Saturday, April 04, 2009

பெண்களின் அடிமைத்தனம் - தீர்வு

முன் எச்சரிக்கை: தன்னைத் தானே MCP என்று அறிவித்துக்கொள்பவர்கள் மேற்கொண்டு இக்கடிதத்தை படிக்காமலிருப்பது நல்லது.

அன்புள்ள ஏகாம்பரி,

உங்கள் பிரிய தோழியும் ஆல்ட்டர் ஈகோவுமான உஷாக்கா உங்களுக்கு எழுதின கடித்ததை எனக்கு ஃபார்வேர்ட் செய்திருந்தீர்கள். படித்து மகிழ்ந்தேன். என்ன இருந்தாலும் தேர்ந்த இலக்கியவாதியல்லவா? கடித இலக்கியத்தில் அது ஒரு புது அத்தியாயம் என்றே சொல்ல வேண்டும். ஆனாலும் அக்கடிதத்தின் மையக் கருத்துடன் என்னால் ஒத்துப் போக முடியவில்லை என்பதை தாழ்வன்புடன் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். இல்லற பாடத்திலும், இலக்கியத்திலும் பழம் தின்று கொட்டை போட்ட உஷாக்காவின் கருத்தை மறுத்துப் பேசுவதாக எண்ண வேண்டாம். கட்டற்ற சுதந்திரம் தரும் இணையத்தை பாவிப்பதில் உள்ள சுகமே யாரும் எதையும் மறுக்கலாம், உல்ட்டா அடி அடிக்கலாம், அதற்கு எந்தத் தகுதியும், தராதரமும் தேவையில்லை என்பதுதானே? அதை நாம் மட்டும் பயன் படுத்தவில்லையென்றால் எப்படி?

நிற்க(எழுந்தெல்லாம் நின்று விடாதீர்கள், இது கடித மரபில் ஒரு விஷயத்திலிருந்து இன்னொன்றிற்கு தாவும் முன் போடுகிற ஸ்பீட் ப்ரேக்). ஆண்கள் சமைப்பதில் உள்ள சங்கடங்களை எல்லாம் (அவர்களுக்கு அல்ல, நமக்கு) யக்கா அழகாக பட்டியலிட்டிருந்தார். அதில் எதையும் நான் மறுக்கவில்லை, எங்கள் வீட்டிலும் அத்தகைய களேபரங்கள் அவ்வப்போது நடக்கிறது என்ற இமாலய உண்மையை மறைகக்வுமில்லை. ஆனால் இதற்கெல்லாம் பயந்து புதுயுகப் பெண்களான நாம் பின்வாங்கினோமென்றால், அப்புறம் ஆண்களுக்கு மணி கட்டுவது பின் யார்?

இவ்விடத்தில் பினாத்தலார் என்கிற பிரபல பதிவர் ஒரு முறை எழுதிய பதிவொன்றினை நினைவுபடுத்த விரும்புகிறேன். wifology வரிசையில் வேலை செய்யாமல் தப்பிக்க அதை எவ்வளவு மோசமாக செய்ய முடியுமோ, அவ்வளவு மோசமாகச் செய்வதையும் ஒரு டெக்னிக்காக அடுக்கியிருந்தார். அவரின் ஃபேவரைட் ஐட்டமான உப்புமா செய்வதையே உதாரணமாகக் கொண்டு இந்த டெக்னிக்கை அழகாக விளக்கியிருந்தார். http://penathal.blogspot.com/2007/11/4-wifeology.html இதொன்றும் அவரது புது கண்டுபிடிப்பல்ல தோழி... காலகாலமாய் இந்த ஆண்கள் நம்மைப் போன்ற பெண்களை ஏமாற்ற பயன்படுத்தி வரும் மாபெரும் சதி நடவடிக்கைதான் அது. நாமும் கூட இதில் ஏமாந்துபோய், போதும் சாமி சமைச்சது என்று சொல்லிவிட்டால் அவர்கள் எல்லாம் உள்ளுக்குள் “இது, இது, இதைத்தானே நான் எதிர்பார்த்தேன்” என்று களித்துக் கும்மாளமிடுவார்களே தோழி? விடலாமா இந்த அக்கிரமத்தை நடத்த?

