கிடைக்கும் ஒரு பெரிய ஆடம்பரம் அப்படின்னு மனசுல பதிஞ்சதா இருக்கலாம்.

எங்க ஊரில் அப்பல்லாம் மொத்தமே 2 டீக்கடை, ஒரு இட்லி கடை, ஒரு முனியாண்டி விலாஸ் மிலிட்டிரி ஹோட்டல் - அவ்ளோதான். இதுல எங்கேர்ந்து வெளில போய் சாப்பிடறது? அத்தோட இல்லாம இன்னமும் எங்க ஊர் ஒருத்தர் வீட்டில் குடும்பத் தலைவிக்கு உடம்பு முடியலைன்னால் பக்கத்து வீட்டிலிருந்து சின்ன சின்ன கிண்ணங்களில் நாலுவகை கறிகாய்களோடு சாதமும் சாம்பாரும் வாழை இலை போட்டு மூடி பின்கட்டு வழியாவே கொண்டு வந்து வச்சுட்டுப் போற அளவிலான கிராமமாவேதான் இருக்கு.

ஒரு அவசரத்துக்கு கூட வெளியே பர்கர், பிட்சா என்றெல்லாம் ஒப்பேத்த நான் தயாராக இருந்ததில்லை. வீட்டிலும் நூடுல்ஸ் போன்றவைகள் பிடிக்காது. அதிக வேலையினாலோ இல்லை சோம்பலாலோ எதுவும் செய்யப் பிடிக்கவில்லை என்றாலுமே கூட குக்கர் மட்டும் வைத்து மூன்று வேளையும் தயிர்சாதம் சாப்பிட்டேனும் ஒப்பேற்றியிருக்கிறேன். ஆனால் நாம் சமைத்துப் போடுவதையும் ஒரு ஜீவன் நம்பி சாப்பிடத் தயார்னு ஆனபின்னாடியும் நாம கொஞ்சம் ஒழுங்கு முறையா சமைக்கலைன்னா நல்லா இருக்காதேன்னு கொஞ்சம் என் சமையல் முறைகளை ஒழுங்கு செய்துக்கணும்னு இப்பத்தான் ஒரு ஒரு மாசத்துக்கு முன்னாடி முடிவு செஞ்சேன்.

சமையலுக்கு முதல் தேவை அடுப்பு இல்லையா? எனக்கோ வீட்டில் கேஸ் கனெக்ஷன் கிடையாது. ஏன்னு கேட்டா, ரேஷன் கார்டு கிடையாது. ஏன்னு கேட்டா ஊர்ல ரேஷன் கார்டில் என் பெயர் இருக்கு. அதை காமிச்சு இங்க கனெக்ஷன் வாங்க முடியாது. சரி, அங்கேர்ந்து பேரை நீக்கிட்டு இங்க புது கார்டு வாங்கலாம்னு ஒரு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போய் கேட்டதுக்கு ஒத்தை ஆளுக்கெல்லாம் இங்க ரேஷன் கார்டு கொடுக்கப் பட மாட்டாதுன்னு சொல்லீட்டாங்க. இதுக்காக ஊர்லேர்ந்து குடும்பத்தையே இங்க கட்டி இழுக்க முடியுமா? இல்லை இந்த கேஸ் கனெக்ஷனுக்காக கல்யாணம்தான் கட்டிக்க முடியுமா? இது வேலைக்காகாதுன்னு எல்லாத்தையும் தூக்கி மூட்டை கட்டிட்டு ரொட்டேஷன்ல கிடைக்கற சிலிண்டரை வைத்து வாழ்க்கைய ஓட்ட முடிவு செஞ்சேன்.

அக்கா, சித்தி, மாமான்னு லோக்கலில் இருக்கும் எல்லோரும் இரண்டு சிலிண்டர் இணைப்பு உள்ளவங்களா இருந்ததாலும், எனக்கு மூன்று மாதத்துக்கு ஒரு சிலிண்டர் போதுமானதா இருந்ததாலும் (காபி, டீ, பெரும்பாலும் தயிர் சாதம், என்னிக்காவது ஒரு நாள் சம்பிரதாயமான சாப்பாடு - இது பெரும்பாலும் என் தங்கை குடும்பத்தோடு 3 மாசத்துக்கு ஒரு தரம் ஊரிலிருந்து வரும் போது நிகழ்வது. இந்த மெனுவுக்கு ஒரு சிலிண்டர் 3 மாசம் தாங்காதா என்ன?) என் பிழைப்பு நல்லாவே ஓடிகிட்டிருந்தது.

இப்ப குடும்பம் பெருசாயிடுச்சு ;) அத்தோட ரொட்டேஷனுக்கு சிலிண்டர் புக் பண்ணி கொடுங்கன்னு கேக்கற நிலமைல நம்ம சொந்த பந்தங்களும் இப்ப ஒட்டுறவோட இல்லை. அதுனால மறுபடி கேஸ் கனெக்ஷன், ரேஷன் கார்டு வேலைகளை தூசு தட்ட ஆரம்பிச்சோம். இப்ப ஒத்தையா போய் க்யூவில் நிக்கற நிலமை இல்லை. அட்லீஸ்ட் சும்மா நிக்கற நேரத்துல சண்டையாவது போடலாம், டைம் பாஸ் ஆகும்ன்ற குறைந்த பட்ச உத்ரவாதம் இருக்கு.

எதுக்கு சண்டையா - இதெல்லாம் ஒரு கேள்வியா? ஜெயமோகன்/ஞானி/சாரு இது மாதிரி யாருனா ஒருத்தரை பிடிச்சு அமுக்கி அவங்க எழுத்துல இருக்கற நுண்ணரசியல பத்தி தலைவர் க்ளாஸ் எடுக்க ஆரம்பிச்சா, ரெண்டாவது நிமிஷமே ஒரு பிரமாதமான சண்டை நிச்சயம். நீங்கல்லாம் போலி அறிவுஜீவிகள்ன்னு அர்ச்சனைய ஆரம்பிச்சார்னு வைங்க, அரை மணி என்ன, நாள் முழுக்க வேணும்னாலும் சண்டை நீண்டுகிட்டே போகும். இப்படியா இன்ட்ரஸ்டிங்கான டைம்பாஸ் கைவசம் இருக்கறப்ப க்யூவுல நிக்கறதைப் பத்தி என்ன பிரச்சனைன்னு நானும் எங்க ரெண்டு பேர் பேரையுமே ரேஷன் கார்டுலேர்ந்து நீக்கி சான்றிதழை அனுப்பி வைக்கச் சொல்லி அவங்கவங்க வீட்டுக்கு தகவல் சொல்லிட்டோம். அப்புறம் பாத்தா கேஸ் கனெக்ஷனுக்கு ரேஷன் கார்டு அவசியமில்லைன்னு பேப்பர்ல செய்தி.

