Wednesday, March 26, 2008

சென்னை பதிவர்களே, உதவி தேவை

சென்னை வாழ் பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள். எனக்குத் தெரிந்த ஒரு பெண்மணி - பார்வை இழந்தவர். ஒரு கல்லூரியில் ஆங்கிலப் ஆசிரியையாகப் பணிபுரிவதோடு முனைவர் பட்டத்துக்கும் ஆய்வு செய்து வருகிறார். அவருக்கு உதவியாளராகப் பணிபுரிய ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரிந்த ஒரு பெண் தேவை. இதுவரை அவரிடம் பணிபுரிந்து வந்த பெண் அஞ்சல் வழிக்கல்வியில் பயின்றுகொண்டு இவரோடே தங்கி இவருக்கு உதவிக் கொண்டிருந்தார். அவரது படிப்பும் முடிந்து அவருக்கு திருமணமும் நிச்சயமாகி விட்டது. எனவே இவருக்கு உதவிக்கு வேறு ஒருவரைத் தேடித் தருமாறு அவரது சகோதரி சமீபத்தில் என்னிடம் சொல்லியிருந்தார். நான் தெரிந்தவர்கள் மூலம் மட்டுமே தேடிக்கொண்டிருந்தேன், இப்போதுதான் திடீரென ஒரு யோசனை உதித்தது - பதிவர்களின் உதவியை நாடலாமே என்று.

பொருத்தமான ஆட்கள் யாரையும் தெரியுமேயானால், பின்னூட்டத்தில் தெரிவியுங்கள். தோழியின் குடும்பத்தினரைத் தொடர்பு கொள்ளச் சொல்கிறேன். வேலை இரு பகுதிகளாக இருக்கும். காலையில் இவருடன் கல்லூரிக்குச் சென்று ஒரு வகுப்பிலிருந்து இன்னொரு வகுப்பிற்கு அழைத்துச் செல்வது போன்ற செயல்களுக்கும், கையெழுத்திடுவது போன்ற சிறு செயல்களுக்கு உதவ வேண்டும்(தோழி கார் வைத்திருக்கிறார் என்பதால் கல்லூரிக்குச் சென்று வருவதில் சிரமம் ஒன்றும் இருக்காது). மதியம் வீட்டிற்கு வந்த பின் அவரது முனைவர் பட்டத்திற்கான ஆராய்ச்சிக் கட்டுரை சம்பந்தமான உதவிகள்(படித்துக் காட்டல் அல்லது அவர் சொல்பவற்றை எழுதி ஒழுங்கு செய்து தருதல்) இவையே மொத்தமாகச் செய்ய வேண்டிய வேலைகள். வேலை செய்ய ஆர்வமுள்ள நபரது தொடர்பு எண், எதிர்பார்க்கும் சம்பளம் போன்ற விவரங்களையோ இல்லை தொடர்புக்கான முகவரி மட்டுமோ கூட அளித்தால் போதும். அவர்களையே நேரடியாகப் கலந்து பேசிக் கொள்ளச் செய்யலாம். வரப்போகும் உதவிகளுக்கு அட்வான்ஸ் நன்றிகள். :)

Friday, March 14, 2008

தமிழகத்தின் புல்லரிக்க வைக்கும் முன்னேற்றம்

"தமிழகத்தில் ஐந்து நிமிடத்துக்கு ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு இலக்காகிறார். பாலியல் கொடுமையில் இந்தியாவில் தமிழகம் நான்காவது இடத்தில் இருக்கிறது"- இப்படி வரிக்கு வரி அதிர்ச்சித் தகவல்களை அள்ளி வீசுகிறது 'தேசிய குற்றப்பிரிவு' அமைப்பின் ஆய்வறிக்கை!

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்த அமைப்பு, 'குற்றங்கள்' குறித்த நாடு தழுவிய ஆய்வொன்றை நடத்தியது. அதன் ஒரு அங்கமாக தமிழகத்தில் நடக்கும் குற்றங்களை அலசிய போது, சமீப காலத்தில் பாலியல் அடிப்படையிலான குற்றங்கள் பெருகியிருப்பது தெரிய வந்திருக்கிறது.