முதலில் உஷாக்கா செய்த ஒரு மாபெரும் தவறைச் செய்வதை நீ கனவிலும் நினைக்காதே – அதாவது ஆரம்பக் காலங்களில் அவர்களை நம் கண்மறைவில் சமைக்க அனுமதிப்பது. ஊருக்குப் போகையில் கிச்சனுக்கு ஒரு நல்ல godrej பூட்டாகத் தேடிப் பார்த்து பூட்டி, சாவியை நமது அம்மாக்களைப் போல தாலிச் சங்கிலியில் கோர்த்துக் கொண்டு போவது நலம். இங்கே ஒரு முறை என் வீட்டுக்காரார் நான் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு தாமதாமய் வந்த ஒரு நன்னாளில் Magie நூடுல்ஸ் செய்வதாகச் சொல்லி பாத்திரம் ஒன்றையும்,அதை விட கொடுமையாக புத்தம் புது எலக்ட்ரிக் ஸ்டவ்வையும் சேர்த்துக் கருக்கியது நினைவுக்கு வந்து என் கண்ணில் நீர் ததும்பச் செய்கிறது. நமது பாதுகாப்பு ஏற்பாடுகளையும் மீறி இது போன்ற விபத்துக்கள் ஆரம்ப கால கட்டத்தில் நடப்பதுதான் என்றாலும், அதற்காக நாம் சோர்ந்துவிடக் கூடாது. அதை விட முக்கிய விஷயம், அந்தப் பதற்றத்தில் கூட தவறியும் "அய்யோ, இதுக்குதான் உங்களை கிச்சன் பக்கமே விடறதில்லை, இனி இந்தப் பக்கம் வரவே கூடாது" என்கிற நம் தலையில் நாமே மண்வாரி போட்டுக்கொள்கிற டயலாகை மட்டும் சொல்லிவிடக் கூடாது என்பதையும் நினைவில் கொள்க.

இது போன்ற சந்தர்ப்பங்களில் "நீங்க பரவால்லப்பா, நான் சமைக்க ஆரம்பிச்ச புதுசுல வெந்நீர் போடறதுக்கே பாத்திரத்தை கருக்கியிருக்கேனாக்கும்" அப்படின்னு சும்மாவாச்சுக்கும் சொல்லி வைக்க வேண்டும். ஆனால் மறக்காமல் அந்தப் பாத்திரத்தை தேய்க்கும் வேலையை அன்னாரின் தலையிலேயே கட்டி விட வேண்டும்.

"எனக்கெல்லாம் கை அழுந்தாதுப்பா, நீங்களே இந்த ஒரு பாத்திரத்தை மட்டும் தேய்ச்சுருங்க ப்ளீஸ்" என்று சொல்லிவிட வேண்டும். இரண்டு நிமிடம்தான் முயற்சி நடக்கும். உடனே இதை தூக்கி போட்டுட்டு வேற வாங்கித்தரேனேம்மா என்கிற ஆசை வார்த்தைகள் வரும்தான். ஆனால் வைராக்கியமாக அதைத் தாண்ட வேண்டும்.

இப்படி மறுக்க இரண்டு காரணங்கள் உண்டு. முதல் காரணம் பிரச்சனையின் தீவிரம் அவர்களுக்குப் புரியாமல் போவது. இரண்டாவது, மற்றும் முக்கிய காரணம் அந்த வாக்குறுதியெல்லாம் தேர்தல் வாக்குறுதி போலத்தான். தீய்ந்த பாத்திரத்தை தூக்கிப் போடுவது மட்டும்தான் நடக்குமே ஒழிய, புது பாத்திரம் ஒரு நாளும் வராது. சும்மா அந்த நேரத்துப் பிரச்சனையின் தீவிரத்தை தணிக்கப் பயன்படும் ஒரு சின்ன சமாதானமே அந்த புது பாத்திரம் வாக்குறுதி.

