Tuesday, March 27, 2007

பெண்களின் பொருளாதர முன்னேற்றம்

அவள் விகடனின் இந்த இதழில் இப்படி ஒரு கட்டுரை வந்திருக்கிறது - அளவு கடந்த சுதந்திரம் பெண்களை சீரழிக்கிறதா என்பது அதன் தலைப்பு.

சமீபத்தில் சென்னையில் ஒரு விழா மேடையில், "அளவுக்கு அதிகமான சுதந்திரம் பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறது..". என்றும் "பன்னாட்டு நிறுவனக்களில் ரூ.50 ஆயிரம் வரை சம்பளம் பெறும் பெண்களின் வாழ்க்கைத்தரம் மிக மோசமான நிலைக்குப் போகிறது" என்றும் சொல்லியிருக்கிறார் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சுப்புலட்சுமி ஜகதீசன். மத்திய அமைச்சர்... அதுவும் ஒரு பெண் தலைவர்... வெளியிட்டுள்ள இந்தக் கருத்தின் உள் அர்த்தங்களைச் தேடி, ஒரு அரோக்கியமான விவாதத்தை துவங்கி வைத்தோம்..

இப்படி ஆரம்பிச்ச கட்டுரைல சில பெண்களிடம் கருத்து கேட்டிருந்தாங்க. அவங்களும் கருத்து சொல்லியிருந்தாங்க. எல்லாம் சரி. சுப்புலட்சுமி அம்மாவோட இந்த கருத்து வேலைக்கு போற பொண்ணுங்க எல்லாம் நடத்தை கெட்டு போனவங்கன்னு காஞ்சி சங்கராச்சாரியர் ஜெயேந்திரர் சொன்னதுக்கு எந்த விதத்துல குறைஞ்சதுன்னு எனக்கு தெரியலை. சொன்னவங்க ஒரு பொண்ணுன்றதாலயே இத பெரிய விஷயமா எடுத்துக்க வேண்டியதில்லயா என்ன? அந்த பத்திரிக்கையே சொல்வது போல ஒரு பெண் தலைவர் அதுலயும் சமூக நீதித்துறைக்கு அமைச்சரா இருக்கிறவர் இப்படி பேசுவது எந்த விதத்துலயும் ஏத்துக்க கூடியதில்லை. இதுக்கு மேல அவங்க இன்னொரு விளக்கமும் கொடுத்திருக்காங்க. சமீபத்துல புனேல நடந்த போதை விருந்துல பெண்களும் மாட்டினதுனால இந்த சமூக சீரழிவை பத்தி கவலைப்பட்டதாகவும் அதுனாலதான் இப்படி பேசினதாகவும் சொல்லியிருந்தாங்க.

இவங்க சொல்ற இரண்டு விஷயமுமே தப்பா இருக்கு. முதல் விஷயம் பணம் நிறைய சம்பாதிக்கறவங்க கெட்டுப்போறாங்கன்றது. இதை இரண்டு பாலினத்தவருக்கும் பொதுவாக வைத்துப்பார்த்தாலே ரொம்ப அபத்தமான கற்பிதமாகத்தான் இருக்கும். போதைப்பொருள் புழக்கம்ன்றது, சமூகத்தில் எல்லா தட்டுக்களிலும் அவங்கவங்களோட பொருளாதார வசதிக்கேத்த உருவத்துல இருக்கு. ஆக, 50 ஆயிரத்துக்கு மேல சம்பாதிச்சா போதைக்கு அடிமையாயிடுவாங்கன்னு குதிக்கறதெல்லாம் ரொம்ப அபத்தமா இருக்கு.