இது இன்று வெளியாகியிருக்கும் ஜூனியர் விகடனில் வெளியாகியிருக்கும் கட்டுரையின் ஆரம்பம். ஆரம்பமே அமர்க்களமாக இருக்கிறதல்லவா? இன்னமும் கூட அதிர்ச்சி மிச்சமிருக்கிறது. இந்த அறிக்கை பேசுவதெல்லாம் பதிவான புகார்களைப் பற்றி மட்டுமே. மீதி?? இதோ அதே கட்டுரையின் இன்னொரு பகுதியில் ஒரு ஆய்வாளர் சொல்கிறார்.

தமிழகத்தில் சமூகப் பிரச்னைகளை உன்னிப்பாக கவனிக்கும் வேறு சில அமைப்புகளிடம் பேசினோம். 'பாலியல் பிரச்னையில் பலியாகும் தமிழகப் பெண்கள்' என்ற தலைப்பில் ஆய்வு செய்துவரும் மதுரையைச் சேர்ந்த திலகம், "தேசிய குற்றப்பிரிவு அமைப்பின் ஆய்வு தந்திருக்கிற அதிர்ச்சியின் சதவிகிதம் குறைவு தான். பாதிக்கப்பட்ட நூறு பெண்கள்ல இருபது பெண்கள்தான் சீரழிக்கப்பட்ட உண்மையை வெளியில சொல்றாங்க. 'உலகப் பொது உரிமை சபை'ங்கிற அமைப்பு தன் அறிக்கையில இதைத் தெளிவா சுட்டிக் காட்டியிருக்கு. மத்தவங்க நம்மளைக் கேவலமாப் பேசு வாங்களேங்கிற பயம் உள்ளிட்ட சில காரணங்களால பாதிக்கப்பட்ட பல பொண்ணுங்க எதையும் வெளியே சொல்றதில்லை.

அப்படியே தைரியமா போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய், 'என்னை பலாத் காரம் செய்தான்'னு ஒரு பொண்ணு சொல்றப்ப, போலீஸ்காரங்க கேட்கிற கேவலமான கேள்வியும், நடந்துக்கிற முறையும் அவளை வெறுத்துப்போக வெச் சுடுது. 'பெண்களோட பிரச்னைகளுக்கு அனைத்து மகளிர் காவல் நிலையம் இருக்கே..?'னு நீங்க கேட்கலாம். ஆனா, அங்கதான் பாதிக்கப்பட்ட பொண்ணுங்க ரொம்ப கேவலமா நடத்தப்படுறாங்க.

ஸ்டேஷனுக்கு வர்ற பலாத்கார கேஸ்கள்ல 99 சதவிகித கேஸ்களைப் பஞ்சாயத்து பேசியே அனுப்பிடுறாங்க. மீறி ஒண்ணு ரெண்டு வழக்கு பதிவானாலும்கூட ஸ்டேஷனுக்கும் கோர்ட்டுக்கும் அந்தப் பொண்ணை நாயா அலைய வைக்கிறாங்க. மீடியாக்களும் அவளை போட்டோ பிடிச்சு உலகத்துக்கே காட்சிப் பொருளாக்கி கூசிக் குறுக வைக்கிறாங்க" என்றவர், தொடர்ந்து...

"கோவை, சேலம், நாமக்கல் மாவட்டங்கள்ல தலித் சிறுமிகள் அதிகப்படியா உயர்சாதியாளுங்ககிட்ட பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகுறாங்க. விவசாயக் கூலியா இருக்கிற அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவங்க இதையெல்லாம் வெளியில சொல்ல முடியாம தவிச்சுக்கிட்டு இருக்காங்க. அப்படி சீரழிக்கப்பட்ட பொண்ணுங்களோட பட்டியலே என்கிட்ட இருக்கு. நம்ம நாட்டுல சட்டங்களும் அதிகாரம் வழங் கும் முறைகளும் பெண்களுக்கு எதிரா இருக்கு. பெண்களுக்காகப் போராடுற மாநில பெண்கள் ஆணையத்துக்கு எந்த அதிகாரத்தையும் கொடுக்காம டம்மியா வெச்சிருக்கிறதே அதுக்கு உதாராணம்" என்றார் அழுத்தமாக.


