Monday, July 16, 2007

படித்ததில் பிடித்தது (4)

புத்தகம் - ஒற்றன்
ஆசிரியர் - அசோகமித்திரன்
வகை - நாவல்
முதல் பதிப்பு - நவம்பர், 1985
சமீபத்திய பதிப்பு - டிசம்பர், 2005
பதிப்பகம் - காலச்சுவடு

நான் சுலபமாய் வகை நாவல் என்று போட்டு விட்டேன். ஆனால் படிக்கையில் இதை நாவல் என்றோ, இல்லை பயணக் கட்டுரைத் தொடர் என்றோ சுலபத்தில் வகைப் படுத்திவிட முடிவதில்லை. சொல்லப்போனால் இதன் படைப்பாளியே கூட முதல் பதிப்பிற்கான முன்னுரையில் "இப்படைப்பை வகைப்படுத்துவதில் சிறிது தயக்கம் இருக்கத்தான் செய்தது. தமிழுக்குப் புதிதான அந்த அமைப்புக்கு ஒரளவு அருகாமையில் இருக்கும் புனைகதை வடிவம் நாவல்தான் - ஒரு நாயகன், ஒரு களம் (ஐக்கிய அமெரிக்கா), ஒரு கால கட்டம்(1973 - 1974)." என்றே குறிப்பிடுகிறார். அந்த முன்னுரையில் மறக்கவியலா ஒரு வரி "மனமிருந்தால் யாவரும் கேளிர் என்பதுதான் எவ்வளவு சாத்தியமானது!" (இந்த வரிகளை படிக்கையில் நம்ம தமிழ்மண வாசகர்களுக்கு ஒரு பெருமூச்சு நிச்சயம் :) )

சர்வதேச எழுத்தாளர் சந்திப்பிற்காய் அயோவா சிட்டி பல்கலைக்கழகத்தின் அழைப்பின் பேரில் தான் அமெரிக்கா சென்று வந்த அனுபவத்தையே அசோகமித்திரன் புனைகதை உருவில் இந்நூலில் படைத்திருக்கிறார். ஒற்றன் பிறந்த கதயில் இவர் அமெரிக்கப் பயண ஏற்பாடுகளை விவரிக்கிறார் இப்படி - "அந்த நாளில் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி கையெழுத்திட்டால் பாஸ்போர்ட் பத்து நாளில் வாங்கி விடலாம். அம்மை மற்றும் மஞ்சள் சுரத்திற்குத் தடுப்பு ஊசி போட்டுக்கொண்டு இரு வாரம் காத்திருக்க வேண்டும். பெட்டி 20 கிலோவுக்கு மேல் இருக்கக் கூடாது. " இந்த வரிகளை படிக்கும் அமெரிக்க விசாவிற்கு முயற்சி செய்த/செய்ய இருக்கும் யாரும் இன்று ஒரு ஏக்கப் பெருமூச்சை விடாதிருக்க முடியாது.

"சந்தித்தவர்கள் சொன்ன யோசனைகளை எல்லாம் கேட்டுக் கொண்டு இரண்டு ஜதை ஜோடு, இரண்டு கம்பளி, இரண்டு ஸ்வெட்டர், நான்கு ஸாக்ஸ், நன்கு பொட்டலம் கட்டப்பட்ட ரசப்பொடி எல்லாவற்றையும் அந்தக் கால சூட்கேஸ் ஒன்றில் அடைத்துக்கொண்டு அக்டோபர் 6ந்தேதி சென்னையிலிருந்து கிளம்பினேன்."
எத்தனை வருஷமானாலும் இன்னமும் நம்ம டுபுக்கு உட்பட யாருமே இந்த ரசப்பொடி இல்லாமல் மட்டும் வெளிநாட்டு விமானமேறுவதில்லை. அது என்ன மாயமோ தெரியலை. ஆனால் அசோகமித்திரனும் தான் எடுத்துப் போன பொருட்களிலேயே உபயோகமாய் இருந்தது ரசப்பொடி மட்டுந்தான் என்கிறார். :)

"ஏழு மாதம் அங்கிருந்தேன். எனக்குத் தெரிந்த சமையலை சமைத்துக் கொண்டு சமாளித்தேன். எனக்கு மனிதர்கள் பிரச்சனையாக இருக்கவில்லை. நிறையவே மனிதர்கள். கறுப்பு, சிவப்பு, மஞ்சள், மாநிறம், கண்ணைப் பறிக்கும் வெள்ளை. ஆங்கிலம் தெரிந்தவர்கள், தெரியாதவர்கள், கொஞ்சம் தெரிந்தவர்கள், நிரம்பப் படித்தவர்கள், படித்தவர்கள் போல பாவனை செய்பவர்கள். ஆனால் துக்கம், சங்கடம் என்று வந்தபோது எல்லோரும் ஒரே மாதிரிதான் இருந்தார்கள். நான் மெத்த தெரிந்தவன் என்று என்னிடம் யோசனை கேட்க வரும்போது எனக்கு கூச்சமாக இருக்கும். நான் ஒவ்வொரு கணமும் அவர்களிடமிருந்துதான் பாடம் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்று அவர்களுக்குத் தெரியாது."

