Showing posts with label பெண்ணியம். Show all posts
Showing posts with label பெண்ணியம். Show all posts

Saturday, April 04, 2009

பெண்களின் அடிமைத்தனம் - தீர்வு

முன் எச்சரிக்கை: தன்னைத் தானே MCP என்று அறிவித்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு இக்கடிதத்தை படிக்காமலிருப்பது நல்லது.

அன்புள்ள ஏகாம்பரி,

உங்கள் பிரிய தோழியும் ஆல்ட்டர் ஈகோவுமான உஷாக்கா உங்களுக்கு எழுதின கடித்ததை எனக்கு ஃபார்வேர்ட் செய்திருந்தீர்கள். படித்து மகிழ்ந்தேன். என்ன இருந்தாலும் தேர்ந்த இலக்கியவாதியல்லவா? கடித இலக்கியத்தில் அது ஒரு புது அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அக்கடிதத்தின் மையக் கருத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை என்பதை தாழ்வன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இல்லற பாடத்திலும், இலக்கியத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட உஷாக்காவின் கருத்தை மறுத்துப் பேசுவதாக எண்ண வேண்டாம். கட்டற்ற சுதந்திரம் தரும் இணையத்தை பாவிப்பதில் உள்ள சுகமே யாரும் எதையும் மறுக்கலாம், உல்ட்டா அடி அடிக்கலாம், அதற்கு எந்தத் தகுதியும், தராதரமும் தேவையில்லை என்பதுதானே? அதை நாம் மட்டும் பயன் படுத்தவில்லையென்றால் எப்படி?

நிற்க(எழுந்தெல்லாம் நின்று விடாதீர்கள், இது கடித மரபில் ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றிற்கு தாவும் முன் போடுகிற ஸ்பீட் ப்ரேக்). ஆண்கள் சமைப்பதில் உள்ள சங்கடங்களை எல்லாம் (அவர்களுக்கு அல்ல, நமக்கு) யக்கா அழகாக பட்டியலிட்டிருந்தார். அதில் எதையும் நான் மறுக்கவில்லை, எங்கள் வீட்டிலும் அத்தகைய களேபரங்கள் அவ்வப்போது நடக்கிறது என்ற இமாலய உண்மையை மறைகக்வுமில்லை. ஆனால் இதற்கெல்லாம் பயந்து புதுயுகப் பெண்களான நாம் பின்வாங்கினோமென்றால், அப்புறம் ஆண்களுக்கு மணி கட்டுவது பின் யார்?

இவ்விடத்தில் பினாத்தலார் என்கிற பிரபல பதிவர் ஒரு முறை எழுதிய பதிவொன்றினை நினைவுபடுத்த விரும்புகிறேன். wifology வரிசையில் வேலை செய்யாமல் தப்பிக்க அதை எவ்வளவு மோசமாக செய்ய முடியுமோ, அவ்வளவு மோசமாகச் செய்வதையும் ஒரு டெக்னிக்காக அடுக்கியிருந்தார். அவரின் ஃபேவரைட் ஐட்டமான உப்புமா செய்வதையே உதாரணமாகக் கொண்டு இந்த டெக்னிக்கை அழகாக விளக்கியிருந்தார். http://penathal.blogspot.com/2007/11/4-wifeology.html இதொன்றும் அவரது புது கண்டுபிடிப்பல்ல தோழி... காலகாலமாய் இந்த ஆண்கள் நம்மைப் போன்ற பெண்களை ஏமாற்ற பயன்படுத்தி வரும் மாபெரும் சதி நடவடிக்கைதான் அது. நாமும் கூட இதில் ஏமாந்துபோய், போதும் சாமி சமைச்சது என்று சொல்லிவிட்டால் அவர்கள் எல்லாம் உள்ளுக்குள் “இது, இது, இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்” என்று களித்துக் கும்மாளமிடுவார்களே தோழி? விடலாமா இந்த அக்கிரமத்தை நடத்த?