அந்நேரம் பாத்து நாங்க ஊர்ல இல்லை. சோ, வந்தவுடனே இன்டேன், பாரத் கேஸ் ஏஜென்ஸின்னு எல்லா இடத்துக்கும் படையெடுத்தோம். எங்களுக்கு இன்னும் சர்குலர் வரலை சார்னு ஒரே பதில் எல்லா இடத்திலயும். விடாம வராவாரம் போய் அவங்களை நச்சரிச்சதுல ஒரு வழியாய் போன வாரம் பதிவு செஞ்சாச்சு. அனுமதி வரதுக்கு 30 முதல் 45 நாள் வரை ஆகலாம்னு எங்க ஏரியா இண்டேன் ஏஜென்சிக்கார அம்மா சொன்னாங்க. இதுக்கு நடுவுல போன மாசமே என்னிடமிருந்து ஒரே ஒரு சிலிண்டர் காலி. சரின்னு ஆபத்பாந்தவனா நான் நினைச்சுகிட்டிருக்கும் கிளிக்ஸ் அடுப்பை எடுத்து என் கைவரிசைய காட்டத் துவங்கினேன்.

எனக்கு வழக்கமா 10 - 15 நாள் வரை வரும் அந்த இரண்டரைக் கிலோ சிலிண்டர். அது பழைய கணக்குன்றதால, எதுக்கும் ரிஸ்க் வேண்டாம்னு சாப்பாட்டு மூட்டை கட்டறதெல்லாம் நிப்பாட்டி தலைவருக்கு ஒரு நாளைக்கு ரெண்டு வேளையாவது நல்ல சாப்பாடு சாப்பிடும் சுதந்திரத்தைக் கொடுத்தேன்.

டீ/காபி, இரவு உணவு மட்டும்னு எங்கள் மெனு சுருங்கியது. அப்படியும் நான்காவது நாளே கிளிக்ஸ் காலை வாரியது - காஸ் காலி. போன் பண்ணி கேட்டால் சித்தி நடுவுல ஒரு 10 நாள் போல அதுலதான் வெந்நீர் போட்டுக் குளிச்சேன்னு கூலா சொல்றாங்க. ஒரு வார்த்தை சொல்லியிருந்தால், நான் உடனடியாவே ரீஃபில் செய்திருப்பேன். அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சேன்.

மறுநாள் காலை காபி/டீ போடவே வழியில்லை. எங்க வீட்டுக்குப் பக்கத்துல எதும் நல்ல ஹோட்டலும் இல்லை. ஒரு டீக்கடை வேணும்னால் கூட இந்தப் பக்கம் பொன்னியம்மன் கோவிலுக்கோ இல்லை அந்தப் பக்கம் விஜயநகருக்கோதான் போக வேண்டியிருக்கும். சோ, கூட் ரோடு பக்கமிருக்கும் ஒரு எலக்டிரிக்கல் பொருட்கள் விற்கும் கடையில் அன்று மாலையே ஒரு எலக்டிரிக் காயில் ஸ்டவ் வாங்கினேன்(1400 ரூபாய் காலி). எடுத்து வந்து மாலை டீ தயாரித்து முடித்தேன்.

மறுநாள் காலை டீக்கு தண்ணீர் வைத்தால் அது வெந்நீராகவே இல்லை. அந்த அடுப்பில் ரெகுலேட்டர் இருந்தாலுமே கூட ஆன்/ஆஃப் என்பதைக் காட்ட எந்த இண்டிகேட்டரும் இல்லை. அத்தோடு ரெகுலேட்டரும் இரண்டு பக்கத்திலும் திருப்பக் கூடியதாக இருந்தது. எனக்கு பயங்கர சந்தேகம் - ஒரு வேளை நான் தவறான திசையில் திருப்புகிறேனோ எனறு. எனவே இரண்டு பக்கமும் நன்றாக சாத்துகுடியெல்லாம் ஜூஸ் பிழிய திருகுவோமே, அது போலத் திருகித் திருகி ஒவ்வொரு பொசிஷனிலும் 5 நிமிடம் வைத்துப் பார்த்தாலும் அடுப்பென்னவோ மோனப் புன்னகையோடு நிச்சலனமாய் வீற்றிருந்தது. பிறகு என்னிடமிருந்த எலக்ட்ரிக் குக்கரில் பாலை காய்ச்சி, இருந்த இன்ஸ்டண்ட் காப்பித் தூளைக் கொண்டு அன்றைய காலைப் பொழுதை ஓட்டினேன்.



பிறகு மாலையில் காயில் அடுப்பை ரிப்பேர் செய்ய எடுத்துச் சென்றால், இரண்டு நாளாகுமாம் ரெடியாக. சரி என்று இன்னொரு கிளிக்ஸ் வாங்க முடிவு செய்து மடிப்பாக்கம் கூட் ரோடில் இருக்கும் எல்லாக் கடைகளிலும் ஏறி இறங்கினோம். எங்கும் கேஸ் பற்றாக்குறையால் அந்த அடுப்பு கையிருப்பில் இல்லை என்றே பதில் வந்தது. அப்படியே முன்னேறி நங்கநல்லூரின் பாலசுப்ரமணியம் மெட்டல் ஸ்டோருக்கு வந்து சேர்ந்தோம். அங்கிருந்த சேல்ஸ் மேன் உப்பில்லை என்றால் புளி இருக்கு என்று சொல்வது போல எலக்ட்ரிக் ஸ்டவ் வாங்கிக்கோங்க என்றார். நானோ காயில் அடுப்பில் நொந்த கதையைச் சொல்லி மறுமுறை ரிஸ்க் எடுக்கத் தயாரில்லை என்று சொல்ல, அவரோ சளைக்காமல் எலக்ட்ரோ மேக்னடிக் ஸ்டவ்னு ஒன்னு இருக்கு மேடம் என்று ஆரம்பித்தார். நான் மறுக்க மறுக்க வழக்கம் போல பாலாவுக்கு அந்த அடுப்பு ரொம்பவே பிடித்துப் போயிற்று ;) விளைவு - நாங்கள் அந்த அடுப்புடந்தான் வீடு திரும்பினோம்.