"ஒற்றன் நாவலில் எல்லோரும் அப்பாவிகள். எல்லோருக்கும் அயோவா சிடி வெளியூர், வெளிநாடு. எல்லோருக்குமே பெரிய எதிர்காலம் கிடையாது. அவர்களேதான் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனக்குத் தெரிந்து பாதிப்பேர் அமெரிக்காவிலேயே தங்கி விட்டார்கள். எனக்கு அன்றும் இன்றும் நம் நாடுதான் என் இருப்பிடமாகத் தோன்றுகிறது."

இந்த நாவலிலிருந்து சில இடங்களை எடுத்துப் போடாமல் முன்னுரையிலிருந்தே கிள்ளிப் போட்டிருக்கிறேன். வழக்கமாய் புத்தகங்களின் உள்ளடக்கத்திலிருந்து சில வரிகளை எடுத்துப் போட்டுதான் இந்த புத்தகம் இதைப் பற்றியது என்று சொல்ல வேண்டியிருக்கும். ஆனால் இங்கேயோ அ.மி யே அதை தெளிவாய் தன் முன்னுரையில் சொல்லிவிட்டார். அதனால் நான் புதிதாய் சொல்ல எதுவுமேயில்லை.

மொத்த நாவலும் ஒரு சிறுகதை தொகுப்பு போலவும் இருப்பது இதன் தனிச் சிறப்பு. ஏனெனில் ஒவ்வொரு அத்தியாயமும் ஒவ்வொரு கதாபாத்திரத்தை மையமாய் கொண்டிருக்கும். அவர்களுடனான அ.மியின் நட்பு அந்த அத்தியாயத்தில் விவரிக்கப் பட்டிருக்கும். ஆக அதனளவில் அது ஒரு சிறுகதையின் எல்லா அம்சங்களையும் உள்ளடக்கியுமிருக்கும். எனவே ஒரே ஊரில் ஒரு குறிபிட்ட காரணத்துக்காய் சேர்ந்து வசித்த சில எழுத்தாளர்களின் உறவை பற்றியது என்னும் பொதுமைத் தன்மையிருக்கும் அதே சமயம் ஒவ்வொன்றையும் ஒரு தனி கதையாகவும் ரசிக்க முடியும்.

Thursday, July 12, 2007

மங்களம்

இது யாரோ ஒரு பெண்ணின் பெயரல்ல. மங்களம் என்பது கச்சேரிகளில் கடைசியாக பாடப்படும் பாடல். மோகன்தாஸுக்கும் எனக்கும் இடையில் நடக்கும் என்னுடைய சிவாஜி பட விமர்சனத்தின் மீதான விவாதத்துக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த பதிவு. அதுதான் இந்த தலைப்புக்கு காரணம்.

மோகன் தனது கடைசி பதிவில் ஏதோ தனக்கு வலுச்சண்டைக்கு விருப்பமில்லாதது போலவும் தன் மீதான தனிநபர் தாக்குதலுக்கு பிறகும் தான் சமாதானத்தையே நாடும் ஒரு சாத்வீகப் பிறவியாகவும் தன்னை அறிவித்துக் கொண்டிருக்கிறார். அருமையான முயற்சி. நல்ல பலனும் இருந்ததாக தெரிகிறது. நான் வரிகளுக்கு இடையிலிருந்து எடுத்து வீசுவதாக அவர் மீதான குற்றசாட்டுகளை சொல்கிறார். ஆனால் அவரது பதிவில் இருக்கும் எனக்கான எள்ளல்கள் பல என்னுடைய தனி வாழ்க்கை தொடர்புடையன. அவற்றை பற்றியெல்லாம் நானும் கூட எங்கும் போய் அழுவதாயில்லை. :) எனவே நேரடியாக விஷயத்திற்கு வருகிறேன்.

நான் கதாநாயகிகளை கொஞ்சமே கொஞ்சம் அறிவுடன் காட்டுங்களேன் என்று சொன்னதற்கு இல்லையில்லை நான் உட்பட பலபேருக்கு இன்ன இன்ன தகுதிகளுடைய பெண்களைத்தான் பிடிக்கும். எனவே சமூக வழக்கத்திற்குட்பட்டுத்தான் அந்த படத்தில் அந்த கதாபாத்திரம் படைக்கப்பட்டிருக்கிறது என்று சொன்னவர் நீங்கள் - அந்த தகுதிகளை ஒரு முட்டாள் அல்லது அறிவிற் குறைந்தவரோடு ஒப்பிட்டது நீங்களேயொழிய நான் என் பதிவில் தெளிவாகவே சொல்லியிருக்கிறேன்.