முதலில் உஷாக்கா செய்த ஒரு மாபெரும் தவறைச் செய்வதை நீ கனவிலும் நினைக்காதே – அதாவது ஆரம்பக் காலங்களில் அவர்களை நம் கண்மறைவில் சமைக்க அனுமதிப்பது. ஊருக்குப் போகையில் கிச்சனுக்கு ஒரு நல்ல godrej பூட்டாகத் தேடிப் பார்த்து பூட்டி, சாவியை நமது அம்மாக்களைப் போல தாலிச் சங்கிலியில் கோர்த்துக் கொண்டு போவது நலம். இங்கே ஒரு முறை என் வீட்டுக்காரார் நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தாமதாமய் வந்த ஒரு நன்னாளில் Magie நூடுல்ஸ் செய்வதாகச் சொல்லி பாத்திரம் ஒன்றையும்,அதை விட கொடுமையாக புத்தம் புது எலக்ட்ரிக் ஸ்டவ்வையும் சேர்த்துக் கருக்கியது நினைவுக்கு வந்து என் கண்ணில் நீர் ததும்பச் செய்கிறது. நமது பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இது போன்ற விபத்துக்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடப்பதுதான் என்றாலும், அதற்காக நாம் சோர்ந்துவிடக் கூடாது. அதை விட முக்கிய விஷயம், அந்தப் பதற்றத்தில் கூட தவறியும் "அய்யோ, இதுக்குதான் உங்களை கிச்சன் பக்கமே விடறதில்லை, இனி இந்தப் பக்கம் வரவே கூடாது" என்கிற நம் தலையில் நாமே மண்வாரி போட்டுக்கொள்கிற டயலாகை மட்டும் சொல்லிவிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்க.

இது போன்ற சந்தர்ப்பங்களில் "நீங்க பரவால்லப்பா, நான் சமைக்க ஆரம்பிச்ச புதுசுல வெந்நீர் போடறதுக்கே பாத்திரத்தை கருக்கியிருக்கேனாக்கும்" அப்படின்னு சும்மாவாச்சுக்கும் சொல்லி வைக்க வேண்டும். ஆனால் மறக்காமல் அந்தப் பாத்திரத்தை தேய்க்கும் வேலையை அன்னாரின் தலையிலேயே கட்டி விட வேண்டும்.

"எனக்கெல்லாம் கை அழுந்தாதுப்பா, நீங்களே இந்த ஒரு பாத்திரத்தை மட்டும் தேய்ச்சுருங்க ப்ளீஸ்" என்று சொல்லிவிட வேண்டும். இரண்டு நிமிடம்தான் முயற்சி நடக்கும். உடனே இதை தூக்கி போட்டுட்டு வேற வாங்கித்தரேனேம்மா என்கிற ஆசை வார்த்தைகள் வரும்தான். ஆனால் வைராக்கியமாக அதைத் தாண்ட வேண்டும்.

இப்படி மறுக்க இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பிரச்சனையின் தீவிரம் அவர்களுக்குப் புரியாமல் போவது. இரண்டாவது, மற்றும் முக்கிய காரணம் அந்த வாக்குறுதியெல்லாம் தேர்தல் வாக்குறுதி போலத்தான். தீய்ந்த பாத்திரத்தை தூக்கிப் போடுவது மட்டும்தான் நடக்குமே ஒழிய, புது பாத்திரம் ஒரு நாளும் வராது. சும்மா அந்த நேரத்துப் பிரச்சனையின் தீவிரத்தை தணிக்கப் பயன்படும் ஒரு சின்ன சமாதானமே அந்த புது பாத்திரம் வாக்குறுதி.

எனவே சற்றும் மனந்தளராது, அம்மா வாங்கித் தந்தது, இல்லை முதன் முதலாக இந்த வீட்டில் வாழ்கைப்பட்டு வந்த (அந்த துரதிர்ஷ்ட தினத்தில்) பால் காய்ச்சியது என்று எதாவது ஒரு சென்ட்டிமென்ட்டை அதன் தலையில் கட்டி, எப்படியேனும் அதை தேய்க்க வைத்துவிட வேண்டும். ஒரு முறை தீய்த்தால் அதை தேய்ப்பது எவ்வளவு சிரமம் என்பது புரிந்து விட்டால் அடுத்த முறையிலிருந்து அந்த ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். இப்படியே சமையலறை மேடையை சுத்தம் செய்வதையும் பழக்கி விட்டோமேயானால் தீர்ந்தது பிரச்சனை.