பெண்களுக்கெதிரான பிரச்சனைகளில், பணமும், சாதியும் வேறு பக்கபலமாகச் சேர்ந்து கொண்டுவிட்டால் நம்மவர்களின் நீதிபரிபாலனத்தினுடைய லட்சணம் எப்படியிருக்கும் என்று நமக்கெல்லாம் தெரியாதா என்ன? அப்படியே ஜாதி/வர்க்க வேறுபாடுகளே இல்லாத இடத்திலும் கூட இருக்கவே இருக்கிறது நமது பாழாய்ப் போன குடும்ப கவுரவம் இத்யாதிகள். வெளியே சொன்னால் குடும்ப மானமே போய்விடும் என்று உள்ளுக்குள்ளேயே அழுது புழுங்கிக் கொண்டு அவசர அவசரமாக மாப்பிள்ளை பார்த்து தள்ளிவிடுவது - இல்லை பாதிக்கப்பட்ட விவரம் தெரிந்த/சொந்தத்தில் உள்ள மாப்பிள்ளைக்கே அதிக அபராதத் தொகை செலுத்தித் பெண்ணையும் தலையில் கட்டிவிடுவது என்று பல விதமான சமாளிப்பு முறைகள் சமூகத்தில் பரவலாக வழக்கத்திலிருக்கின்றன. ஆனால் சட்டப் படி தண்டிக்கப் பட்டேயாக வேண்டிய குற்றம் இது என்கிற ஒரு விஷயத்தை மட்டும் யாருமே ஒப்புக் கொள்வதில்லை. இதற்குத் தீர்வு என்று என் மனதிற்குப் படுவது மூன்று வழிமுறைகள்.

1. காவல்துறையும் நீதி விசாரணை முறையும் பாதிக்கப் பட்டவர்களையே மேலும் காயப்படுத்துவதாக உள்ளது - சட்டங்கள் இருந்த போதும் அதை நடைமுறைப்படுத்துவோர் கனிவோடும் கண்ணியத்தோடும் அதைச் செய்வதில்லை. இதில் மகளிர் காவலர் நிலையத்திலிருப்பவர்களும் விதிவிலக்கில்லை என்பதுதான் வருந்தத்தக்க விஷயம். சினிமா வசனங்களில் அதிகமாய் உச்சரிக்கப்பட்டு தேய்ந்து போன வசனங்களில் இதுவும் ஒன்று - ஒரு பெண் மனதை இன்னொரு பெண்ணால்தான் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடியும். எவ்வளவு அபத்தமான உளறல் என்று இது போன்ற தருணங்களே சொல்கிறது. யார் ஒருவரும் அடுத்தவர் உணர்வைத் துல்லியமாகப் புரிந்து கொள்வது சாத்தியம்ற்றது என்றாலும் கூட பொறுப்பிலுள்ளவர்கள் குறைந்தபட்ச மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளலாம். அரசு வருடாவருடம் அவர்களுக்கு கவுன்சிலிங்க் அளிக்கலாம். தொடர்ந்து இதையும் மீறி கருணையின்றி நடப்போரை கண்டுகொண்டு நடவடிக்கை எடுக்கலாம்.

2. பாதிக்கப் பட்டோரிடமிருந்தும் மிகப்பெரிய ஒத்துழைப்புத் தேவை. நாமாகவே கட்டமைத்துக் கொண்ட மனப்பிரமைகளான மானம், கவுரவம் போன்ற போலிவலைகளைத் தாண்டியும் துணிவோடு பிரச்சனையை எதிர்கொள்ள வேண்டும். மற்றவர் நம்மைப் பற்றி பேசுவது குறித்து கவலை கொள்வதற்கும் ஒரு எல்லை உண்டு - அர்த்தமற்ற இவ்வகைத் தாக்குதல்களை துணிந்து எதிர்கொள்வோமேயானால் நிச்சயம் வெகுநாட்களுக்கு இதெல்லாம் தொடராது என்பதை உணர வேண்டும். அவரவர்க்கும் அவரவரது ஜீவாதாரப் பிரச்சனைகள் தலைக்கு மேல் உள்ளன - ஒழிந்த நேரத்தில் சற்று நேரம், அதுவும் சிறிது நாட்களுக்கு, அதுவும் வேறு புதுப் பிரச்சனைகள் கிடைக்கும் வரை இதை மெல்லுவார்கள். அவ்வளவே. அதற்குப் பயந்து இது போன்ற குற்றங்களை மறைப்பது நம் தலையில் நாமே மண்ணள்ளிப் போட்டுக் கொள்வதற்கு ஒப்பானது.