//ஒருவரது படிப்பு தகுதிகளும்(பட்டப்படிப்பு) அவரது ஆர்வமும் (சமையல் அல்லது தையல்) ஒருவரது அறிவுத்திறனை முடிவு செய்வதில்லை. என் கருத்துக்கள் பெண்ணை பெரிய படிப்பாளியாக காட்டவேண்டுமென்பதில்லை//

இதற்கு பிறகும் நீங்கள்

// நீங்கள் சார்த்தரையும் நீட்ஷேவையும் தெரியாத பெண்களை முட்டாள்கள் என்று எடுத்துக்கொண்டால் நான் பொறுப்பில்லை//

என்பதாக சாமர்த்தியமாய் பழியை என்மீது தூக்கி போட முயற்சிக்கிறீர்கள். நீங்கள் என்னதான் முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கப்பார்த்தாலும் அதை படிப்பவர்கள் நம்பிவிட மாட்டார்கள் என்று எனக்கு தெரியும். எனவே இதற்கு மேல் இவ்விஷயத்தில் நான் அதிகம் நோண்ட விரும்பவில்லை.

//உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம்.//

இந்த வரிகள் உங்களை புண்படுத்தியிருக்குமானால மன்னிக்கவும். அதை இப்படி மாற்றிக் கொள்ளலாம் - நீங்கள் எந்த அளவு தகுதிகளுடைய துணை வேண்டுமென்று நினைக்கிறீர்களோ அதே அளவுதான் உங்களுக்கும் தகுதியிருப்பதாக நீங்கள் நம்புகிறீர்கள். நேர்மறை விகிதாச்சாரமென்பார்களே - directly proportional, அதுபோல. இதுதான் அங்கே நான் சொல்ல வந்தது.

கடைசியாக ஒரேஒரு விஷயத்தை மட்டும் இங்கே தெளிவு படுத்தி விடுகிறேன். பத்மாவதி தாயாரின் தாலி கழண்டு விழுந்ததற்காய் பரிகாரம் செய்தவர்கள் முட்டாளா இல்லையா என்ற கேள்விக்கு வருவோம். என்வரையில் சந்தேகத்திற்கிடமின்றி அது முட்டாள் தனம்தான். ஆனால் ஒரே ஒரு விஷயம் - அப்படி நம்புவது யாரென்பதை பொறுத்து நான் அந்த விமர்சனத்தை வெளியிடுவதும் அடக்கிக்கொள்வதும் இருக்கும். என் வீட்டிலேயே எடுத்துக் கொண்டால் என் அம்மா அதையே செய்தால் நான் ஒன்றும் சொல்ல மாட்டேன். ஏன் சொல்லப்போனால் பூஜைக்கு ஏதேனும் தேவையா என்று கேட்டு வாங்கி வந்துகூட கொடுப்பேன். எனக்கும் கொஞ்சம் குங்குமம் கொடுத்தால் அதையும் வாங்கி நெற்றியில் இட்டும் கொள்வேன். ஆனால் அதையே என் தங்கை செய்தால், என்னம்மா இது இப்படி கூட உன்னால் எப்படி யோசிக்க முடிகிறது என்று கேட்டு முடிந்த வரை அவளுக்கு புரிய வைக்க முயற்சிப்பேன். இந்த இரு அணுகுமுறைகளுக்கும் உள்ள வித்தியாசத்திற்கான காரணம் உங்களுக்கு புரியவில்லையென்றால் அதற்கு மேல் உங்களிடம் பேசுவதே பொருளற்றது. முந்தைய தலைமுறையில் பெண்களுக்கு கிடைத்த வாய்ப்புகள் அவர்களது நம்பிக்கையை அங்கே நிறுத்தியிருக்கிறது. ஆனால் இன்றும் விஞ்ஞான முன்னேற்றத்தையும் என் படிப்பையும் நான் வயிற்றுப் பிழைப்புக்கும் வாழ்க்கை வசதிகளுக்கும் மட்டுமே பயன் படுத்திக்கொள்வேன். அதைத்தாண்டி என் அறிவை நான் உபயோகிக்க மாட்டேன் என்று ஒருவர் சொன்னால் அது நிச்சயம் முட்டாள்த் தனம்தான்.