பட்டர்ஃப்ளை நிறுவனத்தின் தயாரிப்பான இந்த மின்காந்த அடுப்பில் மூன்று மோட் உள்ளது. இதில் ஹீட்டிங்க்தான் டிஃபால்ட் மோட். ஒன்றிலிருந்து பத்து நிலைகள் வரை சூடு செய்யலாம். அநேகமாய் நம்ம சமையலுக்கு 2லிருந்து 5 நிலைகளே போதுமானதா இருக்கு. 2ல் நம் சாதாரண அடுப்பை சிம்மில் வைப்பது போலவும் 5 நம்ம சாதா அடுப்பின் ஹையில் வைப்பது போலவும் இருக்கிறது. அதற்கு மேற்பட்ட நிலைகளை தண்ணீர் அதிகம் உள்ள பொருட்களுக்கு மட்டுமே உபயோகிக்கவும் - இல்லையெனில் கண்டிப்பாகத் தீய்ந்து விடுகிறது.

இது தவிர குறிப்பிட்ட டெம்ப்ரேச்சரை செட் செய்து கொள்ளலாம். அது போலவே டைமரையும் வேண்டும் நேரத்துக்கு செட் செய்து கொள்ளலாம். இந்த டைமரையும் டெம்ப்ரேச்சர் ஆப்ஷனையும் சேர்த்தும் ப்ரொகிராம் செய்து கொள்ள முடிகிறது - இட்லி வேக வைப்பது போன்றவற்றிற்கு இந்த காம்போ மோட் ரொம்பவும் உதவி.

இந்த அடுப்பில் ஒரே ஒரு பிரச்சனை - மேக்னடிக் பேஸ் உள்ள பாத்திரங்களை மட்டுமே உபயோகிக்க வேண்டும். இரும்பு தோசைக்கல், ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பாத்திரங்கள் போன்றவற்றை உபயோகிக்க முடிகிறது. ஆனால் காப்பர் பாட்டம் உள்ள் பாத்திரங்கள், அலுமினியம் பேஸ்டு குக்கர் போன்றவற்றை உபயோகிக்க முடிவதில்லை. என்னிடம் ஸ்டீல் குக்கர் இல்லாததால், இன்னமும் குக்கர் வைக்க மட்டும் கிளிக்ஸ் அடுப்பையே நம்பியிருக்கிறேன். மற்றபடி மொத்த சமையலும் இதிலேயே அழகாக முடிந்து விடுகிறது. தற்காலிக நிம்மதி என்றாலும் கூட முழுக்க சந்தோஷப்பட முடியவில்லை - அடுத்த மாத மின்சார பில் எப்படி இருக்குமோ என்ற பயம் உள்ளுக்குள்ளே வந்து வந்து போகிறது....!

Saturday, September 27, 2008

வாழ்த்தலாம் வாங்க.....

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பொறுத்தவரையில் என்னுடையதேர்வு எப்போதும் பாடல்கள், இல்லையென்றால் காமெடிநிகழ்ச்சிகள் மட்டுமே. எங்கள் வீட்டு ரிமோட்டுக்கு வாய் இருந்தால் கதறி அழுமளவு அதனை வேலை வாங்குவதுண்டு.அதிலும் பாடல்களுக்கு நடுவே தொகுப்பாளரை யாரேனும் தொலைபேசியில் அழைத்து "நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க" என்றோ, இல்லை "அய்யோ, என்னால லைன் கிடைச்சதை நம்பவே முடியலைங்க, ரொம்ப சந்தோஷமா இருக்குங்க" என்றோ வழியத் தொடங்கினால்.. அலறி அடித்து அடுத்த இசை அலைவரிசையைப் பிடிக்க வேண்டியது. அங்கும் இதே கதை என்றால் வரிசையாக எல்லா அலைவரிசைக்கு ஒரு முறை போய் எங்கேனும் காமெடித் துணுக்குத் தோரணங்கள் ஒடுகிறதா என்று பார்த்துவிட்டு முதல் அலைவரிசைக்கே மறுபடி வந்தால் அங்கே அதற்குள் பாடல் ஆரம்பித்திருக்கும். இந்த அற்புதமான பாதுகாப்பு வளையத்தை சென்ற வாரத்தில் ஒரு நாள் காலையில் மறந்து போனதன் விளைவாக என் இரத்த அழுத்தத்தை ஏற்றிக் கொள்ள வேண்டியதாகிப் போனது.

ஒரு பெண்மணி தொகுப்பாளரை அழைத்துப் பேசிக் கொண்டிருந்தார். அது வாழ்த்துக்களைச் சொல்வதற்கான நிகழ்ச்சி. யாரும் யாருக்கும் வாழ்த்துச் சொல்லலாம். பின்னர் யார் யாரோ உழைத்துச் செய்த ஒரு பாடலையும் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல நமக்குப் பிடித்த யாருக்கு வேண்டுமானாலும் 'டெடிகேட்' செய்து கொள்ளலாம். யார் கேட்பது? சரி, விஷயத்திற்கு வருவோம்.அந்தப் பெண்மணி யாருக்கு எதற்கு வாழ்த்துச் சொல்லிக் கொண்டிருந்தார் தெரியுமா? தனது உறவுக்காரப் பெண்ணொருவருக்கு அவரது மஞ்சள் நீராட்டு விழாவிற்கான வாழ்த்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த நிகழ்ச்சிகளின் வழக்கமான சம்பிரதாயப்படி ஊர், பேர், தெரு, வீட்டு எண் உட்பட சகல அடையாளங்களோடும்தான். ஏற்கனவே இங்கே சில இடங்களில் மஞ்சள் நீராட்டு விழாவிற்கான வினைல் போர்டுகளை (பெண்ணின் புகைப்படத்தோடு)பார்த்து அதிர்ந்திருக்கிறேன். அதுவேனும் அந்த வழி போகிறவர்களின் கண்ணில் மட்டும்தான் படுமென்றால், இதுவோ இன்னும் பிரமாதமாக உலகம் முழுக்கவே வீடு வீடாகச் சென்று விஷயத்தை தெரிவித்து விடுகிறதில்லையா? என்ன ஒரு நல்ல உபயோகம் பாருங்கள் ஒரு அறிவியல் கண்டுபிடிப்பிற்கு?, எம்.ஆர்.ராதா ஒரு படத்தில் குழாய்ப் புட்டு பற்றி அவரது அம்மா சொன்னதும் சொல்லுவார் - "வெளிநாட்டுக்காரன் நீராவியப் பாத்தா ரயில் உடணும்னு யோசிக்கறான். நம்ம ஆளுகளோ புட்டு அவிக்கலாம் இட்டிலி அவிக்கலாம்னு யோசிக்கறான். எங்கேர்ந்துடா நாம முன்னேற முடியும்?"னு அவருக்கே உரித்தான ஏற்ற இறக்கங்களோடு கேட்பார். அந்தக் காட்சிதான் நினைவில் வந்து போனது.

