Monday, July 09, 2007

தமிழ்க் கலாச்சாரத்தோடு ஒரு பெண்

முன்கதைச் சுருக்கம்

முட்டாள் மனைவிகளும் மாட்டிக்கொள்ளும் கணவர்களும்

ஆறாம் விரல்களும் அர்த்தமற்ற முட்டாள்தனங்களும்

பின்கதை விளக்கம்

பாடல்களும் கதாநாயகிகளும் தேவையா என்பதை கதையின் போக்கும் அதை நகர்த்துகிறவர்களும் முடிவு செய்ய வேண்டிய விஷயமே தவிர நாம் முடிவு செய்ய வேண்டிய விஷயமன்று. அவர்கள் தேவையென்று எண்ணி வைத்து அது உண்மையில் கதைபோக்குக்கு எந்தவிதத்திலும் தேவையற்றதாக தெரிந்தால் அதை படம் பார்க்கும் நாம் நம்மிஷ்டத்துக்கு விமர்சிக்கலாம் - சுஜாதா போல் பத்தி எழுதும் வாய்ப்பு கிடைத்தவர்கள் பார்த்ததில் ஜீரணமாகாதது என்ற தலைப்பிலும் நம் போன்றவர்கள் நமது வலைப்பதிவில் அவைகளும் இவைகளும் என்ற தலைப்பிலும். எனது முந்தைய பதிவில் நான் சொல்ல வந்தததும் அத்தகைய ஒரு விமர்சனமே - இது வரை வந்த படங்களில் பெரும்பாலானவை ஆறாம் விரல் போல் தேவையற்ற ஒரு இணைப்பாகவே கதாநாயகிகளை உபயோகித்து வருகின்றன. எனவே அப்படியான ஒரு பயன்பாடு மறைய வேண்டும் என்பதுதான் என் ஆவல். விஜயசாந்தியின் படங்கள் தொடர்ந்து நாலைந்து பார்த்தால் என்ன சொல்லத்தோன்றும்? அதில் வரும் ராம்கி அல்லது வெங்கடேஷ் கதாபாத்திரங்கள் எல்லாம் இல்லாது அத்தகைய படங்கள் வரவே முடியாதா என்ன? உண்மையில் சொல்லப்போனால் அத்தகைய படங்களில் மகளிர் மட்டும் படத்தில் செய்தது போல க்ளைமாக்சில் மட்டும் யாரையேனும் ஜோடியாக காண்பித்தோ இல்லை கணவர்/காதலர் வெளிநாட்டிலிருப்பதாக காண்பித்தோ அழகாய் கதையை நகர்த்திக் கொண்டு போய் விடலாமில்லையா, அது போலவே லீ போன்ற படங்களில் கதாநாயகிகளின்றி அழகாய் கதை சொல்லலாம். அதற்காக அலைபாயுதேவிலும் ஷாலினி இல்லாமலே இல்லற வாழ்வின் வெற்றி ரகசியத்தை சொல்ல வேண்டுமென்றால் பாவம் மணிரத்னம் என்னய்யா செய்வார்? கொஞ்சம் கதாசிரியப் பெருந்தகைகளின் மேலும் கருணை காட்டுங்கள் மோகனா. சரி, இது இந்த கட்டுரையின் பேசு பொருளில்லையென்பதால் இதை இத்தோடு விட்டு விட்டு நமது முக்கிய விவாதத்துக்குப் போவோம்.

சரி, நீங்கள் பட்டப்படிப்பு மட்டுமே முடித்து வீட்டிலிருந்து சமையலும் தையலும் கற்றுத் தேர்ந்த ஒரு தமிழ்க் கலாச்சாரப்படியான பெண்ணைத்தான் மணப்பதாக வைத்துக் கொள்ளுங்கள்(என் நண்பனொருவன் பட்டப்படிப்பிலும் அவள் கண்டிப்பாக ஹோம் சையன்ஸ்தான் படித்திருக்க வேண்டுமென்று சொல்லுவான். அப்போதுதான் அவளால் பெரிதாக வேலைக்கு எதுவும் போகிறேன் என்று சொல்லிவிட முடியாதாம். வீட்டிலிருந்து குடும்பத்தை பொறுப்பாக பார்த்துக் கொள்ளுவாளாம். அதே சமயம் 5ஆம் வகுப்பு வரையிலாவது குழந்தையின் படிப்புத் தேவைகளையும் பார்த்துக் கொள்ளுவாளாம். நீங்களும் கூட இந்த உப பிரிவை உங்களது நிபந்தனையில் சேர்த்துக்கொள்வதை பற்றி யோசிக்கலாம்.) ஒருவரது படிப்பு தகுதிகளும்(பட்டப்படிப்பு) அவரது ஆர்வமும் (சமையல் அல்லது தையல்) ஒருவரது அறிவுத்திறனை முடிவு செய்வதில்லை. என் கருத்துக்கள் பெண்ணை பெரிய படிப்பாளியாக காட்டவேண்டுமென்பதில்லை. அவளை புரிந்துகொள்ளும் திறனற்றவளாகவே தொடர்ந்து காண்பிக்காதீர்கள் என்பதுதான் என் கருத்து.