வேலையை அவர்கள் தவிர்க்க முடியாத நிலையில் கொண்டு வந்து நிறுத்தும் முக்கிய ஆயுதம் நமது பாராட்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை, இது என்னங்க பெரிய விஷயம், நானெல்லாம் சமைக்க ஆரம்பிச்சப்ப என்று ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்க வேண்டும். பொறுமையிலும், விடா முயற்சியிலும் விக்ரமாதித்தனை பின்பற்ற வேண்டும்.

ஒரு மாதம் தொடர்ந்து இது போன்ற அஹிம்சா மார்க்கத்தை கடைபிடித்துப் பார்த்தும் தேறவில்லையென்றால்.... பிறகென்ன நமக்கு வாய்ச்சது அவ்ளோதான் என்று கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதான். ஆனால் இந்த துக்கத்திலும் ஒரு நன்மை உண்டு - அதற்கப்புறம் நமது சமையலின் எந்தக் குறையையும் பற்றி பேசும் உரிமை நமது இல்லத் தலைவருக்கு கனவிலும் கிடையாது என்பதை இமைப்பொழுதும் மறப்பாதிருப்பீராக...

அப்புறம் ஊருக்கெல்லாம் இவ்வளவு உபதேசம் சொல்கிறாயே, உன் வீட்டுக் கதையென்ன கண்மணி என்று கேட்கிறாயா தோழி? @#$%^&^%$#&*@#$%^&^%$#&*&^%$#!@#$%^%$#&^%$#!@#$%^%$# வேறென்னத்த சொல்ல!

அன்புடன்,
லக்ஷ்மி

Thursday, September 18, 2008

படித்ததில் பிடித்தது - தொடுவானம் தொட்டுவிடும் தூரம்

இது திண்ணை இணையதளத்தில் வந்த ஒரு மொழிபெயர்ப்புத் தொடர்கதை. மிகவும் பிடித்தமானதாக இருப்பதால் இங்கே அதன் அனைத்து பாகங்களுக்கான சுட்டியையும் சேமித்து வைக்கிறேன். வெறும் சுட்டிகள் மட்டுமே என்பதால் எதும் காப்பிரைட் பிரச்சனைகள் வராதென்றே நம்புகிறேன்.

இக்கதை பற்றிய விமர்சனம்/கருத்து எதுவும் இங்கே நான் சொல்வதாயில்லை. சொன்னாலும் யாரும் மதிக்கறதில்லைங்கறது வேற விஷயம்னு வைங்க. :) படிக்க நினைக்கறவங்களுக்கு தேடும் சிரமம் இல்லாம ஒரே இடத்துல எல்லா அத்தியாயமும் இருந்துட்டுப் போகட்டுமேன்னுதான் இந்த முயற்சி.

கதையின் பெயர்: தொடுவானம் தொட்டு விடும் தூரம்
ஆசிரியர்: Volga {P.Lalithakumari}
தமிழாக்கம்: கௌரி கிருபானந்தன்
மூலக்கதையின் மொழி: தெலுங்கு

Part-1
Part-2
Part-3
Part-4
Part-5
Part-6
Part-7
Part-8
Part-9
Part-10
Part-11
Part-12
Part-13
Part-14
Part-15
Part-16
Part-17
Part-18
Part-19

Tuesday, January 08, 2008

குடிப்பதே சிறப்பென்றோமா?