பிறகு இது குறித்து நண்பர்களோடு பேசிக் கொண்டிருக்கையில் பெண் ஒருத்தி உடல் ரீதியான வளர்ச்சியை பகிரங்கப் படுத்தலின் பின்னாலிருக்கும் தேவைகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் எங்கள் வீட்டில் ஒரு பெண் திருமணத்திற்குத் தயார் என்று ஊராருக்கு அறிவிக்க, அதன் மூலம் அவளுக்கான வரன்கள் தேடி வர என்று காரணங்கள் இருந்திருக்கக் கூடும். அதே நேரத்தில் பால்ய விவாகத்தின் தொடர்ச்சியாக பெண் பருவமெய்தும் முன், திருமணம் செய்து விட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகளும் சில சமூகங்களில் இருந்திருக்கலாம். அதனாலேயே திருமணத்திற்கு முன் பெண் பூப்பெய்துவிட்டால் அதை மறைத்து வைப்பது என்பதும் வழக்கத்திலிருந்திருக்கிறது.

இன்று பிராமண சமூகத்தில் இந்த சடங்கு பெரிதாகக் கொண்டாடப் படாமைக்கு காரணம் வெகு சமீபம் வரை (ஒரு மூன்று தலைமுறைக்கு முன்னால் வரை) பால்ய விவாகப் பழக்கம் வெகு தீவிரமாக அமலில் இருந்ததுதான். பால்ய விவாகம் சட்ட ரீதியாக தடை செய்யப்பட்ட பின் (சாரதா சட்டம் என்று நினைக்கிறேன்) அது வெகுவாக குறைந்திருந்த காலகட்டத்திலும் கூட, சாஸ்திரத்துக்காக பெண்ணின் திருமணத்திற்கு பிறகு முதல் முறை மாதவிலக்கான பின்பே அப்பெண்ணுக்கு சடங்குகள் செய்து பின், சாந்தி முகூர்த்தத்திற்கு ஏற்பாடு செய்வது என்பதும் வெகு காலம் வரை பழக்கத்திலிருந்தது. எனவே அவர்கள் பெண்ணின் பூப்பெய்தல் சடங்கை பெரிய அளவில் கொண்டாடுவதில்லை. அது தவிர்த்துப் பார்த்தால் பெரும்பாலான சமூகங்களில் இந்த சடங்கு கொண்டாடப்பட்டே வந்திருக்கிறது.

அதிலும் குறிப்பாக மாமா, அத்தை போன்றவர்களின் பங்களிப்பு இது போன்ற சடங்குகளில் அதிகமாகவே இருக்கும். அதற்கு காரணம் கண்டுபிடிப்பதொன்றும் பெரிய விஷயமல்ல - பெரும்பாலும் இந்த இரு தரப்புகளிலும் திருமணத்திற்குப் பையனிருந்தால் அங்கேயே முடித்துவிடலாம் என்பதுதான் காரணம். கண்டம் தாண்டியும் மாப்பிள்ளைகளைத் தேடி சலித்துத் தர இணையதளங்கள் உள்ளிட்ட எத்தனையோ வசதி வாய்ப்புகள் உள்ள இன்றோ இந்த சடங்குக்கான தேவைகள் 99% இல்லாது போய்விட்டது. ஆனாலும் இந்த வெற்றுச் சடங்குகளைப் பிடித்துக் கொண்டு தொங்குவதும், அதை தனது செலவு செய்யும் சக்தியை வெளிப்படுத்திக் கொள்ள ஒரு வாய்ப்பாக மாற்றுவதும், வீண் ஆடம்பரமும் வெட்டி ஜம்பமுமன்றி வேறில்லை.

அத்தோடு அந்த பதின்ம வயதுப் பெண் இந்த சடங்குகளின் பின் வெளியே வரும் போது எதிர்கொள்ள வேண்டியிருக்கக் கூடிய சீண்டல்கள் பற்றியெல்லாம் எவ்வித அக்கறையுமற்று இன்னும் எத்தனை நாள் இப்படியெல்லாம் அச்சிறுமிகளை தர்மசங்கடப் படுத்திக் கொண்டிருக்கப் போகிறோம்?

Wednesday, August 27, 2008

இதனால் சகலமானவர்களுக்கும்

ஒரு முக்கிய அறிவிப்பு. அறிவிப்பினை முழுமையாகத் தெரிந்து கொள்ள இங்கேயும் வரலாம்.

பின்னூட்டப் பெட்டி மூடப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை இதன் தொடர்பதிவிலேயே தெரிவித்து விடவும். :)

Wednesday, June 11, 2008

என் திண்ணை நினைவுகள்

திண்ணையைப் பற்றிய பாலபாரதி மற்றும் முத்துலெட்சுமியின் பதிவுகள் எனக்கும் எங்கள் வீட்டின் திண்ணையையும் அதனுடனான எனது சிறுவயது நினைவுகளையும் கொண்டுவந்தது. அதுனால என்னை யாரும் அழைக்கலைன்னாலும் நானும் அழையா விருந்தாளியா கோதாவுல குதிச்சுட்டேன்.