எனவே சற்றும் மனந்தளராது, அம்மா வாங்கித் தந்தது, இல்லை முதன் முதலாக இந்த வீட்டில் வாழ்கைப்பட்டு வந்த (அந்த துரதிர்ஷ்ட தினத்தில்) பால் காய்ச்சியது என்று எதாவது ஒரு சென்ட்டிமென்ட்டை அதன் தலையில் கட்டி, எப்படியேனும் அதை தேய்க்க வைத்துவிட வேண்டும். ஒரு முறை தீய்த்தால் அதை தேய்ப்பது எவ்வளவு சிரமம் என்பது புரிந்து விட்டால் அடுத்த முறையிலிருந்து அந்த ரிஸ்க் எடுக்க மாட்டார்கள். இப்படியே சமையலறை மேடையை சுத்தம் செய்வதையும் பழக்கி விட்டோமேயானால் தீர்ந்தது பிரச்சனை.

வேலையை அவர்கள் தவிர்க்க முடியாத நிலையில் கொண்டு வந்து நிறுத்தும் முக்கிய ஆயுதம் நமது பாராட்டு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எவ்வளவு மோசமாக இருந்தாலும் பரவாயில்லை, இது என்னங்க பெரிய விஷயம், நானெல்லாம் சமைக்க ஆரம்பிச்சப்ப என்று ஃப்ளாஷ்பேக் ஆரம்பிக்க வேண்டும். பொறுமையிலும், விடா முயற்சியிலும் விக்ரமாதித்தனை பின்பற்ற வேண்டும்.

ஒரு மாதம் தொடர்ந்து இது போன்ற அஹிம்சா மார்க்கத்தை கடைபிடித்துப் பார்த்தும் தேறவில்லையென்றால்.... பிறகென்ன நமக்கு வாய்ச்சது அவ்ளோதான் என்று கண்ணையும் மூக்கையும் துடைத்துக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டியதுதான். ஆனால் இந்த துக்கத்திலும் ஒரு நன்மை உண்டு - அதற்கப்புறம் நமது சமையலின் எந்தக் குறையையும் பற்றி பேசும் உரிமை நமது இல்லத் தலைவருக்கு கனவிலும் கிடையாது என்பதை இமைப்பொழுதும் மறப்பாதிருப்பீராக...

அப்புறம் ஊருக்கெல்லாம் இவ்வளவு உபதேசம் சொல்கிறாயே, உன் வீட்டுக் கதையென்ன கண்மணி என்று கேட்கிறாயா தோழி? @#$%^&^%$#&*@#$%^&^%$#&*&^%$#!@#$%^%$#&^%$#!@#$%^%$# வேறென்னத்த சொல்ல!

அன்புடன்,
லக்ஷ்மி

Wednesday, April 01, 2009

பக்தி வாங்கலியோ பக்தி

கடந்த 10 அல்லது 15 வருடங்களுக்குள்ளாக நடந்த எவ்வளவோ மாற்றங்களில் ஒன்றுதான் கோவில்களில் முண்டியடிக்கும் கூட்டம். சமீபத்துல ரொம்ப பாப்புலரா இருக்கற சில நம்பிக்கைகள் லிஸ்ட் யோசிச்சுப் பாத்தேன். தலை சுத்திப் போகவே பாதில நிறுத்திட்டேன்.

"பிரதோஷத்தன்னிக்கு சாமியோட சேர்ந்து பிரகார வலம் வந்தால் ரொம்ப நல்லதாம்."

"ராகு காலத்துல துர்க்கைக்கு எலுமிச்சை பழ மூடில விளக்கு போட்டால் நல்லது. (டிப்ஸ் :- சமையலில் செய்வதற்கு உல்ட்டாவா ஜூசை புழிஞ்சு கீழ விட்டுடணும், வெறும் மூடிய மட்டும் கவுத்து அகலா கன்வர்ட் பண்ணிக்கணும்)"

"ஞாயித்து கிழமை ராகுகாலத்துல சரபேஸ்வரர் பூஜைய பாத்தா நல்லது"

"ஆஞ்சநேயருக்கு வெத்திலை மாலை கட்டி போட்டால் வெற்றி நிச்சயம்"

"தக்ஷிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சாத்தி, மஞ்சள் வஸ்திரமும் சாத்தணும்."