காலம் காலமாக கேட்கப் பட்டு வரும் அதே கேள்வி -பொண்ணுங்களும் சிகரெட் குடிச்சு, தண்ணி அடிச்சு கண்டவனோட சுத்தி சீரழிஞ்சு போறதுதான் விடுதலையா? நாம யாரும் நம்ம கூட்டத்துல இருக்கறவங்கதான் இப்படி தப்பான கருத்தச் சொல்லிட்டாங்களோ - அதாவது பெண்களும் சிகரெட் குடிப்பதும், தண்ணி அடிப்பதும், கண்டவனோட போறதும்தான் பெண் விடுதலைன்னு சொல்லிட்டாங்களோன்னு சுத்தி சுத்தி தேடினாலும் அப்படியெதுவும் கிடைக்காது. எங்கயாவது ஒன்னு ரெண்டு பேர் ஒரு பெண் சிகரெட் குடிக்கும் போது அதை சிகரெட் உடல் நலத்துக்கு தீங்கானதுன்னு மட்டும் சொன்னாப் போதாதா, ஒரு பொண்ணா இருந்துகிட்டு நீ சிகரெட் பிடிச்சா எங்க பண்பாடு என்ன ஆகுறதுன்னு கேட்பது ஆணாதிக்கத் திமிரின் வெளிப்பாடுன்னு சொல்லியிருப்பாங்க. அதுலேர்ந்து இந்த ஒரு வாதத்தை - அதாவது பெண் உரிமை பேசுறவங்க எல்லாம் சிகரெட் குடிக்கவும் தண்ணி அடிக்கவும் கண்டவனோட படுத்து எழுந்திருக்கவும்தான் உரிமை கேக்கறாங்கன்ற வாதத்தை டெரிவ் பண்ணி வச்சுகிட்டு என்ன கேட்டாலும் இதுக்குத்தான் திரும்ப திரும்ப விளக்கம் கொடுப்பாங்க. அட என்னடா இது, கேக்காத கேள்விக்கு ஏன் பதில் சொல்றாங்க, நாம கேக்கற விஷயத்தைப் பத்தி ஏன் எதுவுமே பேச மாட்டேங்கறாங்கன்னெல்லாம் நாம யோசிச்சு குழம்பி கொஞ்சம் சைலன்ட் ஆயிடுவோமா, உடனே பாத்தியா, கேட்ட கேள்விக்கு அவிங்களுக்கு பதில் சொல்லத்தெரியல பத்தியா? இந்தப் பெண்ணுரிமையப் பத்திப் பேசுறவயங்க எல்லாம் இப்படித்தான்ப்பா, அரைகுறைங்க... புடலங்காப் பொரியல் செய்யத்தேன் லாயக்குன்னு ஒரு முத்திரய நம்ம மேல பசக்குனு குத்திபுட்டு அடுத்த ஆள்கிட்டப் போயி அதே தண்ணி, சிகரெட், ப்ளா... ப்ளாவை ஆரம்பிச்சுடுவாய்ங்க...

இந்த மாதிரி நாம சொல்லாத விஷயத்தை நம்ம மேல ஏத்திப் பேசும் டெக்னிக்கை பலகாலமா எல்லோரும் உபயோகிச்சுகிட்டேதான் இருக்காங்க. கவிதாயினி, முத்தமிழ் வித்தகி, திருமதி. கனிமொழி கருணாநிதி, எம்.பி அவர்கள் எழுதின ஒரு கட்டுரை நினைவுக்கு வந்தது (யப்பா, எதுனா பட்டத்தை விட்டிருந்த பின்னூட்டத்துல சொல்லிடுங்கப்பா, திருத்திடறேன். நம்ம நாட்டு அரசியல்வாதிகள் இன்ஷியல தவறுதலா மாத்தி போட்டா டென்ஷன் ஆகறதை விட அதிகமா பட்டங்கள் விட்டுப் போயிட்டா டென்ஷன் ஆகிடுவாங்க. அக்கா முழுசா அந்த லெவலுக்கு போயிட்டாங்களா இல்லையான்னு தெரியலன்னாலும்கூட எதுக்கு ரிஸ்க்? ஆட்டோல்லாம் அனுப்பினா தாங்க மாட்டேன் நான். அதுனால நமக்குள்ள என்ன பிரச்சனை இருந்தாலும் அதையெல்லாம் மறந்து இந்த விஷயத்துல மட்டும் ஹெல்ப் மீ ப்ளீ.......ஈஈஈஸ்.) இது வந்து அவங்க இந்தியா டுடேல பத்தி எழுதிகிட்டிருந்தப்ப எழுதின கட்டுரை. 'கறுக்கும் மருதாணி' அப்படின்னு ஒரு புத்தகமாவும் வந்திருக்கு.