எங்கள் வீட்டின் இருபுறமும் திண்ணையிருந்தாலும் ஒரு புறம் பெரியதாகவும் இன்னொரு புறம் சிறிதாகவும் இருக்கும். மரச்சட்டங்கள் போட்டு அடைத்து வழிநடையில் மட்டும் அதே அளவு சட்டங்களிலான கதவு வைத்திருப்போம். இப்போது வழிநடையில் கூடுதலாக அப்பாவின் மோட்டர் சைக்கிள் ஏற்றுவதற்கான சரிவுப் பாதையும் சேர்ந்திருக்கிறது. இரு திண்ணையிலும் இரண்டு விளக்குப் பிறைகள் உண்டு. மார்கழியில் காலையிலும், கார்த்திகையில் மாலையிலும் இரு அகல் விளக்குகள் அங்கே ஏற்றி வைக்கப்படுவது முன்னெல்லாம் அதாவது என் அம்மா இருந்தவரை வழக்கம். அப்படியே எதாவது துக்க செய்தியோடு கடிதங்கள் வந்தால் அவையும் அங்யே திண்ணையின் ஏதாவது ஒரு மூலையிலேயே சொருகப்பட்டிருக்கும், போய் வந்த பின் உடனடியாக குளிக்கும் முன்னரே கிழித்து வெளியே எறிந்து விடுவார்கள்.

என்னுடைய சிறுவயதில் அவ்வளவாக விளையாட்டுக்கள் இடம்பெற்றிருக்கவில்லை. அம்மாவுக்கு பயம், வீதியில் இறங்கி பெண் அடி ஏதும் பட்டுக் கொண்டுவிட்டால் என்னாவது, எங்கேனும் காணாமல் போய்விட்டால் என்னாவதென்றலாம் அடுக்கடுக்கான பயங்கள். எனவே எனக்கு அனுமதிக்கப் பட்டதெல்லாம் திண்ணையில் அமர்ந்து விளையாடக் கூடிய விளையாட்டுகள் மட்டுமே. தவிரவும் அப்பாவை பார்க்க வருவோரை அமர வைப்பதும் அங்கேதான். அடுத்த நிலையில்தான் வீட்டினுள் முற்றத்தைச் சுற்றியுள்ள தாழ்வாரத்துக்கு அழைத்துச் செல்வது நடக்கும். அறுவடை நாட்களில் நெல்மூட்டையை அன்றன்றே விலைக்குப் போட முடியாது போனால் கொண்டு வந்து இறக்கி வைப்பதும் அங்கேதான்.

எங்கள் தெருவில் இப்போது சமீபத்தில்தான் தார் ரோடு போட்டிருக்கிறார்கள். முன்னெல்லாம் மண் தரையில் மழை நாட்களில் நீர் ஒரே தடத்தில் ஓடி அரித்துவிடுவதால் ஏற்படும் குழிகள் அங்குமிங்குமாக இருக்கும். தெருவின் இருதரப்பிலும் பெண்கள் கூட்டிப் பெருக்கி சாணம் தெளிக்கும் பரப்பு ஒரளவு சமமாக இருந்தாலும் கூட நடுப் பகுதியில் இத்தகைய குழிகள் அதிகமுண்டு. இரவு நேரத்தில் மின்சாரம் நின்று போய்விட்டால் அப்பா உடனடியாக ஒரு அரிக்கேன் விளக்கை ஏற்றிக் கொண்டு போய் திண்ணையில் வைத்து விடுவார். அவர் வீட்டில் இல்லையென்றாலும் நாங்கள் யாராவது அதை ஒரு அனிச்சை செயல் போல உடனடியாகச் செய்து விடுவோம். ஏனென்றால அதை மட்டும் மறந்தால் அப்பாவுக்கு ரொம்பவே கோபம் வரும்.

எல்லாமே நல்ல விஷயமாக ஒருத்தரைப் பற்றியோ இல்லை ஒரு விஷயத்தைப் பற்றியோ சொல்லிவிட முடியுமா என்ன? இந்தத் திண்ணைக்கு இன்னொரு உபயோகமும் உண்டு. மாதவிலக்கு நாட்களின் பகல் நேரத்தில் திண்ணையில்தான் பெண்களுக்கு வாசம். இரவு மட்டும் உள்ளே வந்து ரேழியில் படுத்துக் கொள்ள அனுமதி உண்டு. பெரிய திண்ணையின் மூலையில் பழைய பெட்ஷீட் கொண்டு ஒரு தற்காலிக மறைப்பு ஏற்படுத்தப்பட்டு அதில் ஒரு பாய், தலையணை, கோடை காலத்தில் விசிறி, தண்ணீர் சொம்பு, இத்தோடு மூன்று நாட்களாய் எண்ணெய் காணாத தலை இத்யாதி அலங்காரத்தோடு என் அம்மா, சித்தி(இத்தனைக்கும் கோடை விடுமுறையில் இரண்டு மாதம் வந்து தங்கிப் போகும் நபர் அவர்) என எல்லோரையும் அங்கே பார்த்திருக்கிறேன் நான். குளியலறையும் கழிவறையும் வீட்டின் கொல்லைப் புறத்தில்தான் இருக்கும்.