படத்திலுமே கூட அந்தப் பெண்ணை பி.ஏ தமிழ் இலக்கியம் படித்து விட்டு இசைக் கருவிகள் விற்பனை செய்யும் ஒரு பெண்ணாகத்தான் காட்டுகிறார்கள். நான் அதைப் பற்றி எங்கும் குறைகூறவில்லை. அவளையும் ஒரு மென்பொருள் நிபுணராக இவர் அமெரிக்காவிலிருந்து வந்தால் அந்தப் பெண்ணையும் குறைந்தது அருகிலிருக்கும் சிங்கப்பூரிலிருந்து வந்தவராகத் தான் காட்ட வேண்டுமென்றெல்லாம் நான் சொல்லவில்லை. ஒருவரது ஆர்வம் இசையிலிருக்கலாம். தையலிலிருக்கலாம். சமையலும் நல்ல குழந்தை வளர்ப்பும்தான் என் லட்சியம் என்று சொல்லும் பெண்களையும் நானறிவேன். ஆனால் நிச்சயம் அவர்களெல்லாம் முட்டாள்களல்ல. அறிவுத் திறன் குறையுடையோருமல்ல. அறிவுடனிருப்பது அல்லது இல்லாமலிருப்பது இரு பாலினத்தவருக்கும் பொதுவானது. ஆனால் ஏதோ கதாநாயகிகள் எல்லோரும் வெறும் அழகுப் பதுமைகளாகவும் அறிவற்ற மடையர்களாகவும் இருப்பதாகவும் ஆண்கள் எல்லோரும் அவர்களை உய்விக்கவே பிறந்து வந்தவர்களென்றும் தொடர்ந்து கதை சொல்லப்பட்டு வருவதே என் எரிச்சலுக்கு காரணம்.(சில விதிவிலக்குகளும் உண்டு - பாலச்சந்தர் படத்து கதாநாயகிகளா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள் அய்யனார், ப்ளீஸ். விதிவிலக்குகள் பற்றி நான் தனி பதிவு போடுகிறேன். அப்போது சொல்கிறேன் என் பார்வையில் யாரெல்லாம் கொஞ்சமேனும் வித்தியாசமாய் தெரிகிறார்கள் என்று) அதிலும் கதாநாயகன் சூப்பர் மேனாக வரும் போது அவனுக்கு மனைவியாகவோ இல்லை துணைவியாகவோ வருபவள் அவனுக்கு இணையாக அவனைப்போலவே சூப்பர் வுமெனாக இல்லையென்றாலும் கூட பரவாயில்லை. சாதாரண அளவிலாவது அறிவுத்திறனுடையவளாக இருத்தல் வேண்டுமல்லவா? அதை நான் சொன்னால் உங்களுக்கெல்லாம் ஏன் எரிகிறது?
//சர்ரியலிஸம் பேசிக்கொண்டு சார்த்தரையும், பெட்ரிக் நீட்ஷேவையும் துணைக்கிழுக்கும் ஒரு அறிவுஜீவி பெண்ணை //
இதெல்லாம் என் பதிவில் எங்கே இருக்கிறது? கொஞ்சமே கொஞ்சம் அறிவும் உள்ளவர்களாக கதாநாயகிகளை காட்டச் சொன்னதற்கு இத்தனை எரிச்சலா? அடேங்கப்பா...

"கற்றாரை கற்றாரே காமுறுவர்" என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் என எண்ணுகிறேன். நட்புற்றிருக்கவே ஒத்த அறிவுத்தகுதி வேண்டுமெனில் திருமணத்திற்கு வேண்டாமா?உங்களுக்கு முட்டாள் பெண் மனைவியாக வர வேண்டுமென்று ஆசையிருப்பின் நீங்களும் அப்படியே இருப்பதாகத்தான் அர்த்தம். என் வார்த்தைகளின் கடுமைக்கு மன்னிக்கவும். நட்பின் பொருட்டு கூட உண்மையை சொல்லாது விடுதல் எனக்கு வழக்கமில்லை. எனவே ஒரு சமூகம் பெண்களனைவரையும் முட்டாளாக்கினால் அந்த ஒட்டு மொத்த சமுதாய நலனும் அழியும். மேலும் முட்டாள் பெண்ணுடன் வாழ்வது அறிவு ஜீவி ஆண்களுக்கே ஒரு பெருத்த சாபமாகிப் போகும்.