அடுத்தது பெண்களுக்குத்தானே அதிக பிரச்சனை வரும் அதுனால அவங்கதான் ரொம்ப ஜாக்கிரதையா இருக்கணும் அப்படின்ற வாதம். இது வந்து நம்ம டி.ஆர் அவரோட படங்கள்ள, தங்கச்சிங்க கிட்ட சொல்லுவாரே - முள்ளு மேல சேலை விழுந்தாலும் சேலை மேல முள்ளு விழுந்தாலும் கிழியப்போறதென்னவோ சேலைதாம்மான்னு, அந்த ரகம். அதிக பிரச்சனைன்றாங்களே அது என்னனு பார்த்தால் - அந்த நிலைல பெண்களை உடல் ரீதியான பலாத்காரத்துக்கு உட்படுத்திட்டா என்ன செய்ய முடியும்ன்றதுதான் இவங்களோட முக்கிய கவலை. என்னவோ போதைல இருக்கறப்ப மட்டும்தான் இந்த பாலியல் பலாத்காரங்கள் நடந்துடற மாதிரி பேசுவதை பார்த்தால் என்ன சொல்றதுன்னே தெரியலை. இப்போ போதைல இருக்கும் ஒரு பையனிடம் பர்ஸை திருடிட்டு அவனை அடித்து போட்டுவிட்டு போனால் அவனுக்கு என்ன பாதிப்பு இருக்குமோ அதே போல ஒரு பெண்ணின் இந்த பிரச்சனையும் பார்க்கற எண்ணம் சமூகத்துல எல்லாருக்கும் வந்துட்டாலே போதுமே எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமே, அதையேன் யாருமே யோசிக்கறதில்லை?

அவங்களோட இந்த கருத்தை இன்னொரு விதமா பார்க்கலாம். பொதுவாவே ஏதாவது ஒரு துறைல அதிக அதிக பணப்புழக்கமோ அல்லது அதிக புகழ் கிடைப்பதற்கான வாய்ப்போ இருந்தால் அந்த துறையின் மீதான சமூகத்தின் பார்வை கொஞ்சம் கடுமையடைஞ்சுடறது வாடிக்கை. இதுக்கு மிகச்சிறந்த உதாரணம் சினிமா. அந்த துறையின் பணப்புழக்கமும் அது கொடுக்கற புகழும் மத்தவங்களை எவ்வளவும் எரிச்சலடைய வச்சிருக்குன்றதை பத்திரிக்கைகள் அவங்களை பத்தி வெளியிடற கிசுகிசுக்களை வச்சே தெரிஞ்சுக்கலாம். வாரமலர் கிசுகிசுக்களை எப்பவாவது படிச்சிருக்கீங்களா? அதுல அவங்க நடிகர்களை குறிப்பிடும் விதமே அவங்களோட வயத்தெரிச்சலோட அளவை காமிச்சுடும். அது போல இப்போ சமூகம் மென்பொருள் துறையையும் பார்க்க ஆரம்பிச்சுட்டதுக்கான அறிகுறிகள் பத்திரிக்கை செய்திகளிலிருந்து ஒரு ஆட்டோ ஒட்டுனர்களின் அடாவடியான பேச்சுக்கள் வரை எல்லாத்துலையும் நல்லாவே தெரியுது. சமீபத்துல ஒரு பதிவர் என்னவோ நாரயணமூர்த்தியும் அஸிம் ப்ரேம்ஜியும் ஒவ்வொரு க்யூபிக்கலுக்கும் வந்து ஊத்திக்கொடுத்துட்டு போறா மாதிரி ஒரு பதிவு போட்டு அதிர்ச்சிக்குள்ளாக்கியிருந்தார். இப்போ இந்த அம்மா பேசும் தொனி கூட அப்படித்தான் இருக்கு.