சமூகப் பிரச்சினைகளைப் பற்றி ஆர்வமும் அக்கறையும் உள்ள பலர் ஆதங்கத்தோடும் தார்மீகக் கோபத்தோடும் சமூக சீரழிவுகளைப் பற்றிப் பேசுவார்கள். ஆனால் அவர்களே பெண் விடுதலை, பெண்கள் முன்னேற்றம் என்பது பற்றிப் பேசும்போது சுயதணிக்கை ஒன்றை உருவாக்கிக் கட்டுப்பாடு, எல்லைகள் என்பதற்கு முன்னுரிமை தரத் தொடங்கிவிடுவார்கள்.

பெண்களுக்கு இடத்தைக் கொடுத்தால் அவர்கள் மடத்தைப் பிடித்துவிடுவார்கள் என்ற பயம் இவர்களை அரித்துக் கொண்டே இருக்கிறது. பெண்கள் முன்னேற்றம் பற்றிப் பேசிய சீர்திருத்தவாதிகள் கூட பெண்களின் விடுதலை என்பதும் அவர்களின் உரிமைகள் என்பதும் சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்கவேண்டும் என்கிறார்கள். மனித உரிமை என்பது சில வரையறைகளுக்கு உட்பட்டதாக இருக்க வேன்டுமென்பதைப் பற்றி இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், மனித உரிமையில் ஆணின் உரிமை வேறு; அதன் சதவீதம் வேறு. பெண் சற்றுக் குறைந்த சதவீதத்திற்கே பாத்தியதை உள்ளவள் எனும் போதுதான் பிரச்சனைகள் தோன்றுகின்றன.

பொதுவாகப் பெண்விடுதலை என்றால் பலருக்கு குட்டையாக வெட்டப்பட்ட தலைமுடி, உதட்டுச் சாயம், ஜீன்ஸ் அல்லது குட்டை ஸ்கர்ட், கையில் வர்ஜீனியா ஸ்லிம்ஸ் அல்லது ஏதோ ஒரு மதுவகை - இப்படி ஒரு தோற்றம்தான் கண் முன் விரிகிறது.

பெண் விடுதலையைப் பற்றி என்னிடம் பேசும் பலர் அடிக்கடி கேட்கும் கேள்வி, "பெண் விடுதலை எல்லாம் சரி, ஆனால் விடுதலை என்கிற பெயரில் குடிப்பது, சிகரெட் பிடிப்பது இதெல்லாம் சரியா?" இந்தக் கேள்வியை எத்தனை முறை சந்தித்திருக்கிறேன் என்று சொல்ல முடியாது.

பெண் விடுதலை என்பது உடை, உணவு அல்லது சில பழக்கவழக்கங்களுக்குள் சுருங்கி விடும் சிறிய விஷயம் இல்லை. பெண் தன் வாழ்க்கையை தன் விருப்பபடி தீர்மானிக்கும் உரிமை. தனது லட்சியங்களை அடைய அவள் செய்ய வேண்டிய தியாகங்களைத் தீர்மானிக்கும் உரிமை. தனது வாழ்க்கையைத் தானே வாழும் உரிமை.