அடுத்தது நம்பிக்கைகளுக்குள்ளேயே நிறைய படிநிலைகள் உண்டு. அதாவது கடவுள் என்று ஒரு சக்தியிருப்பதை மட்டும் நம்புவது ஒரு வகை. தெருமுனையிலிருக்கும் சித்தி விநாயகரை விட மலைக்கோட்டைப் பிள்ளையார் சக்தி மிக்கவர் என்று சொல்வது இன்னொரு வகை. முன்னது உணர்வு பூர்வமான நம்பிக்கை. பின்னது மூட நம்பிக்கை. இரண்டுக்குமான வேறுபாடு உங்களுக்கு புரியவில்லையென்றால் என் வாதம் உங்களுக்கு புரியாது போவதில் ஆச்சரியமொன்றுமில்லை. இன்னொரு உதாரணம் - உங்க தலைவர் படங்களிலிருந்தே சொல்கிறேனே. ராகவேந்திராவும் பக்தி படம்தான். பாபாவும் பக்தி படம்தான். முன்னது நன்றாகவே ஒடியது. பின்னது தோல்வியை தழுவியது. இத்தனைக்கும் ராகவேந்திரா அவரது 100வது படம் - அப்போது அவர் இளைஞர், ஆக் ஷன் ஹீரோவாக புகழடைந்திருந்தவர். படம் ஆரம்பித்தபோது நிறைய பேர் அவருக்கு இது விபரீத முயற்சியென்று அறிவுரை சொல்லவும் செய்தார்கள். மீறி அவர் அந்த படம் செய்தார். வெளிவந்து படம் நன்றாகவே ஒடியது. ஆனால் பாபா ஏன் ஒடவில்லை என்று யோசித்துப் பாருங்கள். பிறகு உங்களுக்கு வருடாவருடம் கேதார கௌரி விரதமிருப்பவர்களுக்கும் திருப்பதி தாயாரின் தாலி கீழே விழுந்ததற்காய் பரிகாரம் செய்பவர்களுக்கும் என்ன வித்தியாசமென்று புரியும். அது புரிந்தால்தான் நான் ஏன் சிவாஜியின் கதாநாயகியை முட்டாளென்று சொன்னேனென்பதும் புரிந்துவிடும்... ஹ்ம்ம்.. ஆனால் மோகனா நீங்கள் தூங்குவது போல் நடிப்பவரென்பதால் அதையெல்லாம் நான் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை.

சரி, சில விஷயங்களில் புலம்புவதை ஒரு அளவோடு நிறுத்திகொள்ள வேண்டும். புலம்பாமலே இதுதான் யதார்த்தமென்று புரிந்துணர்ந்து புன்னகையோடு நிஷ்காம்ய கர்மமாக பதிவெழுதும் மக்கள் புண்ணியாத்மாக்கள். நானும் மெல்ல அந்த நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். அவ்ளோதான் சொல்ல முடியும் இப்போதைக்கு.

பி. கு: பின்னூட்டப் பெட்டி காரணமாகவே மூடப்படுகிறது. ஆதரவு எல்லாம் மனதிலிருந்தாலே போதும்பா.

Monday, July 09, 2007

தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண்

முன்கதைச் சுருக்கம்

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்

ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்

பின்கதை விளக்கம்

பாடல்களும் கதாநாயகிகளும் தேவையா என்பதை கதையின் போக்கும் அதை நகர்த்துகிறவர்களும் முடிவு செய்ய வேண்டிய விஷயமே தவிர நாம் முடிவு செய்ய வேண்டிய விஷயமன்று. அவர்கள் தேவையென்று எண்ணி வைத்து அது உண்மையில் கதைபோக்குக்கு எந்தவிதத்திலும் தேவையற்றதாக தெரிந்தால் அதை படம் பார்க்கும் நாம் நம்மிஷ்டத்துக்கு விமர்சிக்கலாம் - சுஜாதா போல் பத்தி எழுதும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பார்த்ததில் ஜீரணமாகாதது என்ற தலைப்பிலும் நம் போன்றவர்கள் நமது வலைப்பதிவில் அவைகளும் இவைகளும் என்ற தலைப்பிலும். எனது முந்தைய பதிவில் நான் சொல்ல வந்தததும் அத்தகைய ஒரு விமர்சனமே - இது வரை வந்த படங்களில் பெரும்பாலானவை ஆறாம் விரல் போல் தேவையற்ற ஒரு இணைப்பாகவே கதாநாயகிகளை உபயோகித்து வருகின்றன. எனவே அப்படியான ஒரு பயன்பாடு மறைய வேண்டும் என்பதுதான் என் ஆவல். விஜயசாந்தியின் படங்கள் தொடர்ந்து நாலைந்து பார்த்தால் என்ன சொல்லத்தோன்றும்? அதில் வரும் ராம்கி அல்லது வெங்கடேஷ் கதாபாத்திரங்கள் எல்லாம் இல்லாது அத்தகைய படங்கள் வரவே முடியாதா என்ன? உண்மையில் சொல்லப்போனால் அத்தகைய படங்களில் மகளிர் மட்டும் படத்தில் செய்தது போல க்ளைமாக்சில் மட்டும் யாரையேனும் ஜோடியாக காண்பித்தோ இல்லை கணவர்/காதலர் வெளிநாட்டிலிருப்பதாக காண்பித்தோ அழகாய் கதையை நகர்த்திக் கொண்டு போய் விடலாமில்லையா, அது போலவே லீ போன்ற படங்களில் கதாநாயகிகளின்றி அழகாய் கதை சொல்லலாம். அதற்காக அலைபாயுதேவிலும் ஷாலினி இல்லாமலே இல்லற வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்ல வேண்டுமென்றால் பாவம் மணிரத்னம் என்னய்யா செய்வார்? கொஞ்சம் கதாசிரியப் பெருந்தகைகளின் மேலும் கருணை காட்டுங்கள் மோகனா. சரி, இது இந்த கட்டுரையின் பேசு பொருளில்லையென்பதால் இதை இத்தோடு விட்டு விட்டு நமது முக்கிய விவாதத்துக்குப் போவோம்.