சமீபத்தில் பார்த்த அஞ்சாதே திரைப்படத்தில் ஒரு காட்சி - ஒரு கும்பல் இளம் பெண்களை, இன்னும் சரியாகச் சொல்வதானால் சிறுமிகளை கடத்திச் சென்று அவர்களின் பெற்றோரிடம் மிரட்டிப் பணம் பெற்றுக் கொள்வதோடு அப்பெண்களை பலாத்காரம் செய்துவிட்டுத் திருப்பிக் கொண்டுவந்து விட்டுவிட்டுச் செல்கின்றனர். பாதிக்கப் பட்ட ஒரு சிறுமி தந்தையோடு காவல் நிலையத்திற்கு வந்து புகார் தருகிறாள். உயர் போலீஸ் அதிகாரியான பொன்வண்ணன் வந்து அப்பெண்ணின் அருகில் அமர்ந்து தோளைத் தட்டி “I am proud of you my child." என்பார். அப்பெண் கடினமான முகத்தோடு "எனக்கு நேர்ந்தது வேறு யாருக்கும் நேராது இருக்கவேண்டும். அவர்களை சீக்கிரம் பிடியுங்கள்" என்று சொல்லிவிட்டு தந்தையோடு கிளம்புவாள். அதே போல் அடுத்து இன்னொரு பெண் கடத்தப் பட்டு பேச்சுவார்த்தை நடக்கையிலேயே அப்பெண்ணின் தந்தை போலீஸிடம் உதவி கோருவார். இதைப் புரிந்து கொண்ட கடத்தல் கோஷ்டியினர் அப்பெண்ணை நிர்வாணமாக்கி அவளது உடைகளைக் கொண்டுவந்து அவ்வீட்டின் முன்னால் போட்டுவிட்டு அத்தந்தையிடம் மரியாதையாக போலீசாரை ஒதுக்கிவிட்டுப் பணம் கொண்டு வந்து தந்து மகளை மீட்டுச் செல் என்று மிரட்டுவார்கள். அப்போது மனதளவில் தளர்ந்துவிடும் அத்தந்தை போலீசாரை "விட்டுங்க சார், அங்க என் பெண் அம்மணமா இருக்கா. எனக்கு பணம் முக்கியம் இல்லை. நான் பணத்தைக் கொடுத்து என் பெண்ணை மீட்டுக்கறேன்." என்று கதறுவார். அப்போது கதாநாயகனான நரேன் குறுக்கிட்டு "நாங்கள் பசி தூக்கம் மறந்து அலைவது உங்க பொண்ணை காப்பாத்த மட்டுமில்லை. இன்னிக்கு உங்க பொண்ணுக்கு நடந்தது நாளைக்கு இன்னொரு பெண்ணுக்கு நடந்துடக் கூடாதுன்றதுக்காக" என்று ஆவேசமாய் சொல்வார். மிக மிக சத்தியமான வார்த்தைகள். பாதிக்கப் பட்ட ஒவ்வொருவரும் தங்களுக்கு நடந்த அநீதிக்காகப் போராடுவதன் மூலமே அது மீண்டும் மீண்டும் நிகழாது தடுக்க முடியும். அந்தப் பொறுப்புணர்ச்சி ஒவ்வொருவருக்கும் வர வேண்டும்.


3. மேற்குறிப்பிட்ட மனமாற்றம் சமூகத்தில் வருவதற்கான முக்கியப் பங்கை ஊடகங்களே ஆற்ற முடியும். தங்களின் வியாபாரத்துக்காக பாதிக்கப் பட்ட பெண்களின் கண்ணீரை ஏலம் விடுவதை நிறுத்திக் கொள்ளவேண்டும். அதற்காக நடந்த குற்றத்தை மறைக்க வேண்டும் என்பதல்ல. பாதிக்கப்பட்ட பெண்களிடம் அனுதாபத்தோடு ஒருவேளை அந்நிகழ்ச்சி நம்வீட்டில் நடந்திருந்தால் எப்படிக் கையாள்வோமோ அது போல கையாள வேண்டும் என்கிற பொறுப்பு ஊடகத்திலிருப்போர் எல்லோருக்குமே வர வேண்டும்.