குடிப்பதும் புகைப்பது தனிமனித விருப்பம். அந்தப் பழக்கங்களுக்கு அடிமையாவது என்பது உடல் நலத்தைப் பாதிக்கக்கூடியது. இதற்கும் பெண் விடுதலைக்கும் என்ன சம்பந்தம்? குடிப்பதும் புகைப்பதும்தான் எங்கள் தலையாய உரிமை; இதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம் என்று எந்தப் பெண்ணியவதி சொல்லிக் கேட்டிருக்கிறார்கள் இவர்கள்? இந்த 21ஆம் நூற்றாண்டிலும் பெண் சிசுக் கொலை நடக்கிறது. கல்வி என்பது பல பெண்களின் எட்டாத கனவாகவே இருக்கிறது. வரதட்சிணை ஒழியவில்லை. இதையெல்லாம் கருத்தில் கொள்ளாது பெண் விடுதலையைப் புகை வட்டத்துக்குள் சிலர் அடக்க நினைப்பது வேடிக்கை.

இந்தியாவில் ஆண்டுதோறும் கள்ளச் சாராயத்தால் இறந்து போவோரின் எண்ணிக்கை 3000க்கும் மேல். இதில் கணிசமான அளவு பெண்களும் அடங்குவர். இவர்களில் எத்தனை பேரின் காதுகளில் பெண் விடுதலை என்ற வார்த்தை ஒரு முறையேனும் விழுந்திருக்கும் சாத்தியம் உள்ளது?

மேல்தட்டு வர்க்கத்து விருந்துகளில் கலந்துகொள்ளும் பல பெண்கள் 'சோஷியல் டிரிங்கர்ஸ்.' இவர்களில் எத்தனை பேருக்குத் தங்களின் உரிமை பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது?

ஆந்திராவில் - குறிப்பாக ராஜமுந்திரி போன்ற பகுதிகளில் - பெண்கள் எரியும் சுருட்டின் எரியும் பக்கத்தை வாயின் உட்புறமாக வைத்துப் புகைப்பார்கள். இவர்கள் வேலையை முடித்துவிட்டு இப்படிப் புகைத்துக்கொண்டே பெண் விடுதலை பற்றியும் பேசுகிறார்களா? பேசினால் நன்றாகத்தான் இருக்கும்.

சில அன்பான ஆண்கள் இதற்குக் கூறும் காரணம்: நாங்கள்தான் தவறான வழியில் போய் கெட்டுச் சீரழிந்து போகிறோம்; நீங்களும் அதையேன் செய்ய வேண்டும்? இந்த அக்கறை என்னைக் கண் கலங்கச்செய்துவிட்டது. கர்ப்பகிரகத்திலுள்ள விக்கிரகங்கள் கீழே இறங்கி வர எப்படி அனுமதிக்க முடியும்? அவை பாதுகாக்கப்பட வேண்டியவையாயிற்றே?

"...என் அரை
முதுநீர்ப் பாசி அன்ன உடைகளைந்து,
திருமலர் அன்ன புதுமடிக் கொளீஇ,
மகிழ்தரல் மரபின் மட்டே அன்றியும்,
அமிழ்தன் மரபின் ஊனதுவை அடிசில்
வெள்ளி வெண்கலத்து ஊட்டல் அன்றி..."
(பாடியவர்: ஒளவையார்;
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி;
திணை: பாடாண்)


முதுபாசி போன்ற என் உடை களைந்து, புதுமடி உடுத்தச் செய்து, மகிழ்வு தரும் கள்ளும் மாமிசச் சாதமும் வெள்ளிக் கலத்தில் அதியமான் ஊட்டினான் என்கிறார் ஒளவையார்.

“சிறியகட் பெறினே, எமக்கீயும்;மன்னே
பெரியகட் பெறினே,
யாம் பாடத் தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே...”

(பாடியவர்:ஒளவையார்
பாடப்பட்டோன்: அதியமான் நெடுமான் அஞ்சி.)

சிறிய அளவு மதுவைப் பெற்றால் எனக்கு அளித்திடுவான். பெரிய அளவு மதுவைப் பெற்றால் யாம்பாட, அதை எமக்கு அளித்துத் தானும் உண்பான்.


இந்த அடிப்படையில் ஒளவையாரும் பெண்ணியவாதியாகிறார் என்றா, அவரைப் பெரிய மனதோடும் பேருவகையோடும் பெண்ணியவாதிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

எழுதியவர்: கனிமொழி