எனவே வீட்டைச் சுற்றிக் கொண்டுதான் அவர்கள் செல்ல வேண்டும். அதுவும் வீட்டிலிருப்பவர்களுக்கு முதலிலேயே சொல்லிவிட வேண்டும். கதவைத் திறந்து வைத்துக் கொண்டு தண்ணீரும் எடுத்து வைத்து விட்டு காத்திருப்பார்கள். ஏனென்றால் பெண்கள் கிணற்றைத் தொடக்கூடாதே? அப்புறம் சாப்பாடு கொல்லைத் தாழ்வாரத்தில் தட்டுமுட்டு சாமான்களுக்கு நடுவில் பரிமாறப்பட்டு, மோர், எக்ஸ்ட்ரா சாதம் எல்லாம் சிறு கிண்ணங்களில் எடுத்து வைக்கப் பட்டாகிவிடும். இன்னொரு முக்கிய விஷயம் - இப்பெண்களுக்கு சாதம் பரிமாறிய பின் அத்தோடு சேர்த்து சமைக்கப்பட்ட எதுவும் "சேஷம்" என்று குறிப்பிடப்படும். மீதம் என்று பொருள். ரொம்பவும் ஆசாரமானவர்கள் அத்தகைய உணவைத் தொட மாட்டார்கள். ஆப்வியஸ்லி எல்லா மாமியார்களும் நாத்தனார்களும் இவ்வகை ஆசாரமானவர்களாகவே இருப்பார்கள். எனவே மீதமாவதைத் தடுப்பதற்காக பெரும்பாலும் பழையதுதான் இப்பெண்களுக்கு உணவாக இருக்கும். மீந்திருக்கும் பழையது? அடுத்த வேளைக்கு. அவ்ளோதான். தொட்டுக் கொள்ளவும் எதுவும் கிடைக்காது. பின்னே இவர்களுக்கு ஒரு துண்டு ஊறுகாய் தந்தால்தான் ஜாடியில் இருக்கும் மொத்த ஊறுகாயும் சேஷமாகிப், பின் வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி வீணாகிவிடுமே? வயர்லெஸ் முறையில் பரவும் தீட்டெல்லாம் தெரிந்திருக்கிறது பாருங்கள் நம்ம மக்களுக்கு. சரி, இதை வேறு இடத்தில் விலாவாரியாகப் பார்ப்போம். இப்போதைய டாபிக் திண்ணையல்லவா?

அம்மா மெனோபாஸ் நிலையை அடைந்தபின் இக்காட்சிகள் மெதுவாகக் குறைந்து மொத்தமாய மறைந்தது. அடுத்து என் முறை வந்தபோது அம்மா இந்நிலையைத் தொடரவிடவில்லை. என் அத்தைகளின் முணுமுணுப்பு இருந்த போதும் அப்பா அதைக் காதில் போட்டுக் கொள்ளாது முதல் முறையாக அம்மா சொன்னதை ஒத்துக் கொண்டது அநேகமாக இந்த ஒரு விஷயத்தில் மட்டுமே. ஏன்னா சம்பந்தப் பட்டது அவரோட செல்லப் பெண்ணாச்சே. :) கேட்டவங்களுக்கு எல்லாம் அம்மாவின் ஒரே பதில் "பசங்களோட சேர்ந்து படிக்கற ஸ்கூலில் படிக்கறா. கூடப் படிக்கற பசங்க யாராவது பாத்துட்டு கிண்டல் பண்ண ஆரம்பிச்சா தாங்குவாளா?". கோ.எட் பள்ளியில் படித்தது இந்த ஒரு விஷயத்தில் ரொம்பவே உதவியது. எனவே திண்ணையிலிருந்து ரேழி அறை எனக்கான இடமாய் மாற்றப்பட்டது. வீட்டிற்குள்ளாகவே நடந்து செல்லவும் அனுமதிக்கப் பட்டேன். இப்பவும் திண்ணை அதன் வழக்கமான அமைதியோட வருபவர்களுக்கு வரவேற்பரையாகவும், சிறு குழந்தைகளுக்கு விளையாடுமிடமாகவும் தன்னோட சேவையைத் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

Friday, May 02, 2008

பெயரால் வந்த பிரச்சனை

சமீபகாலமாக வலைப் பக்கம் வருவதே அபூர்வமாகி விட்ட நிலையிலும் இந்த விஷயத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ளவில்லையெனில் சிந்து பைரவியில் வரும் ஜனகராஜ் போல தலை நசுங்கினாற் போல தெரிவதாகவும் விரைவில் வெடித்துவிடும் என்பது போலவும் ஒரு பிரமை. அதனால் இந்தப் பதிவு. :)

நான் வேலை செய்யும் நிறுவனமே ஒரு சேமிப்புக் கணக்கை சம்பள பட்டுவாடாவிற்காக ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ஆரம்பித்துக் கொடுத்தது. அத்தோடு சேர்த்து அவர்களிடமே ஒரு கிரெடிட் கார்டெனும் மினியேச்சர் சனிஸ்வர பகவானையும் வாங்கி என் பர்ஸில் குடியேற்றினேன் ஒரு வருடம் முன்பு. பொதுவாகவே யாரேனும் கிரெடிட் கார்டு மூலம் வரும் தொல்லைகள் என்று பட்டியலிட ஆரம்பிக்கையில் அனுதாபத்தோடு அக்கதைகளை கேட்டாலுமே கூட, மனதுக்குள் ஒரு மூலையில் திட்டமிட்டு பயன்படுத்திய தொகையை தவறாது கட்டிவிடுவோமே ஆயின் இதில் என்ன சிக்கல் வந்துவிடப் போகிறது? ஆசையை அடக்கத் தெரியாது கட்டுபாடின்றி செலவழித்து விட்டுப் பின் ஏன் முழிக்க வேண்டும் என்றெல்லாம் நினைத்துக் கொள்வேன்(பெரிய பொம்பிளை புத்தர்னு நினைப்பா என்று நீங்கள் திட்டுவது கேட்கிறது. கொஞ்சம் ஓவர் டோஸ்தான், கண்டுக்காதீங்க) இப்படியெல்லாம் பலவாறாக நினைத்தவாறே அங்கங்கே படித்த சமாளிப்பு முறைகளை அறிவுரையாகக் கூறிவிட்டுப் பின் நகர்ந்து விடுவேன். மனசுக்குள்ளே "பார், இத்தனை வருடங்களாக இதை உபயோகிக்கிறேன், இது வரை ஏதேனும் சிக்கலில் சிக்கியதுண்டா என்ன? எல்லாம் நாம் பயன்படுத்தும் முறையில் இருக்கிறது." என்றெல்லாம் என் கர்வ பலூன் ஒரே சீராக ஒவ்வொரு மாத கட்டணத்தையும் செலுத்தும் போது கொஞ்ச கொஞ்சமாக ஊதப்பட்டுக் கொண்டே வந்தது. அதிலும் உங்களது கணக்கு வழக்குகளின் சிக்கலற்ற தன்மையை கருத்தில் கொண்டு இன்னின்ன சலுகைகள்(மேலும் புது அட்டைகள், கடன்கள் முதலியன) தருகிறோம் என்பதான தொலைபேசி உரையாடல்களை பொதுவாகவே 'எனக்கு விருப்பமில்லை' என்று ஒற்றை வரியில் முடிப்பது என் வழக்கம். அப்படியே உடனே என் மன உறுதியை நானே மெச்சிக் கொள்வதும் உண்டுதான்.