இவ்விடத்தில் சிதம்பரம் காவல் நிலையத்தில் கூட்டு பலாத்காரத்துக்கு உள்ளான பத்மினி வழக்கை நினைவு கூர வேண்டியிருக்கிறது. இவ்வழக்கில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டது. பத்மினி படிப்பறிவு அதிகமற்ற மிகவும் எளிய சூழலில் இருந்து வந்தவர். எத்தனையோ சோதனைகள் - அப்போது ஒரு பேட்டியில் அவர் தனக்கு நடந்த உண்மை அறியும் சோதனை பற்றிச் சொல்லியிருந்தார். பொய் சொல்லும்போது மனித உடலில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு சொல்வது பொய்யா இல்லையா என்று கண்டுபிடிக்கும் லை டிடெக்டர் எனும் இயந்திரத்தின் பரிசோதனைக்கு பத்மினி உட்படுத்தப் பட்டார். ஆம் அல்லது இல்லை என்பது போன்ற விடைகளே அளிக்கும்படியான கேள்விகள் கேட்கப் படும். பதில் சொல்லும்போது சம்பந்தப்பட்டவரது உடல்நிலை இயந்திரத்தால் ஆராயப் பட்டு பதிவு செய்யப் படும். ஆனால் அங்கே கேள்வி கேட்டு மாற்றங்களைப் பதிவு செய்பவர்கள் போலீசாரே. பத்மினியின் புகாரே போலீசாரின் மீதுதானே? தங்கள் சக அலுவலர்களின் மீதான பாசத்தோடு அவர்கள் செட் செய்திருந்த கேள்விகள் வெகு சாமர்த்தியமாக அமைக்கப் பட்டிருந்தன. X தேதியில் Y எண்ணிக்கையுள்ள போலீசார் சேர்ந்து அவரை வன்புணர்ச்சிக்குட்படுத்தியதுதான் வழக்கு என்றால் அவர்களது கேள்விகள் இப்படியிருக்கும்.

1. சம்பவம் X - 1 அன்றுதானே நடந்தது? இதற்கு பத்மினி இல்லையென்று பதில் சொல்கிறார். ஏனென்றால் சம்பவம் உண்மையாக நடந்தது X தேதியன்று அல்லவா?
2. உங்களை Y+2 போலீசார் சேர்ந்து பலாத்காரம் செய்தனர்தானே? இதற்கும் பத்மினி இல்லையென்று சொல்ல நேரிடுகிறது.

உடனே பத்திரிக்கை செய்திகள் - உண்மை கண்டறியும் ஆய்வில் பத்மினி தோல்வியுற்றார். போலீசார் மீது தவறெதுவும் இல்லை என்று நிரூபணமாகிவிட்டது. வழக்கு முடிவடையும் வரை இப்படித்தான் பரபரப்பான செய்திகள் தொடர்ந்து வெளியாகிக் கொண்டேயிருந்தன. இவ்வகைச் செய்திகளை படிக்கும் பெரும்பாலான பெண்கள் துவண்டு பின்வாங்கியிருப்பர். ஆனால் பத்மினியோ உறுதியோடு போராடி வழக்கறிஞர் உதவியோடு வழக்கு விவாதப் பகுதியில்(Argument) அக்கேள்விகள் எவ்வளவு தவறானவை என்பதை நிரூபித்து வென்றார். இதற்கு நடுவில் காவல் நிலையத்தில் கொல்லப்பட்ட நந்தகோபாலுக்கு பத்மினி எத்தனாவது மனைவி, அவர் இவருக்கு எத்தனையாவது கணவர் என்பது போன்ற அதிமுக்கியத் தகவல்கள் அவரது பெயரை சிதைக்குமளவுக்கு தொடர்ந்து பத்திரிக்கைகளில் வெளியானபடியே இருந்தது. அவற்றினாலெல்லாம் சோர்ந்துவிடாது போராடி வழக்கில் இறுதி வெற்றியைப் பெற்ற அப்பெண்மணியின் தீரம் பாராட்டுதலுக்குரியது.