இதை நானும் பர்சன்டேஜ் அடிப்படையில் சொல்கிறேனாக்கும் என்று உங்கள் பாணியில் ஜல்லியடித்து விடலாம்தான். ஆனால் என் விவாத முறை அப்படியல்ல. உங்களுக்கு சில வரலாற்று உண்மைகளை சுட்டுகிறேன். உங்களுக்கு ஆணோடு ஆண் கொள்ளும் ஓரினச் சேர்க்கை ஏன் கிரீக் லவ் என்று அழைக்கப் படுகிறது என்று தெரியுமா? கிரேக்கத்தில் ஒரு கால கட்டத்தில் ஒரு புறத்தில் பெண்களை அடிமையாகவே என்றென்றும் வைத்திருத்தலின் பொருட்டு அவர்களை கல்வி பெறாமலும் எந்த வகையான அறிவுத்திறனும் பெற்றுவிடாமலும் கவனமாக பார்த்துக் கொண்டார்கள். பெண்களுக்கே தொடர்ச்சியான மூளைச்சலவை மூலமாக எந்த விதத்திலும் அறிவுத் திறனுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்ற எண்ணத்தை தெளிவாக உருவாக்கினார்கள். உலகின் எல்லா பாகங்களிலும் இது நடந்ததுதான் என்றாலும் கூட கீரீசில் அளவுக்கதிகமாக நடந்தது. மற்றொரு புறத்திலோ கிரேக்க ஆண்கள் நாளொரு கண்டுபிடிப்பும் பொழுதொரு ஆராய்ச்சியுமாக விஞ்ஞானம் முதல் தத்துவம் வரை எல்லாத் துறைகளிலும் தங்கள் அறிவை பெருக்கிக் கொண்டே போயினர்.

விளைவு - முட்டாளாய் மண்ணாங்கட்டிகளாயிருந்த பெண்களுடன் காதல் செய்ய கிரேக்க ஆண்களால் முடியவில்லை. எனவே ஆண்களுக்குள் ஓரினச் சேர்க்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. சாக்ரடீஸ், ப்ளேட்டோ , அரிஸ்டாட்டில், ஸெனோஃபோன், க்ரைசிப்பஸ், க்ளியாந்தஸ், ஜீயன், அலெக்ஸாண்டர் மாதிரியான தத்துவ ஞானிகளும் மன்னர்களும் இவ்வகையில் ஆண்களோடே காதல் கொள்ள ஆரம்பித்தனர் - அதாவது வம்ச விருத்திக்காக மட்டுமே பெண்களோடு கூடுதல். மற்றபடி காதலெல்லாம் ஆண்களுக்குள்ளேயே. காதலற்ற கூடல் என்பது ஒரு காமுகனுக்கு வேண்டுமானால் இன்பமளிப்பதாய் இருக்கலாம். ஆனால் ஒரு சாதாரண மனித பிறவிக்கு ஆண் ஆயினும் சரி பெண் ஆயினும் சரி அது ஒரு தண்டனையே. எனவே குழந்தைக்காக கூட அவர்களால் பெண்களோடு கூட முடியாது போயிற்று. விளைவு - ஆண்கள் பெண்களை தவிர்க்க ஆரம்பித்தார்கள். மனித இனத்தின் எண்ணிக்கை சரிய தொடங்கியது. பிறகு மீண்டும் பெண்களுக்கும் அறிவு தேவையென சமூகம் உணர ஆரம்பித்தது. எனவே பெண்கள் காதல் ஒருவனை கைபிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்தால் மட்டுமே இல்லறம் நல்லறமாயிருக்கும். அதற்கு அவளுக்கும் சுய சிந்தனையும் அறிவுத் தெளிவுமிருத்தல் வேண்டும். ஒன்றுமே தெரியாத ஒருவர் மேல் பரிதாபம்தான் வரும். காதலா வரும்?

//ஏசி தியேட்டர்களில் சாப்பிட்டு விட்டு, பாதியில் சினிமா தியேட்டரின் ஏசியை நிறுத்திவிட்டான் என்ற "கோட்"களுடன் இருக்கும் விமர்சனங்களை விடவும், "காசு கொடுத்தேன் ஏன்யா ஏசியை பாதி நிறுத்தின" என்று கேட்கப்படும் கேள்விகளால் சமுதாயம் திருந்தலாம்.// சமூக சீர்திருத்தத்துக்கு உங்களுக்கான வழி அது. என் வரையில் இரவு 10 மணிக்கு தியேட்டர் நிர்வாகியிடம் போய் கத்தினால் என்ன பலனிருக்கும் என்று தெரியும். கஸ்டமர் சர்வீஸ் என்கிற பதத்திற்கான சரியான பொருளே தெரியாத நம் சமூகத்தில் இதை கையாளும் முறை வேறு - காசு அதிகம் கொடுத்தாலும் இப்படி ஒரு போதும் நடக்காது என்கிற உத்ரவாதமுள்ள தியேட்டர்களுக்கு மட்டுமே(உதா: சத்யம்) போவது என்று முடிவெடுப்பது அதில் ஒன்று. அதைத் தான் நான் வழக்கமாய் செய்வது. ஒரு வேளை ஒரு சிலருக்கு நிர்வாகியிடம் வாக்குவாதம் செய்வது போன்ற அதீத ஆ.கோ வகை வெளிப்பாடுகள் தேவையாக இருக்கலாம். அது அருகில் அமரும் பிகர்களின் கவனத்தை கவர்வது போன்ற சில்லறை சில்மிஷங்களுக்கு ஆதாயகரமானது என்பதால் கூட இருக்கலாம். ஆனால் ஒட்டுமொத்த சமூக முன்னேற்றத்திற்கும் அதுதான் வழி என்று ஆகி விடுமா என்ன?

