Tuesday, March 10, 2009

கவிதை.. கவிதை.. கவிதை..

எஸ்.ராமகிருஷ்ணனின் இந்தப் பதிவ படிச்சதும் எனக்கு படிச்ச்தும் சிரிப்பு தாங்கலை. ஒரு வரி எழுத 10 வரியாவது படிச்சிருக்கணும்னு நானும் நம்பறேன். அந்தளவு வாசிப்பனுபவம் இல்லைன்னா என்னதான் திறமை இருந்தாலும் நல்ல நடை கைகூடறதில்லை. நிஜம்மாவே இந்த மாதிரி மனிதர்கள் நிறைய பேர் இருக்காங்க - எதுமே படிக்காம எழுதணும்னு நினைக்கறவங்க. அதுலயும் அப்படி எழுதினதை நம்மகிட்ட கொடுத்து அபிப்ராயம் வேற கேப்பாங்க பாருங்க, விளக்கெண்ணை குடிக்கறது கூட அதை விட சுலபமான விஷயமாத்தான் இருக்கும்.

என்னுடைய முதல் கவிதை பத்திரிக்கையில் வந்ததும் சந்தோஷம் தாங்காம நான் ஒரு தப்பு பண்ணினேன். அப்ப டிகிரி முதல் வருஷம் படிச்சுகிட்டிருந்தேன். வீட்டுல யார்ட்டையும் கவிதைய பத்தி சொல்ல முடியாது - ஏன்னா அந்த வயசுக்கே உரிய மாதிரி அது ஒரு காதல் கவிதை. அப்ப எனக்கு ரொம்பத் தீவிரமா ஒரு ஒரு தலைக் காதல் வேற ஓடிகிட்டிருந்தது. அந்த ஹீரோவை வச்சுத்தான் அந்தக் கவிதையே எழுதியிருந்தேன்னு வச்சுக்குங்களேன்.

அது ஒரு சுவாரசியமான முக்கோண காதல் கதை. சமயம் கிடைத்தால் ஒரு நாள் தனியா அதை எழுதறேன். ஆனா ஒரு உண்மைய ஒத்துகிட்டே ஆகணும் - அவனுடனான அந்த காதல் சமயத்துல நான் எழுதின அளவுக்கு வேகமாவும், தரமாவும் வேற எப்பவும் கவிதை எழுதினதில்லை (ஏன்னா அதுக்கப்புறம் நான் கவிதையே எழுதறதில்லை… ஹிஹிஹி) அந்த சந்தர்ப்பத்துல மட்டுந்தான் என்னுடைய கவிதைகள் ஒன்னு ரெண்டு பத்திரிக்கைகளில் பிரசுரம் ஆகவும் செஞ்சுது. பட், துரதிர்ஷ்ட வசமா அதெல்லாத்தையும் அப்பப்ப என் காலேஜ் நோட் புக்குகளில் எழுதி வச்சிருந்தேனே தவிர அதையெல்லாம் பாதுக்காத்து வச்சுக்கலை. இப்ப நான் கவிதைன்னு முயற்சிக்கறப்ப வர குப்பையெல்லாம் பாக்கறப்பதான், எவ்ளோ பெரிய தப்பு பண்ணிட்டேன்னு தோணுது... சோகம். 

அப்ப என் கவிதைகளில் தனக்கு பிடிச்சதை எடுத்து வேலை மெனக்கிட்டு பத்திரிக்கைக்கு அனுப்பிட்டு இருந்தவங்க என்னுடைய நெருங்கின தோழி ஒருத்தங்க. அவங்க வீட்டு அட்ரஸ் போட்டே ஆனா என் பேர் போட்டு அனுப்புவாங்க. யோசிச்சு பாருங்க, லக்ஷ்மி, C/O. ஜியாவுத்தீன் அப்படின்னு ஒரு அட்ரஸ் இருந்தால் அது எவ்வளவு ஆச்சரியமானதா இருந்திருக்கும். ஒரு வேளை அந்த ஆச்சரியத்துலதான் உதவி ஆசிரியர்கள் என் கவிதைய தூக்கியெறியாம படிச்சுப் பாத்திருப்பாங்களா இருக்கும். சொல்ல வந்த கதைய விட்டுட்டேன் பாருங்க; வீட்டுல யார்ட்டையும் சொல்ல முடியாதா.., அதுனால நான் என்ன பண்ணினேன் அறியாமையால் ஒரு பெரிய தவறு செஞ்சேன்.