அதனால் எல்லாம் அந்தப் பெண்ணின் வாழ்க்கை சாரமற்றுப் போய்விடவில்லை என்பதையும் இங்கே பார்க்கவேண்டும். வழக்கு நடந்த்போது அவருக்கு பெரும்பாலும் பக்கபலமாக இருந்தது கம்யூனிஸ்ட் கட்சியின் மகளிர் பிரிவான ஜனநாயக மாதர் சங்கம் எனும் அமைப்பு. அச்சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சித்தொண்டர்களும் அவர்கள் சார்பாக பத்மினிக்கு பாதுகாப்பாக நின்றனர். அதில் ஒரு தோழர் - தனபாலன் என்பது அவர் பெயரென்று நினைக்கிறேன் (நினைவிலிருந்தே எழுதுகிறேன் - எனவே தவறாயிருப்பின் சுட்டவும் சரி செய்து கொள்கிறேன்) வழக்குகள் முடிந்த நிலையில் பத்மினியை மணக்க விரும்பி பத்மினியும் சம்மதிக்க அவரை மணந்தார். உண்மையில் இந்நிகழ்விற்கே அதீத முக்கியத்துவம் தரப்பட்டிருக்க வேண்டும் - ஏனெனில் இதுவே பாதிக்கப் பட்ட பெண்களுக்கும் அதற்குப்பின்னும் வாழ்கை நல்ல முறையில் செல்லும் வாய்ப்புள்ளது எனச்சொல்லும் பகுதி.

இப்பிரச்சனையின் ஆணிவேர் பெண் உடல் மீதான ஆதிக்கத்தில்தான் இருக்கிறது - எனினும் அதை மாற்றுவது அத்தனை சுலபமில்லை(ஏற்கனவே ஒரு முறை அதைப்பற்றி எழுத ஆரம்பித்து பாதியில் நிறுத்தி வைத்திருக்கிறேன் - நேரம் அமைகையில் அதை எழுதவேண்டும். ஹ்ம்ம்.... இப்பட்டியலின் நீளம் அதிகரித்துக் கொண்டே போகிறது). எனவே இப்பிரச்சனைக்கு ஒரளவுக்கு எனக்கு சாத்தியமானவை என்று தோன்றும் ஒரு சில தீர்வுகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

Friday, March 07, 2008

சிதம்பரம் - சில எண்ணங்கள்

தில்லையில் நடந்து கொண்டிருக்கும் கூத்தையெல்லாம்(சிவனுடையதை அல்ல, அவனைச் சுற்றியிருப்போரது கூத்தைச் சொல்கிறேன்) பார்க்கும் போது கொள்கைக்குச் சிறிதும் சம்பந்தமில்லாது நடந்து கொள்வதில் அரசியல்வாதிகளுக்குத்தான் முதலிடம் என்று நினைத்திருந்ததை மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கிறது. நாம் நம்பும் அல்லது நம்புவதாகச் சொல்லும் ஒரு கொள்கைக்கு எதிராக இத்தனை பகிரங்கமாகக்கூட இவர்களால் நடந்து கொள்ள முடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.

பாரதி தனது வசன கவிதையொன்றில் காற்றே சிவனின் காது என்கிறார். எனில் காற்றோடு கலக்கும் ஒவ்வொரு வார்த்தையும்(கெட்ட வார்த்தையென்று மனித மனது வரையறுத்து வைத்திருக்கும் வார்த்தைகள் உட்பட) சிவனது காதில் நேரடி ஒலிபரப்பாகச் சென்று சேர்ந்து கொண்டிருக்கும் வேளையில், இன்ன மொழிதான் அவன் காதில் கேட்கலாம் இன்னது கேட்கக்கூடாதது என்றெல்லாம் அறிவிப்போரை என்னவென்பது? அதையும்விட அதிக நகைப்புக்குரிய விஷயம் ஓதுவார் ஆறுமுகச்சாமி அவர்கள் அங்கே வந்து நின்று பதிகம் பாடுகையில் நடராஜரை கூட்டமாக மறைத்துக் கொண்டு நின்றார்களாம் தில்லை வாழ் அந்தணர்கள் :)))))))))) எல்லாம் வல்லவன், எங்கும் நிறைந்தவன், அவனது சந்நிதியில் அவனது பக்தனொருவன் பாடும் பாடலை அவன் காதில் விழாதவாறும் அவன் கவனத்தில் பதியாதவாறும் கூட்டமாய்க் கூடி நின்றாலே தடுத்துவிட முடிகிறதல்லவா உங்களால்? நாத்திகம் பேசுபவர்கள் இறைவனின் சிலையை அவமதித்தால் அதைப் புரிந்து கொள்ள முடியும் - அதுதான் அவர்கள் தங்கள் கொள்கைக்குத் தரும் மரியாதை. ஆனால் ஆத்திகத்தையே கட்டிக்காப்பதாகக் கூறிக்கொள்பவர்களே இறைவனை அவமதிப்பதை, அவனைக் குறைத்து மதிப்பிடுவதை எங்கே போய்ச்சொல்வது?