கதைகளிலெல்லாம் 'விதி சிரித்தது' என்று எழுதுகிறார்களே, அந்த விதி என்னைப் பார்த்து சிரியோ சிரி என்று சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் - ஒவ்வொரு முறையும் நான் பெருமைப்பட்டுக் கொண்ட போதெல்லாம். 'நீ யோக்கியமாக இருந்துவிட்டால் மட்டும் உன்னை விட்டுவிடுவேனா என்ன?' என்று என் பர்ஸிலிருந்த சின்ன சனியனும் சேர்ந்து சிரித்துக் கொண்டிருந்தது போலும். மார்ச் மாதம் 20ம் தேதி காலை ஒன்பது மணி போல ஒரு தொலைபேசி அழைப்பு - வழக்கம் போல புது அட்டையோ புது கடனோ தருவதற்காக இல்லை. நான் கட்டாமல் வைத்திருக்கும் அறுபதினாயிரம் ரூபாயை உடனடியாகக் கட்டச் சொன்னார் அந்தப் பெண். "என்ன உளறல் இது?" என்றுதான் உடனடியாக நான் திருப்பிக் கேட்டேன் - ஏனென்றால் அன்றைய நிலைப்படி என் நிலுவைத் தொகை கிட்டத்தட்ட இரண்டாயிரம் ரூபாய்கள் மட்டுமே. அதற்கும் முந்தைய மாதம் எனக்கு வந்த பில்லே 0 ரூபாய்களுக்குத்தான். இப்படித்தான் பெரும்பாலும் என் அட்டை உபயோகம் இருக்கும். பெரும்பாலும் இணையத்தில் புகைவண்டி பயணச் சீட்டுகள், புத்தகங்கள், சில சமயங்களில் சினிமா டிக்கெட்டுகள் போன்றவை வாங்க மட்டுமே இந்த அட்டையை பயன்படுத்துவது என வழக்கம். ரொம்பவே அபூர்வமாக மட்டுமே ஐம்பதினாயிரத்தை தாண்டிய பில்கள் எனக்கு வந்திருக்கின்றன - அதுவும் அவையெல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டு கண்டிப்பாக அந்த மாதத்திலேயே கட்டிவிட முடியுமெனும் போது மட்டுமே செய்வது என் வழக்கம். அப்படியிருக்க, திடீரென வந்து அறுபதினாயிரம் ரூபாய் நீங்கள் கட்ட வேண்டுமென்றதும் நான் ஆடிப் போனேன்.

நிதானித்துக் கொண்டு அந்தப் பெண்ணிடம் பேசியதில் அது என்னுடைய அட்டை எண்ணே இல்லை என்பது புரிந்தது. உடனே என்னுடைய அடையாள அட்டை, ஒட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்களையும் கடைசியாக வந்த கடனட்டைக்கான பில்லையும் எடுத்துக் கொண்டு அவர்கள் அலுவலகத்திற்குச் சென்றேன். அது அண்ணாசாலையில் கருமுத்து சென்ட்டர் என்ற கட்டிடத்தினருகே ஒரு அடுக்கு மாடியில் அமைந்திருந்தது. என்னிடம் பேசிய பெண்ணின் உயரதிகாரி வந்து என்னைச் சந்தித்தார். பேசிய சிறிது நேரத்திலேயே பிரச்சனை புரிபட்டு விட்டது. என் அலுவலகத்திலேயே ஆனால் இன்னொரு கிளையில் லக்ஷ்மி ராஜகோபால் என்கிற பெயரிலேயே ஒரு பெண் வேலை செய்து வந்திருக்கிறார். அலுவலக முகவரியைத் தந்து இவர்களிடம் கடனட்டை வாங்கி நன்றாக உபயோகித்துக் கொண்டிருந்திருக்கிறார். பின்னர் எங்கள் அலுவலகத்திலிருந்து ராஜினாமா செய்து விட்டுப் போகையில் மட்டும் தனது முகவரியை மாற்ற மறந்துவிட்டார் போல, பாவம். இந்த இடத்தில் எனக்கு என் அப்பா அடிக்கடி சொல்லும் ஒரு எடுத்துக் காட்டு நினைவுக்கு வருகிறது. யாரேனும் வயதானவர்கள் கடைசிப் படுக்கையில் இருக்கையில் தன் மக்களை அழைத்து தனக்கு வர வேண்டிய கடன்களைச் சொன்னால் எல்லோரும் வெகு சிரத்தையாக அதை குறித்துக் கொள்ளத் தொடங்குவார்கள். அதே அவர் தான் தர வேண்டிய கடன்களைச் பட்டியலிட ஆரம்பித்தால் வயதானதால் வரும் உளறல் என்று சுற்றியிருப்போர் கண்டு கொள்ளாது சென்று விடுவர் என்று வேடிக்கையாகச் சொல்வார் என் அப்பா. இதே பெண்மணி வேலையை விட்டும், ஊரை விட்டும் போகையில் தன் சேமிப்புக் கணக்கிலிருக்கும் பணத்தை விட்டுச் சென்றிருப்பாரா என்ன? சரி, விஷயத்துக்கு வருவோம். அந்தப் பெண்ணின் முகவரியில் ஆள் இல்லை, அந்த தொலைபேசி எண் வேலை செய்யவில்லை, சரி அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்த கடனட்டைப் பிரிவினருக்கு வந்த அற்புத யோசனை - அதே பெயரில் வேறு ஏதேனும் கடனட்டை இருக்கிறதா என்று பார்ப்பது. அதே பெயரில், அதே அலுவலகத்தில் வேலை செய்யும் ஒரு பலியாடு பட்டியலில் தட்டுப் படவே ஒரே அமுக்கு . இதுதான் நடந்திருக்கிறது.