முன்னாடியெல்லாம் பெண்கள் நர்சிங், ஆசிரியப்பணி என்று ஒரளவு நல்ல வருவாய் தரும் அதே நேரத்தில் தங்களின் தனித்துவமென்று நம்பவைக்கப்பட்ட தியாக/சேவை உணர்வுகளை விட்டு விடாத வேலைகளை பெரும்பான்மையாக செய்து வந்த போது வராத எதிர்ப்பு இப்போது வருவதன் காரணம் புரிந்துகொள்ளக்கூடியதுதான். பொருளாதார ரீதியில் மிக அழுத்தமாக காலூன்ற உதவும் அதே நேரத்தில் தங்கள் ஆளுமையையும் ஆண்களுக்கு இணையானதாக எல்லா விதத்திலும் (வேலை நேரத்திலிருந்து எதிலும் இந்த துறையில் பெண் என்பதற்காக தனி சலுகையெல்லாம் கிடைக்காது) வளர்த்துக்கொள்ள வாய்ப்பளிக்கும் இந்தத்துறையில் பெண்களின் எண்ணிக்கை கூடுவது ஒரு நல்ல சமூக மாற்றத்துக்கான அறிகுறி. எப்பவுமே மாற்றங்கள் ஆரம்பிக்கும் போது இந்த மாதிரி புலம்பல்கள் சகஜம்தான். நாம இதையெல்லாம் உதறித்தள்ளிட்டு போக வேண்டிய தொலைவு அதிகம்.

Monday, March 19, 2007

நம்பிக்கை - 2

தொண்டையை வறளச்செய்யும் இந்த தாகம் பயமுறுத்தினாலும்
தூரத்தில் தெரியும் நீர்பரப்பு
கண்ணில் தூவிய நம்பிக்கை காரணமாய்
உயிர் தரித்திருக்கிறேன் இன்னமும்.
தயவு செய்து அது கானல் நீராயிருப்பினும்
என்னிடம் யாரும் சொல்லிவிடாதீர்கள்.
இன்னும் சற்று நேரமேனும் நான் உயிர் வாழ விரும்புகிறேன்.

Thursday, March 15, 2007

நம்பிக்கை

எழுப்பிய தாயின் மேல் எரிந்து விழுந்துவிட்டு
போர்வைக்குள் புதைந்துகொண்டு
கலைந்த கனவை தொடர எண்ணுதல் போல்
இன்னமும் நம்புகிறேன்
நீ மீண்டும் வருவாயென.

Monday, March 12, 2007

கையெட்டும் தூரம்

உதிரத்தொடங்கிவிட்ட சுவற்றுச்சுண்ணாம்பு
காட்டுகின்ற தெளிவற்ற ஓவியமாய்
மாறியபடியிருக்கின்றன என் முடிவுகள்.
பெரியதொரு பந்தில் விழுந்த ஊசித்துளை வழி
ஒரு சீராய் குறைகின்ற காற்றுப்போல்
இறங்கியே வருகிறது என் மனவுறுதி.
உன் பார்வை எறும்புகள் ஊர்ந்ததில்
நம்மிடையிலான பாறைத்தடைகள் தகர்கின்றன.
நம்மிருவருக்கும் இப்போது
அப்படியொன்றும் இடைவெளி அதிகமில்லை.

பழைய நினைப்பு...

சென்ற வாரயிறுதியில் ஊருக்குச்சென்று திரும்பும்போது எனது பழைய கவிதைகள் சில என்னிடம் கிடைத்தன. என் தோழி ஒருவர் அவ்வப்போது நான் கிறுக்கிய கவிதைகள் சிலவற்றை பதிந்து வைத்திருந்தார். அவரிடம் வலைப்பதிவைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தபோது இவற்றையும் அதில் சேர்க்கலாமே என்று சொல்லி எடுத்து தந்தார். இதில் பெரும்பாலானவை நான் இளநிலை கணிப்பொறியியல் படித்துக்கொண்டிருந்த காலகட்டத்தில் எழுதியவை. இப்போது படித்து பார்க்கையில் சற்றே சிறுபிள்ளைத்தனமாய் தோன்றினாலும், படிக்கையில் அவை நினைவு படுத்தும் அந்த கல்லூரி வாழ்க்கையும் இதில் பெரும்பாலான கவிதைகளை நான் எழுதக்காரணமாயிருந்த என்னுடைய அப்போதைய ஒருதலைக்காதலும் என் வாழ்வின் மறக்கவியலாத இனிய கணங்கள். அவற்றை இங்கே வலையேற்றி எப்போதாவது இந்தப்பக்கம் வந்து போகும் சிலரையும் பயமுறுத்துவதாக முடிவு செய்துள்ளேன். மேற்கொண்டு தொடர்வது தங்களது தாங்கும் சக்தியைப்பொறுத்தது. அவ்வப்போது நான் என் குறிப்பேடுகளின் ஓரத்தில் எனக்கே பெரும்பாலான நேரத்தில் புரியாது போய்விடுகிற என் அற்புத கையெழுத்தில் கிறுக்கியிருந்ததை பொறுமையாய் படியெடுத்து சேமித்து வைத்திருந்த என் அன்புத்தோழிக்கு என் நன்றி.