அன்பே சிவமென்பர். அப்படி அன்புருவானவனை அர்ச்சித்துவிட்டு , சித்சபை மேடையேறிப் பாட முயன்ற 79 வயது முதியவரை அடித்துத் துரத்த எப்படித் துணிகிறார்கள்? சிற்றம்பலம் கருவறைக்கு நிகரானது - அங்கே யாரும் நுழையக்கூடாது என்பது பொதுவிதியானால் சரி. ஆனால் காசு கொடுத்தவர்கள் மட்டும் வரலாம் என்றால் அதென்ன சுற்றுலாத்தலமா? துஷ்டநிக்ரஹ சிஷ்டபரிபாலனம் செய்பவனுக்கு அவன் கண்ணெதிரே தான் செய்யும் அநியாயங்கள் மட்டும் தெரியாதென்று எப்படி நம்புகிறார்கள் இவர்கள்? ஒருவேளைத் தான் செய்யும் சேவைகளுக்காக மகிழ்ந்து தங்கள் செயல்களைக் கண்டு கொள்ளாது விட்டுவிடுவான் என்று எண்ணமா? அது இன்னமும் மோசம் - லஞ்சம் வாங்கிக்கொண்டு வேடிக்கை பார்க்கும் காவல் அதிகாரி ரேஞ்சுக்கு சாமியையே கொண்டு வருவது இல்லையோ அது?

இந்த விஷயத்தில் மட்டும்தான் என்றில்லை - இதற்கு முன்னரே கூட பல சந்தர்ப்பங்களில் கோவில்களில் நடக்கும் சகிக்க முடியாத நேர்மையின்மையின் வெளிப்பாடுகளைக் காணும் போதெல்லாம் தோன்றுவதுதான் - கடவுளுக்கு வெகு அருகிலிருக்கும் இவர்களே கடவுளை இவ்வளவு குறைத்து மதிப்பிடுகிறார்களே, பின் மற்றவர்களுக்கு மட்டும் எப்படி நம்பிக்கை வருமென்று. அதிலும் இப்போது ஓதுவார் ஆறுமுகச்சாமி பாடுகையில் இவர்கள் சிவனை மறைத்து நின்றதைக் கேட்டதும் சிரிப்பதா அழுவதா என்றே புரியவில்லை. ஒரு வேளை கலி முற்றுவது என்பது இதுதான் போல - நிச்சயமாய் நாத்திகப் பிரச்சாரங்கள் அல்ல.

பி.கு: கொஞ்ச நாளைக்கு முன்னால லீனா மணிமேகலை ஒரு கல்லூரியின் உடைக் கட்டுப்பாடு விஷயத்தை எதிர்த்துப் பேசினப்ப நிறைய நடுநிலைவியாதிங்க ஓடி வந்து "அது அவங்க இடம். அவங்க சொல்றா மாதிரி நடக்கறதான அங்க போகணும். இல்லைன்னா வெளிய வந்ததோட நிப்பாட்டிக்கணும். எதுக்கு இந்த அம்மா சலம்புது?"ன்னு சொல்லிகிட்டுத் திரிஞ்சாங்க. இப்பவும் அவங்க எல்லாம் அதையேதான் சொல்றாங்களான்னு தெரிஞ்சுக்க ஆசை.(என்ன செய்யறது இது மாதிரி எதுனா புடலங்காய் சமாச்சார பிட் இல்லாம் பதிவே எழுத வர மாட்டேங்குது. வியாதி முத்திடுச்சு போல. :))))) )