எதிர்வீட்டுல குடியிருந்த ஒரு couple-கிட்ட போய் என் கவிதையையும் காட்டி, விஷயத்தையும் சொன்னேன். அவங்க ரெண்டு பேருமே எங்க ஊர் பக்கத்துல இருக்கற கிராமத்துல நல்ல பெரிய நிலக்கிழார் குடும்பங்களைச் சேர்ந்தவங்க. எங்க ஊரே அவங்களுக்கு டவுன் மாதிரி தோணும். அப்படியான ஒரு சூழல்லேர்ந்து வந்திருந்தாங்க. பத்தாதுக்கு தன்னால முடியாததுன்னு ஒன்னு உலகத்துலயே கிடையாதுன்னும், தன்னை விட அழகு/அறிவு/பணம் இதெல்லாம் யாருகிட்டயுமே இல்லைன்னும் நினைக்கற மனோபாவம் வேற. மிராசுதார் வீட்டுல ஒரே பொண்ணா வளந்தவுங்க, பெரிய குடும்பத்துல வாழ்கைப் பட்டாலும் எடுத்ததுமே வீட்டுக்காரரோட உத்தியோகம் காரணமா தனிக் குடித்தனம் - இதெல்லாம் ஊர்ல அதிகம் பெண்களுக்கு கிடைக்காத அதிர்ஷ்டம்ன்றதால ரொம்ப over confidence. இதெல்லாம் இப்ப எனக்கு அனலைஸ் பண்ணத் தெரியுது - ஆனா அப்ப தெரியாதில்ல?

அவங்க கிட்ட போய் காண்பிச்சதும் முதல்ல அவங்க வீட்டுக்காரர் கவிதை நல்லாருக்கும்மா, வெரி குட்மான்னார். இந்தம்மா உடனே ஒரளவு சுமாரா இருக்கு. நானெல்லாம் பிரமாதமா எழுதுவேன். இதுவே புக்குல வருதுன்னா, என்னுதெல்லாம் எப்பவோ அனுப்பியிருக்கலாமே? ஆமா உனக்கு இந்த அட்ரஸ்லாம் எப்படி கிடைச்சுதுன்னாங்க. நான் பவ்யமா, என் ஃப்ரெண்ட்தான்க்கா அனுப்பறாங்க, அவங்ககிட்ட அட்ரஸ் வாங்கிட்டு வரேன். நீங்களும் கவிதை எழுதுவீங்கன்னு தெரியாம போச்சே, எழுதினது இருந்தா தாங்கக்கா. படிச்சுட்டுத் தரேன்னு (நாக்குல சனி நர்த்தனமாடிருக்கணும் அப்ப) சொன்னேன். உடனே அவங்க நான் எழுதின நோட்டெல்லாம் ஊர்ல இருக்கு. ஞாபகத்துல இருக்கறதை ஒரு நோட்ல எழுதி நாளைக்குத் தரேன். நீ படி. அப்படியே உன் ஃப்ரெண்டுகிட்ட கொடுத்து அவளை விட்டே நல்ல கவிதயா எடுத்து எழுதி, அட்ரஸ்லாம் கவர்ல எழுதி கொண்டுவா. அந்தப் பொண்ணு நல்ல கைராசிக் காரியா இருக்கா. நானே அப்புறமா போஸ்ட் பண்ணிக்கறேன் அப்படின்னாங்க. நானும் மறுநாள் மறக்காம கேட்டு நோட்டை வாங்கிட்டு காலேஜ் போனேன்.