Tuesday, March 06, 2007

கதாநாயகிகளென்னும் ஆறாவது விரல்

பெரும்பாலான தமிழ் படங்களுக்கு கதாநாயகி எனும் பாத்திரமே ஆறாவது விரல் போன்று ஒரு தேவையற்ற உறுப்பேயாகும். எனது இந்த நம்பிக்கையை நான் முந்தாநாள் பார்த்த லீ படமும் உறுதி செய்தது. படம் உண்மையிலேயே நல்ல வித்தியாசமான கதையமைப்போடிருந்தது. வழக்கமான மசாலாத்தனங்களும் உண்டென்றாலும் கூட புது விதமான கதையமைப்பு படத்தை தூக்கி நிறுத்தியது. படத்தின் முக்கிய குறைபாடுகள் இரண்டு - பொருத்தமற்ற இசை மற்றும் தேவையற்ற வசனங்கள். இப்போது இவற்றை விடுங்கள். நான் படத்தை முழுமையாக விமர்சிப்பதாயில்லை. படத்தில் கதாநாயகியாக கருதப்பட வேண்டியவர் நிலா. சற்றே அரை லூசுத்தனமான இவரது கதாபத்திரம் படத்திற்கு எந்த விதத்திலும் தேவையானதல்ல. கவர்ச்சிக்காக என்று சொன்னாலும் கூட அதற்கெனவே தனியாக 2 குத்துப்பாட்டுக்களும் குமட்ட வைக்கும் நடன அசைவுகளும் படத்திலிருக்கின்றன. அதுவே போதுமே? நகைச்சுவைக்காகவென்றால் ஒரு நகைச்சுவை நடிகை போதுமே. எதற்காக கதாநாயகி என்று ஒருவர்?

படத்தின் மையக்கதை இதுதான் - ஒரு லட்சியத்துடிப்புள்ள கால்பந்தாட்ட பயிற்சியாளர் பிரகாஷ்ராஜ். இவர் சமூகத்தில் கீழ்த்தட்டிலிருந்து ஆர்வமும் திறமையுமுள்ள இளைஞர்களைத்தேர்ந்தெடுத்து தயாரித்து வருகிறார். அவர்களில் முதன்மையானவன் கதாநாயகனான லீ என்கிற லீலாதரன்(ஈ என்கிற ஈஸ்வரனின் வெற்றியைத்தொடர்ந்து இப்போது லீ. ஹ்ம்ம்.. தமிழ் சினிமாவை ஆண்டவன் தான் காப்பாத்தணும் போல). மொத்தக்குழுவும் தத்தமது குடும்பத்தின் பொருளாதார தேவைகளுக்காகவும் லட்சியதாகத்தாலும் கால்பந்தில் சர்வதேச அளவில் சாதிப்பதை குறிக்கோளாக கொண்டவர்கள். ஆனால் இந்த குழுவின் கனவு அதிகார வர்க்கத்தின் சுயநலத்தாலும் வர்க்க மற்றும் சாதித்திமிரினாலும் சிதைக்கப்படுகிறது. அத்தோடு நண்பர்கள் சிலரையும் தங்கள் வழிகாட்டியாக இருந்த பயிற்சியாளர் பிரகாஷ்ராஜையும் இழக்கிறார்கள். மிச்சமிருக்கும் நண்பர்கள் பழிவாங்க சபதமேற்கிறார்கள். இரவுபகலாக உழைத்து(வழக்கம் போல காலையில் பால் பாக்கெட் போடுவது, பேப்பர் போடுவது, மூட்டைதூக்குவது என்று எல்லாமும் செய்து ஒரு சில நாட்களில் லட்சக்கணக்கில் சேர்த்துவிடுகிறார்கள்) துப்பாக்கி ஒன்றை வாங்கி தெளிவான திட்டமிடலுடன் வில்லனை கொலை செய்ய நெருங்குகையில் புல்லட் புரூஃப் கண்ணாடி உபயத்தில் அவன் தப்புகிறான். தொடர்ந்த முயற்சிகளில் அவன் தப்பிப்பதோடல்லாமல் இந்த நண்பர் குழுவினை கூலிப்படையென அடையாளப்படுத்துகிறான். எனவே அவனை கொல்வதை விட முக்கியமாக செய்யவேண்டியது அவனை சமூகத்திற்கு அடையாளம் காட்டுவதுதான் என்று உணர்ந்து சன் டி.வி மூலமாக தங்கள் தரப்பு நியாயத்தை மக்கள் முன் வைக்கிறார்கள். பிறகு வழக்கம் போல் மக்கள் விழிப்புணர்வு பெருகி, அந்த வில்லன் அமைச்சர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட மீண்டும் ஒரு மூர்க்கமான தாக்குதல் தொடுக்கிறான். மேலும் ஒரு நண்பனை பலிகொடுக்கும் லீ வீறுக்ண்டெழுந்து வில்லனை ஓட ஓட விரட்டி ஒரு சரியாக ஒரு காலந்தாட்ட மைதானத்திற்கே கொண்டு சென்று அடித்து துவம்சம் செய்கிறான்.