கடைசியாக ஒரு விஷயம் - எழுத்துக்குப் பின்னால் "பெண்குலங்களை" மதிக்கும் கள்ளமில்லா வெள்ளை மனது தனக்கு இருப்பதாக சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்து படம் பார்க்கும் பெண்களை பிகராக மட்டுமே பார்க்க முடிகிறவர்களும், தன்னை நாத்திகவாதி என்று அறிவித்துக்கொண்டே வைகுண்ட ஏகாதேசிக்கு இரவோடிரவாக பஸ் பிடித்து போய் அங்கேயும் அய்யராத்து அகிலாண்டேஸ்வரிகள் கிடைப்பார்களா என்று தேடுபவர்களும் எல்லாம் பெண்ணுரிமைக்கான அரசியல் தீர்வை பற்றி பேசும் வரையில் பாடல்களில் தொப்புளை காட்டிவிட்டு உரையாடல் காட்சிகளில் தழைய தழைய புடவை கட்டிய ஜவுளிக்கடை பொம்மைகளே நம்ம தலைவரின் ஆஸ்தான நாயகிகளாய் இருப்பார்கள். வாழ்க தமிழ் சினிமா! வளர்க சூப்பர் ஸ்டார் புகழ்!

32 comments:

said...

லக்ஷ்மி சுடுகிறது உங்கள் பதிவு,.

எனக்கு க்ளாப்ஸ் ஸ்மைலி போட முடியவில்லை என்று வருத்தமாக இருக்கிறது.

மிக மிக நல்ல பதிவு.
ஊதுகிற சங்கின் சத்தம் காதில் விழுமா?

said...

வல்லி அம்மா, நானும் கூலாத்தான் ஒரு பதிவு போட்டேன். எல்லாரும் அதை கூலா எடுத்துகிட்டு சிரிச்சுட்டு போயிட்டிருந்தா பிரச்சனையேயில்லை. தன்னைத் தானே கலகக்காரர்களாய் அறிவித்துக் கொள்ளும் கலாச்சார காதலர்கள் பதிலுக்கு பதில் பேசும் போது நானும் கொஞ்சம் சூடாவே பதில் சொல்ல வேண்டியதாப் போகுது. என்ன பண்ண?

க்ளாப்ஸ் எல்லாம் ஸ்மைலி போட்டாத்தானாம்மா, சொன்னதே போதும். ரொம்ப சந்தோஷமா இருக்கு. சங்கோட சத்தம் நிச்சயம் காதுல விழும்(ஏன்னா போயி சொல்லிட்டு வந்துட்டேன் - ஊதியிருக்கேன்னு), ஆனா அதை ஆர்மோனிய சத்தம்தான் அது என்று அடித்து பேசுவதாய் ஒரு பதிவு பின்னாலேயே வரும். :D

said...

லக்ஷ்மி...நேரத்தை வீணாக்குகிறீர்களோ என்று தோண்றுகிறது...கோபிக்காதீர்கள்.

ஒரு கதை கேட்டதுண்டா ...வேண்டாம்..எதையும் சரியான கோணத்தில் எடுத்துக்கொள்ளாமல் முயலுக்கு மூணே கால் என்றால் நீங்கள் என்ன சொல்லி என்ன ....

said...

பதிவு நல்லா இருக்கு, வல்லிம்மா சொன்ன மாதிரி சூடாவும் இருக்கு, வாழ்த்துக்கள் லெஷ்மி! தஞ்சாவூரு பொண்ணா கொக்கா!அதுவும் வாத்தியார் பொண்ணு தூள் கிளப்புது!

said...

=D> இதுதான்னு நினைக்கிறேன் க்ளாப்ஸுக்கு.

= D > இடையில் இருக்கும் ஸ்பேஸை எடுத்து எஞ்சாய் பண்ணுங்க.

said...

நீங்கள் சொல்வது புரிகிறது முத்து லெட்சுமி. நானும் பொதுவாய் இவ்வகை விவாதங்களை தவிர்க்கவே விரும்புவேன். எனினும் சில சமயங்களில் பொறுமை போய்விடுகிறது - சில வறட்டு கூச்சல்களை கேட்கும் பொழுது. அதன் விளைவே இந்த வெடிப்பு. எப்படியும் இதற்கு மேல் இவ்விஷயத்தில் எந்த பதிவும் போடுவதாயில்லை - நீங்கள் சொல்லும் காரணங்களோடு என்னுடைய இப்போதைய நேரமின்மையும் ஒரு காரணம்.

அபி அப்பா, பாராட்டுக்கு ரொம்ப நன்றி. பின்ன, நம்ம ஊர் பேர தூக்கி நிறுத்திட வேண்டாமா?

நன்றி மோகனா, எடுத்து கொடுத்ததுக்கு. இனி வர்ரவங்களுக்காவது உபயோகமா இருக்குமே.

said...