"ஆஞ்சநேயருக்கு வடை/வெத்திலை மாலை போடணும். வென்ணெய் சாத்தணும்"

கார்த்திகை சோமவாரம் (அட.. அதாங்க! திங்கள் கிழமை) - சிவனுக்கு, மாசி செவ்வாய் - வைத்தீஸ்வரன் கோவில் தையல்நாயகி அம்மனுக்கு, ஆடி/தை வெள்ளி எல்லா அம்மன்களுக்கும் பொதுவானது, புரட்டாசி சனி - நம்ம எழுமலையானுக்கு, ஆவணி ஞாயிறு - சூரியனுக்கு இப்படி சில காம்பினேஷன்கள் ரொம்ப விசேஷம்னு சொல்றாங்க.

இந்த லிஸ்ட்டில் புதனும், வியாழனும் பாவம் இப்போதைக்கு 'ஞே'ன்னு முழிச்சுகிட்டு நிக்குதுங்க (இல்ல எனக்குத்தான் அந்த விவரங்கள் தெரியலையோ என்னவோ). இன்னும் ஆறு மாசம் பாக்கி இருக்குல்ல? கூடிய சீக்கிரத்துல அதுல எதையாவது ரெண்டு மாசத்தை இந்த ரெண்டு நாளோடயும் கூட கோத்து விட்டுடுவாங்க சில மகானுபாவர்கள். அப்புறம் அந்த மாச- கிழமை காம்பினேஷனுக்கு எதாவது ரெண்டு சாமிய அசைன் பண்ணிட்டா போச்சு. அதான் முப்பத்து முக்கோடி தெய்வங்கள் இருக்காங்களே நம்மகிட்ட.

அப்புறம் சில சாமிகளுக்கு சில விசேஷ தினங்கள் மாசாமாசம் வரும்.

சங்கடஹர சதுர்த்தி - பிள்ளையாருக்கு.
பிரதோஷம் - சிவனுக்கு
சஷ்டி - முருகனுக்கு
ஏகாதசி - விஷ்ணுவுக்கு (இதும் மாசா மாசம் வரும், மார்கழில வரது மட்டும் வைகுண்ட ஏகாதசின்னு க்ராண்டா கொண்டாடுவாங்க)

அப்புறம் வருஷாந்திர நோன்புகள்/கொண்டாட்டங்கள் இந்த லிஸ்ட்டெல்லாம் போட்டால் தாங்காது. ஏதோ இதெல்லாம் இன்னிக்கு நேத்திக்கு புதுசா முளைச்ச சாமியார்களோட உபதேசப் பொன்மொழிகள் இல்லை. இதெல்லாமே காலங்காலமா புழங்கிக்கொண்டிருக்கற நம்பிக்கைகள்தான். ஆனா இப்ப இந்த நம்பிக்கைகள் பரப்பப்படுவதும், நடைமுறைப் படுத்தப் படுவதும் ரொம்பவே அதிகளவுல இருக்கு. முன்னாடியெல்லாம் இது போன்ற நம்பிக்கைகள் தெரிஞ்சாலும்/இருந்தாலும் எல்லாரும் எப்பவும் இதையே தொழிலா எடுத்துகிட்டு அலைஞ்சதில்லை.

ஒரு மனுஷனுக்கு அளவுக்கு அதிகமான சோதனைகள் வரும்போது பாட்டி/தாத்தா/மாமான்னு யாராவது ஒருத்தர் கூப்பிட்டு உக்காரவச்சு, நீ இந்த சாமிய வேண்டிக்கோ, இன்ன விரதம் இரு, இல்லை இன்ன கிழமைல தொடர்ந்து விளக்கேத்து, உன் ப்ரச்சனையெல்லாம் சரியாயிரும்னு சொல்லுவாங்க. சம்பந்தப்பட்டவரும் பெரியவங்க வாக்கை பெருமாள் வாக்கா நினைச்சு, அந்த விரதத்தை/ நேர்த்திக் கடனை நம்பிக்கையோட செய்வாங்க. கஷ்டம் சரியானதும் அதை நிப்பாட்டிட்டு, நாலு பேர்ட்ட தாத்தா சொன்னபடி விளக்கேத்தினேன், எல்லாக் கஷ்டமும் போயிருச்சுன்னு சந்தோஷமா சொல்லுவாங்க. செஞ்சவரோ/இதைக் கேட்டவங்களோ உடனே அந்தக் கோவிலே கதின்னு படையெடுக்க மாட்டாங்க - இதை மனசுக்குள்ள குறிச்சு வச்சுகிட்டு அதே போன்ற பிரச்சனைகளை சந்திக்கற இன்னொருத்தரை பாக்கையில் இதே மாதிரியான அட்வைச சொல்லுவாங்க. அதாவது அப்ப முதலில் மனித முயற்சி, அதை மீறின சிக்கல்கள் வரும் போது மட்டும் கடவுளிடம் வேண்டுதல் செஞ்சுக்கறதுன்னு ஒரு வழி முறை இருந்ததால இது போன்ற வேண்டுதல்கள் எல்லாம் ஒரு அளவோட இருந்தது.