சரி, இந்த கதையில் நிலா எங்கு வருகிறார் என்கிறீர்களா? ஆரம்பத்தில் ஒரு சில நகைச்சுவை காட்சிகளில் தோன்றுகிறார். உண்மையிலேயே நிலாவும் அந்த சைதை பட்டாபியும் வரும் நகைச்சுவைக்காட்சிகள் அருமை. பிறகு நாயகனுடன் நட்பாகிறார். அவரே அதை காதல் என்று நினைத்துக்கொண்டு பார்த்த 4வது நிமிடம் நாயகனுடன் ஒரு கனவுப்பாடலுக்கு ஆடிவிட்டு காணாமல் போய்விடுகிறார். பிறகு நாயகன் வில்லனை கொல்லும் தன் முயற்சியில் தோல்வியடைந்து ஒரு மறைவிடத்தில் பதுங்குகிறான். அதுவரை அரைலூசுத்தனமாய் திரிந்த நாயகியோ போலீசாலும் கண்டுபிடிக்க முடியாத அந்த இடத்தை தன் ஞானதிருஷ்டியால் உணர்ந்து அங்கே பிரசன்னமாகி நாயகனை கண்டு கோபித்து குமுறி பின் அவனது முன்கதைச்சுருக்கம் கேட்டு நெகிழ்ந்து திருந்தச்சொல்லி கெஞ்சி பின் காணாமல் போகிறார். மையக்கதையில் நாயகியின் பங்களிப்புத்தான் என்ன? ஒன்றுமேயில்லை. பின் எதற்காக இந்த அழகுப்பதுமைகள் வந்து போகிறார்கள்? எனக்கு தெரிந்தவரை 10க்கு 8 படங்களில் நாயகிகளின் நிலை இதுதான். இது தவிர ஒரு அம்மா நடிகை, கற்பழிக்கப்பட்டு இறந்து போகக்கூடிய ஒரு தங்கை மற்றும் நகைச்சுவை நடிகருக்கான ஜோடி(தனிப்பட்ட நகைச்சுவை நடிகையல்ல) இவ்வளவுதான் சராசரி தமிழ் சினிமாவில் அதிக பட்ச சாத்தியமான நடிகைகள் பட்டியல். பானுமதி, சாவித்திரி தொடங்கி சரிதா, சுகாசினி , ரேவதி என்று ஒரளவுக்கேனும் முக்கிய கதாபத்திரங்களில் தொடர்ந்து நடித்த நடிகைகள் வெகு சொற்பம். தமிழ் சினிமாவிற்கு தேவைதானா இந்த ஆறாவது விரல்?