சரி, நீங்கள் பட்டப்படிப்பு மட்டுமே முடித்து வீட்டிலிருந்து சமையலும் தையலும் கற்றுத் தேர்ந்த ஒரு தமிழ்க் கலாச்சாரப்படியான பெண்ணைத்தான் மணப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்(என் நண்பனொருவன் பட்டப்படிப்பிலும் அவள் கண்டிப்பாக ஹோம் சையன்ஸ்தான் படித்திருக்க வேண்டுமென்று சொல்லுவான். அப்போதுதான் அவளால் பெரிதாக வேலைக்கு எதுவும் போகிறேன் என்று சொல்லிவிட முடியாதாம். வீட்டிலிருந்து குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ளுவாளாம். அதே சமயம் 5ஆம் வகுப்பு வரையிலாவது குழந்தையின் படிப்புத் தேவைகளையும் பார்த்துக் கொள்ளுவாளாம். நீங்களும் கூட இந்த உப பிரிவை உங்களது நிபந்தனையில் சேர்த்துக்கொள்வதை பற்றி யோசிக்கலாம்.) ஒருவரது படிப்பு தகுதிகளும்(பட்டப்படிப்பு) அவரது ஆர்வமும் (சமையல் அல்லது தையல்) ஒருவரது அறிவுத்திறனை முடிவு செய்வதில்லை. என் கருத்துக்கள் பெண்ணை பெரிய படிப்பாளியாக காட்டவேண்டுமென்பதில்லை. அவளை புரிந்துகொள்ளும் திறனற்றவளாகவே தொடர்ந்து காண்பிக்காதீர்கள் என்பதுதான் என் கருத்து.

படத்திலுமே கூட அந்தப் பெண்ணை பி.ஏ தமிழ் இலக்கியம் படித்து விட்டு இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு பெண்ணாகத்தான் காட்டுகிறார்கள். நான் அதைப் பற்றி எங்கும் குறைகூறவில்லை. அவளையும் ஒரு மென்பொருள் நிபுணராக இவர் அமெரிக்காவிலிருந்து வந்தால் அந்தப் பெண்ணையும் குறைந்தது அருகிலிருக்கும் சிங்கப்பூரிலிருந்து வந்தவராகத் தான் காட்ட வேண்டுமென்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஒருவரது ஆர்வம் இசையிலிருக்கலாம். தையலிலிருக்கலாம். சமையலும் நல்ல குழந்தை வளர்ப்பும்தான் என் லட்சியம் என்று சொல்லும் பெண்களையும் நானறிவேன். ஆனால் நிச்சயம் அவர்களெல்லாம் முட்டாள்களல்ல. அறிவுத் திறன் குறையுடையோருமல்ல. அறிவுடனிருப்பது அல்லது இல்லாமலிருப்பது இரு பாலினத்தவருக்கும் பொதுவானது. ஆனால் ஏதோ கதாநாயகிகள் எல்லோரும் வெறும் அழகுப் பதுமைகளாகவும் அறிவற்ற மடையர்களாகவும் இருப்பதாகவும் ஆண்கள் எல்லோரும் அவர்களை உய்விக்கவே பிறந்து வந்தவர்களென்றும் தொடர்ந்து கதை சொல்லப்பட்டு வருவதே என் எரிச்சலுக்கு காரணம்.(சில விதிவிலக்குகளும் உண்டு - பாலச்சந்தர் படத்து கதாநாயகிகளா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள் அய்யனார், ப்ளீஸ். விதிவிலக்குகள் பற்றி நான் தனி பதிவு போடுகிறேன். அப்போது சொல்கிறேன் என் பார்வையில் யாரெல்லாம் கொஞ்சமேனும் வித்தியாசமாய் தெரிகிறார்கள் என்று) அதிலும் கதாநாயகன் சூப்பர் மேனாக வரும் போது அவனுக்கு மனைவியாகவோ இல்லை துணைவியாகவோ வருபவள் அவனுக்கு இணையாக அவனைப்போலவே சூப்பர் வுமெனாக இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. சாதாரண அளவிலாவது அறிவுத்திறனுடையவளாக இருத்தல் வேண்டுமல்லவா? அதை நான் சொன்னால் உங்களுக்கெல்லாம் ஏன் எரிகிறது?
//சர்ரியலிஸம் பேசிக்கொண்டு சார்த்தரையும், பெட்ரிக் நீட்ஷேவையும் துணைக்கிழுக்கும் ஒரு அறிவுஜீவி பெண்ணை //
இதெல்லாம் என் பதிவில் எங்கே இருக்கிறது? கொஞ்சமே கொஞ்சம் அறிவும் உள்ளவர்களாக கதாநாயகிகளை காட்டச் சொன்னதற்கு இத்தனை எரிச்சலா? அடேங்கப்பா...