அதே போல ஒருசில ஊர்க் கோவில்களுக்கு கிடைக்கும் திடீர் பாப்புலாரிட்டியையும் குறிப்பிட்டாக வேண்டும்.

'அம்மா' போய் யாகம் செய்ததில் பிரசித்தி பெற்ற அய்யாவாடி ப்ரத்யங்கரா தேவி கோவிலைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீங்க. தஞ்சையை அடுத்த சிற்றூரான எங்கள் ஊரில் ஒரு சிவன் கோவில். ராமேஸ்வரத்தில் உள்ள சிவன் கோவிலுக்கான கதையேதான் எங்க ஊர் சிவன் கோவிலுக்கும் சொல்லுவாங்க. அதாவது ராவணனைக் கொன்ன பிரம்மஹத்தி தோஷம் போக ஒரு குறிப்பிட்ட சிவலிங்கத்தை கொண்டு வரச்சொல்லி அனுமனை அனுப்ப, அவர் வரத் தாமதமாகவே அதற்கு பதிலாக 108 லிங்கங்களை மணலில் சீதை பிடித்துத் தர அதையே பூஜித்து ராமன் தனது தோஷ நிவர்த்தியை முடித்து விட்டாராம்.

எங்கள் ஊர்க் கோவிலில் கூடுதல் விசேஷமாக அந்த 107 லிங்கங்களும் தனியே பிரகாரத்தின் ஒரு புறத்தில் பிரதிஷ்டை செய்யப் பட்டிருக்கும். மூலவரான ராமலிங்க சுவாமியையும் சேர்த்து 108 லிங்கங்கள் கோவிலுக்கு உள்ளே. கோவிலுக்கு வெளியே அனுமன் சற்றே லேட்டாக கொண்டு வந்த லிங்கமும் தனியே உண்டு. அம்பாள் பெயர் கூட ராமேஸ்வரம் கோவினுடையதைப் போலவே பர்வதவர்த்தினி தான். கோவிலின் இந்த விசேஷமெல்லாம் ஏதோ ஒரு சில உள்ளூர்க்காரர்களுக்கும், கோவிலின் குருக்களுக்கும் மட்டுமே தெரிஞ்ச ரகசியமாத்தான் இருந்தது கொஞ்ச நாள் முன்பு வரை. ஆனா திடீர்னு ஒரு நாள் நான் கல்லூரிக்குப் போனபோது என் வகுப்பு மாணவர்களில் ஒரு சிலர் என்கிட்ட வந்து இந்த விவரங்களையெல்லாம் சொல்லி, அப்படியான்னு கேட்டப்ப நான் குழம்பி போயிட்டேன். ஏன்னா அப்படி கேட்ட மாணவர்கள் ஒன்னும் பெரிய பக்தி பழங்கள்லாம் இல்லை. என்னடா இது, பசங்க ரூட் மாறுதேன்னு குழம்பி போய் கூப்பிட்டு கேட்டா அப்பத்தான் விஷயம் வெளிய வருது. முந்தின வாரத்துல ஒரு நாள் ஐஸ்வர்யா ராய் அந்தக் கோவிலுக்கு வந்து எதோ பரிகார பூஜை பண்ணிட்டு போனாங்களாம். அதான் பசங்களோட ஜெனரல் நாலெட்ஜ் பயங்கரமா இம்ப்ரூவ் ஆகியிருந்திருக்கு. :)))