பிரிச்சு படிச்ச நானும் தோழியும் ரொம்ப டென்ஷனாயிட்டோம். எல்லாம் மன்னவனே, மைவிழி ஏங்குகிறாள், நாணுகிறாள் டைப் கவிதைகள். வாக்கிய அமைப்புக் கூட சரியா இல்லை - கிட்டத் தட்ட உளறல்கள்னே சொல்லலாம். பகைச்சுக்கவும் முடியாது - பெரியவங்களோட எல்லாம் அதுவரை சண்டை போட்டதில்லை.

அதுனால ஒரு ஐடியா பண்ணினோம். ஒரளவு உருப்படியா புரிஞ்சுக்க முடிஞ்ச விஷயங்களை (அதையெல்லாம் கவிதைன்னு பேச்சுக்கு கூட சொல்ல முடியாது) எடுத்து ரெண்டு காப்பி எழுதறதுன்னு முடிவு செஞ்சோம். ஒன்னு அவங்க என்ன எழுதியிருக்காங்களோ அதையே அப்படியே காப்பி பண்றது. இன்னொன்னு வாக்கிய அமைப்பை மட்டுமாவது சரி செஞ்சு எழுதினது. அப்புறம் கவர்ல பத்திரிக்கை முகவரி. என்னுடைய கவிதைகள் வந்துகிட்டிருந்தது தினமணிக் கதிர்ல. ஆனா தினமணி அட்ரஸுக்கு அந்த கவிதைகளை அனுப்பறது எங்களுக்கே கொஞ்சமும் அடுக்காதுன்னு தோணித்து. அதுனால தினத்தந்தியோட குடும்ப மலர் அட்ரஸை எழுதி எல்லாத்தையும் எடுத்துட்டு போய் கொடுத்தேன். ஒரு 5 ஐட்டம் தேத்தியிருந்தேன்.

அவங்ககிட்ட கொடுத்ததும் பிரிச்சு படிச்சு பாத்துட்டு, நான் எழுதினதே நல்லாத்தான் இருந்தது. பட் இருந்தாலும் நீங்க ரொம்ப ஆசையா மாத்தி எழுதியிருக்கீங்க. அதுனால அதையே அனுப்புவோம்னு ரொம்ப பெருந்தன்மையா சொன்னாங்க. அப்புறம் எல்லாத்தையும் ஒரே நேரத்துல அனுப்பி ஒரே புக்ல வந்துருச்சுன்னா அந்த ஒரு தரம்தானே பத்திரிக்கைல வந்ததா இருக்கும்? அதுனால வாரம் ஒன்னா அனுப்பலாம்னு வேற சொன்னாங்க (என்னே ஒரு தன்னம்பிக்கை).

ஆனா குடும்ப மலர் கூட அந்தக் கவிதைகளை பிரசுரிக்கலை. ஆடிக்கு பின்னால் ஆவணி, என் தாடிக்குப் பின்னால் ஒரு தாவணின்ற ரேஞ்சுலதான் அதுல கவிதையெல்லாம் இருக்கும். அதுலயே கூட வரலைன்னா பாத்துக்குங்க. ஒரு ரெண்டு மாசத்துக்கு கொஞ்சம் கிலியோடதான் அவங்க வீட்டுப் பக்கம் போவேன்.

அதும் அவங்க கைல எதுனா நோட்டை பாத்தா தூரத்துலேர்ந்தே ஓடி வந்துருவேன். அவங்க மளிகை சாமான் பட்ஜெட் போட்டுட்டு கூட இருந்திருக்கலாம். ஆனா யாரு ரிஸ்க் எடுக்கறது? அதான்.. அப்புறம் ரெண்டு மாசம் வரைக்கும் எதும் வரலைன்னதும் அவங்களும் இந்த கவிதையெல்லாம் வேஸ்ட்டுனு முடிவு செஞ்சு விட்டுட்டாங்க. நானும் நல்லாத் தெரிஞ்சவங்களைத் தவிர வேற யார்ட்டையும் அலட்டிக்க கூடாதுன்ற அற்புதமான பாடத்தை கத்துகிட்டேன். :))