//கடைசியாக ஒரு விஷயம் - எழுத்துக்குப் பின்னால் "பெண்குலங்களை" மதிக்கும் கள்ளமில்லா வெள்ளை மனது தனக்கு இருப்பதாக சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்து அமர்ந்து படம் பார்க்கும் பெண்களை பிகராக மட்டுமே பார்க்க முடிகிறவர்களும், தன்னை நாத்திகவாதி என்று அறிவித்துக்கொண்டே வைகுண்ட ஏகாதேசிக்கு இரவோடிரவாக பஸ் பிடித்து போய் அங்கேயும் அய்யராத்து அகிலாண்டேஸ்வரிகள் கிடைப்பார்களா என்று தேடுபவர்களும் எல்லாம் பெண்ணுரிமைக்கான அரசியல் தீர்வை பற்றி பேசும் வரையில் பாடல்களில் தொப்புளை காட்டிவிட்டு உரையாடல் காட்சிகளில் தழைய தழைய புடவை கட்டிய ஜவுளிக்கடை பொம்மைகளே நம்ம தலைவரின் ஆஸ்தான நாயகிகளாய் இருப்பார்கள். வாழ்க தமிழ் சினிமா! வளர்க சூப்பர் ஸ்டார் புகழ்! //

நெத்தி அடி!.

அறிவு எது என்பதிலேதான் பிரச்சனை.

மோகன்தாஸ் சொல்லியிருக்கும் //ஏனென்றால் ஆண்களுக்கு(க்ரூப் அடிக்கிறேன்னு நினைக்க வேண்டாம் என்னையும் சேர்த்து வேண்டுமானால் %) இன்டலக்சுவல் பெண்களைப் பிடிப்பதில்லை. டிகிரி முடிச்சதும் 2 வருஷம் சும்மா இருந்து, தையல், சமையல்னு கத்துகிட்டு கல்யாணத்துக்காகவே காத்துக்கொண்டிருக்கும் டிபிகல் தமிழ்ப்பெண்களைத் தான் பிடிக்கும்.// தன்னைவிட அதிக மேதமை இருக்கும் பெண்களை ஆண்கள் விரும்புவதில்லை என்பது அவர்கள் முட்டாள்களைத்தான் விரும்புகிறார்கள் என்று அர்த்தமாகாது. அதே சமயம் அவர்களின் இத்தகைய விருப்பங்கள் என்பது சமூகம் கட்டமைத்து வைத்திருக்கும் விழுமியங்களின் தாக்கம் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது. ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் மாறத்தகுந்தது.

அறிவாளி/முட்டாள் என்றில்லாமல் மனோநிலைக்கு பொருந்த கூடியவர்/பொருந்த இயலாதவர் என்று பகுப்பதே சரியாக இருக்கும் என்பது என் எண்ணம்

உங்கள் பதிவு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது. பல புரிதல்களையும் கேள்விகளையும் எழுப்பும் வகையில் அமைந்திருக்கிறது.இப்போதைக்கு இப்பின்னூட்டத்தை நிறுத்திக்கொள்கிறேன்

said...

//ரசனை என்பது ஒவ்வொருவருக்கும் மாறத்தகுந்தது. //
ஹி ஹி.. எப்பவோ தாஸ் பதிவில் நான் கூட இதையே சொன்ன நினைவு.. என்னைப் பொறுத்தவரை இந்த தலைப்பில் தாஸ் இடும் எல்லா இடுகைகளுக்குமே இந்த ஒரு வரி (ரசனை என்பதை, திறமை, capacity, தன்மை என்று எல்லாவற்றையும் அங்கே போடலாம்..) சொல்லி முடித்துவிடலாம்..

said...

:-)

இது பொறுமை இழந்து போட்ட பதிவு இல்ல லக்ஷ்மி.அது நிறையவே இருக்கு

ஹ்ம்ம் என்ன என்னமோ சொல்லத்தோனுது...வேண்டாம்..


//ஒருவரது படிப்பு தகுதிகளும்(பட்டப்படிப்பு) .......///

said...

முத்துகுமரன், மங்கை, பொன்ஸ் - வருகைக்கும் புரிதலுக்கும் நன்றி.

முத்துகுமரன் - நீங்கள் சொல்வது சரியே. நானும் அதை முட்டாள் பெண்களுக்கான தேடல் என்று நினைக்கவில்லை. ஆனால் அறிவான பெண்களெல்லாம் திருமணம் செய்துகொள்ள தகுதியில்லாதவர்கள் என்பது போன்ற அந்த தொனிதான் எனக்கு எரிச்சலூட்டுகிறது.

பொன்ஸ், தூங்குவது போல் நடிப்பவர்களை எழுப்ப முடியாது என்று தெரிந்தேயிருப்பினும் வல்லி அம்மா சொன்னா மாதிரி ஊதுற சங்கை ஊதிடுவோமேன்றா மாதிரியான முயற்சிதான் இது.

