அவள் விகடனின் இந்த இதழில் இப்படி ஒரு கட்டுரை வந்திருக்கிறது - அளவு கடந்த சுதந்திரம் பெண்களை சீரழிக்கிறதா என்பது அதன் தலைப்பு.
சமீபத்தில் சென்னையில் ஒரு விழா மேடையில், "அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது..". என்றும் "பன்னாட்டு நிறுவனக்களில் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் பெறும் பெண்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலைக்குப் போகிறது" என்றும் சொல்லியிருக்கிறார் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜகதீசன். மத்திய அமைச்சர்... அதுவும் ஒரு பெண் தலைவர்... வெளியிட்டுள்ள இந்தக் கருத்தின் உள் அர்த்தங்களைச் தேடி, ஒரு அரோக்கியமான விவாதத்தை துவங்கி வைத்தோம்..
இப்படி ஆரம்பிச்ச கட்டுரைல சில பெண்களிடம் கருத்து கேட்டிருந்தாங்க. அவங்களும் கருத்து சொல்லியிருந்தாங்க. எல்லாம் சரி. சுப்புலட்சுமி அம்மாவோட இந்த கருத்து வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் நடத்தை கெட்டு போனவங்கன்னு காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் சொன்னதுக்கு எந்த விதத்துல குறைஞ்சதுன்னு எனக்கு தெரியலை. சொன்னவங்க ஒரு பொண்ணுன்றதாலயே இத பெரிய விஷயமா எடுத்துக்க வேண்டியதில்லயா என்ன? அந்த பத்திரிக்கையே சொல்வது போல ஒரு பெண் தலைவர் அதுலயும் சமூக நீதித்துறைக்கு அமைச்சரா இருக்கிறவர் இப்படி பேசுவது எந்த விதத்துலயும் ஏத்துக்க கூடியதில்லை. இதுக்கு மேல அவங்க இன்னொரு விளக்கமும் கொடுத்திருக்காங்க. சமீபத்துல புனேல நடந்த போதை விருந்துல பெண்களும் மாட்டினதுனால இந்த சமூக சீரழிவை பத்தி கவலைப்பட்டதாகவும் அதுனாலதான் இப்படி பேசினதாகவும் சொல்லியிருந்தாங்க.
இவங்க சொல்ற இரண்டு விஷயமுமே தப்பா இருக்கு. முதல் விஷயம் பணம் நிறைய சம்பாதிக்கறவங்க கெட்டுப்போறாங்கன்றது. இதை இரண்டு பாலினத்தவருக்கும் பொதுவாக வைத்துப்பார்த்தாலே ரொம்ப அபத்தமான கற்பிதமாகத்தான் இருக்கும். போதைப்பொருள் புழக்கம்ன்றது, சமூகத்தில் எல்லா தட்டுக்களிலும் அவங்கவங்களோட பொருளாதார வசதிக்கேத்த உருவத்துல இருக்கு. ஆக, 50 ஆயிரத்துக்கு மேல சம்பாதிச்சா போதைக்கு அடிமையாயிடுவாங்கன்னு குதிக்கறதெல்லாம் ரொம்ப அபத்தமா இருக்கு.
அடுத்தது பெண்களுக்குத்தானே அதிக பிரச்சனை வரும் அதுனால அவங்கதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அப்படின்ற வாதம். இது வந்து நம்ம டி.ஆர் அவரோட படங்கள்ள, தங்கச்சிங்க கிட்ட சொல்லுவாரே - முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேல முள்ளு விழுந்தாலும் கிழியப்போறதென்னவோ சேலைதாம்மான்னு, அந்த ரகம். அதிக பிரச்சனைன்றாங்களே அது என்னனு பார்த்தால் - அந்த நிலைல பெண்களை உடல் ரீதியான பலாத்காரத்துக்கு உட்படுத்திட்டா என்ன செய்ய முடியும்ன்றதுதான் இவங்களோட முக்கிய கவலை. என்னவோ போதைல இருக்கறப்ப மட்டும்தான் இந்த பாலியல் பலாத்காரங்கள் நடந்துடற மாதிரி பேசுவதை பார்த்தால் என்ன சொல்றதுன்னே தெரியலை. இப்போ போதைல இருக்கும் ஒரு பையனிடம் பர்ஸை திருடிட்டு அவனை அடித்து போட்டுவிட்டு போனால் அவனுக்கு என்ன பாதிப்பு இருக்குமோ அதே போல ஒரு பெண்ணின் இந்த பிரச்சனையும் பார்க்கற எண்ணம் சமூகத்துல எல்லாருக்கும் வந்துட்டாலே போதுமே எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமே, அதையேன் யாருமே யோசிக்கறதில்லை?