பெயரையும் அலுவலகத்தையும் தவிர இரு அட்டைதாரருக்கும் வேறு எந்த சம்பந்தமும் இல்லை - பிறந்த தேதியிலிருந்து, அடையாளத்துக்காக தந்த ஒட்டுனர் உரிமத்தின் எண் வரை வேறு எதுவுமே ஒத்துப் போகவில்லை. இது எதையுமே பார்க்காது தொலைபேசியில் அழைத்து எந்தவிதமான சந்தேகமும் இன்றி அதட்டலான தோரணையில் "ஏன் இன்னும் நீங்கள் பணத்தை கட்டவில்லை?" என்று கேள்வி வேறு. நான் அந்த அலுவலரிடம் சொன்னேன், "சற்றே இதய பலவீனமுள்ள யாரிடமேனும் நீங்கள் இது போல பேசியிருந்தால் இந்நேரம் அவர் போய்ச் சேர்ந்திருப்பார். இது எதையுமே யோசியாது ஏன் இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் வேலை செய்கிறீர்கள்?" என்று. ஏதேதோ சால்ஜாப்புகள், சப்பைக் கட்டுகள் சொன்னார். பின் எழுத்து மூலம் உங்கள் புகாரை கொடுத்துவிடுங்கள், மேற்கொண்டு இது தொடர்பாக உங்களுக்கு எந்த பிரச்சனையும் இருக்காது என்று சொன்னார். சரியென்று எழுதிக் கொடுத்துவிட்டு அலுவலகம் சென்றேன். அதன் பிறகு எதுவும் தொலைபேசி அழைப்புகள் இல்லாததால் பிரச்சனை முடிந்துவிட்டது போல என்று எண்ணியிருந்தேன்.

இந்த மாதம் எனது கடனட்டைக்கான கட்டணக் கடிதத்தை எதிர்நோக்கியிருந்தவளுக்கு அடுத்த அதிர்ச்சியை அள்ளி வழங்கியது ஐசிஐசிஐ - சன்டேன்னா ரெண்டு மாதிரி வந்தது ரெண்டு கட்டணக் கடிதம். அந்தப் பெண்ணின் கடனட்டையில் என் முகவரியையே நிரந்தரமாக மாற்றி ஒட்டியாயிற்று போலும். இதில் ஒரே ஒரு ஆறுதலான விஷயம் என்னவென்றால், அந்தப் பெண் இடையில் பகுதி தொகையைக் வங்கிக்குச் செலுத்தியிருக்கிறார். எனவே ஏமாற்றும் எண்ணம் இல்லை என்பதுதான். வாடிக்கையாளர் சேவைக்கான எண்ணை அழைத்து ஒன்று இரண்டு என வரிசைப் படுத்தி பாடச்சொல்லி படாய்ப் படுத்தும் தடைகளையெல்லாம் தாண்டி யாரேனும் ஒரு நபரைப் பிடித்து பிரச்சனையை ஆதௌ கீர்த்தனாம்பரத்திலிருந்து எடுத்துச் சொல்லி விளங்க வைத்து முடித்த பின் அந்த நபர் அப்பாவியாய் கேட்பார், "நான் என்னங்க செய்யணும் இதுக்கு?" என்று. அப்படியே கத்திரி வெய்யிலில் தீ மிதிக்கப் போனது போன்ற பரவசம் உடலெங்கும் வழிய பொறுமையை இழுத்துப் பிடித்துக் கொண்டு "அய்யா/அம்மா, நான் அவள் இல்லை. இல்லவே இல்லை. எனவே அந்த அட்டையில் இருக்கும் என் முகவரியையும், தொலைபேசி எண்ணையும் மாற்றுங்கள்" என்று கெஞ்சியதும் அந்த நபர் பெருந்தன்மையோடு "சரிங்க, இதற்கான ஒரு சர்வீஸ் ரிக்வெஸ்ட் போட்டுடறோம்" என்று பெரிய மனது பண்ணிச் சொல்வார்கள். ஆனால் அந்த சர்வீஸ் ரிக்வெஸ்ட்டின் எண் மட்டும் மறந்தும்ம் தந்துவிட மாட்டார்கள். உங்களுக்கு அது குறுஞ்செய்தியில் வரும் என்று ஒரே பதிலுடன் அழைப்பு துண்டிக்கப் படும். காத்திருந்து காத்திருந்து கண் பூக்க , திரும்பவும் ஒன்று இரண்டு மூன்று என வரிசைப் படுத்திப் பாடாய்ப் பட ஆரம்பிப்பேன். அதே முடிவு. இரண்டு நாளில் என் செல்பேசியில் எண்கள் எல்லாமே கொஞ்சம் மங்கலாக ஆனது போலத் தோன்றுகிறது.

சரி, இது சரிவராது என்று அடுத்தகட்ட முயற்சியாக அந்த வங்கியின் இணைய தளத்தின் மடலனுப்பும் வசதியை உபயோகித்து மேலாளருக்கு இந்தப் பிரச்சனையை ஆதியோடந்தமாக விளக்கி ஒரு மடலனுப்பினேன். என்ன பதில் வந்திருக்குமென்று நினைக்கிறீர்கள்? "நீங்கள் குறிப்பிட்டுள்ள எண்ணுடைய அட்டையின் கட்டண விவரங்கள் லக்ஷ்மி என்பவரால் பெற்றுக் கொள்ளப் பட்டாயிற்று." இதுதான் அந்த பதில். மறுபடி ஒரு மடல் அனுப்பினேன் - "மடல்களை இப்படிக் கூட ஒருவரால் படிக்க முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் சொல்லும் அந்த கட்டணக் கடிதத்தை பெற்றுக் கொண்ட லக்ஷ்மி என்கிற துரதிர்ஷ்டசாலி அடியேந்தான். எனக்கும் அந்த அட்டைக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பதைத்தான் விளக்கிக் கொண்டிருக்கிறேன் எனது தொடர்ச்சியான முறையீடுகளில். இது உங்களுக்கான எனது மூன்றாவது எழுத்து மூலமான முறையீடு. இதற்கும் பலனில்லையெனில் நான் சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதிருக்கும்." இந்த கடைசி மடலை மட்டும் யாரோ ஒரு சாதாரன பொது அறிவுடைய மகானுபாவன் பார்த்திருக்கிறார் போல - பெரிய மனது வைத்து ஒரு சர்வீஸ் ரிக்வெஸ்ட் ஏற்படுத்தி அதை எனக்கு அனுப்பியுள்ள பதில் மடலில் குறிப்பிட்டிருக்கிறார். மேலும் ஐந்து நாட்களுக்குள் இது குறித்து நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உறுதியளித்திருக்கிறார். பார்ப்போம், என்ன நடக்கிறதென்று.