"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். நட்புற்றிருக்கவே ஒத்த அறிவுத்தகுதி வேண்டுமெனில் திருமணத்திற்கு வேண்டாமா?உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம். என் வார்த்தைகளின் கடுமைக்கு மன்னிக்கவும். நட்பின் பொருட்டு கூட உண்மையை சொல்லாது விடுதல் எனக்கு வழக்கமில்லை. எனவே ஒரு சமூகம் பெண்களனைவரையும் முட்டாளாக்கினால் அந்த ஒட்டு மொத்த சமுதாய நலனும் அழியும். மேலும் முட்டாள் பெண்ணுடன் வாழ்வது அறிவு ஜீவி ஆண்களுக்கே ஒரு பெருத்த சாபமாகிப் போகும்.

இதை நானும் பர்சன்டேஜ் அடிப்படையில் சொல்கிறேனாக்கும் என்று உங்கள் பாணியில் ஜல்லியடித்து விடலாம்தான். ஆனால் என் விவாத முறை அப்படியல்ல. உங்களுக்கு சில வரலாற்று உண்மைகளை சுட்டுகிறேன். உங்களுக்கு ஆணோடு ஆண் கொள்ளும் ஓரினச் சேர்க்கை ஏன் கிரீக் லவ் என்று அழைக்கப் படுகிறது என்று தெரியுமா? கிரேக்கத்தில் ஒரு கால கட்டத்தில் ஒரு புறத்தில் பெண்களை அடிமையாகவே என்றென்றும் வைத்திருத்தலின் பொருட்டு அவர்களை கல்வி பெறாமலும் எந்த வகையான அறிவுத்திறனும் பெற்றுவிடாமலும் கவனமாக பார்த்துக் கொண்டார்கள். பெண்களுக்கே தொடர்ச்சியான மூளைச்சலவை மூலமாக எந்த விதத்திலும் அறிவுத் திறனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணத்தை தெளிவாக உருவாக்கினார்கள். உலகின் எல்லா பாகங்களிலும் இது நடந்ததுதான் என்றாலும் கூட கீரீசில் அளவுக்கதிகமாக நடந்தது. மற்றொரு புறத்திலோ கிரேக்க ஆண்கள் நாளொரு கண்டுபிடிப்பும் பொழுதொரு ஆராய்ச்சியுமாக விஞ்ஞானம் முதல் தத்துவம் வரை எல்லாத் துறைகளிலும் தங்கள் அறிவை பெருக்கிக் கொண்டே போயினர்.

விளைவு - முட்டாளாய் மண்ணாங்கட்டிகளாயிருந்த பெண்களுடன் காதல் செய்ய கிரேக்க ஆண்களால் முடியவில்லை. எனவே ஆண்களுக்குள் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சாக்ரடீஸ், ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில், ஸெனோஃபோன், க்ரைசிப்பஸ், க்ளியாந்தஸ், ஜீயன், அலெக்ஸாண்டர் மாதிரியான தத்துவ ஞானிகளும் மன்னர்களும் இவ்வகையில் ஆண்களோடே காதல் கொள்ள ஆரம்பித்தனர் - அதாவது வம்ச விருத்திக்காக மட்டுமே பெண்களோடு கூடுதல். மற்றபடி காதலெல்லாம் ஆண்களுக்குள்ளேயே. காதலற்ற கூடல் என்பது ஒரு காமுகனுக்கு வேண்டுமானால் இன்பமளிப்பதாய் இருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண மனித பிறவிக்கு ஆண் ஆயினும் சரி பெண் ஆயினும் சரி அது ஒரு தண்டனையே. எனவே குழந்தைக்காக கூட அவர்களால் பெண்களோடு கூட முடியாது போயிற்று. விளைவு - ஆண்கள் பெண்களை தவிர்க்க ஆரம்பித்தார்கள். மனித இனத்தின் எண்ணிக்கை சரிய தொடங்கியது. பிறகு மீண்டும் பெண்களுக்கும் அறிவு தேவையென சமூகம் உணர ஆரம்பித்தது. எனவே பெண்கள் காதல் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாயிருக்கும். அதற்கு அவளுக்கும் சுய சிந்தனையும் அறிவுத் தெளிவுமிருத்தல் வேண்டும். ஒன்றுமே தெரியாத ஒருவர் மேல் பரிதாபம்தான் வரும். காதலா வரும்?