மங்கை - வேண்டாமென்றே எல்லோரு விட்டு விட்டு போகிறோம். ஆனாலும்... சில நேரங்களில்.... முடியலை.

said...

பூர்ணா opinion differs என்பது எத்தனை % உண்மையோ அதே % நாம் எதோ ஒரு வகையில் மற்றவர்களை ஒத்திருக்கிறோம் என்பது.

பக்கத்தில், Cross Cultural Sensitivity என்றொரு க்ளாசுக்கு நீ போயே ஆகவேண்டும் என்று என்னை அனுப்பினார்கள். எடுத்த பாடம் என்ன தெரியுமா, இங்கிலாந்திற்குப் போனால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் அமேரிக்கா போனால் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று.

ஏன் இங்கே இப்படி ஒரு பொதுமைப்படுத்திப் பேசுகிறார்கள் யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா. ஏகப்பட்ட விஷயங்கள் சொல்லி மூணு பெரிய புக்லெட் கொடுத்தாங்க. வெவ்வேறு நாடுகளில் எப்படி எப்படி நடந்து கொள்ளவேண்டுமென்று.(அதாவது சாப்பாடு, முகமன் கூறுவது, பேசுவது என்று ஏகப்பட்ட விஷயங்கள்). ஏன் இப்படி ஒரு க்ரூப்பைப் பற்றி பேசவேண்டும் opinion differs என்றால்.

கடைசியில் அந்த மனிதரும் ஒரு வார்த்தைக்காக சொன்னார் opinion differs மறுக்கவில்லை ஆனால் நாமெல்லாம் இயல்பாகவே குழுமமாக இயங்கத் தொடங்கியவர்கள் என்று. இங்கே நம்பர்கள் மாறுபடலாம்.

said...

மோகனா, உங்களோட பதிவுக்கும் இந்த பின்னூட்டத்துக்கும் சேத்து விரிவான பதிலை நாளைதான் போட முடியுமென்கிற நிலையிலிருக்கிறேன். போன வாரம் எடுத்துக்கொண்ட விடுப்பிற்க்கும் சேர்த்து இப்போது சில விஷயங்களை முடித்தாக வேண்டிய நிர்பந்தம். எனவே இப்போதைக்கு வெயிட்டீஸ்...

said...

WoW...Its my first time here!!!Its a wonderful post...Its very sweet as well as SPICY..=D> =D> =D>..
Keep the good work... "HATS OFF"

said...

வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி கமல்.

said...

படிப்புக்கும் அறிவுக்கும்கூட சம்பந்தமில்லைங்க. நிறையப்பேருக்கு
வாய் திறக்காத துணைதான் வேண்டி இருக்கு(-:

said...

What is Rajinikanth's education ? what is Latha Rajinikanth's education ?
how did they marry ?

what is Sujatha-Rangarajan's education and real-wife-sujatha's education ?

what is Shankar's education ? what is his wife's education ? how did they marry ?

said...

சாட்டையடி!! உண்மையான வாழ்த்துக்கள்!!

said...

அதிகமாக சொல்லவேண்டாமென்று நினைத்தேன். நீங்க ரொம்பவே பொருமி இருக்கீங்க.

//பாலச்சந்தர் படத்து கதாநாயகிகளா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள்//

பாலசந்தர் படத்தில் தான் பேசுவார். அதுமட்டுமல்லாமல் அவருடைய கதாநாயகிகள் செயற்கையாக இருப்பார்கள். நீங்கள் சொல்லுவது போல இருப்பதை இயல்பாக காட்டலாம். அதிமேதாவியாக காட்ட யாரும் எதிர்பார்க்கவில்லை.

//பெண்ணுரிமைக்கான அரசியல் தீர்வை பற்றி பேசும் வரையில் பாடல்களில் தொப்புளை காட்டிவிட்டு உரையாடல் காட்சிகளில் தழைய தழைய புடவை கட்டிய ஜவுளிக்கடை பொம்மைகளே நம்ம தலைவரின் ஆஸ்தான நாயகிகளாய் இருப்பார்கள்.//

அழுது புழுங்கி சாகிற ஒரு பூச்சி போல காட்டுவதெல்லாம் ரொம்ப வோவர் தான். இத பழய பார்முலானு கூட சொல்ல முடியாது. பழய படத்திலயும் விதிவிலக்கு உண்டு. (உதா:நர்கீஸ் நடித்த 'மதர் இந்தியா').

இப்பயெல்லாம் அவனவன் படிச்ச பொண்ணு வேணும்னு சொல்லுரது எல்லாம் பொருளாதார தேவைக்கு தானேயொழிய மனைவி படிச்சவளா, அறிவாளியா இருக்கணும்னு நெனச்சி இல்ல. எந்தவித கஷ்டம் வந்தாலும் தனித்து நின்று போராடும இயல்புடைய, பொதறிவுடைய பெண்கள் தான் இப்போதய சமுதாயத்திற்குத் தேவை.

said...