அவங்களோட இந்த கருத்தை இன்னொரு விதமா பார்க்கலாம். பொதுவாவே ஏதாவது ஒரு துறைல அதிக அதிக பணப்புழக்கமோ அல்லது அதிக புகழ் கிடைப்பதற்கான வாய்ப்போ இருந்தால் அந்த துறையின் மீதான சமூகத்தின் பார்வை கொஞ்சம் கடுமையடைஞ்சுடறது வாடிக்கை. இதுக்கு மிகச்சிறந்த உதாரணம் சினிமா. அந்த துறையின் பணப்புழக்கமும் அது கொடுக்கற புகழும் மத்தவங்களை எவ்வளவும் எரிச்சலடைய வச்சிருக்குன்றதை பத்திரிக்கைகள் அவங்களை பத்தி வெளியிடற கிசுகிசுக்களை வச்சே தெரிஞ்சுக்கலாம். வாரமலர் கிசுகிசுக்களை எப்பவாவது படிச்சிருக்கீங்களா? அதுல அவங்க நடிகர்களை குறிப்பிடும் விதமே அவங்களோட வயத்தெரிச்சலோட அளவை காமிச்சுடும். அது போல இப்போ சமூகம் மென்பொருள் துறையையும் பார்க்க ஆரம்பிச்சுட்டதுக்கான அறிகுறிகள் பத்திரிக்கை செய்திகளிலிருந்து ஒரு ஆட்டோ ஒட்டுனர்களின் அடாவடியான பேச்சுக்கள் வரை எல்லாத்துலையும் நல்லாவே தெரியுது. சமீபத்துல ஒரு பதிவர் என்னவோ நாரயணமூர்த்தியும் அஸிம் ப்ரேம்ஜியும் ஒவ்வொரு க்யூபிக்கலுக்கும் வந்து ஊத்திக்கொடுத்துட்டு போறா மாதிரி ஒரு பதிவு போட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தார். இப்போ இந்த அம்மா பேசும் தொனி கூட அப்படித்தான் இருக்கு.
முன்னாடியெல்லாம் பெண்கள் நர்சிங், ஆசிரியப்பணி என்று ஒரளவு நல்ல வருவாய் தரும் அதே நேரத்தில் தங்களின் தனித்துவமென்று நம்பவைக்கப்பட்ட தியாக/சேவை உணர்வுகளை விட்டு விடாத வேலைகளை பெரும்பான்மையாக செய்து வந்த போது வராத எதிர்ப்பு இப்போது வருவதன் காரணம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். பொருளாதார ரீதியில் மிக அழுத்தமாக காலூன்ற உதவும் அதே நேரத்தில் தங்கள் ஆளுமையையும் ஆண்களுக்கு இணையானதாக எல்லா விதத்திலும் (வேலை நேரத்திலிருந்து எதிலும் இந்த துறையில் பெண் என்பதற்காக தனி சலுகையெல்லாம் கிடைக்காது) வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் இந்தத்துறையில் பெண்களின் எண்ணிக்கை கூடுவது ஒரு நல்ல சமூக மாற்றத்துக்கான அறிகுறி. எப்பவுமே மாற்றங்கள் ஆரம்பிக்கும் போது இந்த மாதிரி புலம்பல்கள் சகஜம்தான். நாம இதையெல்லாம் உதறித்தள்ளிட்டு போக வேண்டிய தொலைவு அதிகம்.
Tuesday, March 27, 2007
Monday, March 19, 2007
நம்பிக்கை - 2
தொண்டையை வறளச்செய்யும் இந்த தாகம் பயமுறுத்தினாலும்
தூரத்தில் தெரியும் நீர்பரப்பு
கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாய்
உயிர் தரித்திருக்கிறேன் இன்னமும்.
தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும்
என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னும் சற்று நேரமேனும் நான் உயிர் வாழ விரும்புகிறேன்.
தூரத்தில் தெரியும் நீர்பரப்பு
கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாய்
உயிர் தரித்திருக்கிறேன் இன்னமும்.
தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும்
என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னும் சற்று நேரமேனும் நான் உயிர் வாழ விரும்புகிறேன்.
Thursday, March 15, 2007
நம்பிக்கை
எழுப்பிய தாயின் மேல் எரிந்து விழுந்துவிட்டு
போர்வைக்குள் புதைந்துகொண்டு
கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல்
இன்னமும் நம்புகிறேன்
நீ மீண்டும் வருவாயென.
போர்வைக்குள் புதைந்துகொண்டு
கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல்
இன்னமும் நம்புகிறேன்
நீ மீண்டும் வருவாயென.
Monday, March 12, 2007
கையெட்டும் தூரம்
உதிரத்தொடங்கிவிட்ட சுவற்றுச்சுண்ணாம்பு
காட்டுகின்ற தெளிவற்ற ஓவியமாய்
மாறியபடியிருக்கின்றன என் முடிவுகள்.
பெரியதொரு பந்தில் விழுந்த ஊசித்துளை வழி
ஒரு சீராய் குறைகின்ற காற்றுப்போல்
இறங்கியே வருகிறது என் மனவுறுதி.
உன் பார்வை எறும்புகள் ஊர்ந்ததில்
நம்மிடையிலான பாறைத்தடைகள் தகர்கின்றன.
நம்மிருவருக்கும் இப்போது
அப்படியொன்றும் இடைவெளி அதிகமில்லை.
காட்டுகின்ற தெளிவற்ற ஓவியமாய்
மாறியபடியிருக்கின்றன என் முடிவுகள்.
பெரியதொரு பந்தில் விழுந்த ஊசித்துளை வழி
ஒரு சீராய் குறைகின்ற காற்றுப்போல்
இறங்கியே வருகிறது என் மனவுறுதி.
உன் பார்வை எறும்புகள் ஊர்ந்ததில்
நம்மிடையிலான பாறைத்தடைகள் தகர்கின்றன.
நம்மிருவருக்கும் இப்போது
அப்படியொன்றும் இடைவெளி அதிகமில்லை.
Subscribe to:
Posts (Atom)