//ஏசி தியேட்டர்களில் சாப்பிட்டு விட்டு, பாதியில் சினிமா தியேட்டரின் ஏசியை நிறுத்திவிட்டான் என்ற "கோட்"களுடன் இருக்கும் விமர்சனங்களை விடவும், "காசு கொடுத்தேன் ஏன்யா ஏசியை பாதி நிறுத்தின" என்று கேட்கப்படும் கேள்விகளால் சமுதாயம் திருந்தலாம்.// சமூக சீர்திருத்தத்துக்கு உங்களுக்கான வழி அது. என் வரையில் இரவு 10 மணிக்கு தியேட்டர் நிர்வாகியிடம் போய் கத்தினால் என்ன பலனிருக்கும் என்று தெரியும். கஸ்டமர் சர்வீஸ் என்கிற பதத்திற்கான சரியான பொருளே தெரியாத நம் சமூகத்தில் இதை கையாளும் முறை வேறு - காசு அதிகம் கொடுத்தாலும் இப்படி ஒரு போதும் நடக்காது என்கிற உத்ரவாதமுள்ள தியேட்டர்களுக்கு மட்டுமே(உதா: சத்யம்) போவது என்று முடிவெடுப்பது அதில் ஒன்று. அதைத் தான் நான் வழக்கமாய் செய்வது. ஒரு வேளை ஒரு சிலருக்கு நிர்வாகியிடம் வாக்குவாதம் செய்வது போன்ற அதீத ஆ.கோ வகை வெளிப்பாடுகள் தேவையாக இருக்கலாம். அது அருகில் அமரும் பிகர்களின் கவனத்தை கவர்வது போன்ற சில்லறை சில்மிஷங்களுக்கு ஆதாயகரமானது என்பதால் கூட இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் அதுதான் வழி என்று ஆகி விடுமா என்ன?

கடைசியாக ஒரு விஷயம் - எழுத்துக்குப் பின்னால் "பெண்குலங்களை" மதிக்கும் கள்ளமில்லா வெள்ளை மனது தனக்கு இருப்பதாக சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்து படம் பார்க்கும் பெண்களை பிகராக மட்டுமே பார்க்க முடிகிறவர்களும், தன்னை நாத்திகவாதி என்று அறிவித்துக்கொண்டே வைகுண்ட ஏகாதேசிக்கு இரவோடிரவாக பஸ் பிடித்து போய் அங்கேயும் அய்யராத்து அகிலாண்டேஸ்வரிகள் கிடைப்பார்களா என்று தேடுபவர்களும் எல்லாம் பெண்ணுரிமைக்கான அரசியல் தீர்வை பற்றி பேசும் வரையில் பாடல்களில் தொப்புளை காட்டிவிட்டு உரையாடல் காட்சிகளில் தழைய தழைய புடவை கட்டிய ஜவுளிக்கடை பொம்மைகளே நம்ம தலைவரின் ஆஸ்தான நாயகிகளாய் இருப்பார்கள். வாழ்க தமிழ் சினிமா! வளர்க சூப்பர் ஸ்டார் புகழ்!

Tuesday, July 03, 2007

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்

நேத்திலேர்ந்து மனசு ஆறவேயில்லைங்க. அதொன்னுமில்லைங்க. சிவாஜி படத்துக்கு போயிருந்தேன். படமெல்லாம் நல்லாத்தான் இருந்தது - தலைவர் இருக்கறப்போ லாஜிக்கை பத்தியோ இன்டர்வெல்லுக்கப்புறம் தியேட்டர்காரங்க நிறுத்தின ஏ.சி பத்தியோவெல்லாம் யாருங்க கவலைப்படப் போறாங்க? அதுனால படம் ரொம்பவே நல்லா இருந்ததுச்சுங்க. ஆனா அதுல ஒரு அக்கிரமம் பாருங்க, அதை படம் பாத்து கதை சொன்ன யாருமே கவனிக்கலைன்னு தோணிச்சுங்க. அதை தமிழ்கூறு வலையுலகுக்கு தெரிவிக்கவே இந்த பதிவு.

முதல்ல அப்பாவியா நேர்வழில முயற்சி செஞ்சு தோத்து பிறகு திரும்ப யதார்த்தத்தை புரிஞ்சுகிட்டு எல்லாருக்கும் வரிசைக்கிரமமா மால் வெட்டி எல்லாத்தையும் கட்டி முடிக்கற நேரத்துல சுமன் அவர் முதுகுல குத்தி நடு ரோட்டுக்கு கொண்டு வரும்போது கூட எனக்கு அவ்ளோ ஃபீல் ஆகலைங்க. ஏன்னா நாமதான் இன்டர்வெல்லுக்கு முன்னாடி தலைவர் நடுரோட்டுக்கு வந்த படங்கள் நிறைய பாத்திருக்கோமே, அதும்படி பாத்தா ஒரே பாட்டுல தலைவர் மறுபடி வாழ்க்கைன்ற கன்வேயர் பெல்ட்டுல ஏஏஏ...ஏறிகிட்டே போவாரே... அதான் நமக்கு தெரியுமேன்னு மனசை தேத்திகிட்டு உக்காந்து பாக்க ஆரம்பிச்சேன்.