/பாலச்சந்தர் படத்து கதாநாயகிகளா என்றெல்லாம் கேட்டுவிடாதீர்கள் அய்யனார், ப்ளீஸ்./

லக்ஷ்மி தமிழ்சினிமாவில் மிகவும் ஆபத்தான இயக்குநர்களில் அண்ணாத்தே யும் ஒருவர் வெகு நுட்பமாக ஆணாதிக்கத்தின் வேர்களை உட்சொருகியிருப்பார்.மேலோட்டமாய் பார்ப்பதற்க்கு பெண்ணின் பிரச்சினைகளை பேசுவதுபோல் பட்டாலும் அதன் நுண் அரசியல் பெண்ணை ஒரு வெற்று உடலாக மட்டுமே முன்நிறுத்தப்பட்டிருக்கும்.ஆரம்ப காலத்தில் இவரை பெண் பிரச்சினைகளை பேசும் அற்புத படைப்பாளி என பொத்தாம் பொதுவாக புரிந்து கொண்ட ஆட்களில் நானும் ஒருவன் அந்த பயத்தில்தான் அப்படி பின்னூட்டமிட்டேன்.நீங்கள் விழிப்பாக இருப்பதில் மகிழ்ச்சி.

உங்களின் கோபங்கள் நியாயமானதுதான்.என் தனிப்பட்ட அட்வைஸ் இதுபோன்ற படங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.உலக சினிமா பக்கம் ஒதுங்குங்க ஏகப்பட்ட சன்னல்கள் ஒரே சமயத்தில் திறக்கும்.

said...

பென்கள் அறிவாளியாக இருந்தால் பல ஆண்களுக்கு பிடிப்பதில்லை
என்பது உன்மையே. இப்போது சிறிது சிறிதாக அதில் மாற்றம் வந்து
கொண்டு இருக்கும்போது இந்த மாதிரி படங்கள் அதை கெடுக்கின்றன

said...

சாம்பார் வடை ஐயா, நீங்கள் எதற்காக இந்த கேள்விகளை எழுப்புகிறீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. என் சிற்றறிவுக்கு எட்டும் வண்ணம் கொஞ்சம் விளக்கமாய் நீங்கள் சொல்ல வருவதை சொல்லுங்களேன்.

//நீங்கள் சொல்லுவது போல இருப்பதை இயல்பாக காட்டலாம். அதிமேதாவியாக காட்ட யாரும் எதிர்பார்க்கவில்லை.// சரியான புரிதலுக்கு நன்றி குட்டி பிசாசு.

துளசி டீச்சர், நீங்க் சொல்வது சரியே. பொதுவாகவே மனிதர்களுக்கு மற்றவர்கள் நமக்கு கீழ்படிய வேண்டும் என்பதில் ஆவல் அதிகம். பெரும்பாலும் ஆண்கள் பொருளாதார ரீதியில் பலமாயிருப்பதால் அவர்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றிக் கொளப்படுகிறது -அவ்வளவே.

முரளி, வருகைக்கு நன்றி.

அய்யனார், உங்களது பாலசந்தர் குறித்தான கருத்துக்களில் நான் முழுமையாக உடன்படுகிறேன். ஆனால் ஒரேடியாக தமிழ் சினிமாவை தவிர்ப்பதும் நம் கையில் இல்லையே... குடும்பத்துடன் சேர்ந்து பொழுது போக்கு என்று வரும் போது தமிழ் சினிமாவிற்குத்தான் முதலிடம் தந்தாக வேண்டியிருக்கிறது. டிவிடி புண்ணியத்தில் பிற மொழிப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.

said...

//உங்களின் கோபங்கள் நியாயமானதுதான்.என் தனிப்பட்ட அட்வைஸ் இதுபோன்ற படங்களை தவிர்ப்பது மிகவும் நல்லது.உலக சினிமா பக்கம் ஒதுங்குங்க ஏகப்பட்ட சன்னல்கள் ஒரே சமயத்தில் திறக்கும்.//

//டிவிடி புண்ணியத்தில் பிற மொழிப்படங்கள் பார்க்க ஆரம்பித்திருக்கிறேன். விரைவில் பதிவில் பகிர்ந்து கொள்கிறேன்.//

நான் வேண்டுமானால் சொல்லட்டுமா நல்ல(பெண்ணிய) படங்களை. ;)

said...

மோகனா, விவாதம் எங்கெங்கேயோ போயிகிட்டிருக்கும் போது நீங்க என்னடான்னா வந்து ஜாலியா கலாய்க்கிறீங்க... நல்ல காமெடி போங்க. ஒரு விஷயம் மட்டும் இங்கே நான் தெளிவு படுத்திவிடுகிறேன் - ஏற்கனவே மடல்களில் உங்களிடம் சொன்னதுதான். நான் பெண்ணியமென்றெல்லாம் ஒரு தனியான ஜந்து ஒன்றிருப்பதாக நம்புபவள் இல்லை. மனிதர்களை மனிதர்களாக பார்ப்பது - அது எல்லா மட்டத்திலும் வர வேண்டுமென்று ஆசைப்படும் ஒரு அப்பாவி மட்டுமே. அது கணவன், மனைவிக்கு இடையிலானாலும் சரி ஒரு முதலாளிக்கும் தொழிலாளிக்கும் இடையிலானாலும் சரி - எல்லோரும் அடிப்படையில் மனிதர்களாகவே உணரப்பட வேண்டும். அதனால் பொன்ஸ் பாஷையில் இந்த ஈயம் பித்தளை பாகுபாடெல்லாம் இல்லாது நல்ல படங்கள் என்று நீங்கள் நினைப்பவற்றை எனக்கு தாராளமாக சுட்டலாம்.

said...