இப்படி ஆசாமிகளால் பிரசித்தமாகும் சாமிகள் ஒரு பக்கம்னா, ஸ்பெஷலைசேஷன் மூலம் ஹிட்டாகுற கோவில்கள் சிலது இருக்கு. உதாரணமா திருமணஞ்சேரி, திருவிடந்தை போன்ற இடங்களில் இருக்கும் கோவிலுக்குப் போய் சில பூஜைகளை செய்தால் உடனே கல்யாணம் நடக்குமாம். திருக்கருகாவூர் போன்ற ஸ்தலங்கள் பிள்ளைப் பேறு கிடைக்க. அப்படி பிறந்த பிள்ளைக்கு நல்ல கல்வி கிடைக்க கூத்தனூர் போய் வித்தியாப்பியாசம் ஆரம்பிக்கணும். இன்னும் செல்வ வளம், தொழில் சிறக்க, எதிரிகளை அழிக்கன்னு விதவிதமாய் ஸ்பெஷலிஸ்ட்டுகள் தமிழ்நாடு முழுக்க வியாபிச்சிருக்கறதா தகவல்.

இதுவும் கூட முன்னாடி எப்போதுமில்லாம புதுசா இப்ப பரவியிருக்கற நம்பிக்கைகள் இல்லை. ஆனா இப்ப மட்டும் ஏன் இப்படி ஒவ்வொரு ஊர்லயும் கூட்டம் குமியுதுன்னு புரியலை. இதெல்லாத்தையும் விட ரொம்ப பெரிய ப்ரச்சனை ஒன்னு – புற்றீசல் போல கிளம்பியிருக்கற ஹைடெக் சாமியார்களின் போதனைகளும், அவங்களோட அடிப்பொடிகளும். இந்த கடைசி விஷயம் மட்டுமே பல பதிவுகளில் எழுதலாம் – அவ்ளோ ஏமாத்து வேலைகளும், காமெடிகளும் நடந்துகிட்டிருக்கு இதுல. தனியா ஒரு நாள் இதை பத்தி எழுதணும்.

யோசிச்சுப் பாத்தா இதுக்கெல்லாம் ஒரு காரணம்னு எனக்குத் தோணறது இன்னிக்கு இருக்கற போட்டி நிலமை - சர்வைவல் அஃப் ஃபிட்டஸ்ட் அப்படின்ற தத்துவம் - வலியதே வாழும்னு தமிழ்ல வச்சுக்கலாம் - அதுதான் இன்னிக்கு உலகத்துல எல்லாத் துறையிலும் தாரக மந்திரமா இருக்கு.

வெறும் மனித யத்தனம் மட்டும் இதுக்கு போதுமோ இல்லையோன்ற பயம் எல்லாருக்குள்ளயும் இருக்கு. அதோட விளைவுதான் இது மாதிரியான கோவில்களுக்கும், பரிகார பூஜைகளுக்கும், எந்திரத் தகடுகள் விற்பனைக்கும், சாமியார்களோட ப்ரெயின் வாஷ் கூட்டங்களுக்கும் மக்கள் பலாப்பழத்தை மொய்க்கிற ஈக்கூட்டமா அலைபாய காரணமா அமையுதுன்னு தோணுது.

சாதாரண படிப்பு, சாதாரணமான ஒரு சம்பளம், அதுக்கேத்த மிதமான ஓட்டமுள்ள ஒரு வாழ்கைய இன்னிக்கு யாராவது டார்கெட் பண்றாங்களான்னு பாத்தா நிச்சயமா இல்லை. பிரபல பள்ளியோட அப்ளிகேஷன் ஃபார்முக்கான க்யூவுல விடிய விடிய நின்னு அப்ளிகேஷனை வாங்கி வந்து நிரப்பி அனுப்பினாலும், வெறும் எல்.கே.ஜிக்கே 60 லேர்ந்து 80 ஆயிரம் வரை ஃபீஸ் கட்டத் தயாரா இருந்தாலும் கூட சீட் கிடைக்குமான்றது நிச்சயமில்லைன்னு சொல்லும் போதுதான் அந்த பெற்றோர் அப்ளிகேஷனையும் அனுப்பிட்டு அப்படியே மேல் மருவத்தூர் ஆத்தாவுலேர்ந்து ஆரம்பிச்சு கன்யாகுமரில இருக்கற ஆத்தா வரைக்கும் ஒருத்தர் விடாம எல்லார்ட்டையும் ஒரு வேண்டுதலையும் போட்டு வைக்கறாங்க.