எதிர்பார்த்தாற்ப் போலவே தலைவரும் சிங்க நடை போட்டு ஜெயிச்சுட்டாரு. அப்பாடான்னு மூச்சு விடப்பாத்தா, அது வரைக்கும் கட்டியிருக்கற தாவணி எப்ப கீழ விழுமோன்னே கவலைபட வச்சிகிட்டிருந்த தமிழ்ச்செல்வி அண்ணி திடீர்னு ஒரு குண்டை தூக்கி போட்டாங்க பாருங்க... அவர் ட்ரைவின் தியேட்டரில் உக்கார வச்சு மடிக்கணிணிய காமிச்சு மாங்கு மாங்குனு தான் பண்ணியிருக்கற சாதனைகளை எல்லாம் விளக்கினதுலேயே, சட்டரீதியா தலைவர் மாட்டிக்க வழியே இல்லைன்னு புரிஞ்சிருக்கணும். அதுக்கப்புறம் ஒரு சூப்பர் கார் ஃபைட்டைப் போட்டு கிங்காங்கோட வாய் வழியா அவங்களை காப்பாத்தி கூட்டி வந்தப்பவே அவரை யாரும் எதுவும் பண்ண முடியாதாக்கும்ன்றதையும் அவங்க புரிஞ்சிருக்கணும். அதெல்லாம் புரியற அளவுக்கு அவங்களுக்கு எங்க மூளையிருக்கு?

அவங்கதான் ஏற்கனவே அந்த மச்சநாக்குக்கார ஜோசியரோட கப்ஸாக்களால கல்யாணமே வேண்டாம்னு சொன்னவங்களாச்சே... தலைவர் ரொம்ப கஷ்டப்பட்டு அவங்களோட மூடநம்பிக்கைய ஒரளவுக்கு போக்கி கல்யா... ச்சீ. வாய் தடுமாறுது பாருங்க, அந்த அப்பாவித் தமிழ்ப்பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கறார். இருந்தாலும் அந்த மூடநம்பிக்கைய விடாம திருநள்ளாறு போய் தோஷபரிகாரங்கள் செய்யறாங்க...நல்லா கவனிச்சு பாத்துகுங்க மகாஜனங்களே, எங்க பகுத்தறிவு சிங்கம் போகலியாக்கும்... அந்த அம்மாவும் அவங்களோட பெத்தவங்களும் மட்டுந்தான் போயி இதெல்லாம் பண்றாங்க. பின்ன, தலைவர் கல்யாணமே தமிழ் முறைப்படி கட்டினவராச்சே(நான் திருப்பதில நடந்த அவரோட நிஜக்கல்யாணத்தை சொல்லலீங்க... படத்துல பாப்பைய்யா தலைமைல நடந்த கல்யாணத்தைச் சொல்றேன்...) அவரு எப்படிங்க இந்த மாதிரி முட்டாள்த்தனமான விஷயத்தையெல்லாம் செய்வாரு?? ஆனா நம்ம அண்ணிக்கு அவ்ளோ பத்தாது பாருங்க, அதுனால அவங்க இதையெல்லாம் செய்யுறாங்க.

இதை மட்டுமா, அதுக்கப்புறம் சி.பி.ஐ ஆபீஸருங்க ஆபீஸ் ரூம்ல (இது தலைவரோட ஆபிஸ் ரூம் மாதிரி இல்லைங்க, கோவில் தேவஸ்தானத்தின் ஆபிஸ் ரூம்தான். அதுனால No third degree treatment. எனவே அண்ணியோட பொன்னான உடம்பு எதும் புண்ணாயிருக்குமோனோ இல்லை அதை விட முக்கியமா அவங்க கற்புக்கு ஏதும் பங்கம் வந்திருக்குமோன்னோ நீங்க யாரும் பயப்படத் தேவையில்லை.) கூப்பிட்டு மிரட்டினதும் அதை நம்பி தலைவரோட மடிக்கணிணிய ஒரு சாக்குப் பைல வச்சு எடுத்துக்கிட்டு போய் சி.பி.ஐ ஆபிசர்கிட்ட கொடுத்துடறாங்க. அதும் அவர்கிட்ட தலைவரோட உயிருக்கு ஆபத்து வராதுன்னு சத்தியம் வாங்கிகிட்டு... எவ்ளோ முட்டாளா இல்லையில்லை அப்பாவியா இருக்கு பாருங்க நம்ம அண்ணி... இதுனால போலீஸ்கிட்ட மாட்டுற தலைவர், போலீஸ் கஸ்டடியில் சாவு வரை போய் மீண்டு வர்ரார்...

எனக்கு என்னான்னா, அண்ணிங்களையும் இனி படங்களில் கொஞ்சமே கொஞ்சம் மூளையுள்ளவர்களாக காண்பித்தால் தலைவருக்கு வரும் இந்த எக்ஸ்ட்ரா பிரச்சனைகள் இருந்திருக்காதில்லையா? படமும் இரண்டு மணி நேரத்துக்குள்ளாகவே முடிஞ்சுடுமில்லையா? இந்த படம்தான் என்றில்லை, எண்ணிறந்த பல படங்களில் அற்புத ஹீரோக்கள் கூட அழகுச்சிலைகளாகவும் அறிவற்றவர்களாகவுமிருக்கும் ஹீரோயின்களால்தான் கடைசியில் மாட்டிக்கொள்வார்கள். அதை தவிர்க்கவாவது கொஞ்சம் அறிவுள்ள ஹீரோயின்களாய் காண்பிக்கலாமே...