//பி. கு: பின்னூட்டப் பெட்டி காரணமாகவே மூடப்படுகிறது. ஆதரவு எல்லாம் மனதிலிருந்தாலே போதும்பா.//

உங்க கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதற்காக இல்லை இந்த பின்னூட்டம்..

உங்கள் பேனாவின் (கீபோர்டின்??) சக்தி கண்டு பிரமிக்கிறேன். You have powerful writing skills. வாழ்த்துக்கள்.

said...

//சரி, சில விஷயங்களில் புலம்புவதை ஒரு அளவோடு நிறுத்திகொள்ள வேண்டும். புலம்பாமலே இதுதான் யதார்த்தமென்று புரிந்துணர்ந்து புன்னகையோடு நிஷ்காம்ய கர்மமாக பதிவெழுதும் மக்கள் புண்ணியாத்மாக்கள். நானும் மெல்ல அந்த நிலைக்கு போய்க்கொண்டிருக்கிறேன். அவ்ளோதான் சொல்ல முடியும் இப்போதைக்கு.//

:):):)
நல்ல விவாதமாகத்தான் போய் கொண்டிருப்பதாக நினைச்சிட்டு இருந்தேன்......எங்கேயோ miss பண்ணிட்டேன் போல.....

//உங்கள் பேனாவின் (கீபோர்டின்??) சக்தி கண்டு பிரமிக்கிறேன். You have powerful writing skills. வாழ்த்துக்கள்.//

அதே அதே!!

said...

பிபட்டியன் - பாராட்டுக்கு நன்றி(உங்க பேரை நான் சரியா உச்சரிக்கிறேனா என்று தெரியவில்லை. தவறெனில் சுட்டவும்).

ராதா - வேறு எங்கோ போகும் முயற்சிகள் எங்களிருவர் பதிவிலும் நடக்கவில்லை. வெவ்வேறு இடங்களில் நடக்க ஆரம்பித்தது. அதை நிறுத்துவதற்காகவே இவ்விவாதம் முடிவுக்கு கொண்டு வரப்படுகிறது.

said...

i have not seen ur blogg regularly. it was nice going through ur blogg.

ungal sangin oli thodara vaazhththukkal - ranjith

said...

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ரஞ்சித்.

said...

யக்கோவ்..
அடிக்கடி பொன்ஸ் பாசை பொன்ஸ் பாசைங்கிறீங்க.. தனியா ஒரு வட்டார வழக்கு அகராதியே போட்டுருவீங்க போலிருக்கே!

said...

போட்டுட்டா போச்... தங்கச்சி கேட்டு செய்யாம இருப்பேனா? பேசாம வலைப்பதிவர் பேரகராதின்னு போடலாம். ஒவ்வொருத்தருக்கும் ஒரு பக்கம். எப்படி என் ஐடியா?

said...

லக்ஷ்மி,

முதல் முறையாக தங்கள் பதிவை படிக்கிறேன். எத்துணை தெளிவான நடை. உங்கள் கோவமும் தங்கள் பதிவைப் போன்றே அழகாக உள்ளது. இத்துணை நாட்கள், இது மாதிரி சீறி எழும் சிங்கங்களாக பெண் பதிவர்கள் இருப்பார்களா இங்கே என்று நினைத்ததுண்டு. இப்போது தான் பதிவின் பயனும், பங்களிப்பும் நன்கு விளங்குகிறது.ஒரே பதிவில் உள்ளத்தில் இடம் பெற்று விட்டீர்கள்.பாராட்ட வார்த்தைகள்..கிடைக்கவில்லை. வாழ்த்துக்கள். :)

said...

பாராட்டுக்களுக்கு மிக்க நன்றி சௌம்யா. ஆனால் ஒரே ஒரு விஷயம் - நீங்கள் இப்படியும் பெண்பதிவர்கள் இருப்பார்களா என்று ஒரு கேள்வியை எழுப்பியிருப்பதால் இந்த விளக்கம். என்னை விடவும் மிக அருமையாக எழுதும் பெண் பதிவர்கள் அனேகம் பேர் இங்கே இருக்கிறார்கள். பெண்களை விடவும் பெண்களின் பிரச்சனைகளில் அதிகக் கரிசனம் கொண்ட ஆண் பதிவர்களும் இங்குண்டு. பொறுமையாக தமிழ்மணத்தில் மூழ்கி எழுந்தால் பலப்பல முத்துக்கள் நிச்சயம் கிடைக்கும் உங்களுக்கு.