ஏன் இவ்ளோ டென்ஷன், அரசுப் பள்ளியில கொண்டு போய் அழகா சேர்த்துடலாமேன்னு நாம நினைக்கலாம். ஆனா அப்படி சேர்த்து அதுனால நாளைக்கு அந்தப் குழந்தையால முன்னுக்கு வர முடியாம போயிருச்சுன்னா, "துள்ளித் திரியும் வயதிலே என் துடுக்கையடக்கி (ஒரு நல்ல தனியார் !!!)பள்ளிக்கு அனுப்பிடாத பாதகா"ன்னு அந்தக் குழந்தை நாளைக்கு நம்மை பாத்து கேட்டுருமோன்னு பெற்றோர் பயப்பட வேண்டியிருக்கு. ஏன்னா சுத்தி இருக்கற எல்லாரும் அவங்கவங்க குழந்தைகளை அப்படியான உசத்தியான பள்ளிக் கூடத்துல சேத்திருக்காங்க. நாளைக்கு அவங்கல்லாம் நேரா அங்கேர்ந்து அப்படியே ஐ.ஐ.டிக்கு போகையில் இவங்க பிள்ளை மட்டும் ஒரு கவர்ன்மென்ட் காலேஜ்ல பி.காமோ இல்லை பி.ஏவோ முடிச்சுட்டு அடுத்து என்னான்னு புரியாத குழப்பத்தோட நின்னால் இவங்களால அத தாங்கிக்க முடியுமா?

எல்.கே.ஜி சேக்கையிலேயே அந்த குழந்தைக்கு ஐஐடில சேரணும்னு வெறியேத்தினாதான் குறைஞ்சது ஒரு சாதாரண பொறியியல் கல்லூரிலயாவது சேர முடியும். இப்படி ஏகப்பட்ட peer pressure… எல்லா விஷயத்திலும் இதேதான் பிரச்சனை. நாம போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு வாழ நினைச்சாலும் சுத்தி எல்லாரும் ஜொலிக்கையில் ஒரு வேளை நாமதான் முட்டாள்தனமா நடந்துக்கறோமோன்னு சந்தேகம் வந்துருதில்லையா?

நிர்வாண ஊர்ல ஆடை கட்டினவங்க பைத்தியம்னு சொல்றா மாதிரி… அந்த மாதிரி பலவீனமான தருணங்களுக்காகவே காத்திருந்து நம்மை சுண்டியிழுக்கற விளம்பரங்கள் நம்மை ராக்ஷச நுகர்வு வளையத்துல சிக்க வச்சுட முடியும். அப்புறமென்ன, அதுக்கு தகுந்த வருமானம் வேணும். இல்லைன்னா பர்சனல் லோன், கார் லோன், ஹவுசிங் லோன் என சகலமான லோன்களும், கிரெடிட் கார்டுகளும் – அத்தனை சுமையையும் ஒரே மூச்சில் தூக்கி சுமக்க சராசரி மனிதனுக்கு கடுமையான போதை ஒன்று தேவையாக இருக்கிறது.

இன்று ஆன்மிகம் அந்த இடத்தை மிகச்சரியாக குறிவைத்து அடைந்துவிட்டது (இந்த இடத்தில் வாலி படத்தில் ஏகப்பட்ட வியாதிகளுக்கு விவேக்கிடம் ஒரு இளைஞர் மருந்து கேட்கும் காட்சி நினைவுக்கு வருகிறது). அதன் விளைவுதான் கோவில்களில் நீளும் க்யூவும், சாமியார்களிடம் போய் ஏமாந்து நிற்கும் ஏமாளிகளின் எண்ணிக்கையும் கூட முக்கிய காரணம். எல்லோருக்கும் அதிக செலவில்லாத, ஒரே தரத்திலான கல்வி (அதுவும் கட்டாயக் கல்வி), சமமான, உத்ரவாதமான வேலை வாய்ப்பு – இதெல்லாம் கிடச்சுட்டா திரும்பவும் பழயபடி நிதானமான போக்கு எல்லாருக்கும் வந்துரும்னு நம்பறேன். எல்லாம் வல்ல இறைவனிடம் அந்த அற்புதம் விரைவில் நடக்க வேண்டிக் கொள்ளுங்கள். :)